“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி | செய்தி – புகைப்படம்

க்கள் அதிகாரக் கழகம் கொள்கை அறிக்கையான ”மாபெரும் ஆயுதம்” ஆவணத்தின் வெளியீட்டு நிகழ்வு தூத்துக்குடியில் ஏ.ஐ.சி.சி.டி.யு சங்க அலுவலகத்தில் 01/06/2025 அன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் தோழர் முருகன் அவர்களும், மே 17 இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் தோழர் அருண் அவர்களும் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமை ஏற்றார். மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் தமிழ் வேந்தன் மாபெரும் ஆயுதம் கொள்கை அறிக்கை குறித்து விளக்க உரையாற்றினார்.

தோழர் தாளமுத்து செல்வா மக்கள் அதிகாரம் இன்று மக்கள் அதிகாரக் கழகமாக மாறியது பற்றியும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்‌.எஸ் – பி‌.ஜே.பி வளர்ச்சியையும் அதைத் தடுக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டுப் பேசினார்.

சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் தோழர் முருகன் தனது உரையில் பி.ஜே.பி-யின் பொருளாதாரக் கொள்கையும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பொருளாதாரக் கொள்கை அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் கொள்கைகளாக இருப்பதையும், கூடுதலாக, இந்துத்துவ கோட்பாட்டை பி.ஜே.பி நடைமுறைப்படுத்தி பாசிசத்தை இம்மண்ணில் நிலை நிறுத்த முயல்வதையும் தனது உரையில் விரிவாக விளக்கிப் பேசினார். இத்தருணத்தில் மக்கள் முன்னணி, ஐக்கிய முன்னணி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஆகியவை குறித்து இந்த கொள்கை அறிக்கையில் தோழர்கள் விரிவாக விவாதித்து இருக்கின்றனர். இந்த மாபெரும் ஆயுதம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

அடுத்து பேசிய மே 17 இயக்க தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் தோழர் அருண், பி.ஜே.பி-யின் போக்கு குறித்தும் அதை வீழ்த்த வேண்டியது அவசியம் என்பது குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்.

விளக்க உரை ஆற்றிய தோழர் தமிழ்வேந்தன், இது ஒரு கட்சியின் கொள்கை அறிக்கை மட்டும் அல்ல. இது மக்கள், ஜனநாயக சக்திகள் பாசிசத்தை வீழ்த்துவதற்கு, அவர்தம் கைகளில் ஏந்தக்கூடிய மாபெரும் ஆயுதம் என்பதையும், பி.ஜே.பி என்கிற பாசிச கட்சியை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மட்டும் வீழ்த்தி விட முடியாது. மக்கள் போராட்டத்தின் வழியாகவே ஒட்டுமொத்த பாசிச கும்பலையும் வீழ்த்த முடியும். அவ்வாறான போராட்டக் களத்திற்கு மக்களையும், ஜனநாயக சக்திகளையும் இணைக்கும் முக்கியமான ஆவணமாக இந்த மாபெரும் ஆயுதம் கொள்கை அறிக்கை கொண்டுவரப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரக் கழக தோழர்களும், சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் தோழர்களும், மே 17 இயக்கம், திராவிடர் கழகம் மற்றும் ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க