கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ்த்துறையில் உதவி பேராசிரியராக முனைவர் ப.ரமேஷ் பணியாற்றி வருகிறார். அவர் மீது புகார் எழுந்த நிலையில் மே மாதம் 27ம் தேதி சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

தன்மீது தவறு ஏதும் இல்லையென்று நீதிமன்றத்தின் மூலம் தடை ஆணை பெற்று கோவையிலுள்ள தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் Deputation ஆக பணியாற்றி வருகிறார். வருகை பதிவேடு, சம்பளம் போன்ற தேவைக்காக இதுவரை பணிபுரிந்த அதே கல்லூரிக்கு சென்று வருகிறார்.

25.07.2022 அன்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்கள், கோவை அரசு கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் முனைவர் ப. ரமேஷ் மீது எழுந்துள்ள புகாரை “விசாகா வழக்கு” அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோரப்பட்டது.

இந்நிலையில், 11.08.2022 அன்று விசாரணைக்காக கோவை அரசு கல்லூரிக்கு முனைவர் ரமேஷ் வந்துள்ளார். அப்போது அவர் மீது புகார் கொடுத்த முனைவர் ராஜ ராஜேஸ்வரி மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் முனைவர் வீரமணி தலைமையில் 30 க்கும் மேற்பட்ட பேராசியர்கள் முனைவர் ரமேஷ் என்பவருக்கு எதிராக கோசமிட்டனர்.


படிக்க : கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே !


அதே நேரத்தில் முனைவர் ரமேஷ்-க்கு ஆதரவாக அவருடைய நெறியாளுகையில் கீழ் பயிலும் பி.எச்.டி இரு மாணவிகள் மற்றும் தமிழ்த்துறையை சேர்ந்த இரு ஆய்வு மாணவிகளும் போராடினர். முனைவர் ரமேஷ் மீது எவ்வித தவறும் இல்லை, இக்கல்லூரியில் சாதிய பாகுபாடு பார்க்கின்றனர், ஊழல் முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்கு அவரை பழிவாங்கும் நோக்கத்தில் வெளியேற்றியுள்ளனர் என்று கூறினர்.

அடுத்த நாள் காலை இந்த 4 மாணவிகள் மற்றும் ஒரு மாணவியின் தாயாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் போராடினர். கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வதாக போலிசு மிரட்டிய பின்னரும் “கலெக்டர் எங்களை வந்து சந்திக்க வேண்டும்” என உறுதியாக நின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து “நேர்மையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்” என்று கடிதம் கொடுத்துள்ளனர்.

***

அருணா என்ற மாணவி 01.07.2019 முதல் முனைவர் அ. ராஜ ராஜேஷ்வரி நெறியாளுகையின் கீழ் “கொங்கு வட்டார புதினங்களில் வெளிப்பட்டுள்ள சாதிய ஆணாதிக்க அதிகாரங்கள்” என்ற தலைப்பில் முழுநேர ஆய்வு படிப்பை மேற்கொண்டு வந்துள்ளார்.

மாணவி மிகவும் பிற்ப்படுத்தபட்ட  சமூகத்தை (MBC) சேர்ந்தவர், சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார். மாணவியின் ஆய்வுக் கட்டுரையை படித்த போது கணவரின் சாதியை சுட்டிக்காட்டி “அந்த சாதி இழிந்த சாதி என்பதால் நீ இம்மாதிரி எழுதுகிறாய்” என்றும், “உன் ஆய்வு தவறானது நான் நெறியாளராக இருக்க மாட்டேன் வேறு நெறியாளரை மாற்றிக்கொள்” என்று கூறிவிட்டு “நீ முனைவர் பட்டத்தை எப்படி முடிக்கிறாய் என்று பார்க்கிறேன்” என்றும் கவுண்டர் சாதிய வன்மத்துடன் பேசியுள்ளார்.

அருணா என்ற மாணவியின் ஆய்வு படிப்பை ரத்து செய்ய கடிதம் கொடுத்து தனது சாதிய வன்மத்தை கக்கியுள்ளார். ஆய்வு படிப்பை கற்பிக்கும் ஆசிரியருக்கே மாணவி கட்டுரை எழுதிக் கொடுத்து அதனை ஆசிரியரின் பெயரில் பதிவிட்டு கொண்ட கேலிக்கூத்தும் அரங்கேறியுள்ளது.

