“அதானி காப்பீட்டுக் கழக”மாகும் எல்.ஐ.சி!

மக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கி வைத்துள்ள விதிமுறைகளைக்கூட பின்பற்றத் தயாராக இல்லாத கொள்ளைக்காரன்தான் அதானி. இந்த கொள்ளைக்காரனுக்கு மக்கள் உழைத்து சம்பாதித்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைக்கும் எல்.ஐ.சி. பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

ந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation Of India) எனப்படும் எல்.ஐ.சி. (LIC) நிறுவனம் அதானியின் நிறுவனத்திடமிருந்து 5,000 கோடி ரூபாய் மதிப்புடைய கடன் பத்திரங்களை வாங்கியுள்ளது. நேர்பொருளில் சொல்வதெனில், எல்.ஐ.சி-யின் மக்கள் பணத்தில் 5,000 கோடி ரூபாய் அதானிக்கு கடனாக தாரைவார்க்கப்பட்டுள்ளது.

“அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட்” (Adani Ports and Special Economic Zone Limited – APSEZ) எனப்படும் அதானிக்கு சொந்தமான நிறுவனம் சமீபத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, மாற்ற முடியாத, 15 ஆண்டுகளுக்கான கடன் பத்திரங்களை (Non-Convertible Debentures) வெளியிட்டது. பல்வேறு சர்ச்சைகள், ஹிண்டன்பர்க் அறிக்கை உள்ளிட்ட ஊழல் புகார்கள், செபி விசாரணை ஆகியவற்றால் உலகளவில் சந்தி சிரித்துப் போயுள்ள அதானி குழுமத்தின் இக்கடன் பத்திரங்களை வாங்குவதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

ஆனால், அதானிக்கு ஒன்றெனில் ஓடோடிச் சென்று உதவும் மோடி அரசு, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. மூலம் அதானி நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் கடன் பத்திரத்தை முழுமையாக வாங்கியுள்ளது. இக்கடன் தொகைக்கு 15 வருடத்திற்கு அதானி நிறுவனம் 7.75 சதவிகிதம் வட்டிக் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தமாகியுள்ளது. இதன் மூலம் அதானி துறைமுக நிறுவனத்தால் தனது குறுகிய கால கடன்களை திருப்பி செலுத்த முடியும் என்றும் மூலதன செலவினங்களையும் பொதுவான நிறுவனத் தேவைகளையும் ஈடுகட்டிக் கொள்ள முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்.ஐ.சி. நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வந்தாலும் இதுபோன்று மிகப்பெரிய கடன் பத்திரத்தை வாங்கியிருப்பது இதுவே முதன்முறையாகும். கடன் நெருக்கடியால் அழியும் நிலையிலிருந்த பல்வேறு வங்கிகளை எல்.ஐ.சி. காப்பாற்றியுள்ள நிலையில், தற்போது அதானி நிறுவனத்திற்கு 5,000 கோடி ரூபாய் தாரைவார்க்கப்பட்டுள்ளதால் அவ்வங்கிகளின் நிலையும் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


படிக்க: அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்


பாசிச மோடி கும்பல் பொதுத்துறை நிறுவனங்களை அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்த்தது போதாதென்று, உழைக்கும் மக்கள் தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவத் தேவைகளுக்காக எல்.ஐ.சி-யில் சேமித்து வைத்துள்ள பணத்தையும் அதானிக்கு வாரிக் கொடுத்துள்ளது. இதற்கு பலரும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “அதானி துறைமுக நிறுவனத்தின் சொத்து மதிப்பில் 88 சதவிகிதம் கடன்களாலானது. அதன் தற்போதைய கடன் சுமை ரூ.36,422 கோடியாக உள்ளது. இதில் ஒரு பகுதியை திருப்பி செலுத்த, அரசு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யிடமிருந்து, கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடியை திரட்டியுள்ளது. பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் அதானி துறைமுக நிறுவனம் திவாலானால், பின்னர் எல்.ஐ.சி. நிறுவனம் அளித்துள்ள ரூ.5,000 கோடி கடனை வசூலிக்க முடியாமல் தள்ளுபடி செய்ய நேரிடும் அபாயம் உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியின் பங்குச் சந்தை ஊழலை அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் அதானியின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், அதானி நிறுவனம் செயல்படுவதற்காக எல்.ஐ.சி-யின் மக்களின் சேமிப்பு பணத்தை பாசிச மோடி கும்பல் அதானிக்கு தாரைவார்த்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் எல்.ஐ.சி-யின் முதலீடுகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்த 2023-24 நிதியாண்டில் மட்டும் அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி-யின் முதலீடுகளின் மதிப்பு 59 சதவிதம் அதிகரித்துள்ளது. மார்ச் 31, 2023 நிலவரப்படி அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டின் மதிப்பு ரூ.38,471 கோடியாக இருந்த நிலையில், மார்ச் 31, 2024 அன்றுடன் ரூ.61,210 கோடியாக உயர்ந்துள்ளது. இக்கடன் பத்திரத்தை வாங்குவதற்கு முன்பே அதானியின் துறைமுக நிறுவனத்தில் எல்.ஐ.சி. 8.6 சதவிகித பங்குகளை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக “அதானி காப்பீட்டுக் கழக”மாக மாற்றி வருகிறது மோடி அரசு.

ஆனால், அதானி நிறுவனத்தின் மோசடி-முறைகேடுகள் அம்பலமாகும் போதெல்லாம், அதன் பங்குகள் சரிந்து அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள எல்.ஐ.சி-யின் மக்கள் பணத்திற்கு வேட்டு வைக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சான்றாக, கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதானியின் லஞ்ச ஊழல் மோசடியை அமெரிக்க நீதிமன்றம் அம்பலப்படுத்தியது. இதனால் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 23 சதவிகிதம் சரிவை சந்தித்ததையடுத்து எல்.ஐ.சி-க்கு 9,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த அமெரிக்க லஞ்ச ஊழல் வழக்கு அடுத்தடுத்த கட்டங்களை எட்டிக்கொண்டிருக்கும் போதே அதானி நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் கடன் பத்திரத்தையும் எல்.ஐ.சி. மூலம் வாங்கியுள்ளது மோடி அரசு. எல்.ஐ.சி. மட்டுமின்றி எஸ்.பி.ஐ. வங்கியின் மக்கள் பணமும் அதானி நிறுவனத்தில் கொட்டப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

மக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கி வைத்துள்ள விதிமுறைகளைக்கூட பின்பற்றத் தயாராக இல்லாத கொள்ளைக்காரன்தான் அதானி. இந்த கொள்ளைக்காரனுக்கு மக்கள் உழைத்து சம்பாதித்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைக்கும் எல்.ஐ.சி. பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

ஒருபுறம், உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டி அதானி-அம்பானிகளுக்கு மோடி அரசு சேவை செய்து வருவதால் நாட்டில் ஏழைகளுக்கும் கோடீஸ்வரர்களுக்குமான ஏற்றத்தாழ்வு உச்சத்தை தொட்டுள்ளது. மறுபுறம், மக்கள் கொஞ்சநஞ்சம் சேர்த்து வைக்கும் பணமும் பாசிச கும்பலால் சூறையாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு குரலெழுப்ப வேண்டும். உழைக்கும் மக்களை பஞ்ச பராரிகளாக மாற்றத் துடிக்கும் அதானி-அம்பானி கும்பலையும் அதற்கு சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலையும் நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும்!



ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க