த்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுமைக்கு விரிவுபடுத்தும் அதன் திட்டத்திற்கும் எதிராக நாடெங்கும் பரவலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்திரபிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசு சுட்டுக் கொன்றுள்ளது; இசுலாமியர்களின் வீடுகளுக்குள் புகுந்த போலீசு கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்களின் சொத்துக்களும் கடைகளும் அரசு ஆதரவு பெற்ற சீருடை அணியாத மற்றும் சீருடை அணிந்த குண்டர்களால் சூறையாடப்பட்டு வருகின்றது.  குடியுரிமைச் சட்டத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக கோலம் போடும் போராட்டம் ஒன்றை மாணவிகள் சிலர் சேர்ந்து முன்னெடுத்தனர். நேற்று காலை காலை கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 5 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 7 பேர் பெசன்ட் நகர் பகுதியில் கூடி சாலையில் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்கள் வரைந்த கோலங்களில்  குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக வாசகங்களை எழுதி இருந்தனர். NO NRC, NO CAA வசனங்களுடன் சில பா.ஜ.க எதிர்ப்பு வாகசங்களையும் எழுதி இருந்தனர்.

”தேஷ விரோதிகள்” கூடி கோலமிடும் அதிர்ச்சித் தகவலை கேள்விப்பட்ட தமிழக ஸ்காட்லாண்டு யார்டு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கோலமிடும் கொடூரமான பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட ”தீவிரவாதிகளை” வலைவீசிப் பிடிக்க துணை கமிஷ்னர், பெண் போலீசார் உள்ளிட்ட ஒரு படை வந்துள்ளது. வழக்கமாக ஆஜராகும் தண்ணீர் பீரங்கியும் சம்பவ இடத்திற்கு வந்ததா எனத் தெரியவில்லை. இறுதியில் கோலம் போடும் கொடுஞ் செயலில் ஈடுபட்ட மாணவிகள் உள்ளிட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

மாணவிகள் கைது செய்யப்பட்டதற்கு அவர்களின் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டார். மெல்ல மெல்ல தங்களுடைய அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் எழுவதை மோப்பம் பிடித்த ஸ்காட்லாந்து யார்டின் உயரதிகாரிகள் விசாரணைக்குப் பின் மாணவிகளை விடுவித்துள்ளனர். எனினும், அம்மாணவிகள் அனுமதி இன்றி போராட்டம் செய்தததாகவும், சாலையில் வண்ணம் வரைந்ததாகவும், அனுமதி இன்றி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் கூடியதாகவும் கூறியுள்ளனர்.

இப்போது நிலைமை என்னவென்றால், இரும்பு நகரத்தின் கரும்பு மனிதர் மான்புமிகு பழனிச்சாமி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக ஒரு புதிய போராட்ட வடிவம் உதயமாகி விட்டது. ஆம், தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பரணில் பதுங்கிக் கிடந்த கோலமாவு டப்பாவை தேடி எடுத்து களத்தில் இறங்கி விட்டனர். ஆதிக்க எதிர்ப்பு அரசியலுக்கு கடந்த சில ஆண்டுகளாக பழக்கப்பட்டு விட்ட தமிழ்நாட்டு மக்கள், பொதுவாக எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளின் முன் கோலமிட்டு அதில் NO NRC, NO CAA போன்ற வாசகங்களை எழுதி அதைப் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் #KolamProtest மற்றும் #KolamAgainstCAA உள்ளிட்ட ஹேஷ்டேகுகளின் கீழ் அந்த பதிவுகளைக் காண முடியும். இந்த ஜோதியில் திமுகவும் ஐக்கியமாகியுள்ளது. மு.க ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்களின் வீடுகளின் முன்னும் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் வீட்டு முன்பும் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு வாசகங்களுடன் கோலம் வரையப்பட்டுள்ளது. அக்கட்சியினர் தங்கள் பங்கிற்கு #DMKkolamProtest எனும் ஹேஷ்டேகின் கீழ் தமிழகம் முழுக்க அதன் தொண்டர்களின் வீடுகளில் வரையப்பட்டுள்ள குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு கோலங்களின் படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேற்படி ஹேஷ்டாகுகளில் வந்துள்ள சில சுவாரசியமான குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு கோலங்கள் மற்றும் பதிவுகளை இறுதியில் தொகுத்துள்ளோம்.

ஒரு எதிர்ப்பியக்கம் அல்லது போராட்டம் மக்களைப் பற்றிக் கொள்ளும் போது அது  வெவ்வேறு வண்ணங்களையும் வடிவங்களை எடுக்கிறது. அதிகார வர்க்கத்தின் கற்பனைகளுக்கு எட்டாத படைப்பூக்கம் கிளர்ந்தெழுகின்றது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மெரினாவில் மக்கள் கூடுவார்கள் என்று அதிகார வர்க்க மூளைகள் எதிர்பார்த்திருக்காது; அப்படிக் கூடியவர்கள் அந்த போராட்ட நிகழ்வையே ஒரு திருவிழாவாக கார்னிவெல்லாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது நிச்சயம் ஐ.பி.எஸ் – ஐ.ஏ.எஸ் மேனுவல்களிலோ SOP ஆவணங்களிலோ குறிப்பிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை.  மெரினாவுக்குப் பின் பாடம் கற்றுக் கொண்டதாக கருதிக் கொண்ட போலீசு மூளை அதன் பின் பல சந்தர்ப்பங்களில் கடற்கரைக்கு வேலியிட்டது.

