ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம்: வாழத் தகுதியற்ற இடமாக்கப்படும் வடசென்னை!

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், தற்போது ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தி.மு.க அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒருங்கிணைந்த எரிஉலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சென்னையின் வடக்கில் எண்ணூர், அம்பத்தூர், போரூர் தெற்கில் சோழிங்கநல்லூர் வரை உள்ள பகுதிகள் மாநகராட்சி எல்லைக்குள் வருகின்றன. மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு உற்பத்தியாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகள் தெற்குப் பகுதியில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கிலும் வடக்குப் பகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலும் கொட்டப்பட்டு வருகின்றன.

சுமார் 300 ஏக்கருக்கும் மேல் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 252 ஏக்கரில் 6.51 மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைக் கிடங்கால் நிலத்தடி நீர் மாசுபாடு, சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு முதல் பெருங்குடியில் பயோமைனிங் திட்டம் மூலம் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பயோமைனிங் திட்டத்தால் சுவாச கோளாறு, உள்ளிட்ட பிரச்சினைகளால் முன்பைவிட அதிக பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்ற திட்டம் கொடுங்கையூரில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2027 இல் இந்தத் திட்டம் முடிக்கப்பட்டு குப்பைக் கிடங்காக உள்ள 252 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த 15 ஆண்டுக்குள் மாநகராட்சியில் உற்பத்தியாகும் குப்பையின் அளவு இரு மடங்காகும் (11,793 மெட் ரிக் டன்) என்று கணிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திடக்கழிவுகள், மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அதற்காக பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் இரண்டு கட்டங்களாக இதனை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் பெருங்குடியில் குப்பைக் கிடங்கை அழித்து சூழலியல் பூங்கா அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். மேலும் பசுமை தீர்ப்பாயமும் குப்பைகள் அழிக்கப்பட்டு அதற்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று அறிவித்தது. இந்த காரணங்களால் பெருங்குடியில் இத்திட்டம் கைவிடப்பட்டது.


படிக்க: எண்ணூர் அனல்மின் நிலையம்: கருத்துக் கேட்பு என்னும் பெயரில் கண்துடைப்பு நாடகம்!


பின்னர் கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த எரிஉலை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது என்று நிர்வாகத்தால் முடிவு எடுக்கப்பட்டது. சென்னையின் 15 மண்டலங்களில் உற்பத்தியாகும் கழிவுகளில் சில மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது கொடுங்கையூர்க் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள இடத்திற்கு அருகே மொத்தம் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,268 கோடி செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையில் நாளொன்றுக்கு 2,100 டன் குப்பைகள் எரிக்கப்படும். அதன் மூலம் 31 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மேலும், 9.74 ஏக்கர் நிலத்தில் இயற்கை உயிரி எரிவாயு நிலையம், 15.49 ஏக்கர் நிலப்பரப்பில் உரம் தயாரிக்கும் நிலையம் ஆகியவை அமைக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பு கொடுங்கையூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இத்திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சண்முகம் தென் சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக்கூட இங்கு கொண்டு வருவது எங்களைப் பலியாக்கும் செயலாகவே உள்ளது. “ஏற்கெனவே சென்னையின் பெரும்பாலான தொழிற்சாலைகள் வட சென்னையில்தான் உள்ளன. இங்குள்ள மாசுபாட்டைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கொடுங்கையூரை மீட்டால் வட சென்னையின் முகம் மாறும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்தப் புதிய அறிவிப்பு கொடுங்கையூரைச் சுற்றியுள்ள பகுதிகளின் மாசுபாடு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்யும்” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்திற்கு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளரான நிபுணர் ஜியோ டாமின் கூறுகையில் “இந்தத் திட்டம் முதலில் மிகவும் செலவு மிக்கது. இந்தத் திட்டத்தால் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை நம்முடைய தேவையுடன் ஒப்பிட்டால் அது மிகவும் சொற்பமே, இதிலிருந்து வருகிற நச்சுக் கழிவுகளை அழிக்க முடியாது. இந்தத் திட்டம் புதிது அல்ல. ஏற்கெனவே சிறிய அளவில் சில எரியூட்டும் நிலையங்கள் உள்ளன. தற்போது பெரிய அளவில் செயல்படுத்தப்படுகின்றது. இதிலிருந்து வருகிற சாம்பல் கழிவை எப்படிப் பாதுகாப்பாகக் கையாள முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “சென்னை போன்ற இயற்கைப் பேரிடர்களை அதிகம் சந்திக்கும் ஊரில் இது மிகவும் சவாலானது. சாம்பல் கசிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுற்றுச்சூழலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால், இயற்கையாக மக்குவதைவிட இவ்வாறு எரித்து சாம்பலாக்கினால் அதன் எச்சங்கள் எளிதாக மண்ணில் கலந்துவிடும். இதில் கரிமம் போன்ற நச்சு வாயுக்களின் உமிழ்வுகளும் அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: எண்ணூர் மக்களின் போராட்டத்தைப் பணம் கொடுத்து ஒடுக்கிய கோரமண்டல் ஆலை


ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகின்ற குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையைப் பார்வையிடச் சென்றதை விவரிக்கும் சண்முகம் “நாங்கள் ஹைதராபாத் சென்று அந்த ஆலை அமைந்துள்ள இடத்தைப் பார்த்தோம். அங்குள்ள மக்களையும் சந்தித்தோம். அவர்கள் அங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளதாக ஆய்வுகளை மேற்கொள் காட்டிக் கூறுகின்றனர். இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் இல்லை என்று முற்று முழுதாகப் புறந்தள்ளிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

”சான்றாக சமீபத்தில் மணலியில் செயல்பட்டு வந்த எரியூட்டும் நிலையம் ஒன்று விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டது. மணலியில் எரியூட்டும் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் நாங்கள் மணலி பகுதியில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்தில் கொடுத்துப் பரிசோதித்தோம். அதில் கேட்மியம், லெட், குரோமியம் போன்ற பொருட்கள் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவுகளைவிட அதிகமாக உள்ளது தெரிய வந்தது. அதைவிடக் கூடுதலான திறன் கொண்ட எரியூட்டும் நிலையம் கொடுங்கையூரில் வர உள்ளது. இதனால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்,” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நகரில் செயல்பட்டு வரும் ”ஈவ்ரி சுர் செய்ன்” என்ற குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் பார்வையிட மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் ஆகியோர் இரண்டு முறை சென்றுள்ளனர். அதன் பின்னர் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மாநகராட்சி முடிவெடுத்திருந்தது.

இந்தச் சூழலில் மே 6 ஆம் தேதி அன்று பாரிஸை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Collectif 3R என்கிற சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு சென்னையிலிருந்து வரும் குழுவினருக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. அதில், “குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளால் பாரிஸிலேயே மாசுபாடு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவே இந்தத் தொழில்நுட்பத்திலிருந்து விலகிச் செல்கிறது. அதனால் இந்தியா இந்த முடிவை மறுபரிசீலனை செய்து சுழலுக்கு உகந்த திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.


படிக்க: அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!


ஆனால் தி.மு.க அரசு தற்போது வரை இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாகவோ, திட்டத்தை ரத்து செய்வதாகவோ அறிவிக்கவில்லை. இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, கடந்த மே 25 ஆம் தேதி வட சென்னையில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போதும் மக்கள் தொடர்ச்சியாக இத்திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

ஏற்கெனவே வடசென்னை பகுதியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், தற்போது ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தி.மு.க அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இத்திட்டங்களால் வடசென்னை பகுதியின் நீர், நிலம் உள்ளிட்டவை மாசடைந்து மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அழிந்து வரும் வட சென்னையைப் பாதுகாக்க இயற்கை பாதுகாவலர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் வடசென்னை மக்களுடன் இணைந்து போராட வேண்டும்.

செய்தி ஆதாரம்: பி.பி.சி தமிழ்


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க