இம்மாணவி எம்.பில் செய்த பேராசிரியரான ப.ரமேஷ் என்பவரிடம் பி.எச்.டி ஆய்வு படிப்பை தொடர கல்லூரி ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில் 04.04.2022 பின் பேராசிரியர் ரமேஷ் என்பவரிடம் ஆய்வு படிப்பை தொடர்ந்துள்ளார்.

முனைவர் ராஜ ராஜேஷ்வரி 08.04.2022 தேதியிட்டு உயர்கல்விச் செயலர் அவர்களுக்கு மாணவியை முனைவர் ரமேஷுடன் தொடர்புபடுத்தி அவரை கல்லூரியை விட்டு துறத்த திட்டமிட்டு புகார் கடிதத்தை அனுப்பினார். அதன் பெயரில் கல்வி இணை இயக்குநர் உலகி என்பவர் தலைமையில் உறுதி செய்யப்படாத குற்றத்தை நிரூபிக்க வேண்டி விசாரணையை நடத்தி ரமேஷ் என்பவரை பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

மாணவியை விசாரிக்கும் போது, “தங்களுக்கும் முனைவர் ரமேஷ் அவர்களுக்கும் என்ன தொடர்பு? உறவினரா? நண்பரா?” என்று கேட்டுள்ளனர். இதே போல் முனைவர் ரமேஷிடமும் கேட்டுள்ளனர். விசாரணையில் 18 பேராசிரியர்கள் கலந்துக்கொண்டதில் 11 பேராசிரியர்கள்(பெண் பேராசிரியர்கள் உட்பட) முனைவர் ரமேஷ் மீது எவ்வித தவறும் இல்லையென எழுதிக் கொடுத்ததாக கூறியுள்ளனர். அவரை எப்படியாவது கல்லூரியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற வன்மத்துடன் விசாரணை நடைபெற்றுள்ளது உறுதியாகிறது.

***

முனைவர் ரமேஷ் என்பவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். அவர் கல்லூரியின் துணைத் தேர்வு கட்டுப்பாடு அலுவலராகவும், கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், யூஜிசி கல்வி உதவித்தொகை மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கான நோடல் அலுவலராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும், ஒற்றை பெண் குழந்தை கல்வி உதவித்தொகை (Single girl child scholarship), யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் கல்வி தொகை பெற மாணவர்களுக்கு தன்னார்வ வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ளார். பல மாணவர்கள் அவரை சந்தித்து உரையாடுவதும், ஆலோசனை பெறுவதும் இவர் மாணவர் நலனில் அக்கரைக்கொண்டவராக செயல்பட்டு வந்தது தெரிகிறது.

இக்கல்லூரியில் இவரும் இவரது நண்பரும் மாணவர்களிடம் முற்போக்கான கருத்துக்களை கூறுவது மற்றும் மாணவர்கள் மத்தியில் ஜனநாயகமாக நடந்து கொள்ளும் பண்பு போன்றவற்றால் இந்த கல்லூரி நிர்வாக கட்டமைப்பு எதிர்ப்பதை இந்நிகழ்வின் மூலம் உணர முடியும்.

கடந்த வருடம் 31.10.2021-ல் பொறுப்பேற்று கல்லூரி முதல்வராக இருக்கும் முனைவர் கலைச்செல்வி அவர்களிடம் சென்று ராஜ ராஜேஷ்வரி  “நானும் நீங்களும் ஒரே சமூகத்தை(கவுண்டர்) சேர்ந்தவர், இங்கு எஸ்.சி சாதியினர் ஆதிக்கம் அதிகமாக உள்ளது, இவர்களை இதற்கு முன்னால் இருந்த முதல்வர் சித்ரா வளர்த்து சென்றுள்ளார் நீங்கள் அவ்வாறு செய்ய கூடாது” என்று தனது கவுண்டர் சாதியத் திமிரை வெளிப்படுத்தி நிர்வாகத்தில் உள்ள sc சமூகத்தினரை ஒழித்து கட்ட கல்லூரி முதல்வரிடம் கோரியுள்ளார்.

முனைவர் கலைச்செல்வி ஆதிக்க சாதியாக இருந்தாலும் முற்போக்கு கருத்து பேசும் குடும்பப் பின்புலம் இருப்பதால் ராஜேஷ்வரி கூறியதை உயர்கல்வி துறை செயலருக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார். இதனை முனைவர் ரமேஷ் RTI மூலம் பெற்றிருக்கிறார்.

தமிழ்த்துறை தலைவர் பூங்கொடி (பட்டியலின சமூகம்) வகுப்பிற்கு முறையாக செல்லாமலும் கேள்வி கேட்கும் மாணவர்களை மிரட்டியும் வந்துள்ளார். “பாடம் எடுக்காமல் ஏமாற்றிக்கொண்டிருக்கும் பூங்கொடி, ஜோதி, சிவகாமி ஆகியோர்களை வேலையை விட்டு துறத்துங்கள்” என்று மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடிதம் எழுதி cm cell-ற்கு அனுப்பியுள்ளனர். முனைவர் பூங்கொடி வகுப்பில் பேசும்போது “cm cell address-யே தெரியாது, கலெக்டர் எப்படி உட்கார்ந்திருப்பார் என்று கூட தெரியாது நீ எல்லாம் பேசுவியா?” என்றும் “UG படிக்கும் போது எவ்வளவு மார்க் எடுத்தாலும் PG சேர விடமாட்டேன்” என்றும் அதிகார வெறிபிடித்த திமிரோடு மாணவர்களிடம் பேசியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் 20-ம் தேதி ரகுநாதன் என்ற பேராசிரியர் மீது மாணவிகளால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. அவருக்கெதிராக மாணவர்களின் போராட்டத்திற்கு பின் கைது செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர்மீது பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை என்று மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். இவ்விசயம் தெரிந்ததும், பேராசிரியர் ரகுநாதன் துறையை சேர்ந்த முன்னாள் மாணவிகள் “மீண்டும் ரகுநாதன் கல்லூரிக்கு வந்தால் இதுவும் ஒரு கள்ளக்குறிச்சியாக மாறும்” என எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளனர்.

கல்லூரியில் முன்னாள் முதல்வர் சித்ரா என்பவர் பணிபுரிந்த காலத்தில் தாவரவியல் துறைக்கு யூஜிசி அளித்த ஆராய்ச்சிக்கான 41 லட்சம் ரூபாய் நிதி சரியாக கையாளப்படவில்லை. இவர் பதவி வகிக்கும் போது முதல்வர் அலுவலக 3 நாற்காலிகளை தலா ரூ.33 ஆயிரம் என ரூ.99 ஆயிரம் கொடுத்து வாங்கியதாக் கணக்கு காட்டியுள்ளனர். அதனால் முன்னாள் முதல்வர் சித்ரா பணியிடைமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் தற்போது முதல்வராக பணிபுரியும் கலைச்செல்வி என்பவர் அந்த முறைகேட்டை அம்பலப்படுத்தினார்.

முனைவர் ராஜேஷ்வரி, துறைத்தலைவர் முனைவர் பூங்கொடி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் வீரமணி  ஒன்று சேர்ந்து  திட்டமிட்டு இந்த மாணவியின் ஆய்வு படிப்பைப் பயன்படுத்தி முனைவர் ரமேஷ் என்பவரை பழி வாங்கப்பட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு கல்லூரிக் கல்வி நிறுவனத்தில் ஊறி கிடக்கும் சாதிய வன்மமும் பதவிக்கான அதிகாரப் போட்டியும் காரணமாக அமைகின்றன.

முனைவர் ரமேஷ் என்பவரை பழித் தீர்த்துக்கொள்ள மண்டல கல்வி இணை இயக்குநர் உலகி என்பவரை பயன்படுத்தியுள்ளனர். உலகி மற்றும் ராஜ ராஜேஷ்வரி உறவினர்கள், வீரமணி என்பவர் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதை ரமேஷ் கண்டித்துள்ளார். இவர்கள் அனைவரும்  இணைந்து திட்டமிட்டு முனைவர் ரமேஷ் மீது சாதிய விசத்தை கக்கியதற்கு பின்னால் ஒளிந்திருப்பது பார்ப்பனிய கண்ணோட்டமே.

***

கவுண்டர் சாதியை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரியும், பட்டியிலின சாதியிலே உயர்ந்த பிரிவு என காட்டிக்கொள்ளும் துறைத்தலைவர் பூங்கொடியும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த வீரமணி ஆகியோரும் சேர்ந்துக்கொண்டு முனைவர் ரமேஷ் அவர்களை கல்லூரியை விட்டே வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். பேராசிரியர்களின் அதிகாரப் போட்டி மனபான்மையும், தாழ்த்தப்பட்டவனை எப்படி முன்னேற விட முடியும்? என்ற சாதிய வன்ம விசத்தை கக்குவதற்கு இக்கட்டமைப்பு உறுதுனையாக இருந்துள்ளது.

கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் முனைவர் ரமேஷ் அவர்களுக்கு நற்பெயர் இருக்கிறது. மண்டல கல்வி இணை இயக்குநர் உலகி என்பவரின் அதிகாரத் திமிரும், கவுண்டர் சாதிய வன்மமும் வைத்து பாலியல் புகார் எனும் பொய் புகாரை தயார் செய்து பழிவாங்க அனுமதித்துள்ளது இந்த கல்லூரி நிர்வாகக் கட்டமைப்பு.

இவர் மீது எந்தவொரு மாணவியும் பாலியல் புகார் கொடுக்கவில்லை, முனைவர் ராஜ ராஜேஷ்வரி பாலியல் புகார் என்ற சொல்லை புகாரில் பயன்படுத்தவே இல்லை. ஆனால் முனைவர் ரமேஷ் உடன் பணிபுரிந்த மாநில ஆசிரியர் கழக தலைவர் வீரமணி என்பவர் பாலியல் புகார் கொடுக்கப்பட்டதாக போராட்டத்தில் பேட்டியளிக்கிறார். அதனை ஊடகங்கள் பாலியல் குற்றவாளியாக முனைவர் ரமேஷ் என்பவரை சித்தரித்துள்ளது.


படிக்க : கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !


இக்கல்லூரியில் நிகழும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், பாடம் எடுக்காத ஆசிரியர்களுக்கு எதிராகவும், பாலியல் புகாருக்கு எதிராகவும் கடந்த 10 மாதத்தில் பல்வேறு மாணவர் போராட்டங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் முனைவர் ரமேஷ் என்பவருக்கு ஆதரவாக மாணவர்கள் போராடும் மனநிலையில் இருந்துள்ளனர். ஆனால், அவர்களை அமைதிப்படுத்தி வந்துள்ளார். அருணா என்ற மாணவியை வைத்து இந்த பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால் கடந்த 3 மாதமாக மீண்டும் அவரை கல்லூரிக்கு கொண்டுவர cm sell-ற்கு கடிதம் அனுப்புவது, கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்புவது, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது போன்ற பல்வேறு வகையில் 4 மாணவிகளும் போராடி வருகின்றனர்.

இந்த மாணவிகளை துறை ரீதியாக மிரட்டி வருவதும், மாணவர்களை மிரட்டி போராடும் மாணவிகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு எதிராகவும் திசை திருப்புவது அரங்கேறி வருகிறது.

நேர்மையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு துணை நிற்பதும், களத்தில் போராடும் மாணவிகளுடன் போராடுவதும் மாணவர்களாகிய நமது அனைவரின் கடமையாகும்.

இது போன்ற அதிகார வெறிபிடித்த சாதிய வன்மத்துடன் இருக்கும் பேராசிரியர்களை வெளியேற்றுவதும், அடுத்து பழிவாங்கும் இலக்கில் உள்ள முற்போக்கான பேராசிரியர்கள் வெளியேற்றபடுவதை தடுக்கவும் மாணவர்களாகிய நாம் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் இருந்து களத்தில் போராட வேண்டியுள்ளது.

வினவு செய்தியாளர்,
கோவை.