கஞ்சா விற்பனை கும்பலை தட்டிக்கேட்ட போராளிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள்!
கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!
சட்டவிரோத லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையைக் கண்டித்து இயக்கம் நடத்திய சேலம் DYFI மாவட்டச் செயலாளர் தோழர் பெரியசாமி, சமூக விரோதக் கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் இதே போல கஞ்சா விற்பனை கும்பலுக்கு எதிராக போராடிய DYFI தோழர் தவூபிக் தாக்கப்பட்டதை நாம் அறிவோம்.
போதை சீரழிவுக்கு எதிராக இயக்கம் நடத்தும் போராளிகள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். தோழர் பெரியசாமியை தாக்கிய கிரிமினல் கும்பல்கள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சட்டவிரோத லாட்டரி, கஞ்சா விற்பனை ஆகியவற்றில் ஈடுபடும் கிரிமினல் கும்பல்கள் போலீசின் கள்ளக் கூட்டு இல்லாமல் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
லஞ்சம் வாங்கிக் கொண்டு போலீசே கிரிமினல் கும்பல்களை பாதுகாப்பதால்தான், சமூக விரோதச் செயல்களை எதிர்த்துப் போராடும் பெரியசாமி போன்ற செயற்பாட்டாளர்கள் கிரிமினல் கும்பல்களால் இப்படி துணிச்சலாக தாக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு போலீசின் “கஞ்சா வேட்டை 2.0” என்பதெல்லாம் வெறும் பம்மாத்து என்பதற்கான நிரூபணங்களே போராளிகள் மீதான தொடர் தாக்குதல்கள்.
சீரழியும் இளைஞர்களை கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், பெரியசாமி, தவூபிக் போன்ற தோழர்களோடு மக்களும் இணைந்து போராடுவதே தீர்வு!
புதிய ஜனநாயகம்
13.07.2023