‘இந்தியக் கலாச்சாரத்தை’ ஆய்வு செய்ய  மத்திய அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது குறித்து வரலாற்றாய்வாளர்கள் முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை பலரும் தங்களது வருத்தங்களையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். ”இந்திய கலாச்சாரத்தை” மோடி அரசு ஆய்வு செய்ய அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது ?

கடந்த செப்டெம்பர் 14-ம் தேதி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், நாடாளுமன்றத்தில் “இந்தியக் கலாச்சார” தோற்றுவாய் பற்றி 12,000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதற்கென தனியாக ஒரு நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த நிபுணர் குழுவில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன. அதில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களோ, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களோ இல்லை என்றும் முழுக்க முழுக்க வட இந்தியாவைச் சேர்ந்த ‘சாஷ்திரிகள்’தான் இருக்கிறார்கள் என்றும் பலரும் குறைபட்டிருக்கிறார்கள்.

படிக்க :
♦ திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்
♦ சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !

அந்தக் குறைகளின் பின்னணியைப் பார்ப்பதற்கு முன்னர், மத்திய அரசின் கலாச்சார ஆய்வு குறித்த அறிவிப்பிலேயே சில கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, ‘இந்தியக் கலாச்சாரம்’ குறித்து ஆய்வு செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.

இந்தியா என்ற வரையறையுடன் கூடிய ஒரு நிலப்பரப்பு ஒரே நாடாக குறிப்பிடப்படுவது கடந்த 200- 300 ஆண்டுகளுக்குள்ளாகத் தான். அதற்கு முன்னர், அது தனித்தனி ராஜ்ஜியங்களாகவே அறியப்பட்டது. இன்றும்கூட அது பல்வேறு இன, மொழி மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட கூட்டமைப்பாகவே இருக்கிறது. இதில் எதை “இந்தியக் கலாச்சாரமாக” எடுத்துக் கொண்டு ஆராயப் போகிறது இந்திய அரசு ?

அடுத்ததாக 12,000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று இந்தியக் கலாச்சாரத்தை ஆராய இருப்பதகாவும் தெரிவிக்கிறது அமைச்சரின் அறிவிப்பு. உலகளவில் மிகவும் பழமை வாய்ந்ததாக தொல்லியல் மற்றும் மானுடவியல் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட நாகரீகங்களே அதிகபட்சமாக 5500 ஆண்டுகளுக்குள் இருந்தவையே. ஆனால் ‘இந்தியா’ என்றழைக்கப்படும் நிலப்பகுதியில், 12000 ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது நாகரீகங்கள் தோன்றுவதற்கும் முன்னர் – ‘ஒரு’ கலாச்சாரமோ அல்லது அதற்கான தோற்றுவாயோ இருந்ததாகவும், அதைக் கண்டறியத் தான் ஆய்வுக் குழு போட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறது மத்திய அரசு.

12,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகங்கள் குறித்த எந்த ஒரு ஆதாரமும் இல்லாத சூழலில், பிரிட்டிஷாரால் ‘இந்தியா’ என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நிலப்பரப்பில் ‘ஒற்றை’ நாகரீகத்தைத் தேடி ஆய்வு செய்யும் திறமை சங்க பரிவாரக் கும்பலுக்கு மட்டும்தான் உண்டு.

மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இல்லாத சரசுவதி நதியைக் கண்டுபிடிக்க மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான், அரியானா அரசுகள் நூற்றுக் கணக்கான கோடிகளை செலவழித்தன. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய மோடி அரசிடம் இருந்து பத்மபூஷன் விருதுபெற்ற கே.எஸ். வால்தியா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி இருந்ததற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், அந்த நதி சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாய்ந்ததாகவும், அதில் 1000 கிலோமீட்டர் பாகிஸ்தானில் இருந்ததாகவும் 3000 கிமீட்டர் இந்தியாவில் பாய்ந்ததாகவும் குறிப்பிட்டார். “இது யாராலும் மறுக்க முடியாதது” என அப்போதைய நீர்வளத்துறை அமைச்சரும் ‘பாபர் மசூதி இடிப்பில்’ இழிபுகழ் பெற்றவருமான உமா பாரதி தெரிவித்தார். இந்தக் கட்டுக்கதைகளை அறிவியல்பூர்வமாக பல ஆராய்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.

சரசுவதி நதி எனும் வேத கால புராணப் புளுகு, எப்படி வால்தியா கமிட்டியால் வரலாறாக மாற்றப்பட்டதோ, அதே போலத்தான் புராணப் புளுகுகளை 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமாக, வரலாறாக இந்திய அரசு அமைத்திருக்கும் இந்த ஆய்வுக் குழுவால் மாற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது.

