திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி வட்டத்திற்கு உட்பட்ட நெய்காரப்பட்டி, கரடிக்குட்டம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள இயற்கை வளங்களை அழித்து மாலிப்டினம் (Molybdenum) கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. (மாலிப்டினைட் கனிமத்திலிருந்து மாலிப்டினம் உலோகம் பிரித்து எடுக்கப்படும்). ஒன்றிய அரசின் இந்த திட்டத்தைத் தடுக்க வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் “திண்டுக்கல் மாவட்டத்தில் 400 சதுர கி. மீட்டர் (கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர்) பரப்பளவில் மாலிப்டினம் என்கிற அரிய வகை தனிமத்தை எடுப்பதற்கான ஆய்வை ஒன்றிய அரசு முடித்துள்ளது. அடுத்த கட்டமாக ஏலத்திற்கு தயாராக உள்ளது. மாலிப்டினம் என்பது எக்காலத்திலும் துரு பிடிக்காதது; உறுதித்தன்மையுடையது. ராணுவ பயன்பாடு உடையது.
முக்கியமாக, கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்குள் வருகின்றன. கனிம சுரங்க திட்டத்தில் பழனி மலை, இடும்பன், ஐவர் மலை உள்ளிட்ட பல மலைகள் வருகின்றன. ரவிமங்கலம், ஐவர் மலையில் உள்ள தொல்லியல் சின்னங்கள், சமணப் படுகைகள், உலகின் மிகப்பெரிய பல்லுயிர் தளங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவை இத்திட்டத்தில் வருகின்றன.
இந்த சுரங்கம் அமைக்கப்பட்டால் திண்டுக்கல் மாவட்டத்தின் வாழ்வாதாரம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடும். கல் குவாரிகள், கிரானைட் குவாரிகளைப் போல அல்லாமல் மிகப் பெரிய அளவில் இச்சுரங்கங்கள் அமைக்கப்படும். அதற்காக விவசாய நிலங்கள் நாசம் செய்யப்படும். மக்கள் அகதிகளாக வெளியேற்றபப்டுவார்கள்.
தற்போது நமது கண்ணுக்கு முன்பாக ஒரு அனுபவம் உள்ளது. நெய்வேலியில் அமைக்கப்பட்ட நிலக்கரி சுரங்கத்தால் மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். எனவே மாலிப்ட்டினம் எடுக்கும் திட்டத்திற்கு ஏலம் விடப்படுவதற்கு முன்பாகவே டங்ஸ்டனுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல் இதற்கும் தீர்மானம் நிறைவேற்றி இத்திட்டத்தை தி.மு.க அரசு ரத்து செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.
இல்லையென்றால் 5,000 ஏக்கர் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக மதுரையில் மக்கள் போராட்டம் வெடித்ததைப்போல் 5 லட்சம் ஏக்கர் மாலிப்டினம் சுரங்க திட்டத்திற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டத்தை திண்டுக்கல் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார்.
படிக்க: டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி
மேலும் “பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வு தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் இதனைப் பற்றி யாரும் வாய்திறந்து பேசவில்லை.
முருகன் மாநாடு நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. ஒன்றிய அரசானது முருகன் மலையை ஆய்வு செய்து முருகன் மலையை அழிக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முருகன் மீது உண்மையான அக்கறை இருந்தால் மலை முழுவதும் தங்கமாக இருந்தாலும் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம். சமூகத்தின் சொத்து அழிவதற்கு தி.மு.க அரசு துணைபோகக் கூடாது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜூன் 22 ஆம் தேதி அன்று இந்து முன்னணி கும்பல் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தியது. ஆனால் பழனியில் உள்ள முருகன் மலை அழிக்கப்படும் திட்டத்திற்கு எதிராக ஏன் வாய் திறக்கவில்லை? இதன் மூலம் இக்கும்பலுக்கும் பக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.
படிக்க: டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!
பாசிச கும்பலானது கன்னியாகுமரியில் உள்ள கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு 1,114 ஹெக்டேர் பரப்பளவில் கனிம சுரங்கம் அமைக்க திட்டமிட்டது. மதுரை நாயக்கர்பட்டியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் தளங்களை அழித்து டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைக்க திட்டமிட்டது. ஆனால் மக்களின் தொடர் போராட்டங்களினால் அவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் ஒன்றிய அரசு தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டை கார்ப்பரேட் கொள்ளைக்காக நாசமாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. சான்றாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்பட்டுவந்த கல்குவாரிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதை எடுத்துக்கொள்ளலாம்.
எனவே, தமிழ்நாடு அரசு மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான இத்திட்டத்தை ரத்து செய்ய ஒன்றிய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். கனிமவளக் கொள்ளையை எதிர்த்துப் போராடுபவர்களை பாதுகாக்க வேண்டும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram