அந்த ஒரு நாளுக்காக
அந்த வாரம் முழுவதுமே ஆரவாரம்…
ஆடை கடைக்கும் ஆபரண கடைக்கும் அணிவகுக்கும் அப்பாக்கள்…
விதவிதமான வெடிகளை வாங்கி குவிக்கும் வேடிக்கை அப்பாக்கள் ஒருபுறம்…
அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருக்க… நான் மட்டும் சிந்தனை கடலில் மூழ்கியிருந்தேன்… (தம் தந்தை எங்கே)…
ஆப்பம் சுட்டாச்சா.., ஆடை எடுத்தாச்சா.., பட்டாசு வாங்கிட்டியா…
பாலுவின் கேள்வி அம்புகள்
என்னை நோக்கிப் பாய…
அம்புக்கு பயந்து அம்மாவிடம் கேட்டேன்… அம்மா சொன்னாள் அப்பா வரட்டும்டா கண்ணா என்று…
இரவெல்லாம் இவனின்வசம்…
கதர் சட்டை வாங்கி வருவாரோ…
கலர் சட்டை வாங்கி வருவாரோ…
அட பனியன் வாங்கி வந்தால் கூட பக்கத்துவீட்டுப் பய பாலுகிட்ட காட்டிறுனும்…
எனப் படபடத்தது நெஞ்சு…
விடியற்காலை விண்மீன் தூங்கும் நேரம்…
சேவல் கூவும் வேளை…
ஆடையெல்லாம் அழுக்கு…
அரைநிர்வாண கோலம்…
கையெல்லாம் காயச் சிராய்ப்பு…
சேறுபடிந்த செருப்பு…
சட்டை பாக்கெட்டில் பணத்திற்கு பதில் சாரயஸ்டிக்கர்ஸ்…
வாய் முழுக்க பிராந்தி வாடை…
தட்டுத்தடுமாறி வீடு வந்தடைந்தார் என் அப்பா…
அம்மாவின் கண்களில் அருவியாய் கொட்டும் கண்ணீர்…
இப்படிதான் இருந்தது..,
என் இளமைக்கால பண்டிகை நாட்கள்…
பண்டிகைகள் பல வந்துபோகிறது…
இருந்தாலும் “தீபாவளி” இன்னும் நெஞ்சில் “தீராதவலி”யாகவே இருக்கிறது…..
இந்திரஜித்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube