தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோற்க வேண்டும் என்று நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி-இன் மருத்துவரான டியாகோ ஸ்வார்ஸ்டைய்ன் (Diego Schwarzstein) கூறியுள்ளார்.
மெஸ்ஸியின் 11-வது வயதின் போது வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டது. அப்போது மெஸ்ஸிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தான் இவர். அன்று முதல் இன்று வரை இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
ஸ்வார்ஸ்டைய்ன் தி டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “ஒரு கால்பந்து ரசிகனாக அர்ஜென்டினா சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் ஒரு அர்ஜென்டினிய குடிமகனாக, ஒரு மனிதனாக, அர்ஜென்டினா அணி முதல் சுற்றின் மூன்று ஆட்டங்களிலுமே தோல்வியடைந்து வெளியேற வேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: “அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றால், இந்த இழிவான ஜனரஞ்சக அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க அவ்வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும். அனைவரும் கால்பந்து போட்டியின் மீது கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும்போது, நாணயத்தின் மதிப்பைக் கூட குறைத்து விடுவார்கள்.
பல்வேறு நெருக்கடி காலகட்டங்களில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு நெருக்கடியை நாடு எப்போதும் சந்தித்ததில்லை. அரசின் தரவுகளின் படி, மாதம் 1,20,000 ஆர்ஜென்டைன் பெசோ-விற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் ஏழைகள். ஆனால் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மாத ஊதியமோ 60,000 பெசோ. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கூட ஏழைகளாக இருக்கின்றனர்”.
தற்போது, அதிபர் ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ்-யின் (Alberto Fernández) ஆட்சியில் நாட்டின் பண வீக்கம் 83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வங்கிகளும் திவால் நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. ‘மத்திய-இடதுசாரி கூட்டணி’ என்று சொல்லப்படும் திருத்தல்வாத இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சிதான் அங்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடக்கும் உலக கால்பந்து
போட்டியில் தனது தாய்நாடு தோற்க
வேண்டும் என்கிறார் ஒருவர்!
அவர் சாதாரண நபரல்ல…
அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர்
மெஸ்ஸியின் அதிகாரபூர்வ மருத்துவர்!
அர்ஜென்டினா வென்றால்
தன் நாட்டில் நிலவும் துயரத்தை
அரசு மறைத்துவிடும் என்கிறார், அவர்!
முதாளித்துவம் தேசிய வெறியூட்டி
தனது தோல்வியை மறைப்பதை
நாம் எப்போது உணரப்போகிறோம்?
நன்றி: புதிய தொழிலாளி