ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு ! வந்தே மாதரம் | கவிதை

மணிப்பூர் தாய்மார்கள் கும்பல் பாலியல் வன்முறையில்..... சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ? வந்தே மாதரம் !

வந்தே மாதரம் !

ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு !
வந்தே மாதரம்

வந்தே மாதரம்
இங்கு ஒருபோதும்
கிடைக்காது சுதந்திரம் !

மணிப்பூர் ,ஹரியானா
………. மறக்க முடியாத கனவுகள் இவை !

காஷ்மீர் தொடங்கி
பாபர் மசூதி வரை
கயர்லாஞ்சி தொடங்கி நாங்குநேரி வரை
ஒவ்வொரு ஆண்டும்
மறையாத வடுக்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே செல்கின்றன !

காலையில் கண்ணாடியை பார்க்கும் பொழுது தெரிகிறது
முகம் முழுக்க வடுக்கள்!

கல்வி முதல் காடு, மலை, கழனி வரை எல்லாம் தனியாருக்கு !

கோபுரம் முதல் கருவறை வரை அத்தனையும் அய்யருக்கு !
எங்கே இருக்கிறது சுதந்திரம்?

நடக்க
படிக்க
உடுக்க
சுவைக்க
விதைக்க
வழிபட
எதற்கும் இல்லை சுதந்திரம்!

இது சுதந்திர தினம்!

வேங்கை வயலில் என் முகத்தில் வழிந்த பீயை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா?
வந்தே மாதரம் !

மணிப்பூர் தாய்மார்கள்
கும்பல் பாலியல் வன்முறையில்…..
சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ?
வந்தே மாதரம் !

டாக்டருக்கு படிக்க
25 லட்சம் !
வழியின்றி அப்பனும் மகனும் தூக்கில் தொங்க
எரித்த சாம்பல் கண்ணில் விழுகிறது !
இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்
இதற்குப் பெயர்தான் சுதந்திரம் !

கல்வி நிலையங்கள்
தொழிற்சாலைகள்
விவசாய நிலங்கள்
சிறு தொழில்கள்
எல்லாம் மடிவதற்காக காத்திருக்கின்றன
கூடவே கோடிக்கணக்கான மக்களும் !

செத்துப் போவதற்குள் ஒருமுறையாவது சொல்லி விடுங்களேன் ! வந்தே மாதரம்

செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது செல்பி எடுத்து விடுங்களேன் !

ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்
சுதந்திரம்
ஜனநாயகம்
புரியாத பாஷைகளை
ஜெபிக்க வேண்டுமாம்!

ஆண்டவர்
கழுத்தை அறுத்துக் கொண்டே கட்டளை இடுகிறார்!

ஆண்டவரையும் அதானிகளையும் எதிர்க்காமல் ஒருபோதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது!
மூச்சு விடவும் முடியாது!

தெரியாமல் இல்லை என்னதான் இருந்தாலும் என்று இழுப்பவர்களுக்கு
கொடியை நெஞ்சில் குத்தாதீர்கள்
வாயில் குத்துங்கள்.

-மருது