Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 457

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்

2

தமிழ் நிலத்தின் வரலாறாக ராஜராஜனின் படையெடுப்புகள் குறித்த பிரஸ்தாபிப்புகளும், “முன் தோன்றி மூத்த குடி” என்பன போன்ற வெட்டிப் பெருமிதங்களுமே ஓரளவுக்கு ‘விவரம்’ அறிந்த தமிழர்களின் பொதுபுத்திப் பதிவுகளின் சாரமாக இருக்கும். தஞ்சைப் பெரிய கோவிலை அண்ணாந்து பார்த்து ”முப்பாட்டன்மார்களின்” அறிவியல் தொழில் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முயலும் வலதுசாரி இனவாத பெருமிதங்கள் “திருநள்ளாறு கோவிலைப் பார்த்து விண்கலங்களே தடுமாறுவதாக” வரும் வலதுசாரி மதவாத பிரச்சாரங்களுக்கு வெகு இயல்பாக பலியாவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தச் சூழலில் முனைவர் சி. இளங்கோ எழுதி அலைகள் வெளியீட்டகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ள “தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை…” எனும் நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் மதிப்புரையில் மயிலை பாலு எழுதியிருக்கும் இந்த வரிகளே இந்நூலின் முக்கியத்துவத்தை மிக எடுப்பாக உணர்த்துகின்றது.

“மண்ணுக்குக் கீழே மற்றொன்றும் இருக்கிறது”

பல்லாயிரம் வருடங்களாக இத்தமிழ் நிலம் எவற்றையெல்லாம் தனக்குள் பொதிந்து வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தேடுவதற்கு இந்நூல் ஒரு அறிமுகக் கையேடாக உள்ளது. தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள், பானைகள், குகை ஓவியங்கள், கற்கருவிகள், உலோகக்கருவிகள், நாணயங்கள் போன்றவற்றைக் கொண்டு அந்தக் கால மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் குறித்த ஒரு சுருக்கமான சித்திரத்தை முன்வைக்க நூலாசிரியர் முயன்றுள்ளார்.

”ஏடறிந்த வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்கிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு அந்தக் காலகட்டங்களில் எம்மாதிரியான தொழிற்பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்திருக்க கூடும் என்பதை அலசிச் செல்கிறது இந்நூல். குயவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், சிற்பிகள், உழவர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்தை அச்சமூகத்தில் புழங்கிய பொருட்களைக் கொண்டு முகநூல் சகாப்தத்தின் மாந்தர்களுக்கு சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்நூல்.

கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை வேண்டா விருப்புடன் நடத்திய மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த சுமார் 7000 பொருட்களில் எங்குமே மதத்தின் சாயல் இல்லை என்பது நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது. இன்றைக்கும் பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் தலையால் தண்ணீர் குடித்தும் தமிழகத்தில் தங்களது கலவர அரசியலை வெற்றிகரமாக விதைப்பதற்கு தடையாக இருக்கும் காரணிகளில் தமிழகத்தின் ”சமூக மரபணுவின்” பாத்திரத்தை மேலும் நெருக்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டிய தேவையை இந்நூல் உணர்த்துகின்றது.

அதே போல் மத்தியில் அதிகாரத்திற்கு வரும் காங்கிரசோ பாரதிய ஜனதாவோ தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகளின் மேல் கணத்த கம்பளியைப் போர்த்தி மூட முயற்சிக்கும் காரணத்தையும் நம்மால் யூகிக்க முடிகிறது. கீழடி ஆய்வின் முக்கியத்துவம் என்ன, கீழடியில் புதைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை மூடி மறைப்பதற்கு மத்திய அரசு ஏன் முயல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காக தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள தொல்லியல் ஆய்வுகளையும் அவைகளும் இவ்வாறே புறக்கணிக்கப்பட்ட வரலாற்றையும் தொகுப்பாக முன்வைக்கிறது நூல்.

ஒருபக்கம், இல்லாத சரஸ்வதி நதியைத் தேட நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்டுகிறார் வளர்ச்சி நாயகன் மோடி , ஆடம்ஸ் மணல் திட்டை “இராமர் பாலம்” என்று நிரூபிக்க கடலுக்கு அடியில் துளை போட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, அயோத்தி பாபர் மசூதியின் இடிபாடுகளுக்குள் கற்பனைக் கதாபாத்திரம் இராமனின் பிறப்பைத் தேட தொல்லியல் அறிஞர்களை களமிறக்கியது பாரதிய ஜனதா அரசு – இப்படி பிற்போக்குத்தனங்களை நிரூபிக்க ஊருக்கு முந்தி நிற்கும் அதிகார வர்க்கமும், இந்துத்துவ கும்பலும் உண்மையான மக்களின் வரலாற்றை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதற்கு கீழடியே சாட்சி.

ஏழாயிரத்துக்கும் மேல் கிடைத்துள்ள சான்றுகளில் வெறும் இரண்டே இரண்டு பொருட்களை மாத்திரம் கரிமச் சோதனைக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. அகழாய்வுக்கென தெரிவு செய்யப்பட்ட 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 செண்ட் நிலத்தில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்குள் அந்த ஆய்வை மேற்கொண்ட நேர்மையான அதிகாரியை மாற்றியது, அகழாய்வில் கிடைத்த பொருட்களை கடத்த முயற்சி என வரிசையாக தமிழ் மக்களின் வரலாற்றை குழிதோண்டிப் புதைக்க மத்திய பாரதிய ஜனதா ஏவிவிட்டுள்ள சதிகளைக் குறித்து இந்நூல் எச்சரிக்கை செய்கிறது.

இந்துத்துவ பாசிசத்தை அரசியல் ரீதியில் எதிர்த்து முறியடிப்பதற்கு நம் தமிழ்ச் சமூகத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியம் குறித்த அறிமுகம் மட்டுமல்ல – நம் சமூகத்தின் நரம்புகளுக்குள் எவ்வாறு பார்ப்பனிய நஞ்சு ஏற்றப்பட்டது என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அந்த வகையில்  நாம் செய்ய வேண்டிய நீண்ட வாசிப்புக்கு இந்நூல் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும். அவசியம் வாங்கிப் படிப்பதோடு நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

மேலும் ஆர்வம் கொண்டவர்கள் இதே நூலின் 106ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள துணைநூல்களைத் தேடி வாங்கிப் படிக்கலாம்.

நூல் : தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்  – கீழடி வரை…
ஆசிரியர் : சி.இளங்கோ
பதிப்பகம் : அலைகள் வெளியீட்டகம்,
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089.
பக்கங்கள் : 112
விலை : ரூ.80

ஆன்லைனில் வாங்க

 

ஒப்பந்த முறை தொழிலாளர் கூட்டமைப்புக்கு வழிகாட்டும் சென்னை கருத்தரங்கம் !

0

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !! – கருத்தரங்கம்

ற்காலிக வேலைகள், திடீரென்று வருகின்ற வேலைகள் தவிர தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற வேலைகளில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என்று 1970 ஆம் வருடத்தில் போடப்பட்ட “காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்புச் சட்டம்” சொல்லிக் கொண்டது. ஆனால் இன்றைய நிலவரம் என்ன? டாக்டரும் காண்டிராக்ட்; கம்பவுண்ட்ரும் காண்டிராக்ட்; கல்லூரி பேராசிரியரும் காண்டிராக்ட்; பஸ் டிரைவரும் காண்டிராக்ட்; எஞ்சீனியரும் காண்டிராக்ட்; மெஷின் ஆபரேட்டரும் காண்டிராக்ட்; கம்ப்யூட்டர் நிபுணரும் காண்டிராக்ட்; ஐ.டி ஊழியரும் காண்டிராக்ட்; எங்கும், எதிலும் காண்டிராக்ட் மயம். இதில் அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் என்கிற வேறுபாடு இல்லை.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளித்த விவசாயம், நெசவு, சிறுவணிகம், மீன்பிடித்தல் மற்றும் சிறுதொழில்களை அழித்து, கோடிக்கணக்கில் அவர்களை வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக்கி உள்நாட்டின் சுயசார்புப் பொருளாதாரத்துக்கு வேட்டு வைத்துவிட்டு பன்னாட்டுக் கம்பெனிகளும், அம்பானி, அதானி போன்ற இந்திய தரகு முதலாளிகளும் கொழுத்த இலாபத்தில் திளைப்பதற்காகவே காண்டிராக்ட் மயமாதல் நடவடிக்கை அரசு துணையோடு தீவிரமாக நடக்கிறது. இதே நோக்கத்தில் காண்டிராக்ட் முறைக்கு ஆதரவாக சட்டங்களைத் திருத்தி உரம் போட்டு வளர்க்கிறது, அரசு.

காண்டிராக்ட் முறையை முறைப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டம் முதலாளியின் காலைத்தான் நக்கி வருகின்றது. விதிமுறை மீறல், விபத்துகளில் கொத்துக் கொத்தான சாவுகள் ஆகிய எந்த குற்றத்திலும் காண்டிராக்ட் முதலாளிகளோ, அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நேரடி முதலாளிகளோ தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. நீதிமன்றங்களே பெரும்பாலும், காண்டிராக்ட் முறையை ஆதரித்து தான் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. காண்டிராக்ட் முறையில் இருக்கும் சட்டமீறல்களை அங்கீகரிப்பதன் மூலம் காண்டிராக்ட் முறையிலான சுரண்டல்களை சட்டப்பூர்வமாக்கி விட்டன நீதிமன்றங்கள்.

எனவே, பணிநிரந்தரம், 8 மணிநேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், பணியிட விபத்துப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடும்போதே சட்டம் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல், அந்தக் கைவிலங்கை உடைத்து வெளியேறுவதும், நமக்கான உரிமையை நிலைநாட்ட தொழிலாளர்களாகிய நாமே அமைப்பாகத் திரள்வதும் தான் நம்மீதான வரம்பற்ற சுரண்டல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி. முதலாளிகளால், முதலாளிகளுக்காகவே நடக்கின்ற அரசை தூக்கியெறிந்து, நம்முடைய நலன்களுக்காக, நாமே நடத்துகின்ற அரசு ஒன்றினை அமைக்காமல் நிரந்தர விடியல் இல்லை. இதற்காக வழிநடத்தக்கூடிய, புரட்சிகர அரசியலை தாங்கி நிற்கின்ற தொழிற்சங்கமே நமக்குத் தேவை.

காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இல்லை என்பது வீணர்களின் பேச்சு. ஐ.டி ஊழியர்களுக்கு சங்கம் அமைக்கின்ற உரிமையை நிலைநாட்டி, முதலாளி வர்க்கத்தின் கனவைக் கலைத்த நம்மால், காண்டிராக்ட் தொழிலாளர்களை அமைப்பாக்கி, நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் கூலியடிமை முறைக்கும்  முடிவு கட்ட முடியும்.

தோழர் அபர்ணா

இதனடிப்படையில், இந்திய அளவில் இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  ( IFTU ), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ), அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (All ECLC W & E U ) ஆகிய 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க திட்டமிட்டன. இதன் முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது எனவும், கீழ்க்காணும் முழக்கங்கள் அடிப்படையில் 28.1.2018 அன்று கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

  • காண்டிராக்ட் கொத்தடிமைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்போம்!
  • வேலைகள் அனைத்திலும் நிரந்தரத்தை நிலைநாட்டுவோம்!
  • 8 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்ய மறுப்போம்!
  • சமவேலைக்கு சமஊதியம் என்கிற உரிமையை அடைந்தே தீருவோம்!
  • முழுமையான பணியிடப் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்யப் போராடுவோம்!
  • வேலை பறிப்பு, பசி-பட்டினியில் தள்ளுகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!
தோழர் பா.விஜயகுமார்

கருத்தரங்கமானது 28.1.2018 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள கேரளா சமாஜம் கட்டிடத்தில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் துவங்கிய இந்த கருத்தரங்கினை இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் அபர்ணா, பு.ஜ.தொ.மு சார்பில் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார்,புதிய தொழிற்சங்க முனைப்பு சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் வாசுதேவன், அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் சார்பில் தோழர் தபன் ஆகியாரைக் கொண்ட தலைமைக்குழு வழிநடத்தியது.

கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கில் நாடு முழுவதும் 13 மாநிலங்களிலிருந்து வந்த 20 பிரதிநிதிகள் உரையாற்றினர். வேலை நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய உரிமைகளுக்காக தாங்கள் நடத்திய போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பு.ஜ.தொ.மு சார்பில் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், புதுச்சேரி பகுதி செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கின் இறுதியில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் பிரதீப் ஆங்கிலத்திலும்,  , புதிய தொழிற்சங்க முனைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் கவுதம் மோடி இந்தியிலும், பு.ஜ.தொ.மு பொருளாளர் தோழர் விஜயகுமார் தமிழிலும் முன்மொழிந்தனர்.

கருத்தரங்கின்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகளும், தெலுங்கானாவின் அருணோதயா கலைக்குழுவினரது கலைநிகழச்சிகளும் நடைபெற்றன.ஒரு புதிய கருத்தாக்கத்தையும் நம்பிக்கையையும் இந்த கருத்தரங்கம் உருவாக்கியது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

 

கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு

4

ணி நிரந்தரத்திற்காக துணை பேராசியரிடம் 30 லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் ஆ.கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 03.02.2018 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் இப்பல்கலைகழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக 2016 மார்ச் மாதம் பொறுப்பேற்றார்.

துணை வேந்தர் கணபதி

2016 ஆண்டு பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 84 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். ஒரு பேராசிரியருக்கு 6௦ லட்சம் ரூபாய் என பேரம் பேசி தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா இறக்கும் வரை ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்ததால் உயர்கல்விச் செயலாளர் முதல், முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் என முறையாக ஊழல் ராஜ்ஜியம் சென்று கொண்டிருந்தது.

ஜெயலலிதா இறந்த பின் மன்னார்குடி மாஃபியா சசி கும்பலுக்கு ஊழல் பங்கு சென்றடையவில்லை என்பதால் கணபதி செய்த பணி நியமனத்தை நிறுத்தும் முயற்சியில் உயர்கல்வித்துறை ஈடுபட்டது. அவசர கடிதம் அனுப்பப்பட்டது. பதிவாளர் ஃபேக்ஸ் ஐ நிறுத்தி வைத்து தாமதமாகவே கொடுத்ததாகவும், அதனால் பணிநியமனம் செய்துவிட்டதாக துணைவேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்போதைய பதிவாளர் பி.எஸ்.மோகன் பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் துணைவேந்தர் கணபதிக்கும் நேரடியான பேச்சு வார்த்தையில் முரண்பாடு ஏற்பட்டது. முடிவாக அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதில் முறைகேடுகளை முறையாக செய்துகொள்ள பணிக்கப்பட்டது.

உயர்கல்வித்துறை விதிகளின்படி இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் ஒரே துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே சம்மந்தபட்ட துறையில் உதவி பேராசிரியர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி பணி நியமனம் நடந்துள்ளது. இதனால் இங்கு மாணவர்களுக்கு வேறுதுறை பேராசிரியர்கள் நடத்தும் பாடம் தெளிவாக உள்வாங்கி கற்றுக்கொள்ள முடியவில்லை. உள்ளே சென்று கல்வி சம்பந்தமாக பேராசிரியரிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லி புரியவைக்க அவர்களால் இயலவில்லை என்கின்றனர் மாணவர்கள்.

துணைவேந்தராக பொறுப்பேற்றதிலிருந்து உதவிப் பேராசிரியர்கள் 112 பணியிடங்கள் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் துணை வேந்தர் ஒவ்வொருவரிடமும் 30 முதல் 60 லட்சம் வரை பெற்றுக்கொண்டு நியமித்துள்ளார். இதற்குமுன்னர் இருந்த துணைவேந்தர் ஜேம்ஸ்பிட்சை கொங்கு வேளாள கவுண்டர் ஆதிக்க சாதியினரையே நியமித்ததாகவும் தற்போது கணபதி அவ்வாறு செய்யவில்லை என்பதால், இவருக்கு எதிராக பல்கலைகழகத்துக்குள்ளேயே ஆதிக்க சாதியின் பேராசிரியர்களை இவருக்கு எதிராக இருக்கும் பொது சுரேஷ் என்ற உதவிபேராசிரியர் நியமனத்தில் பேசியதொகையை ஒப்படைக்கும்படி தொல்லை கொடுத்தால், அவருக்கு பணம் கொடுக்கும் போது துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த ஊழல் பங்கு பிரிப்பதில் உள்ள சண்டை எனவும் கூறலாம்.

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சையும் இதே போன்று ஊழலில் ஈடுபட்டது, வெளிப்படையாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பது என்று மாவிலும் கொள்ளை! பனியாரத்திலும் கொள்ளை!  என அடித்து செயல்பட்டது ஊடகங்களால் அம்பலமானது. ஆனால்  ஊழலில் பங்கு அதிகார வர்க்கத்துக்கு ஆளும் கட்சிக்கும் சென்றுள்ளதால் அப்போது முறைகேடு வெளியே வரவில்லை. துணைவேந்தர் கணபதி அவ்வாறு பங்கு கொடுக்காமல் கூடுதலான ஆதிக்கசாதியின கவுண்டர்களை நியமித்ததாகவும், கைது நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்கள்.

துணைவேந்தர் நியமனம் ஆளுநர் பார்வையிலும், ஊழல்களிலும் உயர்கல்வி செயலர் என்று அனைவர் முன்னிலையில் தான் நடக்கிறது. பொறுப்புக்கு வந்தவுடனே மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை திருடி மாணவர்களுக்கு வஞ்சகம் செய்து கொள்ளையடிப்பது முதல் பல முகாந்திரங்களில் நடந்துள்ளது.

பாரதியார் பல்கலைகழகம்

துணைவேந்தர் கணபதியின் திருட்டு அவ்வப்போது ஊடகங்களில் கசிந்த வண்ணமே உள்ளது. 300 மையங்களில் தலா 10 லட்சம் வசூல் செய்து கொண்டு தொலைதூரக்கல்வி மையத்திற்கு பல்வேறு வெளிமாநிலத்திற்கு அடிப்படை கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் நடத்துவதற்கு அனுமதி அளித்தது, சிண்டிகேட் தேர்தல் முறையிலும் முறைகேடு, என கடந்த காலத்தில் ஊடங்களில் சந்தி சிரித்தவை ஏராளம்.

துணைவேந்தர் கணபதியின் ஒருவர் மட்டும் அடித்தகொள்ளை அல்ல இது. கல்வித்துறை அடி முதல் நுனி வரை ஊழல்மயப்பட்டு அழுகி நாறுவதன் நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே இந்த ஊழல். ஒரு பல்கலைக்கழகம் வருங்கால சமூகத்தை உருவாக்க கூடிய மாணவர்களை உற்பத்தி செய்து அனுப்பக் கூடிய இடத்தில் இருக்கிறது. சிந்தனை ரீதியாகவும் செயல்ரீதியாகவும் இப்பல்கலை மாணவர்கள், ஊழல்மய பாதிப்பால் கல்வி முடித்து சமூகத்தில் வாழும்போது அத்தகைய பண்புகளுக்கு அறிமுகமாவது எவ்வளவு பெரிய ஆபத்து?

இதுநாள்வரை கொள்ளை சம்பவம் நடக்காதது போலவும் தற்போதுதான் நடந்தது போலவும் அதிரடியாக கைது செய்து ஊழல்வாதிகளை தண்டிப்பது போல நாடகம் நடத்தும் பாவனையில் காட்டிக் கொள்கிறது அரசு. இந்நாடகத்திற்கு பின்னே ஆளும்வர்க்கம் நலன் இருக்கிறது. அது என்னவென்றால் மருத்துவத்துறையில் நடந்த ஊழலை சுட்டிக்காட்டி நம்மீது நீட் தேர்வை திணித்தார்கள். இதே போல பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கும் இதன் வழிகாட்டியாக உள்ள (UGC) ஒழுங்காக செயல்படாமல் முறைகேடுகள் நடப்பதால் அதை கலைத்துவிட்டு உயர்கல்வி மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை HEERA (Higher Education Empowerment Regulation Agency) உருவாக்க போவதாக புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி அறிவித்துள்ளார்கள். எனவே இதுபோன்ற கைது அரசின் நிகழ்ச்சிநிரலில் உள்ள திட்டத்தை மக்கள் மீது திணிப்பதற்கும் நியாயப்படுத்தவும் பயன்படும்.

இவர்கள் உருவாக்கும் HEERA எனும் ஆணையத்தில் ஊழலில் ஊறித் திளைத்திருகின்ற அரசு அதிகாரிகள் ஊழலின் ஊற்றுக்கண்ணான பன்னாட்டு கல்வி நிறுவன முதலாளிகள் – தலைமை நிர்வாக அதிகாரிகள் மட்டுமே இடம்பெறுவர். பேராசிரியர்கள், கல்வியாளர்கள் யாருக்கும் இடமில்லை. இனி பாடத்திட்டம், கட்டணம் என அனைத்தையும் ஆணையம் தான் தீர்மானிக்கும். ஆகவே இங்கு ஊழலும் ஒழியாது. கல்வியில் இந்துத்துவ சிந்தனையும் கார்ப்பரேட் அடிமை புத்தியும் கொண்ட மாணவர்களை உருவாக்கத் துடிக்கும் புதிய கல்வி கொள்கை நேரடியாக அமுல்படுத்தப்படும்.

எனவே எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் பாடையில் உள்ள இந்த அரசுக் கட்டமைப்பை சவக்குழியில் புதைக்கின்ற விதமான போரட்டத்தை நடத்த வேண்டும். அதே வேளையில் கல்வி நிலையங்களால் முடிவெடுக்கும் அதிகாரம், நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அடங்கிய சின்டிகேட்களை கட்டியமைக்க வேண்டும். அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ள வேலையில் எஞ்சியிருக்கும் ஒரே வழி இதுவே…

செய்தி – நேரடி கள ஆய்வு
மக்கள் அதிகாரம்
கோவை


கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களை பறிமுதல் செய் !
கூட்டுக் களவானிகளான அதிகாரிகள் – அமைச்சர்களையும் சிறையிலடை !

நேர்மையான பேராசிரியர்களே! மாணவர்களே!
மாணவர் எதிர்காலத்தை – கல்வி தரத்தை லஞ்சப் பேய்களான துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் தீர்மானிப்பதா?

கிரிமினல் –  மாஃபியாக்களிடமிருந்து கல்வித்துறையை மீட்டு நாமே நடத்துவோம் !

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு – 94451 12675


Confiscate the properties of the corrupt kovai bharathiyar university VC Ganapathi!
Send the officers and ministers who also took part in the corruption to jail!

To the honest professors and students!

  • Should we still allow the shamelessly corrupt VCs and professors to decide the quality of education and the future of our students?
  • Let us reclaim the education department from the corrupt criminal-mafia!

REVOLUTIONARY STUDENT and YOUTH FRONT
TAMILNADU – 9445112675

 

வல்லரசு ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் வேலைச் சுமை !

2

யிரை கொடுத்து வேலை செய்வது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையிலேயே வேலைக்காகத் தங்கள் உயிரைப் பறிகொடுத்த பலர் ஜப்பானில் இருந்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் பணியிடங்களில் ஏற்படும் மரணங்களைக் குறிப்பதற்கு தனியே `கரோஷி` என்று ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு.

ஜோயி டோக்னாங் என்பவர் ஜப்பானின் மத்தியப் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜப்பானைப் பொருத்தவரை பணியாற்றுவது என்றால் காலை பத்து மணி முதல் ஆறு மணி வரை வேலை செய்வது அல்ல. உறக்கம் கலைவதற்கு முன்பே அதிகாலை எழுந்து அலுவலகத்துக்கோ தொழிற்சாலைக்கோ சென்று விட வேண்டும். உணவு இடைவேளை என்பது பெயரளவுக்குதான். ஏதோ அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கைக்குத் திரும்பிவிட வேண்டும். ஏற்கெனவே குவிந்திருக்கும் வேலைகளை செய்து முடிப்பதற்குள் புதிய சுமைகளை ஏற்றிக்கொண்டே போவார்கள். ஒவ்வொன்றுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். குடும்பம், வீடு குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு 24 மணி நேரமும் வேலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, வேலையை மட்டுமே செய்துகொண்டு வாழ்ந்தால்தான் சம்பளம் வரும். இல்லாவிட்டால் சம்பளம் பறிபோவதோடு ஏச்சு, பேச்சுகளுக்கு அவமானங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இதற்கெல்லாம் பயந்துதான் ஜோயி ஓடியோடி உழைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் மகளும் பிலிப்பைன்ஸில் இருந்தனர். இன்னும் மூன்று மாதங்களில் உங்களுடன் இணைந்து விடுவேன், பிறகு நாம் எல்லோரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் ஜோயி. எனவே தற்காலிகமாக மனைவி, மகள் இருவரையும் நினைவுகளில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு வேலையில் கரைந்து போனார்.

ஜோயி தங்கியிருந்தது பலரும் ஒன்று சேர்ந்து வசிக்கும், குறைந்த வாடகைக் குடியிருப்பு ஒன்றில். அலுகலகத்திலிருந்து கிளம்பி தூக்கக் கலக்கத்தோடு சென்று படுக்கையில் விழுந்து புரண்டு படுப்பதற்குள் ஒலிக்கும் அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்து விறுவிறுவென்று வேலைக்கு விரைந்து சென்றாக வேண்டும். சிறைச்சாலை கைதிகளைப்போல ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைப் போலவே இருக்கும். எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே, பிறகு ஜப்பானுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று கனவு கண்டபடி உறங்கப்போனார்.
எழுந்திருக்கவேயில்லை ஒருநாள். காரணம் மாரடைப்பு. நித்தம் நித்தம் அனுபவித்த மன அழுத்தத்தின் காரணமாக இருதயம் செயலிழந்துவிட்டது. இது நடந்து ஏப்ரல் 2014-ம் ஆண்டில். ஜோயியின் வயது 27 மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் ஜோயியைப் போல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜப்பானில் பணிச்சுமை காரணமாக இன்னமும் மாரடைப்பால் மரணம், சிலருக்கு மன அழுத்தம், சிலர் அமைதியாகத் தற்கொலை செய்துகொண்டனர்.

பணிச்சுமை தாளாமல் பெருகும் கரோஷி கொலைகளை ஜப்பான் அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஐந்து தொழிலாளர்களில் ஒருவர் தீராத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவர் அநேகமாக இறந்து விடுவார் என்பதையும் அரசு அறிந்தே இருக்கிறது. கரோஷியை முன்வைத்து பல்வேறு ஆய்வுகள் புள்ளிவிவரங்களுடன் வெளிவருவதையும்கூட அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, டிசம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 22 சதவிகிதத்துக்கும் அதிகமாக தனியார் நிறுவனங்கள் மாதத்துக்கு 80 மணி நேரம்வரை ஓவர்டைம் செய்யுமாறு தங்கள் ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவது தெரிய வந்துள்ளது.

இப்படிப் பலியாகிறவர்கள் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு ஜப்பானின் டெலிகாம் கம்பெனி ஒன்றில் பணியாற்றச் சென்ற நோயாவின் உற்சாகம் சில தினங்களுக்குள் வடிந்துவிட்டது. முதலையின் வாயைப்போல் கம்ப்யூட்டர் திரை அவரை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டுவிட்டது. கண் சிமிட்டக்கூட நேரமில்லை. அடுத்து, அடுத்து என்று டெட்லைன்கள் வளர்ந்து கொண்டே சென்றன. இடையில் ஒருமுறை ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக வீட்டுக்கு வந்த நோயா உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக படுக்கையில் போய் விழுந்துவிட்டார். “அம்மா தயவு செய்து என்னைத் தூங்கவிடு. நான் தூங்கவேண்டும். என்னை எழுப்பாதே, ப்ளீஸ்!”

இரண்டு ஆண்டுகளில் நோயா இறந்துவிட்டார். கம்ப்யூட்டர் வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை என்றும் தன் மகனைப் பற்றிய பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்த அவர் அம்மா அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார். தன் மகனின் அசலான பணி வாழ்க்கை எப்படியிருந்தது என்பது அதற்குப் பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது. அறைக்குச் சென்று உறங்கக் கூட நேரமில்லாமல் பலமுறை நோயா தனது மேஜையிலேயே சரிந்து உறங்கியிருக்கிறார். மன அழுத்தத்தைக் குறைக்கப் பல்வேறு மாத்திரை மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஓய்வின்றி 37 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பல முறை பணியாற்றியிருக்கிறார். சரியான உறக்கம், சரியான சாப்பாடு, மன நிம்மதி எதுவும் இல்லை. மாத்திரைகள்தான் அவரைப் பிழைக்க வைத்திருந்தது. இறுதியில் அதே மாத்திரைகள் அவருடைய உயிரையும் பறித்துவிட்டன. ஜோயியைப் போலவே 27 வயது நோயா கரோஷிக்கு இரையாகிவிட்டார்.

ஆனா அதிக வேலைப்பளு என்னை கொன்றுடுகிறது? நீங்கள் மரணத்திற்கு பிறகு பதவி உயர்த்தப்படுவீர்கள்.

அடங்க மறுக்கும் பசியுடன் கரோஷி ஜப்பானைச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது. 2015 கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்சுரி என்னும் 24 வயது பெண் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். மாதம் 100 மணி நேரத்துக்கு மேல் ஓவர்டைம் செய்யுமாறு அவர் பணியாற்றிவந்த விளம்பர நிறுவனம் கட்டாயப்படுத்தியதால் மட்சுரிக்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சில மணி நேர உறக்கத்துக்காக இறுதிவரை மட்சுரி ஏங்கித் தவித்திருப்பது தெரியவருகிறது.

ஓவர்டைம் என்றும் பெயருக்குதானே ஒழிய, பெரும்பாலான நிறுவனங்கள் அதற்காக கூடுதல் ஊதியம் எதையும் அளிப்பதில்லை. ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட சம்பளப் பணத்தை மட்டுமே அவை வழங்குகின்றன. ஆனால் ஒப்புக்கொண்ட பணி நேரத்தைவிட இருமடங்கு நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஊழியர்களிடமிருந்து முடிந்தவரை உழைப்பைக் கசக்கிப் பிழிந்துகொள்ள வேண்டும் என்னும் வெறியுடன் செயற்கையாக வேலை நெருக்கடியை அவ்வப்போது உருவாக்கி, அசாதாரணமாக காலக்கெடுவை விதித்து ஊழியர்களை மனஅழுத்தத்துக்கும் தற்கொலைக்கும் தள்ளிவிடுகின்றன. ஊழியர்களின் உடல், மனம் இரண்டும் பாதிப்படையும் என்பது தெரிந்திருந்தும், கரோஷி மரணங்கள் அதிகரித்து வருவதைக் கண்ணால் கண்ட பிறகும் இந்நிறுவனங்கள் தங்களைச் சிறிதும் மாற்றிக் கொள்ளத் தயாராகயில்லை.

காரணம், இலாபவெறி, இதற்கு ஜப்பான் அரசின் அங்கீகாரமும் உண்டு. ஒவ்வொருமுறை கரோஷி நிகழும் போதும் முணுமுணுப்புகளும் எப்போதேனும் எதிர்ப்புகளும் கிளம்பும் என்றாலும் இவற்றால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. ஆம், தொழிலாளர் நலன்சார் சட்டதிட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வேலை நேரம், விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவையெல்லாமே காகிதத்தில் மட்டுமே சிறைபட்டுக் கிடக்கின்றன.

ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

எடுத்துக்காட்டுக்கு, சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை அரசு கொண்டுவந்தது. ஆனால், இதையும் நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. `அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய விதிமீறல்களை ஒவ்வொரு முறையும் கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறது அரசு. அந்த வகையில், அதிகரிக்கும் கரோஷி கொலைகளுக்குக் காரணம் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஜப்பான் அரசும் தான்.

இலாபம். இந்த ஒன்றுக்காகத்தான் ஜப்பானிய ஊழியர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இலாபத்தைப் பெருக்குவதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர், முதலாளிகள். தனியார்களைப் பாதுகாக்க எதையும் செய்ய (அல்லது செய்யாமல் இருக்க) தயாராக இருக்கிறது அரசு. அரசு என்பதே முதலாளித்துவத்தின் அடியாள் படையல்லவா?

ஜோயி, நோயா, மட்சுரி ஆகிய பெயர்கள் வேண்டுமானால் நமக்கு அந்நியமானவையாக இருக்கலாம். ஆனால் அவர்களை வெவ்வேறு பெயர்களில் நாம் தினம் தினம் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கரோஷி என்பது வேண்டுமானால் ஜப்பானியச் சொல்லாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் நடக்கும் எல்லாமே மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பவைதாம். தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக்கொள்வதிலும், அவர்களை சுரண்டி ஒடுக்குவதிலும் வளர்ந்த நாடு, வளரும் நாடு இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அந்த வகையில் ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

– மருதன்

புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

தருமபுரி : வழிப்பறி செய்யும் போலீசைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் !

2

ன்றைக்கு பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என்று தினம்தோறும் பிரச்சனையை எதிர்க்கொண்டு விழிபிதுங்கி வாழ்ந்து வருகின்றனர் மக்கள். இப்படி தினம்தோறும் மக்கள் கோவணத்தை உறுவி வரும் அரசு. மறுபக்கத்தில் போலீசை வைத்து சட்டபூர்வ வழிப்பறியை செய்துவருகிறது.

சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள்

4/2/2018 அன்று மாலை 3 மணிக்கு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் இளவரன், மற்றும் இரண்டு காவலர்கள் சேர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வழி மறித்து அந்த பக்கமாக வரும் இருசக்கர வாகனங்களை பிடித்து பணம் வசூலித்து கொண்டு இருந்தனர். அப்போது பெரியம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  ஜெயவேல் அந்த வழியாக வீட்டுக்கு மாலை 4 மணிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை திடீரென மறித்துள்ளார் உதவி ஆய்வாளர் இளவரன். வண்டியை நிறுத்த தடுமாறிய ஜெயவேல் சற்று தள்ளி நிறுத்தியுள்ளார். நான் நிறுத்த சொல்லியும் ஏன் தள்ளி நிறுத்தினாய் என்று ஜெயவேலை நடுரோட்டில் அடித்துள்ளார் உதவி ஆய்வாளர் இளவரன்.

எதற்காக அடித்தீர்கள் என எதிர்த்து கேட்ட ஜெயவேலுவை, ” என்னையே கேள்வி கேட்கிறாய நாயே வாட நான் யார் என்று காட்டுகிறேன்” என்று காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று நான்கு போலீசார் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்து நேற்று பெரியாம்பட்டியில் ஆத்திரப்பட்ட சில இளைஞர்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டது மட்டுமல்ல. போலீசார் மன்னிப்பு கேட்க கூறி சாலையை ஸ்தம்பிக்க வைத்தனர். இதனூடாக பொதுமக்களும் போலீசாருக்கு எதிராக இணைந்து கொண்டனர். இதன்பிறகே ஜெயவேலுவை விடுவித்துள்ளனர். அவர் தற்போது தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது எதோ ஒரு இடத்தில் தவறுதலாக நடந்த சம்பவம் இல்லை. நாடு முழுவதும் இதே நிலைதான். போலீசின் வழிப்பறியும், லஞ்சமும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான்.

போலீஸ் என்றால் நேர்மையானவர்கள், மக்களை காப்பற்றுபவர்கள், தவறை கண்டுபிடித்து தண்டிப்பவர்கள் என்ற பிம்பத்தை சினிமாவும், ஊடகங்களும் எவ்வளவுதான் உருவாக்கினாலும். காவல் நிலையத்தில் மக்கள் புகார் கொடுக்கவோ அல்லது பிரச்சனையை கொண்டு செல்லவோ அச்சப்படுகின்றனர். போலீசார்  பற்றி தமிழகமெங்கும் தினம்தோறும் வரும் செய்திகளை பார்க்கும் போது வழிப்பறி திருடனை கண்டு அஞ்சுவது போல், போலீசை கண்டு அஞ்சுகின்றர் மக்கள். இருசக்கர வாகனம் ஒட்டவே பயப்படுகின்றனர். தான் சம்பாதித்த ஒருநாள் கூலியை பறித்து கொள்வார்களே என்ற அச்ச உணர்வோடே செல்கின்றனர்.

பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்ட பிறகு  வேலைக்கு சென்றால் சம்பளத்தில் பாதியை பேருந்துக்கு கொடுக்க வேண்டிய நிலை இருப்பதால், தினக்கூலிகளாக செல்லும் தொழிலாளிகள் வேலைக்கு சென்றுவர 100 ரூபாய் தாண்டுகிறது. இதற்கு பதிலாக இருசக்கரம் வைத்திருக்கும் சிலர் இருவராக சேர்ந்து பெட்ரோல் போட்டு கொண்டு வேலைக்கு செல்கின்றனர். போலீசாரோ அன்றாடம் தினக்கூலிகளாக சென்று வரும் மக்களை குறிவைத்தே மடிக்கி பிடித்து அபராதம் விதிக்கின்றனர் அல்லது பேரம் பேசுகின்றனர். பணம் குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு தகுந்தாற்போல் கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் லஞ்சமாக வாங்கி கொள்கின்றனர்.

இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இந்த வழிப்பறி மூலம் பிரச்சனை வீதிக்கு வருகிறது. கேள்வி கேட்க முடியாத நபர்களாக இருந்தால் மிரட்டியே பணம் பறிக்கின்றனர். ஒரு உதவி ஆய்வாளர் நாள் ஒன்றுக்கு 50 பேரிடம் தண்டம் வசூலில் ஈடுப்பட வேண்டும் என்று மேலிட உத்தரவாம். காவல் துறை என்றாலே லஞ்சம், ஊழல், பொய் வழக்கு, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் விற்பனை என்று போலீசின் குற்றத்தை அடுக்கி கொண்டே போகலாம். இப்படி குற்றங்களில் ஈடுப்படும் போலீசாரை தண்டிக்க முடிவதில்லை. மாறாக அவர்களிடமே மீண்டும் சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரத்தை வாரி வழங்குகின்றனர். போலீசு என்றாலே கிரிமினல் கும்பல் தான். எரிகின்ற கொல்லியில் எந்த கொல்லி நல்லகொல்லியாக இருக்க முடியும். போலீசு என்ற கட்டமைப்பையே கலைக்கப்பட வேண்டும். அதுதான்  நிரந்தர தீர்வாகும்.

தோழர்  கோபிநாத்,
மக்கள் அதிகாரம்
தருமபுரி, 9943312467

 

அரிசி கிலோ 50 ரூபாய் ! சிம்கார்டோ இலவசம் ! கருத்துப் படங்கள்

0

அரிசி 50 ரூபாய் ! சிம்கார்டோ இலவசம்..!!

அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40-50 ரூபாய்.
ஆனால், சிம்கார்டோ இலவசம்..!!

***

பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
ஆனால், பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

படங்கள் : வேலன்

இணையுங்கள்:

 

சோடாபுட்டி ஜீயர் புராணம் ! வீடியோ !

7

சோடாபுட்டி ஜீயர் புராணம் !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழுவினர் வழங்கும் சோடாபுட்டி ஜீயர் புராணம் !

ஆண்டாளை தேவதாசி என வைரமுத்து இழிவுபடுத்தியதாக எச். ராஜா ஒரு அவதூறு பிரச்சாரத்தை துவக்கினார். அதை வைத்து இந்துமதவெறியை  ஊட்டும் வேலையை இந்துமதவெறி அமைப்புக்கள் செய்தனர். தினமணி வைத்தியநாதய்யரை காலில் விழ வைத்த ஜீயர் பிறகு வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் என அறிவித்தார். பின்னர் திடீரென்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வைரமுத்து மன்னிப்புக்கு பிப்ரவரி 3ம் தேதி வரை கெடு வைத்தார்.

அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மதவெறி பிக்கப் ஆகாத அதே நேரத்தில், பாஜக மீதான தமிழக மக்களின் வெறுப்பை இந்த விவகாரம் அதிகப்படுத்தியது. கொசுறாக சின்ன சங்கரனின் தமிழ்த்தாய் அவமதிப்பு இதற்கு பெரும் உதவியையும் செய்தது. ஆண்டாளை வைத்து அவாள் நடத்திய இந்த நாடகத்தை நகைச்சுவையாக உணர்த்துகிறது இந்த சோடாபுட்டி ஜீயர் புராணம். பாருங்கள், பகிருங்கள்!

பாருங்கள்! பகிருங்கள்!

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !

1

லகின் மிகப்பெரிய சுகாதார நலத்திட்டதால் ஏழைகள் ஏன் பயன்பெற மாட்டார்கள்.  தனியார் துறை மூலமாக சுகாதார அமைப்பை வீடுகளுக்கே கொண்டுவருவதாய் இந்த அரசு பீற்றுகிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல

நடப்பாண்டின் (2018) வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு தான் அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பதாக விதந்தோதப்படுகிறது. ஆனால் புள்ளிவிவரங்களை மேம்போக்காக பார்த்தாலே வரவு செலவு திட்டத்தில் கொண்டாடத்தக்க அம்சம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. உண்மையில் “அனைவருக்கும் சுகாதாரம்” என்பதில் எவ்விதத் தெளிவான பார்வையும் அரசுக்கு இல்லாததையே இந்த வரவு செலவு திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிதியமைச்சரின் உரையில் இரண்டு முதன்மையான அம்சங்கள் குறிப்பிடப்பட்டன – சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலமாக சுகாதார அமைப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவது மற்றும் முதன்மையான தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு (50 கோடி நபர்கள்) இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு வழங்குவது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி – 2018 பட்ஜெட்

அந்த இரண்டாவது அம்சம் சுகாதாரத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இன்றைய தலைப்பு செய்திகளாகிவிட்டது. ஆனால் இது ஒன்றும் புது முயற்சியல்ல. இது சுகாதார வசதிகளை மேம்படுத்தவோ அல்லது கைச்செலவை (out-of-pocket expenditure) குறைக்கவோ செய்யாது.

தனியார் துறைக்கு இத்திட்டம் பெரிய உந்துதலா?

சுகாதாரத்துறைக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற கூச்சலை ஒருவர் கேட்டால் ஏதோ வரவு செலவு திட்டத்தில் இதற்கு அதிகமாக [நிதி] ஒதுக்கப்பட்டுள்ளதோ என்று நம்பி விடுவார். மாறாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 2018-19-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 52,800 கோடி ரூபாய். 2017-18-ம் நிதியாண்டில் 51,550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதாவது ஒப்பீட்டளவில் வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே அதிகம்.

ஆகையால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும் போது உண்மையில் சுகாதாரத்துறைக்கு வரவு செலவு திட்டத்தில் சரிவு தான் ஏற்பட்டிருக்கிறது.
இத்தலையாய திட்டத்தின்(flagship programme) கீழ் புதிதாக 1.5 இலட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்கும் பொருட்டு சுமார் 1,200 கோடி ரூபாயை தாரளமாக வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர். அதாவது ஒவ்வொரு மையத்திற்கு தலா 80,000 ருபாய் கொடுக்கப்படும். எப்படி இருப்பினும் இது ஏற்கனவே 2017-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் இடம் பெற்றிருப்பதால் இது ஒன்றும் புதிய அறிவிப்புமல்ல. சென்ற ஆண்டின் இந்த அனுபவத்தைப் பற்றி எதுவுமே அறிக்கைகளில் இல்லை அல்லது உண்மையில் இது என்ன என்றும் தெளிவாக தெரியவில்லை.

10 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு.

மோசமான உட்கட்டமைப்பு வசதிகள், பற்றாக்குறையான ஊழியர்கள், போதிய உபகரணங்கள் மற்றும் மருத்துகள் இல்லாததாலேயே துணை மையங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31, 2012 அன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஊரக சுகாதார புள்ளிவிவரங்களின்படி, 1,56,231 துணை மையங்களில் 17,204 (11%) மட்டுமே இந்திய பொது சுகாதாரத் தரநிலைகளை பின்பற்றுகின்றன. 20 விழுக்காட்டு மையங்களில் போதுமான தண்ணீரும் 23 விழுக்காடு மையங்களில் போதுமான மின்சாரமும் கிடையாது. 6,000-க்கும் அதிகமான மையங்களில் பெண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 1,00,000-க்கும் அதிகமான மையங்களில் ஆண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 4,243 மையங்களில் இருவருமே கிடையாது. குறைந்தது இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இவற்றை சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக ஒருவர் கருத முடியும். இந்த அற்ப நிதியை வைத்துக்கொண்டு எப்படி இதை சாதிக்க முடியும் என்று புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.

இப்பொழுது இரண்டாவது அறிவிப்பான “அரசு உதவி பெரும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை” பார்க்கலாம். இந்த அறிவிப்பு இதே நிதியமைச்சரால் 2016-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் கூறப்பட்டது கண்டிப்பாக நினைவுக்கூறப்பட வேண்டும். “புதிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஒன்றை அரசு தொடங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு அளிக்கும்” என்று 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னும் இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY) திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை 30,000 ரூபாயாகவே உள்ள நிலையில் தற்போது அதை ஐந்து இலட்சமாக்க வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு வளங்கப்படுவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே.

இது ஒருப்போதும் செலவிடப்படவில்லை மாறாக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டது. திட்டத்தின் தொடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50 விழுக்காட்டை விட குறைவாகவே சென்ற ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது அது சிறு அளவு அதிகரிக்கப்பட்டு 2,000 கோடி ரூபாயாக திருத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளின் யோக்கியதையை இந்த புள்ளிவிவரங்கள் சந்தேகங்கொள்ள செய்கின்றன.

இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY)

மறுபுறம் கல்வி வரி (education cess) 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்றும் இதன்மூலம் 11,000 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் வரவு செலவு திட்டம் கூறுகிறது. ஒருவேளை இக்கூடுதல் வருவாயில் 25 விழுக்காட்டை சுகாதாரத்துறைக்கு கொடுப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட 2,750 கோடி ரூபாய் கூடுதலாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ வெறும் 1,250 கோடி ரூபாய் மட்டுமே. இந்த வரவு செலவு திட்டம் என்ன செய்வது போல் தோன்றுகிறது? ஏழை மக்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு பொதுமக்களிடம் கூடுதலான பணத்தை பறித்து தனியார் சுகாதாரத்துறைக்கு கொடுக்கிறது. இச்சூழலில் [தனியார்] சுகாதார மற்றும் காப்பீடு நிறுவன பங்குகளின் விலை உயர்வானது இத்திட்டங்களின் உண்மையான பயனாளிகள் யார் என்று கட்டியங்கூறுகிறது.

ஏழைகளுக்கான சுகாதாரமா இல்லை பெருநிறுவனுங்களுக்கான ஆதாயமா?

கைச்செலவை குறைப்பதை அடிப்படையாக கொண்டு, தனியார் மருத்துவ காப்பீட்டின் மூலம் மருத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதற்கு தனியார் சுகாதாரத்துறையை நம்பி இருப்பது என்பது ஒட்டுமொத்த மருத்துவ செலவினங்களையும் அதிகரிக்கிறது மேலும் இது பெரும்பான்மையான மக்களை தவிர்க்கிறது மற்றும் சரியான முறையான [மருத்துவ] நடைமுறைகளை சிதைக்கிறது என்பது உலகம் முழுதுமான அன்பவங்களாக இருக்கிறது. மக்களுக்கு உடல்நலத்தை வழங்க முயற்சிகள் செய்தால் கூட அதை தனியார் துறை மூலமாக செய்யவே இந்த அரசு நினைக்கிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல.

கைச்செலவை குறைப்பதற்கு காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் இந்தியாவில் ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதற்கு நம்மிடம் போதுமான சான்றுகள் உள்ளன. இத்திட்டம் கைச்செலவையும் குறைக்கவில்லை மருத்துவத்தையும் ஏழைகளிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பதை RSBY-யைப் பற்றிய பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகள் நிறுவுகின்றன. RSBY-யோ அல்லது புதிய தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமோ உள்நோயாளிகளுக்கான காப்பீடை மட்டுமே அளிக்கின்றன. அடிப்படை மருத்துவத்திற்கோ மக்கள் பொது சுகாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அவை போதுமானவையல்ல மேலும் அதிக வசதிகள் தேவைப்படுகிறன. இது கைச்செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதார செலவினங்களில் 67 விழுக்காடு கைச்செலவின் மூலமாகவே செய்யப்படுகிறது அதிலும் குறிப்பாக 63 விழுக்காடு வெளிநோயாளிக்கான பராமரிப்பு செலவாகவே இருக்கிறது.

RSBY (மற்றும் ஆந்திர மாநில ஆரோக்யஸ்ரீ உள்ளிட்ட மாநில திட்டங்கள்) போன்ற காப்பீட்டுத் திட்டங்களைப் பாத்தாண்டுகளாக ஊக்குவித்து வந்த போதும் கைச்செலவு அதிகரித்துக் கொண்டிருப்பதை தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மருத்துவமனையில் சேரும் கிராமப்புறத்தைச் சேர்ந்த 1.2 விழுக்காட்டினருக்கும் நகர்புறத்தை சேர்ந்த 6.2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே செலவு ஈடு (Reimbursement) செய்யப்பட்டிருப்பதாக 2014-ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தகவல்களை ஆய்வு செய்த சுந்தரராமனும் முரளீதரனும் நிறுவுகின்றனர். காப்பீடு திட்டத்தை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் இருந்தாலும் ஒன்று அவை ஏழை மக்களை சேரவில்லை அல்லது போதுமான நிதி பாதுகாப்பை அளிக்கவில்லை என்பதற்கு சான்று இருக்கிறது. உள்நோயாளிக்கான கைச்செலவை குறைக்கவோ அல்லது உள்நோயாளிக்கான செலவின் அளவிலோ RSBY எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதை அனுப் கரன் மற்றும் ஏனையவர்களின் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.

காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு ( 40% மக்கள்) மட்டுமே அதுவும், உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.

பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தாமல் காப்பீட்டின் மீதான அரசின் அக்கறையானது ஒருபுறம் சுகாதாரத்திற்கு அரசு குறைந்த நிதியை ஒதுக்குவதற்கும் மறுபுறம் தனியார் துறை ஏழைகளின் உடல் நலப்பிரச்சினைகளை காசாக்குவதற்கும் இசைவளிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதியிலேயே மொய்த்துள்ளதால் காப்பீடு திட்டங்கள் யாவும் கிராமப்புற ஏழைகளை சேர்வதில்லை என்று மாநில காப்பீடு திட்டம் மற்றும் RSBY திட்டம் ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆய்வொன்று கூறுகிறது.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இல்லை:

உடல்நலத்திற்கான கைச்செலவானது இந்திய மக்களை கவ்வியிருக்கும் முதன்மையான சிக்கல் என்பது பலரால் சரியாக உணரப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான கடுமையான செலவுகள் மக்களை ஏழ்மையில் தள்ளும் (உடல்நலத்திற்கான கைச்செலவினால் 7 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே விழுகின்றனர்) முதன்மையான காரணி என்பதை ஏராளமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்புதிய திட்டமானது எந்த அளவுகோலின் படி பார்த்தாலும் உலகாளாவிய உடல்நலப்பாதுகாப்பை (universal health coverage) நமக்கு வழங்கப்போவதில்லை. உலகளாவிய உடல்நலப்பாதுகாப்பு அதன் உள்ளார்ந்த பொருளில் அனைத்து விதமான மருத்துவ செலவுகளையும் உள்ளடக்குகிறது. இக்காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு (10 கோடி அல்லது 40% மக்கள்) மட்டுமே அதுவும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக குறைந்தது 2.5 – 3 விழுக்காடாக நிதியை அதிகரிக்க வேண்டும் என்று ஏரளமான பல்கலைக்கழக கட்டுரைகள், அரசாங்க குழுக்களின் பரிந்துரைகள், தேசிய சுகாதார கொள்கை மற்றும் இன்ன பிற அனைத்தும் கூறுகின்றன. ஆயினும் ஆண்டாண்டுகளாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.1-1.2 விழுக்காடாகவே இருக்கிறது. தலைப்புச்செய்திகள் தவறாக கூறுகின்றன – இந்த வரவு செலவு திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இல்லை. இது குழந்தைகள் இறப்பிலும் பேறுகால மரணங்களிலும் உலகில் முன்னிலையாக இருக்கும் ஒரு நாடு தன்னுடைய சொந்த மக்களின் உடல்நலத்திற்காக ஏனைய நாடுகள் செலவிடுவதில் பாதி மட்டுமே செலவு செய்வதைப் பற்றியது – அரசாங்கம் மாறி அரசாங்கம் வந்தாலும் இது தன்னுடைய சொந்த மக்களுக்கான உடல்நலத்திற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.

– தீபா சிங்
அம்பேத்கர் பல்கலைகழக தாராளவாத ஆய்வுகள் பள்ளி, டெல்லி.
தமிழாக்கம்: சுந்தரம்
நன்றி: The Wire

 

மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் !

0

ற்ற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்ட கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

பொதுவாக நம்மைச் சுற்றிய உலகை சில விதிகளையும் நிகழ்முறைகளையும் கொண்ட கண்ணோட்டத்தை பயன்படுத்தி புரிந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்குப் பிறகு இப்போது திரட்டப்படும் தரவுகளின் அளவு பிரம்மாண்டமாக உயர்ந்து வருகிறது. உலகில் ஒவ்வொரு நாளும் திரட்டப்படும் தரவுகளின் அளவு 2013-ல் 4.4 லட்சம் கோடி ஜி.பியாக இருந்தது. இது 2020-ல் 44 லட்சம் கோடி ஜி.பியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெரும் அளவிலான தரவுகளை திரட்டுவதற்கும், சேமிப்பதற்கும், அவற்றை ஆராய்ந்து முடிவுகள் எடுக்கவும் தேவைப்படும் உத்திதான் செயற்கை நுண்ணறிவு.

