இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!

பார்ப்பனிய எதிர்ப்பு தான் தமிழ் பண்பாட்டின் உயிர் நாடி என்ற உண்மை நம்மை சுட்டுக் கொண்டிருக்கும் வரை ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிஸ்டுகளால் நம்மை கைக்கொள்ள முடியாது.

இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு!
தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்! நாங்கள்!

இந்துராஷ்டிரத்தின் முடிவுரையை இனி தமிழ்நாடு எழுதட்டும்!

பெரியார் சிலை அருகே அம்பேத்கர், பகத் சிங்கின் படங்களை உயர்த்திப் பிடித்தபடி பாபர் மசூதியை இடித்து இஸ்லாமியரின் இரத்தம் குடித்த இராமனுக்கு கோயில் கும்பாபிஷேகமா? கும்பிடச் சொல்வது துரோகம் இல்லையா? என்ற முழக்கங்கள் பக்தர்களின் காதில் விழுந்ததோ என்னவோ இராமனின் காதுகளுக்கு செல்லாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. பாதிக்கப்பட்ட இஸ்லாமியரின் பக்கம் நிற்பது அறம் என்ற எமது கருத்துகள் சுற்றி இருந்த மக்களிடம் பரவாமல் தடுத்திருக்கவும் வாய்ப்பில்லை.

இராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை, சில மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை…. இப்படி எத்தனையோ கோமாளிக் கூத்துகளை நடத்திக் கொண்டிருந்தாலும் தமிழ்நாடு இயல்பாக மட்டுமே இருந்தது என்றால் அதுதான் பார்ப்பனிய எதிர்ப்பு இன்னும் மழுங்கவில்லை என்பதற்கான அடையாளம்.

தமிழ்நாட்டின் நடிகர்கள், பணம் படைத்தவர்கள் எல்லாம் அயோத்தியின் பக்கம் நிற்க தமிழ்நாடு மட்டும் உண்மையின் பக்கம் நின்று இருக்கிறது என்பதே உண்மை. பார்ப்பனிய எதிர்ப்பு தான் தமிழ் பண்பாட்டின் உயிர் நாடி என்ற உண்மை நம்மை சுட்டுக் கொண்டிருக்கும் வரை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளால் நம்மை கைக்கொள்ள முடியாது.

பலநூறு கோடி செலவு செய்து எடுத்த படம் முதல் நாளே பிளாப் ஆவது போல, இராமனின் படம் தமிழ்நாட்டில் ஊத்திக் கொண்டது என்பது இன்னொரு உண்மை.

இராமன் கோயில் திறப்பை வைத்து தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை எல்லாம் கைப்பற்றி விடலாம் என்று மனப்பால் குடித்த பாசிச பாஜகவுக்கு, பாசிஸ்டுகளின் வாயில் பினாயிலை அல்லவா தமிழ்நாடு ஊற்றியிருக்கிறது!

ஒன்றிய நிதி அமைச்சர், ஆளுநர் இப்படி எத்தனையோ பேரை கூட்டிக் கொண்டு வந்தும் கோயில்களை கலவர பூமியாக்க முயற்சி செய்த பாசிஸ்டுகள் தோற்றுப் போய் இருக்கிறார்கள். தோற்றுப் போய் இருக்கிறார்கள் என்பதை விட தமிழ்நாடு அவர்களை தோற்கடித்து உள்ளது.

இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழா மிகப் பெரிய விழாவாக கொண்டாடப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் அது ஒரு செய்தியாக மட்டுமே கடந்து போயிருக்கிறது.

நாடு முழுவதும் இந்து இராஷ்டிரத்தின் கால்கோள் விழாவை தொடங்கி வைத்திருக்கிறார் நரேந்திர மோடி. இந்த பாசிச நடவடிக்கைக்கு எதிராக மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு அமைப்புகள் சார்பாக நேற்று (22.01.2023) காலை 10:30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இராமர் கோயிலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம். இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானப் போராட்டங்கள் நடைபெற்று இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே உடல் எல்லாம் புல்லரித்துப் போகிறது.

இன்று தமிழ்நாட்டில் எத்தனையோ அமைப்புகளும் கட்சிகளும் இருந்த போதிலும் மிகப்பெரிய போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது வருத்தத்தை தந்திருந்தாலும் இந்துராஷ்டிரத்திற்கான முடிவுரையை தமிழ்நாடு கண்டிப்பாக வரலாற்றில் எழுதும்.

அடிபட்ட பாம்பாக பாசிஸ்டுகள் இனி சீறுவார்கள்; இனி எல்லா வித வித்தைகளையும் காட்டுவார்கள்; தமிழ்நாட்டை கைப்பற்ற அனைத்து சதி வேலைகளையும் செய்வார்கள்.

நிர்வாகம், பாதுகாப்புத்துறை, அரசாங்கம் என அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அதானி – அம்பானி பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. இப்போது போராட வேண்டாம் என்று இருப்பதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிராக வீதிகள் தோறும் களம் அமைப்போம் !

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிப்போம்!


தகவல்
மக்கள் அதிகாரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க