இதோ பாசிச எதிர்ப்பு மக்களைப் பற்றிக் கொண்டு விட்டது… இனி என்ன, ரெய்டு நடத்தி கோல டப்பாக்களை கைப்பற்றுவார்களோ? மெரினாவுக்கு போலீசு போட்ட வேலியில் தொங்கும் பூட்டு கோலமாவைப் பார்த்து புன்னகை புரிகிறது.

♦ ♦ ♦

ந்த போராட்டத்தை ஒட்டி ஒரு அக்கிரகாரத்து அம்பிக்கும், ஒரு மனிதருக்கும் இடையே பேருந்தில் காட்டசாட்டமான உரையாடல் நடந்தது :

பூணூல் அம்பி : பாத்தேளா கடைசில கோபாலபுரத்துலயும் ஸ்டாலின் வீட்டு முன்னேயும் தாமரை கோலத்தில் மலர்ந்திருக்கு?

ஹோமோ சேப்பியன் : கவலைப் படாதீங்க அய்யிரே சாயந்திரத்துக்குள்ளே அந்தப் பக்கமா தெருவுல போற சொறி நாயி எதுனா உச்சா போயி தாமரை அழிஞ்சிடும்.

பூணூல் அம்பி : ஆனாலும் பாருங்கோ, கோலம் போடறது ஹிந்து சாஸ்த்திரத்தில் வருதாக்கும்.

ஹோமோ சேப்பியன் : அய்யிரே, கோலமெல்லாம் எங்க மரபு தான்.. அதுக்கு நடுவுல வைக்கிற சாணி தான் உங்க மரபு. வோணும்னா உங்க மரபை நீங்களே வழிச்சி எடுத்துட்டு போயிக்கங்க.

♦ ♦ ♦

சில தொகுப்புகள்… மேலும் பார்க்க : ட்விட்டர் மற்றும் முகநூலில் #KolamProtest #KolamAgainstCAA மற்றும் #DMKkolamProtest

 

 

காயத்ரி :
தமிழக ஆண்கள் பால்ரீதியிலான பாகுபாட்டு பழக்கவழக்கங்களை உடைத்து நமது கலாச்சாரத்தையும் அரசியல் சாசனத்தையும் #KolamAgainstCAA #KolamProtest மூலமாகக் காக்கிறார்கள்

Citizens Against CAA
பெசண்ட் நகரில் நடத்தப்பட்ட சிறிய போராட்டப் பொறி, தமிழகம் முழுவதும் CAA, NRCக்கு எதிரான மாற்றுக் கருத்து ஜுவாலைகளைப் பற்றியெரியச் செய்திருக்கிறது.  #kolamprotest #kolamagainstCAA_NRC

 

செய்யது வாசன் மைக்கேல் :
எனது விருப்பப் பட்டியலில் இதுவும் ஒன்று.
நான் மரணிப்பதற்கு முன்னர், ஆர்.எஸ்.எஸ்-ல் வெள்ளைகாரனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரரையாவது பார்க்க விரும்புகிறேன். அன்புள்ள @RSSorg தயவுசெய்து எனக்கு உதவுங்கள் !
#KolamProtest #KolamAgainstCAA #DMKKolamProtest

பழனிவேல்
#CAAProtest #KolamProtest #KolamAgainstCAA
No CAA No NRC
அனைத்தையும் ஒருங்கிணைந்த இந்தியா!

நடாஷா:
மார்கழி மாதத்தில் நான் கோலம் போட்டேன் என்பது அறிந்தால் எனது தாய் மிகவும் மகிழ்ச்சியடைவார்… நான் போட்ட கோலத்தை அவர் பார்க்கும் வரை ! புரட்சி ஓங்குக !

#KolamProtestAgainstCAA #KolamProtest #IndiaAgainstCAA_NPR_NRC
@naukarshah @deepsealioness @minicnair

நில். கே தத்
நாம் வெல்கிறோமா தோற்கிறோமா என்பது முக்கியமில்லை. நாம் போரிட வேண்டும். நாங்கள் எப்போதுமே #DMKkolamProtest ✊✊ உடனிருக்கிறோம்.

வீணா
என் அம்மா போட்ட கோலம். காலையில் நான் இதைப் பார்த்ததும் மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். நன்றி அம்மா !

சரவணராஜா:
கோலம் எங்கள் பிறப்புரிமை. நாங்கள் அதை அடைந்தே தீருவோம்.

– மித்ரன்