போக்குவரத்து தொழிலாளர்களின் தலைமைச் செயலக முற்றுகையை ஒடுக்கிய போலீசு

தலைமை செயலகத்தை முற்றுகயிடுவதற்காக சென்ற தொழிலாளர்களை பாதி வழியிலேயே கைது செய்து முற்றுகையை போலீசு ஒடுக்கியுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியுள்ளது தமிழ்நாடு போலீசு.

0

ரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்” சார்பாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளுக்காக இன்று (அக்டோபர் 9) தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்லவன் இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காகச் சென்ற தொழிலாளர்களைப் பாதி வழியிலேயே கைது செய்து முற்றுகையை போலீசு ஒடுக்கியுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியுள்ளது தமிழ்நாடு போலீசு.

முன்னதாக, இன்றைய போராட்டம் குறித்து சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சி.ஐ.டி.யு. சார்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர் அளவிற்கு ஓய்வு பெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் இன்றுடன் (அக்டோபர் 6) 50-ஆம் நாள் நிறைவு பெற்றுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் சேவையும் பாதிக்கப்படாமல் கடந்த 50 நாட்களாக நடைபெறும் தொடர் போராட்டத்தின் கோரிக்கைகளைப் பேசி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி போக்குவரத்து அமைச்சர் அழைத்துப் பேசினார். சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். நிதித் துறையுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாகக் கூறிய அமைச்சர் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

நடைபெறும் போராட்டம் புதிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவில்லை. தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அரசின் இந்நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

சி.ஐ.டி.யு. முன்வைத்துள்ள கோரிக்கைகளில் அரசு நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காணும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும். கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி வியாழக்கிழமை அன்று கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டும் என சம்மேளனத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அறிக்கையிலிருந்தே போக்குவரத்து தொழிலாளர்களின் இப்போராட்டத்தின் நியாயத்தையும் அவர்களது தொடர் போராட்டத்தையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து தி.மு.க. அரசு துளியும் சிந்திப்பதில்லை. மாறாக, அதனை ஒடுக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏறக்குறைய, இரண்டு மாதங்களாக இத்தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், அது பொது விவாதமாகி விடாமல் ஊடகங்களின் துணையுடன் மூடிமறைத்து வருகிறது. போக்குவரத்துத் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நாசகரத் திட்டத்திலிருந்தே தி.மு.க. அரசு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

எனவே, போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்கத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதன் மூலமே போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்கத்தையும் அதனால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமையும் வாழ்வாதாரமும் பறிக்கப்படுவதையும் தடுக்க முடியும்!


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க