புலம்பெயர் மக்கள் மீதான ட்ரம்ப் அரசின் ஒடுக்குமுறைகள் மற்றும் அடாவடித்தனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்க அதிபராக பாசிஸ்ட் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்றி வருகிறார். ஆயிரக்கணக்கான மக்களை கைகளில் விலங்கிட்டு, கால்களைக் கட்டி, முகத்தில் முகமூடி அணிவித்து 40 மணி நேரத்திற்கும் மேலாக இராணுவ விமானத்தில் போர்க் குற்றவாளிகளைப் போல நாடு கடத்தியது ட்ரம்ப் அரசு. மேலும், அமெரிக்காவில் புலம்பெயர் மக்களுக்கு எதிராக புதுப்புது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ட்ரம்ப்பின் இத்தகைய பாசிச நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவிற்குள்ளும் வெளியிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில், “குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை” (Immigration and Customs Enforcement – ICE) என்ற அடியாள் படையைப் புலம்பெயர் மக்களுக்கு எதிராக ஏவிவிட்டுள்ளது ட்ரம்ப் அரசு. 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐ.சி.இ. ஒரு சட்ட அமலாக்க முகமையாகும். இம்முகமை தொழிலாளர்கள், கறுப்பின மக்கள், புலம்பெயர் மக்கள், அரசியல் சக்திகள் மீது ஒடுக்குமுறைகளைச் செலுத்தி வருவதுடன், கைதிகளுக்கு குடிநீர் கூட வழங்காதது உள்ளிட்டு பல்வேறு மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
இம்முகமை தற்போது அமெரிக்காவிற்குள் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிவதாகக் கூறி சோதனை என்ற பெயரில் மக்களின் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து ஆயிரக்கணக்கான மக்களைச் சிறையிலடைத்து வருகிறது. இதில் குழந்தைகள் கூட பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு அடைத்து வைக்கப்படும் அவலங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த குண்டர் படைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐ.சி.இ. சோதனைகளை எதிர்த்து லாஸ் ஏஞ்சலஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படிக்க: அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!
இந்நிலையில், கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 3,000 பேரைக் கைது செய்ய வேண்டுமென ஐ.சி.இ-க்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து புலம்பெயர் மக்கள் மீதான இம்முகமையின் தாக்குதல் மேலும் தீவிரமடைந்தது. குறிப்பாக, மக்களை கொத்து கொத்தாகக் கைது செய்வதற்காக பல்வேறு சூழ்ச்சி மற்றும் சதி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐ.சி.இ., கடந்த ஜூன் 3 அன்று மக்களை குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாக வருமாறு அழைப்பு விடுத்து பின்னர் அவர்களை மொத்தமாகக் கைது செய்தது. இதன் காரணமாக அன்று மட்டும் லாஸ் ஏஞ்சலஸில் இதுவரை இல்லாத அளவிற்கு 2,267 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 4 அன்று மேலும் 2,368 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்தான், கடந்த ஜூன் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தின் வெஸ்ட்லேக் மாவட்டத்திலும், அம்மாகாணத்தின் தெற்கே உள்ள பாரமவுண்டிலும் ஐ.சி.இ. சோதனை நடத்தியது. லத்தீன் அமெரிக்க மக்கள் அதிகம் வசிக்கும் நகரப் பகுதிகளில் உள்ள பணியிடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையில் 44 புலம்பெயர் தொழிலாளர்களை அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் எனக்கூறி அடாவடியாகக் கைது செய்தது. அதே நாளில் கிரேட்டர் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் மேலும் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைக் கண்டித்து அப்பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்த லாஸ் ஏஞ்சலஸ் தடுப்பு மையத்திற்கு அருகில் கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது நகரத்தில் சோதனை நடத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். ஆனால், அமைதி வழியில் போராடிய மக்களை கண்ணீர்ப் புகைக் குண்டுகளாலும் ரப்பர் தோட்டாக்களாலும் தாக்கி லாஸ் ஏஞ்சலஸ் நகர போலீசு விரட்டியடித்தது.
இந்நிலையில், அடுத்த நாளும் பாரமவுண்டில் உள்ள ஒரு கடையில் ஐ.சி.இ. சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து மக்கள் ஆத்திரமடைந்தனர். ஐ.சி.இ. முகமையின் வாகனங்களின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், அவ்வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தி, அதனுடன் செல்ஃபி எடுத்தும் அருகில் நின்று நடனமாடியும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். போலீசு மீதும் மக்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தங்கள் மீதான போலீசின் மிருகத்தனமான தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குப்பைத் தொட்டி மூடிகள், உலோக நாற்காலிகளைக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். அன்றைய தினம் பிற இடங்களிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக லாஸ் ஏஞ்சலஸுக்கு 2,000 தேசிய போலீசு படையினரை (National Guards) அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டார்.
ஆனால், தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை மீறி அடுத்தடுத்த நாட்களிலும் மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. போராடும் மக்களை ட்ரம்ப் அரசு மிருகத்தனமாக ஒடுக்கினாலும் மக்கள் போராட்டக் களத்திற்கு வந்த வண்ணமே உள்ளனர். பல இடங்களில் ஐ.சி.இ. மற்றும் போலீசு படையை ஊருக்குள் அனுமதிக்காமல் கிடைத்த பொருட்களின் மூலம் தடுப்புகளை உருவாக்கி மக்கள் போராடுகின்றனர். வெளியிலிருந்து போராடும் மக்களுக்கு ஆதரவாக, கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் தடுப்புகளுக்குள்ளிருந்து விளக்குகளை ஒளிரச் செய்தும் சுவர்களில் மோதியும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுகின்றனர். ட்ரம்ப் அரசு லாஸ் ஏஞ்சலஸில் தேசிய போலீசு படையைக் குவிக்க உத்தரவிட்டபோதும்கூட ஆயிரக்கணக்கான மக்கள் மெக்சிகன், லத்தின் அமெரிக்க, பாலஸ்தீன கொடிகளை ஏந்தி எச்சிகரமாகப் போராடினர்.
படிக்க: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை மிரட்டும் டிரம்ப் அரசு!
மக்கள் போராட்டத்தின் விளைவாக கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள க்ளேண்டேல் நகரம் சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைப்பதற்கு ஐ.சி.இ-யுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மக்களைப் பிளவுபடுத்துவதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும், ட்ரம்ப்பின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் லாஸ் ஏஞ்சலஸில் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் சான் பிரான்சிஸ்கோ, சாக்ரமெண்டோ, ஹூஸ்டன், சான் அன்டோனியோ, சிகாகோ மற்றும் நியூயார்க் போன்ற பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இவையன்றி, நாடு தழுவிய அளவில் மேலும் 30 இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு கலிபோர்னியாவின் சேவை ஊழியர்கள் சர்வதேச தொழிற்சங்கம் (SEIU) திட்டமிட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் போராட்டத்தின் போது கலிஃபோர்னியாவில் இச்சங்கத்தின் தலைவர் டேவிட் ஹூர்டா கைது செய்யப்பட்டதையடுத்து அவரை விடுதலை செய்யக்கோரியும் புலம்பெயர் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“ஐ.சி.இ-யின் மிருகத்தனமான, இராணுவ பாணி தந்திரோபாயங்களுக்கு எங்கள் சமூகங்களிடத்தில் இடமில்லை. நாங்கள் பாதுகாப்பைக் கோருகிறோம். நாங்கள் மரியாதையைக் கோருகிறோம். டேவிட்டின் விடுதலையைக் கோருகிறோம்” என்று இச்சங்கம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், டி.சி., பிலடெல்பியா, அட்லாண்டா, பாஸ்டன், டென்வர், சியாட்டில், லாஸ் வேகாஸ், நியூ ஆர்லியன்ஸ், சார்லோட், போர்ட்லேண்ட், செயிண்ட் பால், சாண்டா ஃபே மற்றும் பல இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு இச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
லாஸ் ஏஞ்சலஸ் புலம்பெயர் மக்கள் போராட்டம் அமெரிக்கா முழுவதும் பற்றிப் பரவுவதைக் கண்டு வெறிபிடித்துப் போயுள்ள பாசிஸ்ட் ட்ரம்ப், மேலும் 2,000 தேசிய போலீசு படையினரையும் 700 மரைன் கார்ப்ஸ் (Marine Corps) படைவீரர்களை லாஸ் ஏஞ்சலஸில் குவிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே ஆப்கானிஸ்தான், சாட், எரித்திரியா, எக்குவடோரியல் கினியா, ஹைட்டி, ஈரான், லிபியா, மியான்மர், காங்கோ குடியரசு, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 12 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதித்தும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்தும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால், பாசிச ட்ரம்ப்பின் அடக்குமுறைகளுக்கும் பூச்சாண்டித்தனத்திற்கும் அடிபணிய போராடும் மக்கள் தயாராக இல்லை. ஒவ்வொரு நாளும் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அமெரிக்காவை உலுக்குகிறது.
முதலாளித்துவ ஏகாதிபத்தியம் முட்டுச்சந்தில் திணறிக்கொண்டிருப்பதை மூடிமறைப்பதற்காக புலம்பெயர்ந்த மக்களால்தான் நெருக்கடி ஏற்படுகிறது என உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் கூவிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவின் பாசிஸ்ட் டொனால்டு ட்ரம்ப்பும் அமெரிக்காவில் உழைக்கச் சென்ற மக்களை எதிரிகளாய் சித்தரித்து மறுபுறத்தில் தனது கார்ப்பரேட் சேவையைத் தீவிரப்படுத்தி வருகிறார். ஆனால், பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் புலம்பெயர் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலகம் முழுவதும் பாசிச சக்திகள் ஆட்சியதிகாரத்தைக் கைபற்றி புலம்பெயர் மக்களை அகதிகளாக்கிவரும் நிலையில், அமெரிக்க புலம்பெயர் மக்களின் இப்போராட்டம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டியது சர்வதேச உழைக்கும் மக்களின் கடமையாகும். அமெரிக்காவில் பாசிச ட்ரம்ப் அரசிற்கு எதிராக நடக்கும் புலம்பெயர் மக்களின் போராட்டம் வெல்லட்டும்!
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram