மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்: 09.12.2019

பத்திரிகை செய்தி

♦ குடியுரிமை திருத்தச் சட்டம்,2019(CITIZENSHIP AMENDMENT BILL,2019) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NATIONAL REGISTER OF CITIZENS) அரசியல் சட்டம் பிரிவு 15(1)& 14- மற்றும் மத,இனச் சார்பின்மைக்கு எதிரானது!

♦ ஈழத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவது மனித குல விரோத,மனித உரிமை பறிப்பு நடவடிக்கை!

♦ குடியுரிமை திருத்தச் சட்டம்,2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு! இந்தியாவை நாடி வந்த அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்கு!

இன்று 09.12.2019-ல் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 பாஜக அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. மேலும் இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்குப் பொருந்தாது.

பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்.

குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 – அரசியல் சட்ட விரோதமானது

1. இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 5 – 11 குடியுரிமை தொடர்பாகப் பேசுகிறது. இதன்படி பிரிட்டிஷ் இந்தியாவின் மக்களுக்கு, இந்திய அரசுச் சட்டம், 1935-ன்படி குடியுரிமை வழங்க வேண்டும். பாகிஸ்தான், வங்காளதேசம் பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கங்கள்தான். எனவே பிரிவினையின் போதும், பின்பும் வந்த மக்களுக்கு பிரிட்டிஷ் இந்தியா குடியுரிமை பெற்றவர்கள் என்று கருதியே குடியுரிமை வழங்க வேண்டும்.

2. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 15- மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அடிப்படையில் எவரையும் அரசு பாகுபடுத்தக் கூடாது என்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – மோடி – அமித்சா அரசின் சட்டம் இசுலாமியர்களை மத அடிப்படையிலும், ஈழத் தமிழர்களை இன அடிப்படையிலும் பிரிவினை செய்கிறது. எனவே அரசியல் சட்டப்படி புதிய குடியுரிமைச் சட்டம் செல்லாது.

3. குடியுரிமை என்பது அனைத்து உரிமைகளின் தாய் உரிமை போன்றது. குடியுரிமை இல்லையேல் எந்த உரிமையும் பெறமுடியாது. எனவே குடியுரிமை மறுக்கப்படும் மக்களுக்கு கருத்துரிமை, வழிபாட்டுரிமை, சுரண்டலுக்கெதிரான உரிமை, அரசுத் திட்டங்கள், வேலை வாய்ப்பு, குழந்தைகள் படிப்பு, வங்கிக் கணக்கு என எந்த உரிமையும் இருக்காது. மொத்தத்தில் நாடு முழுவதும் பல கோடி மக்கள் சட்டவிரோத குடியேறிகளாக அறிவிக்கப்பட்டு ஜெர்மனியில் யூத, அமெரிக்காவில் கறுப்பின ஆப்ரிக்க அடிமை மக்கள் போல வதை முகாம்களில் அடைக்கப்படுவர். இவர்கள் சூடு வைக்கப்பட்ட அடிமைகள் போல, அடையாளம் இடப்பட்ட மக்களாக, எவ்வித உரிமையும் அற்றவர்களாக, அரசின் மூர்க்கமான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவர்.

4. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். எனவே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும்.

படிக்க:
முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !
♦ தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !

5. ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்?

6. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதேன்?

7. மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக அரசின் இந்த நடவடிக்கை இசுலாமிய – தமிழர் விரோத வெறுப்பரசியலே. இந்து ஓட்டு வங்கியை மையமாகக் கொண்டது. அதிமுக இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். புதிய சட்டத்தை அனைத்துக் கட்சிகள், மக்கள் நிராகரிக்க வேண்டும்.

8. புதிய சட்டம் அமலாவது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும். நாகரீக நாடு என்ற நிலை மாறி காட்டுமிராண்டி நாடாக கருதப்படும். மொத்தத்தில் இந்நடவடிக்கை இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தை, இந்தியாவை அழிப்பதே.

சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.