சரஸ்வதி நதியை தேடிய தருணத்தில்

சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முந்தைய நாகரீகமான கீழடி நாகரிகத்தை தொல்லியல் ஆதாரத்துடன் கீழடி அகழ்வாய்வு மையம் நிரூபித்த பின்னரும் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளாமல் தள்ளி வைத்த பாஜக அரசுக்கு உண்மையான இந்திய வரலாற்றைத் தேடும் ஆர்வம் இருப்பதாக நம்பமுடியுமா ?

சங்கிகள் நிறுவ விரும்பும் ‘வரலாற்றிற்கு’ தொல்பொருள் ஆய்வுகளும் ஆதாரங்களும் அவசியம் இல்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பல் நிறுவ விரும்பும் ‘வரலாறு’ என்பது ‘இந்து – சமஸ்கிருதம் – இந்தியா’ என்பதுதான். தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கு ஆதாரம் கிடைக்கப் போவது இல்லை. அதனால்தான் தக்கான பீடபூமியைத் தாண்டி யாரும் அந்த ஆய்வுக் குழுவில் இணைக்கப்பட வில்லை.

ஒருவேளை எடப்பாடி கேட்டுக் கொண்டதற்கிணங்க மோடி அரசு, ஒரு தமிழரையேனும் அந்த ஆய்வுக் குழுவில் இணைத்துக் கொள்ளுமானால், “திருக்குறள் என்பது சாஸ்திரங்களிலிருந்து எடுத்தியம்பப்பட்ட நூல்” என்று ‘ஆய்வு’ அறிக்கை அளித்த ‘பத்மபூஷன்’ நாகசாமி போன்றவர்களைத் தான் நியமிக்கும் !

ஆகவே, இந்த ஆய்வுக் குழு பிற்காலத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் இறுதி ஆய்வறிக்கையின் சாராம்சத்தை முன் கூட்டியே படிக்க விரும்புபவர்கள் புராணப் புளுகுகளையும் – “ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் – அது இந்துக் கலாச்சாரம்” என்ற முழக்கத்தையும் திரும்பத் திரும்ப படித்துப் பார்த்துக் கொள்ளலாம் !

அதிசயிக்காதீர்கள் ! காவி பாசிச ஆட்சியில், “இனி எல்லாமே இப்படித்தான்”.

நந்தன்

3 மறுமொழிகள்

  1. 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகச் சொல்லப்படும் லெமூரியா கண்டத்தில் தமிழர் நாகரிகம் இருக்கும்போது 12000 ஆண்டுகளுக்கு முன்னர் வேத நாகரிகம் இருக்கக் கூடாதா? இந்தியாவில் கப்சா வரலாறு என ஒன்று இருக்கிறது. அது இருவகைப்படும். ஒன்று ஆரிய கப்சா வரலாறு. இன்னொன்று திராவிட கப்சா வரலாறு. இந்தக் கட்டுரை ஆசிரியர் ரொம்பவும்தான் மார் தட்டுகிறார்.

  2. ஒரு முட்ட்ட்டாளால் எழுதப்பட்ட வன்மம் நிறைந்த எழுத்துக் குப்பையை செய்தி/கட்டுரை என்ற பெயரில் வெளியிடுவது அதர்மம். ஓ! ஓ தர்மம் தெரியாத மூடனுக்கு அதர்மம் எப்படி புரியும்.
    வரலாற்றிற்கு கால நிர்ணயம் செய்வதே தவறு. இருப்பினும், இன்றிருக்கும் தொழில்நுட்ப எச்சத்தால் 12 ஆயிரம் வருடங்களாவது பின் சென்று ஆராய முயல்வதில் பயங்கரவாத கம்யூனிச மூடர்களுக்கு என்ன பிரச்சினை?

    இந்த நிலப்பரப்பு ஆயிரம் ஆயிரம் அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும் கலாச்சார பிணைப்பில் இனைந்தே இருந்தது.. மூடனே!

  3. “வரலாற்றிற்கு கால நிர்ணயம் செய்வதே தவறு.’

    மிஸ்டர் நாய்டு, எந்த ஷாக்காவுல இதை சொல்லிக்கொடுத்தாங்க.?

    “இந்த நிலப்பரப்பு ஆயிரம் ஆயிரம் அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும் கலாச்சார பிணைப்பில் இனைந்தே இருந்தது.. ”

    மத்திய ஆசியாவில் இருந்து மலேசியா வரை இந்த நிலப்பரப்பும் கலாச்சாரங்களும் இணைந்து தான் இருந்ததன. இருக்கின்றன மிஸ்டர். ஆனால் அரசியல் என்பது வேறு.

Leave a Reply to NS Naidu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க