ஜூன் 20 ஆம் தேதி அன்று காலை மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கிச் சென்ற பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மூன்று கல்லூரி மாணவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
அப்பேருந்தில் அலுவலகம், பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் என 87 பயணிகள் பயணித்துள்ளனர். பேருந்து கடையநல்லூர் அருகே இடையால் கிராமத்தைக் கடக்கும் போது பேருந்தின் பின் பக்க ஆக்ஸில் முறிந்து பின்பக்க சக்கரங்கள் இரண்டும் தனியாகக் கழன்று பின்புறம் ஓடியுள்ளன. இதனால் பேருந்து பெரும் சத்தத்துடன் தரையில் மோதியபடி 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இச்சம்பவத்தில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த மூன்று கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பேருந்து இடைகால் வளைவில் குறைவான வேகத்தில் சென்றதாலும், பேருந்திற்கு முன்பும் பின்பும் வேறு வாகனங்கள் வராததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பின்னர் ஓட்டுநர், நடத்துநர் இணைந்து பயணிகளுக்கு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை “இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான பேருந்தை முறையாகப் பராமரிக்காத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மறைத்து தனிப்பட்ட நபர்களைக் குற்றவாளியாக்குகிறது.
இதேபோல், கடந்த மாதம் சிவகங்கை மாவட்டம் தட்டான்குளம் பகுதியில் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தின் டயர் வெடித்துச் சிதறியது. பேருந்தை நிறுத்த ஓட்டுநர் முயன்ற போது சக்கரங்கள் தனியாகக் கழன்று சாலையில் ஓடியது. அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் இயக்கப்படுவதால்தான் விபத்து ஏற்படுகிறது என்று இது குறித்து மக்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு விபத்துகள் தொடர்ந்து நடந்து வந்தாலும் பேருந்துகளை முறையாகப் பராமரிக்க அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை.
படிக்க: மக்கள் நலன் என்ற பெயரில் போக்குவரத்து துறையில் தனியார்மயத்தை நுழைக்கும் திமுக அரசு!
மாறாக, தி.மு.க அரசு போக்குவரத்துத் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சான்றாக, சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை (Singara Chennai Travel Card) திட்டத்தினை அறிமுகப்படுத்தியதை எடுத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் மின்னணு பயணச்சீட்டுகள் வழங்கும் இயந்திரம் (Electronic Ticketing Machine) தற்போது உபயோகத்தில் உள்ளது. இது படிப்படியாக நடத்துநர் இல்லா பேருந்துகளை இயக்குவதை நோக்கிச் செல்லும் அபாயம் உள்ளது. பணியாளர்களைக் குறைப்பதென்பது கார்ப்பரேட்மயமாக்கலை எளிமையாக்கும்.
மேலும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்கிற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக உலக வங்கி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த கே.எஃப்.டபுள்யூ (KfW) வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் தனித்தனியே ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில் உலக வங்கியுடனான ஒப்பந்தத்தின்கீழ் வாங்கப்படும் மின்சார பேருந்துகளை இயக்குவது பராமரிப்பது ஆகிய பணிகளை ”ஓம்” என்ற தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. நடத்துநர்கள், அலுவலகப் பணியாளர்கள் மட்டும் அரசின் பணியாளர்களாக இருப்பார்கள். இதுவும் அரசு போக்குவரத்துத் துறையை படிப்படியாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கின்ற நடவடிக்கையாகும்.
இவை தவிர, தீபாவளி – பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசு பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பது, முறையாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது ஆகியவற்றின் மூலம் திட்டமிட்டு ஊழியர்களை வேலையிலிருந்து விரட்டியடிக்கின்ற நடவடிக்கையையும் மேற்கொள்கிறது.
மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு அரசு தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும் நடவடிக்கைகளே அன்றி வேறல்ல.
இதற்காகவே பேருந்துகளை முறையாகப் பராமரிக்காமல், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போக்குவரத்துத்துறையைத் திட்டமிட்டுச் சீரழித்து வருகிறது தி.மு.க அரசு. இதன் விளைவாகவே அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையப் போகிறோம் என்று சூளுரைத்து கல்வித்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டு அரசுத் துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு. இந்த கார்ப்பரேட்மயமாக்கலை எதிர்த்து ஜனநாயக சக்திகளும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram