ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.

பெங்களூருவில் ஆர்.சி.பி. (Royal Challengers Bengaluru – RCB) அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் (Indian Premier League – IPL) ஐ.பி.எல். போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனைக் கொண்டாடுவதற்கு ஜூன் 4-ஆம் தேதி அன்று மதியம் 1 மணிக்கு விதான சவுதாவிலிருந்து (கர்நாடக சட்டமன்ற வளாகம்) சின்னச்சாமி மைதானம் வரை திறந்தவெளி பேருந்து அணிவகுப்பு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

பின்னர் அன்று மாலை சின்னச்சாமி மைதானத்தில் வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அணிவகுப்பை விளம்பரப்படுத்தி ஆர்.சி.பி. அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மதியம் 3.14 மணிக்கு பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஆர்.சி.பி. வெற்றி அணிவகுப்பு சின்னசாமி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டிருந்தது. வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலவச நுழைவு சீட்டுகளுக்கான இணைப்பையும் வெளியிட்டது.

இதனையடுத்து சுமார் 35,000 மக்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய கொள்ளளவு கொண்ட சின்னசாமி மைதானத்தில் நுழைவதற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் காரணமாகப் பலர் மயக்கமடைந்தனர். பலர் காயமடைந்தனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் உள்பட 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதனை நேரில் கண்ட விளையாட்டுப் பிரிவு ஆலோசனை ஆசிரியர் நிகில் நாஸ் கூறுகையில், “மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்து மைதானத்தின் இடது அல்லது வலது பக்கமாக நகர முயன்றனர். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர்கள் – பெரும்பாலும் பெண்கள் மற்றும் சில டீனேஜ் சிறுவர்கள் – பலரால் மிதிக்கப்பட்டனர். இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியாளர்கள் யாரும் இல்லை. பாதுகாப்புப் படையினர் வாயில்களுக்குள் மட்டுமே தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.

மேலும் “உள்ளே இரண்டு ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருந்தன. ஆம்புலன்ஸ் கிடைக்காதவர்களைப் பாதுகாப்புப் படையினர் கைகளில் ஏந்திச் சென்றனர். மயக்கமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கார்களைத் தேடி, பாதுகாப்புப் படையினர் பிரதான சாலையை நோக்கி ஓடினர். மைதானத்திற்கு வெளியே உள்ள சாலைகள் கூட்டத்தால் நிரம்பியிருந்ததால், மயக்கமடைந்தவர்களை 500 மீட்டர் தூரம் சுமந்து செல்ல வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி! யோகி ஆட்சியின் கொடூரம்!


ஆனால் கூட்ட நெரிசல் ஏற்பட்ட செய்தி தெரிந்த பின்னரும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துள்ளது. ஆம், 11 பேர் கொல்லப்பட்டு மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் மனிதாபிமானமற்ற முறையில் வெற்றி விழா தொடர்ந்து நடத்தப்பட்டது. அதே போன்று இளம் ரசிகர்கள் குழுக்கள் செயிண்ட் மார்க்ஸ் கதீட்ரல் அருகே உள்ள வளாகச் சுவர்களில் அமர்ந்து கொண்டு வெற்றிக் கொண்டாட்டத்தை ஆரவாரம் செய்யும் அளவிற்கு இளைஞர்கள் நுகர்வு வெறியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.

பாராட்டு விழாவில் கலந்துகொண்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது வெறும் 10 நிமிட நிகழ்வுதான். நான் மைதானத்திற்குச் சென்று அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலை வழங்கி, நிகழ்ச்சியை 10 நிமிடங்களுக்குள் முடிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆர்.சி.பி அணியும் அதற்கு ஒப்புக்கொண்டது. விராட் கோலியையும் நாங்கள் செல்லுமாறு கேட்டுக்கொண்டோம். மரியாதை நிமித்தமாக, கர்நாடகாவுக்கு பரிசை வழங்கியதைக் காட்ட, அவர்கள் கோப்பையை என்னிடம் கொடுத்தார்கள். நாங்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டோம்” என்று அம்மாநில காங்கிரஸ் அரசின் நிர்வாக குறைபாட்டை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.

மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் “சில குறைபாடுகள் இருந்ததாக நினைக்கிறோம். அதில் பி.சி.சி.ஐ-க்கு எந்தப் பங்கும் இல்லை” என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தலைவர் அருண் துமல் இந்தியா டுடே செய்தியாளரிடம் கூறுகையில், “பி.சி.சி.ஐ-யைப் பொறுத்தவரை, ஐ.பி.எல் நேற்று இரவு முடிவடைந்தது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எனவே, அதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? இது உண்மையில் மிகவும் துயரமான சம்பவம். எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆர்.சி.பி. மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ) இந்த விழாவை நடத்த விரும்பின, நாங்கள் அல்ல. கொண்டாட்டம் தொடர்பாக ஆர்.சி.பி. மற்றும் கே.எஸ்.சி.ஏ-விடம் நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவர்கள் இதை ஏற்பாடு செய்தனர். அரசாங்கம் வசதி செய்ய வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். இது பெங்களூரு அணி என்பதால், கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். அவ்வளவுதான். கொண்டாட்டங்களுக்காக அணியை பெங்களூருக்கு அழைத்து வந்தது ஆர்.சி.பி. மற்றும் கே.எஸ்.சி.ஏ-தான்,” என்று 11 பேர் இறந்ததற்கு அரசின் மீது எந்த தவறும் இல்லை என்பது போல் தெரிவித்துள்ளார்.


படிக்க: ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணித்திரட்டலும்!


ஆர்.சி.பி. அணி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆனால், “பணத்தை நாங்கள் தருகிறோம். இழந்த உயிரை உங்களால் கொடுக்க முடியுமா?” என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றதை அரசு விழா எடுத்து நடத்த வேண்டிய  அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஆர்.சி.பி. அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிக்கோல் சோசலே, டி.என்.ஏ. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுனில் மேத்யூ, மார்க்கெட்டிங் நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகியோரை போலீசு கைது செய்துள்ளது. தலைமறைவாகியுள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோரைத் தேடி வருகிறது.

நிகழ்ச்சி நடத்தப்பட்ட ஜூன் 4-ஆம் தேதி அன்று சட்டமன்ற பாதுகாப்பு போலீசு துணை ஆணையர் [Deputy Commissioner of Police (Vidhana Soudha Security)] எம்.என். கரிபசவன கவுடா, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் (Secretary, Department of Personnel and Administrative Reforms) சத்தியவதி மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் ”ஆர்.சி.பி அணிக்கு நாடு தழுவிய ரசிகர்கள் உள்ளனர். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் விதான சவுதாவில் (சட்டமன்ற வளாகத்தில்) கூடுவார்கள். பாதுகாப்புப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், சரியான பந்தோபஸ்து ஏற்பாடுகளைச் செய்வது சவாலாக இருக்கும். அதனால் (சட்டமன்ற வளாகத்தில் நுழைவதற்கான) அனைத்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் நுழைவுச் சீட்டுகளையும் ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். உரிய பாதுகாப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பதை இக்கடிதம் அம்பலப்படுத்துகிறது.

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது. இதன் விளைவாகத்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மறுபுறம், போட்டியின்போது அடித்த கொள்ளை போதாதென்று மக்களின் உயிரைப்  பணையம் வைத்து ஆர்.சி.பி. அணி விழா ஏற்பாடு செய்துள்ளது. இவர்களே இப்படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிகள்.

ஆனால், 11 பேர் உயிரிழந்ததற்குப் பொறுப்பேற்பதற்கு யாருமே தயாராக இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டு மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் மீதான இந்த சுரண்டல் ஆண்டு தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதற்காக அனைத்து வழிகளிலும் விளம்பரம் தேடும் ஐ.பி.எல். நிர்வாகமும் அணிகளும் அதற்குப் பக்கபலமாக நிற்கும் மத்திய, மாநில அரசுகளும் அதே ரசிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது பொறுப்பேற்பதில்லை. ஐ.பி.எல். என்பது சூதாட்டம், கார்ப்பரேட் கொள்ளை என்பதற்கும் அரசு ஆளும் வர்க்கத்திற்கானது என்பதற்கு இதுவே துலக்கமான சான்று.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க