தனது பாடல்கள் மூலம் இந்தியாவில் நிலவும் சாதியக் கட்டமைப்பிற்கு எதிராகவும் உலக நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக குரலெழுப்பி வரும் ஹிரன்தாஸ் முரளி (எ) வேடன், கடந்த சில வாரங்களாக அனைத்து ஊடகங்களிலும் பேசுபொருளாக உள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டில், “குரலற்றவர்களின் குரல்” எனும் பாடல் தொகுப்பு மூலம் பிரபலமான இவரின் பாடல்கள் அனைத்தும் கேரள இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வேடனின் தாயார் இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழ் பெண் என்பதாலும், அப்பா கேரளாவைச் சேர்ந்த தலித் என்பதாலும், வேடனுக்கு கேரளாவைக் கடந்து, தமிழ்நாடு, இலங்கை, இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் குடிபெயர்ந்த தமிழர்கள் என பலதரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்து வந்தது. மேலும் வேடன் தனது பாடல்களை மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் எழுதி பாடி வருகிறார். திரும்பும் திசையெல்லாம் செண்டை மேளம் ஒலித்துக் கொண்டிருந்த கேரளாவில் பறை கொண்டு தனது பாடல்களை அரங்கேற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் நடந்த தனது இசை நிகழ்ச்சியில் பாலஸ்தீன கொடியை போர்த்திக்கொண்டு இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் மறைக்கப்பட்டுள்ள கொடூர சாதித் தீண்டாமையின் பக்கங்களை வெளிக்கொண்டு வந்ததில் வேடனின் பங்கு முக்கியமானது. அதுமட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தம், பா.ஜ.க-வின் இந்துமதவெறிக் கருத்துக்கள் மற்றும் பாசிச மோடியை கடுமையாக விமர்சித்து பாடி வருகிறார். இதனால் அவருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடிகள் வந்துகொண்டே இருந்தன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசரி பத்திரிகையின் ஆசிரியர் மது, கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது வேடன் குறித்து கடுமையாக விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. வேடனின் பாடல்களில் வெளிப்படும் பார்ப்பனியத்திற்கு எதிரான சமூக நல்லிணக்க, மதச்சார்பற்ற, மனிதநேய கருத்துக்கள் வெகுசன மக்களிடம் சென்று சேர்வதையும், மக்கள் மத்தியில் பெரும் தாக்கம் செலுத்துவதையும் கண்டு சங்கிகள் குலைநடுங்கினர்.
படிக்க: குணால் கம்ரா மீதான பாசிச தாக்குதல் – கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கை!
இந்நிலையில், சமீபத்தில் கஞ்சா பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட வேடன், பின்னர் புலி பல் கொண்ட சங்கிலியை அணிந்திருந்தார் எனக் கூறி விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இவை வேடனை பழிவாங்குவதற்கான நடவடிக்கைகள் என்பதை சாதாரண மக்கள் கூட உணர்ந்திருந்தனர்.
வேடன் கைது விவகாரத்தை பயன்படுத்திக்கொள்ள துடித்த இந்துத்துவவாதிகள், “பட்டியலின மக்களின் பண்பாடு ராப் பாடல் அல்ல, மக்களிடத்தில் சாதி ரீதியான பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார், மேலாடை இல்லாமல் பாடுவதன் மூலம் சமூக சீர்கேட்டிற்கு வித்திடுகிறார், இவரது தாய் ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க வேண்டும்” என்று பல்வேறான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். கோவிலில் பார்ப்பனக் கும்பல் மேலாடை இன்றி பூஜை செய்வதை சமூக சீரழிவு எனக் கூறாத சங்கி கும்பல் வேடனுக்கு எதிராகப் பொங்குகிறது.
உண்மையில், தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களை ‘தேசதுரோகி’ என்று முத்திரை குத்தி அவர்கள் மீது போலீசுத்துறை, மத்திய புலனாய்வு முகமை போன்ற அடியாள் படைகளை ஏவிவிட்டு ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்து பாசிசத் தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி கும்பல்.
சங்கிகளின் பிரச்சினை ‘வேடன்’ என்ற தனிநபர் அல்ல. அவரது எழுச்சிமிகு எழுத்துக்களே ஆகும். வேடனின் பாடல் ஒவ்வொன்றும் பாசிசத்தின் கோரமுகத்தை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதுடன் அநீதியான இச்சமூகத்தை கேள்வியெழுப்புகிறது. வேடன் மட்டுமின்றி தங்களது கலைத்திறனை உழைக்கும் மக்களுக்காகவும் பாசிசத்திற்கு எதிராகவும் பயன்படுத்துகின்ற கலைஞர்கள் மீது பாசிசக் கும்பல் தொடர்ச்சியாகத் தாக்குதல் தொடுத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் போஜ்பூரி பாடகர் நேஹா சிங் ரத்தோர், மகாராஷ்டிராவின் ராப் பாடகர்கள் ராஜ் முங்காசே மற்றும் உமேஷ் காடே, நகைச்சுவையாளர் குணால் கம்ரா போன்ற கலைஞர்களின் வரிசையில் தற்போது வேடனின் மீதும் பாசிஸ்டுகள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். எனவே, வேடனுக்கு துணைநிற்க வேண்டியது பாசிச எதிர்ப்பாளர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
வாருங்கள், பாசிச நரிகளை வேட்டையாடுவதற்கு வேடனுக்கு துணை நிற்போம்!
ஜென்னி லீ
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram