அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்: மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் பாசிச கும்பல்!

கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை தமிழ் மொழியின் தொன்மை குறித்த ஆதாரங்களைக் கொண்டுள்ளதால் அதைப் புறந்தள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது பாசிச கும்பல்.

டந்த 2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஜூன் 17 அன்று டெல்லியிலிருந்து நொய்டாவிற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

மதுரையின் தென்கிழக்கில் 13 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழடி. அங்கே ”பள்ளிச்சந்தை திடல்” என்றழைக்கப்படும் இடத்தில் 2014 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையின் (Archaeological Survey Of India – ASI) தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக சுவர் கட்டமைப்புகள், வடிகால் அமைப்புகள், கிணறுகள், பிராமி கல்வெட்டுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் சமூகத்தில் இருந்துள்ளதை உறுதிப்படுத்தியது. முக்கியமாக கீழடியில் மக்கள் கடவுளை வழி பட்டதற்கான எந்த சிலைகளும் கண்டெடுக்கப்படவில்லை.

கீழடி மற்றும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் குறித்து ராமகிருஷ்ணா பேச ஆரம்பித்ததிலிருந்து அவர் மீது பல்வேறு தாக்குதலைத் தொடுத்து வந்தது பாசிச கும்பல். 2017 ஆம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணாவை எந்தவித முன்னறிவிப்புமின்றி அசாம் மாநிலத்திற்கு மாற்றியது.

பின்னர் அதே ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த பி.எஸ் ஸ்ரீராமனின் தலைமையில் மூன்றாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவில் பெயருக்கு அகழாய்வு மேற்கொண்டு அப்பகுதியில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என்று கூறி அகழ்வாராய்ச்சியை முடக்கியது.

பின்னர் தமிழ்நாடு அரசால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதிகள் அகழாய்வு நடைபெற்ற கீழடியைப் பார்வையிட்டனர். பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையையும் இணைத்து அகழாய்வை மேற்கொள்ளுமாறு இந்தியத் தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


படிக்க: கீழடி அகழாய்வு: முதல் இரு கட்ட ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! | பு.மா.இ.மு சுவரொட்டி


ஆனால் நான்காம் கட்ட அகழாய்விலிருந்து இந்தியத் தொல்லியல் துறை விலகிக் கொண்டது. நான்காம் கட்ட அகழாய்வு முதல் பத்தாம் கட்டம் வரையிலான அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையே மேற்கொண்டது. மண்பானைகள், தந்தத்தால் செய்த தகடுகள் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவையனைத்தும் தமிழ்நாடு அரசால் கீழடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டம் காரணமாக 2021 ஆம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணா மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டார். உடனடியாக அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழாய்வுகள் குறித்து 982 பக்க அளவிலான அறிக்கையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கீழடியை மூன்று பண்பாட்டு காலகட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, முதல் காலகட்டம் கி.மு எட்டாம் நூற்றாண்டு முதல் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டமாகும். கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.மு முதலாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் இரண்டாவது காலகட்டமாகும். மூன்றாவது காலகட்டம் கி.மு முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. வைகை நதிக் கரை ஓரம் தோன்றிய நாகரிகம் குறித்து சிலவற்றை மட்டுமே கண்டுபிடித்துள்ளதாகவும் தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் கீழடிக்கும் சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், தமிழின் தொன்மை குறித்தும் யாரும் அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக இரண்டு ஆண்டுகள் வரை அறிக்கையை பாசிச மோடி அரசு வெளியிடவில்லை.

முதலாவது காலகட்டம், கி.மு எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி திடீரென்று 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியத் தொல்லியல் துறை அறிக்கையைத் திருப்பி அனுப்பியுள்ளது.


படிக்க: கீழடியை கருவறுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் தொல்லியல் துறை!


ஆய்வாளர் சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு அவரே முழு பொறுப்பு. தொல்லியல் துறை அதனை நிராகரிக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தனக்குச் சாதகமாக நடைமுறையை மாற்றியுள்ளது இக்கும்பல்.

தனது அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள மறுத்த ராமகிருஷ்ணா ”கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை. அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது. தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு 800- கி.மு 500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என்று மே 23 ஆம் தேதி அன்று இந்தியத் தொல்லியல் துறைக்குப் பதில் அளித்துள்ளார்.

இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாக ஜூன் 17 அன்று இந்தியத் தொல்லியல் துறை டெல்லியில் பண்டைய கால மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் (National Mission on Monuments and Antiquities) இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவின் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தேசிய நினைவுச்சின்னங்கள் இயக்குநராகவும், தொல்பொருள் பணியின் இயக்குநராகவும் இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா தற்போது தொல்பொருள் பணியின் இயக்குநராக மட்டுமே இருக்கிறார். இது கீழடி அறிக்கையைத் திருத்த மறுத்ததற்காக பாசிச கும்பலால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும்.

அமர்நாத் ராமகிருஷ்ணா மீதான பாசிச கும்பலின் தாக்குதலைக் கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “தமிழின் தொன்மையையும் கீழடியின் உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாகச் செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா இப்பொழுது மீண்டும் இடமாற்றம். கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார். ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்“ என்று பதிவிட்டுள்ளார்.

பாசிச கும்பல் ஒரே மொழி, ஒரே பண்பாடு ஒரே கலாச்சாரம் என்பதை நிறுவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை தமிழ் மொழியின் தொன்மை குறித்த ஆதாரங்களைக் கொண்டுள்ளதால் அதைப் புறந்தள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது பாசிச கும்பல்.

எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த பணியிட மாற்ற நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க