இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!
பாசிச மோடி கும்பலை வீழ்த்தாமல் வாழ்வு இல்லை!

08.08.2024

கண்டன அறிக்கை

ஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதுடன், வக்ஃபு சொத்துகளை அபகரித்து பறிக்கும் நோக்கத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டம் 1995 (திருத்தம்) என்ற பெயரிலான மசோதாவை தாக்கல் செய்துள்ளது பாசிச மோடி அரசு.

பொதுவாக ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தங்கள் என்றால் ஒன்று, இரண்டு முதல் 10 திருத்தங்கள் வரை மேற்கொள்வார்கள். ஆனால் 40 திருத்தங்களை மேற்கொள்ளப் போகிறோம் என்று அறிவித்து அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள மத உரிமைகளை ஒழித்துக் கட்டியுள்ளது பாசிச மோடி அரசு.

மேலும் இத்திருத்தங்கள் மூலம் நாடு முழுவதிலும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான 7,85,934 சொத்துக்களும் பெரும் அபாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

வக்ஃபு வாரிய சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை இஸ்லாமியர் அல்லாதவருக்கு வழங்கியுள்ளது இந்த சட்டத் திருத்தம்.

வக்ஃபு வாரிய சொத்துகள் மீதான முடிவுகள் எடுக்கும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியதன் மூலம் வக்ஃபு சொத்துக்களை இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கும் சதியும் அரங்கேறி உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ஐ எடுத்துக்காட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துகளை தீட்சிதர்கள் அனுபவித்து வருகிறார்கள். அது மட்டும் இன்றி அந்த சொத்துக்களின் மீது தமிழ்நாடு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று வாதிடுகிறார்கள். ஆனால் அரசியல் அமைப்புச் சட்டம் 25, இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருந்தாது என்பது போல இந்த சட்டம் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


படிக்க: சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்! வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!


சிதம்பரம் நடராஜர் கோயிலின் மீது தமிழ்நாடு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் வக்ஃபு வாரிய சொத்துகளின் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க உரிமை பெற்றவர் என்பது எவ்வளவு பெரிய முரண்?

வக்ஃபு வாரியத்திற்கும் அரசுக்கும் அல்லது தனி நபர்களுக்கும் இடையிலான சொத்து விவகாரத்தில் முடிவினை கூறக்கூடிய உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு அளித்ததில் இருந்து வக்ஃபு வாரிய சொத்துக்கள் இனி இஸ்லாமியரிடமிருந்து பறிக்கப்படுவதற்கான சட்டப்பூர்வமான வேலையை பாசிச மோடி அரசு தொடங்கி விட்டது என்றே கூறலாம். அரசு எந்திரத்தை காவிமயமாக்கி உள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், நடுநிலைமையான, சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரையா வக்ஃபு வாரிய சொத்துக்கள் விவகாரத்தில் நியமிக்கும்?

இந்து அறநிலையத்துறையில் இந்துக்களைத் தவிர வேறு யாரும் எவ்வித பணியிலும் ஈடுபட முடியாது என்ற நிலை இருக்கும் பொழுது, வக்ஃபு வாரிய சொத்துகள் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் (அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்) எந்த ஒரு முடிவையும் எடுக்கவும் அறிவிக்கவும் உரிமை பெற்றவர் ஆகிறார் என்பது இஸ்லாமிய மக்களின் மீதான வெறுப்புணர்வும் பாகுபாடும் ஆகும்.

ஆகவே சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்த வக்ஃபு சட்டம் 1995 திருத்த மசோதாவை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

மோடி அரசுக்கு தனிப் பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் இந்து ராஷ்டிரத்தை அமைக்கும் பயணத்தில் துளியும் பின்வாங்கவில்லை என்பதையே புதிய முப்பெரும் சட்டங்கள், ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்வதற்கு இருந்த தடை விலக்கம், தற்பொழுது வக்ஃபு சட்டம் 1995 இல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் ஆகியவை உணர்த்துகின்றன.

அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை ஒழித்துக் கட்டும் வக்ஃபு சட்டம் 1995 திருத்த மசோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தான், மோடி – அமித்ஷா பாசிச கும்பலை பின்வாங்க வைக்கும்.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க