உலகளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலமானது நமது நாட்டின் சர்க்கரை உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வருகிறது. உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் 90 சதவிகிதம் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசியமாகிறது. எனினும் சுமார் 40 லட்சம் டன் அளவிலான சரக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சர்க்கரை உற்பத்திக்கு ஆதாரமான கரும்பு விவசாயத்தில், வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள், சுரண்டப்படுவது மிகவும் இயல்பாக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை 2019 ஆம் ஆண்டு ஆணையம் ஒன்றை அமைத்தது.
அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவ ரீதியில் தேவை ஏற்படாதபோதிலும் பெரும்பாலான பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட 80,000 பெண்களில், கடந்த பத்து வருடங்களில் மட்டும் சுமார் 13,500 பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். எனினும் உண்மையான எண்ணிக்கை பன்மடங்கு கூடுதலாக இருக்கலாம்” என்ற அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பெண் விவசாயத் தொழிலாளர்கள், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக அம்மாநிலத்திலுள்ள பீட் (Beed) எனும் கிராமத்தில் உள்ள பெண்கள் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2018 ஆம் ஆண்டில் இது குறித்து கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டன. அக்கணக்கெடுப்பு பீட் பகுதி பெண்களில் 36 சதவிகிதம் பேர் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்பதையும் இது தேசிய சராசரியான 3 சதவிகிதம் என்பதை விட 12 மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சிகர தகவலையும் வெளிப்படுத்தியது. 2019 ஆம் மாநில சுகாதாரத்துறை அமைத்த ஆய்வுக் குழுவும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
படிக்க: கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா
இந்த விவகாரம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அட்மாஸ் (Atmos) செய்தி நிறுவனம் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ள கிராமங்களுக்குச் சென்று அவர்களை நேர்காணல் எடுத்தது. பீட் பகுதியிலிருந்த கிராமங்களில், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது ஒரு பெண்ணாவது இந்த சிகிச்சையைச் செய்துகொண்டுள்ளனர் என்ற செய்தியைக் கேட்கும்போதே குலை நடுங்குகிறது.
கரும்பு அறுவடை என்பது கடுமையான உடல் உழைப்பு கோரும் வேலையாகும். கரும்பு அறுவடையின் போது, சுமார் 50 கிலோ எடை கொண்ட கரும்பு கட்டுக்களை ஒரே நேரத்தில் தலையில் சுமந்து படிக்கட்டுகளில் ஏறி டிரக்கு வண்டிகளில் ஏற்றுவதே கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வேலையாகும். பொதுவாகவே இந்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர் அனைவரும் வலி வேதனைகளை அனுபவிக்கின்றனர். குறிப்பாக, இதில் ஈடுபடுத்தப்படும் பெண்களோ சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.
பெண்களுக்கு பேறுகால விடுமுறை கிடையாது; சகித்துக்கொள்ள முடியாத அளவு மாதவிடாய் வலி என்றாளுங்கூட ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதில்லை. மாதந்தோறும் வரும் மாதவிலக்கானது உடல்வலி என்பதைத் தாண்டி தங்களின் வேலை நாட்களை காவு வாங்குவதாக அங்குள்ள பெண்கள் கருதுகின்றனர். ஒரு நாள் வேலைக்குச் செல்லவில்லை என்றாலோ வேலையை ஒரு நாள் முழுவதும் செய்ய முடியவில்லை என்றாலோ நிறுவனத்திடமிருந்து ஏற்கெனவே வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போகும் நிலையில், பணத்திற்குப் பதிலாக தொழிலாளர்கள் வயல்களில் வேலை பார்த்து கடனை ஈடுசெய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
பேறுகாலத்திலும் வேலையில் ஈடுபடுமாறு பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் வேலையின் பொருட்டு வேறு பகுதிக்கு அழைத்துச் செல்லப்படும்போது உணவு, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட அவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படுவதில்லை. மேலும் கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகளும் இதில் அடங்கும். இடம்பெயரும் காலத்தில் தங்களுக்குத் தேவையான உணவு சரக்குகளை தாங்களே எடுத்துக்கொண்டு வந்து கூடாரங்கள் அமைத்து, சுகாதாரமற்ற இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.
“நாங்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை; உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மாதவிடாய் காலத்திலும், எந்த ஒரு விதிவிலக்குமின்றி தினமும் 14 மணிநேர கடுமையான உழைப்பில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறோம்” என்று பானுபாய் மாதுல்கர் ஷின்டே என்ற பெண் தொழிலாளி கூறுகிறார். மேலும், “இவர்கள் கொடுக்கும் அற்ப கூலிக்காக நாங்கள் இத்தனை துயரங்களைச் சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. கரும்பு அறுவடைக் காலமான டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை, நான்கு மாதங்களுக்கு ஒரு தம்பதியினருக்கு 1,00,000 முதல் 1,50,000 ரூபாய் வரை மட்டுமே கூலி வழங்கப்படுகிறது” என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த வருமானத்தைப் பெற வேண்டுமென்றால் ரூபாய் 40,000 வரை செலவு செய்து கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற அவல நிலையில் இப்பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.
படிக்க: ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!
இந்த பகுதி பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களை விலை கொடுத்து வாங்க முடியாததால், பயன்படுத்தப்பட்ட துணிகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நிலையே நீடிக்கிறது. இதனால் தீவிரமான கிருமித் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. கடுமையான வேலை நிலைமை காரணமாகவும் மருத்துவம் பார்க்குமளவிற்கு வசதியின்மையாலும் இந்த நோய்கள் தீவிரமாகின்றன. ஒரு கட்டத்தில் உடல்வலி, சீரற்ற உடல்நிலை போன்ற பிரச்சினைகளுடன் கருப்பை நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் சிறுநீர் பாதை தொற்றுக்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தங்களுக்கு உள்ளதாக மருத்துவமனைக்குச் சென்றால், இந்த நோய்களுக்கெல்லாம் ஒரே தீர்வு கருப்பை அகற்றுவது தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிகிச்சை செய்துகொள்ளவில்லை என்றால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டுவிடும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களைப் பயமுறுத்தியுள்ளனர்.
மாதவிடாயின் போது அதிக இரத்தபோக்கு ஏற்படுவதாகக் கூறி மருத்துவமனை சென்ற பெண்கள் சிலருக்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முதலாளியின் கைக்கூலிகளும் பெண் தொழிலாளர்களை மனிதனாகக் கருதாமல், வேலை செய்யும் எந்திரமாக மட்டுமே பார்த்து, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையைக் கடனாகக் கொடுக்கின்றனர். வேறு எந்த வேலைகளும் தெரியாததால், தங்கள் வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ள வேறு வழியின்றி வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு கூலி அடிமைகளாக இருக்க வேண்டிய நிலைக்கு பெண் தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
நீண்ட கால மருத்துவ பராமரிப்புகளுக்கு இந்த பெண்கள் செலவழிக்க இயலாது என்று கருதும் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவே அறிவுறுத்துகின்றனர். எந்தெந்த குடும்பங்களில் பெண்கள் ஏற்கெனவே ஒன்றிரண்டு குழந்தைகளை வைத்துள்ளனரோ அவர்களிடம், குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு கருப்பை என்பது உடலில் தேவையற்ற உறுப்பு என்று மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. நோயாளிகளின் நலனிலிருந்து இதனை அணுகாமல் முதலாளிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சிகிச்சை செய்வதன் மூலமாகப் பணத்தைக் கொள்ளையடிக்கவே மருத்துவர்களும் முற்படுகின்றனர்.
கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பிறப்பு என்பதைத் தாண்டி பெண்களின் உடல் சீராக இயங்குவதற்கு கருப்பை முக்கிய பங்காற்றுகிறது என்பதே உண்மை. பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பங்கு வகிக்கின்றன. கருப்பையை நீக்கும் சிகிச்சையின் போது சில ஹார்மோன்களை சுரக்கும் அண்ட செல்லும் உடம்பிலிருந்து அகற்றப்படுகிறது. எனவே உடலில் இந்த ஹார்மோன்கள் சுரப்பதும் குறைகிறது. இதனால் இதய நோய்கள், முதிர்ச்சியடைவதற்கு முன்பே தோல் சுருங்குதல், இளம் வயதிலேயே உடலளவில் முதிர்ச்சி, சோர்வு, எலும்பு வலுவிழந்து காணப்படுவது போன்ற பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு பெண்ணின் மனநிலையைத் தீர்மானிக்கும் அளவிற்கு இதன் முக்கியத்துவம் உள்ளது.
படிக்க: ஒட்டச்சுரண்டப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்
ஆனால் கருப்பையை நீக்கிய பிறகு கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய ஹார்மோன் மாற்று சிகிச்சையைச் செய்துகொள்ள பெரும்பாலான பெண்களை மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை அல்லது அவர்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் தவிர்த்துவிடுகின்றனர் என்று மகளிர் நோயியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி பல வகைகளிலும் சிக்கல்கள் உள்ளதால், 40 வயதிற்குக் குறைவான பெண்களுக்குக் கருப்பையை நீக்கும் சிகிச்சையை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் சிகிச்சை செய்ய வற்புறுத்தப்பட்ட பெண்களின் வயது 30 முதல் 35 வரை ஆகும்.
இந்த சிகிச்சையைச் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் இருப்பினும் மருத்துவமனைகள் பலவும் தங்கள் லாபவெறிக்காக கட்டுப்பாடுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, சிகிச்சை தேவையற்ற பெண்களுக்கும் கூட கருப்பையை நீக்கிவிடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் நிலை என்ன? முதலில் இந்த சிகிச்சைக்காக அவர்கள் செய்யும் செலவு; 4 மாத கடும் உழைப்பினால் சம்பாதிக்கப்பட்ட தொகையில் சரிபாதி அதாவது சுமார் 40,000 ரூபாய்க்கும் மேல் வசூலிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் இந்த சதித்திட்டத்தில் மருத்துவர்களின் பங்களிப்பும், இதன் பின் திட்டமிட்டு இயங்கும் மிகப்பெரிய வலைப்பின்னலே இருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு எழுப்புகிறது. மறுபுறம், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிகிச்சையினால் பாதிக்கப்பட்ட பீட் பகுதியிலுள்ள பெண்கள் ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
படிக்க: கேரளாவை உலுக்கும் ஆஷா தொழிலாளர்களின் போராட்டம்!
அந்த இயக்கத்தில் உள்ள ஆவாத் என்பவர் கூறுகையில், “விமானத்தில் பயணிக்கும் பயணிக்குக் காயம் ஏற்பட்டால் அதற்கு அந்த விமான நிர்வாகம் இழப்பீடு கொடுக்க வேண்டும், இல்லையா? அதே போல மருத்துவர்களின் அலட்சியத்தாலும் எங்கள் மீது அவர்கள் கவனம் கொள்ளாததாலும் நாங்கள் எங்கள் உடலின் ஓர் உறுப்பையே இழந்துள்ளோம். அப்படி இருக்கையில் எங்களுக்கும் நஷ்டஈடு தொகை கொடுக்கப்பட வேண்டுமல்லவா?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சம்பவத்தைக் கேட்கும் போதே மனம் பதைபதைக்கிறது. ஒன்றிரண்டல்ல பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.
1990-களில் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கியது முதல் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது. பாசிச கும்பல் ஆட்சியில் இக்கொள்கைகள் இன்னும் தீவிரமாக அமல்படுத்தப்படும் போது விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது.
அதன் விளைவாகத் தான் இது போன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறுகின்றன. எனவே, இந்த பாசிச கும்பலை வீழ்த்துவதன் மூலமாகத்தான் விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும்.
ஜென்னி லீ
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram