“இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தேவையையும் மருத்துவர்களின் பற்றாக்குறையையும் ஈடுகட்டும் அளவிற்கு மைய, மாநில அரசுகளிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், அரசு – தனியார் கூட்டு (PPP) அடிப்படையில் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தனியாரை அனுமதிக்கலாம்” என கடந்த ஜனவரி மாதத்தில் நிதி ஆயோக் பரிந்துரைத்தது. இந்த அபாயகரமான பரிந்துரைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்த பின்னும் அது பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், நிதி ஆயோக்கின் பரிந்துரையை பட்ஜெட் அறிவிப்பாகவும் வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு.

இப்பரிந்துரையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளுடன் இணைந்த மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மைய அரசு நிதியுதவியும் அளிக்கும் என்ற தூண்டிலையும் போட்டிருக்கிறது, மைய அரசு.

தனியாரிடம் ஒப்படைக்கப்படும் அம்மருத்துவமனைகளில் கட்டணமில்லா இலவச சிகிச்சை மற்றும் கட்டணத்துடன் கூடிய சிகிச்சை என இரண்டுவிதமான சிகிச்சைகள் வழங்கப்படுமென்றும், கட்டணத்துடன் கூடிய சிகிச்சையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அம்மருத்துவமனைகளைத் தனியார் நிர்வகிப்பார்கள் என்றும் நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரத் துறையைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லவும் மைய அரசு திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் சதி என்பதோடு, மாநில அரசுகளின் எதிர்ப்பையும் மீறி மருத்துவத் துறையில் தனியார்மயத் திட்டங்களை நிறைவேற்றவும் இந்த மாற்றம் மைய அரசிற்குப் பயன்படும்.

***

கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் எனக் கீழிருந்து மேலாக உருவாக்கப்பட்டுள்ள வலைப்பின்னலைக் கொண்டுதான் தமிழகத்தில் சுகாதாரத் துறை இயங்கிவருகிறது.

மாவட்ட அரசு மருத்துவமனைகளைத் தனியார்மயமாக்குவது கிராமப்புற மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதமாகும்.

இந்தியாவில் கேரளாவைத் தவிர்த்து, மற்ற பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பொது சுகாதாரமும் நோய்த்தடுப்பு சிகிச்சைகளும் சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பொதுமக்களுக்குக் கிடைத்துவருவதற்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்புதான் அடிப்படை ஆதாரமாக உள்ளது. இவ்வலைப் பின்னலின் ஒரு முக்கிய ஆதாரத்தைப் பிடுங்கித் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் இந்தக் கட்டமைப்பையே சிறுகச்சிறுக வீழ்த்தத் திட்டமிடுகிறது, நிதி ஆயோக்.

மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், கிராமப்புற, சிறு நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் இலவச சிகிச்சை கிடைக்க வழியின்றிக் கட்டண சிகிச்சை என்ற வலைக்குள் தள்ளப்படுவார்கள். இந்த அபாயத்தை உணர்ந்துதான் சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரும் சென்னை மருத்துவக் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியருமான அமலோற்பவநாதன், மாவட்ட மருத்துவமனைகளைத் தனியார் நிர்வகிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் எனத் தனது எதிர்ப்பைப் பகிரங்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

படிக்க:
எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

அரசு மருத்துவமனைகளில் எக்ஸ் – ரே, ஸ்கேன் உள்ளிட்ட சில ஆய்வக சேவைகளைக் கட்டணச் சேவைகளாக மாற்றி, அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்திருப்பது; கீழ்மட்ட ஊழியர்களை அவுட் சோர்சிங் என்ற முறையில் தனியார்மயபடுத்தியிருப்பது; மிக முக்கியமாக, அனைத்து வகை அறுவைச் சிகிச்சைகளுக்கும் மருத்துவக் காப்பீடைக் கட்டாயமாக்கியிருப்பது என்ற வகைகளில் தனியார்மயம் ஏற்கெனவே இந்தக் கட்டமைப்பை அரிக்கத் தொடங்கிவிட்டது. இதனின் அடுத்த கட்டமாக, மருத்துவமனை நிர்வாகத்தையே தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை எதிர்ப்புகளையும் மீறி அடாவடித்தனமாக எடுத்திருக்கிறது, மைய அரசு.

இத்தீமை 2017 -ஆம் ஆண்டிலேயே சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத். “சித்தூரிலுள்ள மாவட்ட மருத்துவமனையை அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது” எனச் சுட்டிக்காட்டும் அவர், “நாடு முழுவதும் உள்ள 1,50,000 துணை சுகாதார நிலையங்களை,  நல மற்றும் சுகாதார மையங்கள் என பெயர் மாற்றி, அவற்றை கார்ப்பரேட் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வசம் ஒப்படைக்கவும்; ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தை நடத்து (Run a PHC) என்ற திட்டத்தின் மூலம் அதனை  கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும்” நிதி ஆயோக் சதியாலோசனைகளை வைத்திருப்பதாக எச்சரிக்கிறார்.

அரசு மருத்துவமனைகளைத் தனியாரிடம் ஒப்படைத்தால் சிகிச்சையின் தரம் மேம்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை குஜராத் மாநில அனுபவம் உணர்த்துகிறது. மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை அறிமுகப்படுத்தியதன் விளைவாக அம்மாநில அரசு மருத்துவமனைகளில் தனியாருக்கு நிகராகக் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் பத்திரிக்கையாளர் ரேமா ரங்கராஜன்.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தக் கோரிப் போராடுவதுதான் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்வாக அமையுமே தவிர, குறைபாடுகளைக் காட்டியோ, வேறு காரணங்களை முன்வைத்தோ அவற்றைத் தனியார்மயமாக்குவது, கட்டண முறைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவை கண்ணை விற்று ஓவியம் வாங்கும் மூடத்தனத்திற்கு ஒப்பானது.

“அரசாங்கம் எதற்குத் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும்?” எனக் கேட்டுப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்றார்கள். அடுத்ததாக, நட்டம், நிர்வாகச் சீர்கேடுகளைக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்றார்கள். இப்பொழுது எல்.ஐ.சி.யின் மீது கைவைக்கத் துணிந்திருக்கும் ஆளுங்கும்பல், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவையும் அறிவித்திருக்கிறது. முந்தைய அரசுகள் ஆட்டை, மாட்டைக் கடித்தால், மோடி அரசோ மனுசனையும் கடிக்கத் துணிகிறது. இதனை அனுமதித்தால், ஏழைகளுக்குச் சிகிச்சையும் பொது சுகாதாரமும் இனி எட்டாக்கனிதான்.

பூங்குழலி

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க