மருத்துவத் துறையைப் பொறுத்தவரை உலகெங்கிலும் உள்ள பல கோடி நோயாளிகளின் மருத்துவ பதிவுகள், சிகிச்சை தொடர்பான விபரங்கள், உடலில் பொருத்திக் கொள்ளும் உடல்நிலை கண்காணிப்பு கருவிகள், உணர்விகள் பதிவு செய்யும் தரவுகள் திரட்டப்படுகின்றன. பெரும் அளவிலான இந்தத் தரவுகளை பயன்படுத்தி நோயாளிகளின் தேவைகளையும், பழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சிகிச்சைகளை வடிவமைப்பது சாத்தியமாகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ செயலிகள் (Apps) பல உருவாக்கப்பட்டு வருகின்றன.

வழக்கம் போல, மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பது ஐ.பி.எம் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் வாட்சன் என்ற கருவி.

ஐ.பி.எம் வாட்சன் புற்றுநோய் மருத்துவர்களுக்கான ஒரு தனிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவரின் குறிப்புகளிலும், சோதனை அறிக்கைகளிலும் உள்ள தகவல்களை உள்வாங்கி குறிப்பிட்ட சிகிச்சை முறையை பரிந்துரைக்க வல்லதாக வாட்சன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் முந்தைய வாழ்நிலை, மருத்துவ அறிவு, பிற ஆய்வுகளிலிருந்து கிடைத்த தரவுகள் இவற்றை பயன்படுத்தி வழங்க வேண்டிய பொருத்தமான சிகிச்சையை அடையாளம் காண்கிறது.

ஐ.பி.எம் நிறுவனத்தின் இன்னொரு மென்பொருள் மெடிக்கல் சீவ் (மருத்துவ சல்லடை). கதிரியிக்கவியலிலும், இருதயவியலிலும் படங்களை அலசி ஆய்வு செய்து பிரச்சனைக்குரிய பகுதிகளை மனிதர்களை விட கூடுதல் துல்லியத்துடன் அடையாளம் கண்டு நோயை கண்டுபிடித்து சொல்கிறது மெடிக்கல் சீவ்.

ஐ.பி.எம்-க்கு போட்டியாக டெல், எச்.பி, ஆப்பிள், ஹிட்டாச்சி, லுமினோசோ, அல்கெமி ஏ.பி.ஐ, டிஜிட்டல் ரீசனிங், ஹை ஸ்பாட், லுமியாட்டா, சென்டியன்ட் டெக்னாலஜிஸ், என்டெர்ரா, ஐ.பிசாஃப்ட், நெக்ஸ்ட் ஐ.டி என்று பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் குதித்துள்ளன.

இவ்வாறு மருத்துவத் துறை மேலும் மேலும் பெரிய கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று, நிதி மூலதனத்தின் லாப வேட்டைக் களமாக மாற்றப்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள்

சமீபகாலங்கள் வரை நோய் கண்டறியும் கணினி செயலிகள் குறிப்பிட்ட நோய்களை இலக்காக வைத்து அவற்றைப் பற்றிய குறிப்பிட்ட முன் ஊகங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேலும் உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பான செயலி உருவாக்கப்பட வேண்டியிருந்தது. எனவே அவற்றை மிகக் குறுகிய வரம்பில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அவற்றின் பலனும் குறைவாகவே இருந்தது. எனவே அவை மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.

இதற்கு மாறாக இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள் உடல் முழுவதுக்குமான பல வகை நோய்களை கையாள முடிவதோடு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் போன்ற அனைத்து வகையான கருவிகளின் படங்களையும் அலசும் திறனை கொண்டுள்ளன.

மெடிக்கல் சீவ் (மருத்துவ சல்லடை)

மரபணுவியலிலும், மரபணு ஆய்விலும் பெரும் அளவிலான மரபணுவியல் தகவல்களையும் மருத்துவ பதிவுகளையும் கொண்ட தரவுத் தளங்களிலிருந்து குறிப்பிடத்தக்க போக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.

மனித ஜீனோம் திட்டத்தின் தந்தைகளில் ஒருவரான கிரெய்க் வென்டர் ஒரு நோயாளியின் டி.என்.ஏ-வின் அடிப்படையில் அவரது உடல் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதை வரையறுக்கும் மென்பொருளை உருவாக்கி வருகிறார். Human Longevity (மனித வாழ்நாள் நீட்டிப்பு) என்ற அவரது நிறுவனத்தின் மூலம் அவர் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஜீனோம் வரிசைப்படுத்தலையும், முழு உடல் ஸ்கேனையும், விபரமான மருத்துவ பரிசோதனையையும் வழங்குகிறார். இந்த ஒட்டு மொத்த நடைமுறை மூலம் புற்றுநோய், இரத்தம் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண முடிகிறது.

நோயாளிகளை மேற்பார்வை செய்வதற்கு பெருந் தரவுகளை பயன்படுத்துவதற்கான ஒரு முக்கியமான உதாரணம், பெர்க் ஹெல்த் என்ற போஸ்டனைச் சேர்ந்த உயிர்மருந்து நிறுவனம். தரவுகளை அகழ்ந்து ஒரு சில மக்கள் ஏன் நோய்களிலிருந்து சமாளித்து பிழைத்து விடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் தற்போதைய சிகிச்சைகளை மேம்படுத்துவதோடு புதிய சிகிச்சைகளை உருவாக்கவும் முடிந்தது.

அறுவை சிகிச்சை துறையில் டாவின்சி சி.எச்.டி என்ற கருவி அறுவை சிகிச்சை தானியக்க கருவிகளை உருவாக்கியுள்ளது. உடல் உள் உறுப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மீச்சிறு அளவு துளைகள் மூலம்ரோபோக்களை அனுப்பி வைத்து மருத்துவர்கள் உள் உறுப்புகளின் நிலையை துல்லியமாக கண்டு கொள்வதை சாத்தியமாக்குகிறது.

இன்னும் சில உதாரணங்களை பார்க்கலாம்.

டாவின்சி சி.எச்.டி முறை

இங்கிலாந்தைச் சேர்ந்த பாபிலோன் என்ற இணைய மருத்துவ சேவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு செயலியை (App) நாடி என்னென்ன பிரச்சனை என்று ஒரு மருத்துவரிடம் சொல்வது போல அதனிடம் விளக்க வேண்டும். உங்கள் பேச்சை உணர்ந்து கொண்டு அதிலிருக்கும் நோய் அடையாளங்களை கண்டறிந்து, ஏற்கனவே உங்களைப் பற்றி சேமித்து வைத்திருக்கும் மருத்துவ விபரங்களையும், பொதுவான மருத்துவ தகவல்களையும் பயன்படுத்தி உங்களுக்கு வந்திருப்பது என்ன நோய் என்று சொல்கிறது அந்தச் செயலி. அதை தீர்த்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் பாபிலோன் என்ற நிறுவனம் தனக்கு சந்தா கட்டும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் சேவையை வழங்குகிறது. காசிருப்பவனுக்கே சேவை.

நோயாளி மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று கண்காணிப்பதற்கு ஏ.ஐ கியூர் (AiCure) என்ற செயலியை நேஷனல் ஹெல்த்கேர் இன்ஸ்டிட்யூட் உருவாக்கியிருக்கிறது. ஒரு ஸ்மார்ட் ஃபோனையும், கேமராவையும் பயன்படுத்தி சொன்ன நேரத்தில் சொன்ன மருந்தை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று தகவலை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

இத்தகைய செயலிகள் எதற்கு பயன்படும்?

நிதிமூலதன நிறுவனங்களும், மிகப்பெரிய மருந்து நிறுவனங்களும் லாபம் ஈட்டுவதை துரிதப்படுத்தவும், அதிகப்படுத்தவும்தான் இது முதன்மையாக பயன்படுத்தப்படும். உதாரணமாக, மருந்தக சோதனைகள் மூலம் மருந்துகளை உருவாக்குதல் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பிடிப்பது, பல நூறு கோடி டாலர் செலவு பிடிப்பது. இந்த நிகழ்முறையை வேகப்படுத்துவதும், செலவுகளை குறைப்பதும் இன்றைய மருத்துவத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், மருந்துகளின் விலையை தீர்மானிக்கும் பன்னாட்டு கம்பெனிகள் தாங்கள் செய்த செலவை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றன.

ராயல்டி ஃபார்மா என்ற நிறுவனம், ‘தான் எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிப்பதிலோ, உற்பத்தி செய்வதிலோ விற்பதிலோ ஈடுபடுவதில்லை’ என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. ஆனால் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் 30-க்கும் மேற்பட்ட மருந்துகளின் காப்புரிமை அதன் வசம் உள்ளது. இந்த உரிமைகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மதிப்பு $1500 கோடி (சுமார் ரூ 1 லட்சம் கோடி) என கணக்கிடப்படுகிறது.

தமது மருந்துகளை விற்று பல ஆயிரம் கோடி லாபம் சம்பாதிப்பதற்காக விற்பனை முயற்சிகளிலும், விளம்பரங்களிலும் பணத்தைக் கொட்டுகின்றன மெர்க், கிளாக்சோ ஸ்மித்கிளைன், நோவார்டிஸ், ஃபைசர், ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் மருந்துகள் இந்தியா போன்ற நாடுகளில் சோதனைச் சாலை எலி போல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

இது போன்று மருந்துகளின் காப்புரிமைகளை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றின் மீதான உரிமத் தொகையை மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற்று கொழுக்கும் நிதி சூதாட்ட நிறுவனங்கள் ஒருபுறம். மறுபுறத்தில் கொள்ளைக் கூடாரமாக நிற்கின்றன, மருத்துவமனைகள்!

மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் எப்படி உள்ளன?

மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன உயர்திறன் கொண்ட மருத்துவக் கருவிகள், அங்கு பணிபுரியும் நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவமனையை பராமரிக்கும் தொழிலாளர்கள் இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கான கடவுச் சீட்டு பணம்தான்.
அமெரிக்காவில் மருத்துவமனை கட்டணத்தை கட்ட முடியாத முதியவர்களையும் ஆதரவற்றவர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆளரவமற்ற சாலை ஓரத்தில் இறக்கி வைத்து விட்டு போய் விடுகிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் சென்னை முதல் சிக்காகோ வரை எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கடைப்பிடிக்கின்றன.

கடந்த 100 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களையும் வளர்ச்சியையும் தன் வசப்படுத்திக் கொண்ட முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகம்தான் இது. கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் தமது புதிய மருந்துகளை சோதித்து பார்க்கும் சோதனை எலிகளாக மக்களை பயன்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சேவை பணம் படைத்த மேட்டுக் குடியினருக்கு மட்டும் கிடைப்பதாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பெரும் லாபத்தை குவிக்கும் ராயல்டி ஃபார்மா போன்ற நிதி சூதாட்ட நிறுவனங்களின் உலகமாக மாற்றப்பட்டுள்ளது, மருத்துவம்.

மருத்துவம் சார்ந்த செயலிகள் ராயல்டி ஃபார்மா போன்ற கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று எந்த மருந்துகளின் காப்புரிமையை வாங்கினால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படும்.

சென்ஸ்.லி என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மோலி என்ற செயற்கை நுண்ணறிவு செயலி நோயாளி எப்படி இருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளவும் உரிய சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. பணக்கார நோயாளிகள் மருத்துவரை பார்த்து விட்டு வந்த பிறகு அடுத்த தடவை மருத்துவரை பார்க்கப் போவது வரை இடைப்பட்ட காலத்தில் மருத்துவ உதவிகளை நோயாளிகளுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கவனிப்பையும், நோய் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பையும் வழங்குகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் செவிலியரை பணிக்கு அமர்த்தி சம்பளம் கொடுப்பதை விட மென்பொருள் செயலி மூலம் வேலையை நிறைவேற்றி லாபத்தை அதிகரித்துக் கொள்ள முயலுகிறது முதலாளித்துவம்

பிற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்கவும், உழைக்கும் மக்களை விலக்கி வைக்கவும், உழைப்பாளர்களை சுரண்டவுமே பயன்படுத்தப்படுகிறது.

ரோபோ (robot) என்ற செக் மொழி சொல்லின் பொருள் அடிமை என்பதாகும்.

அதாவது ரோபோக்கள் என்பவை சிக்கலான செயல்களை தாமாகவே செய்யக் கூடிய எந்திர அடிமைகள்.

‘எந்திரங்கள் மூலம் சாதாரண மக்கள் தமது வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். அவர்களது ஓய்வு நேரம் அதிகமாகும்’ என்கிறார்கள். ஆனால், இத்தகைய எந்திர அடிமைகள் அதிகமாக அதிகமாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முதலாளித்துவ வர்க்கம் மேலும் தீவிரப்படுத்துகிறது. எந்திரங்களை இயக்கும் பணியில் அமர்த்தப்படும் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மேலும் மேலும் அதிக நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தின் மூலம் வீட்டில் பாத்திரம் கழுவ எந்திரம், துணி துவைக்க எந்திரம், வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய எந்திரம் என்று வாங்கி விடலாம். ஆனால், குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் 10-12 மணி நேரம் உழைத்து மூலதனத்துக்கு உபரியை வாரி வழங்கினால்தான் அத்தகைய வாழ்வு சாத்தியமாக இருக்கும். எனவே, உண்மையில் ஓய்வு நேரம் என்பது இல்லாமல் போய் விடும்.

மறுபுறம், தனது லாப ஈட்டலுக்கு தேவையில்லாத பெரும்பாலான உழைக்கும் மக்களை உபரி உழைப்புப் பட்டாளமாக சந்தையில் குவித்து பொருளாதார ஏற்றத் தாழ்வை இன்னும் அதிகரிக்கச் செய்யும் மூலதனம்.

தொழில்நுட்பங்கள் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மேலும் மேலும் சுரண்டலை தீவிரப்படுத்தி உழைக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும் பேரழிவிற்கு தள்ளுகின்றன என்பது கடந்த 200 ஆண்டு கால அறிவியல் வரலாற்றின் அனுபவம்.

தொழில்நுட்பங்களை அவற்றை படைத்த, அவற்றை பயன்படுத்துகின்ற பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சோசலிசப் புரட்சி மூலம் மட்டுமே இந்த உலகையும் உலக மக்களையும் மூலதனச் சுரண்டலில் – ஆதிக்கத்தில் இருந்து நாம் காப்பாற்ற முடியும்.

– குமார்
புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !

21

ரு பொருள் வேண்டும் என்று நீங்கள் நினைத்து முடிப்பதற்குள் அலாவுதின் அற்புத விளக்குபோல் அதை உங்கள்முன் தோன்றச் செய்ய என்ன செய்யவேண்டும்? அமேசானின் கவலையெல்லாம் இது ஒன்றுதான். வேகமாக, இன்னும் வேகமாக, மேலும் வேகமாக வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியதைக் கொண்டுபோய் சேர்ப்பதில்தான் தங்களுடைய வெற்றி அடங்கியிருக்கிறது என்பது அமேசானுக்குத் தெரியும். எனவே அவர்கள் வேகத்தைக் கூட்டிக்கொண்டே போகிறார்கள். வேகத்தைக் கூட்டக்கூட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. அதன்மூலம் லாபமும் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்திலிருந்து ஒரு பண்டத்தை இன்னோரிடத்துக்குக் கொண்டுசெல்லும் ஒரு எளிய நிறுவனமாகத் தொடங்கிய அமேசான் இன்று உலகையே தன் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிடத் துடித்துக்கொண்டிருக்கிறது.

நவீன தொழில்நுட்பமே அமேசானின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மேல் பார்வைக்கு சரிதான் என்றுகூட நமக்குத் தோன்றும். நம் கண்களுக்கு அமேசானின் மொபைல் ஆப் மட்டுமே தெரிகிறது என்பதால் இப்படி முடிவு கட்டிவிடுகிறோம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம். ஆனால், இவர்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை..

உலகம் முழுக்க பல்லாயிரம் தொழிலாளர்கள் சரக்கு அறைகளில் அமர்ந்து நமக்கான பண்டங்களைத் தனித்தனியே பிரிக்கிறார்கள். மனிதர்கள்தான் பாக்கிங் வேலையையும் செய்யவேண்டியிருக்கிறது. முகவரியைச் சரி பார்த்து பார்சலில் ஒட்டுவதும் தொழில்நுட்பம் அல்ல, மனிதர்கள். எது எங்கே போகவேண்டும் என்பதையும் எப்போது போகவேண்டும் என்பதையும் மனிதர்களே முடிவு செய்கிறார்கள். மனிதர்களே பார்சல்களை வண்டிகளில் போட்டு அனுப்புகிறார்கள். மனிதர்களே நமக்கு டெலிவரியும் செய்கிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் நாம் இவர்களை மட்டுமே நேரடியாகப் பார்க்கிறோம். மற்றவர்களின் முகம், பெயர் நமக்குத் தெரியாது. அமேசான்தான் நமக்குத் தெரிந்த ஒரே முகம். அந்த முகத்தை நாம் மொபைலில்தான் பெரும்பாலும் பார்க்கிறோம் என்பதால் தொழிலாளிகள் குறித்து நாம் சிந்திப்பதில்லை.

நாம் மட்டுமல்ல அமேசானும்கூடத் தொழிலாளர்கள் குறித்து அக்கறையுடன் சிந்திக்கவில்லை. ஏனென்றால் தொழிலாளர்கள் எவரையும் அமேசான் தன்னுடைய தொழிலாளர்களாக பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. தன்னுடையை தேவையை செய்து முடிக்கும் பொருட்டு, உலகின் எந்த ஒரு மூலையிலும், எந்த ஒரு நிறுவனத்தையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடியும். இவர்களுக்கு வேலைநிரந்தரம் கிடையாது; உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடையாது. மேற்படி நிறுவனம் தனது தொழிலை வேறு ஊருக்கு மாற்றிவிட்டாலோ, வேறு ஒரு இடத்தில் இதைவிட மலிவான ஊதியத்துக்கு ஆள் கிடைத்துவிட்டாலோ இந்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிடும். இதனை அவுட் சோர்சிங், அதாவது அயல்பணி என்கின்றன, பன்னாட்டுக் கம்பெனிகள்.

தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம். ஆனால், இவர்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை..

அமேசான் உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் உலகெங்கும் தங்களது கிளைகளை வேர்பிடிக்க வைக்க அயல்பணி தொழிலாளர்களையே பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இவ்வாறு இத்தாலியிலும் ஜெர்மனியிலும் அயல்பணி வேலைமுறையில் ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரு மாதங்களுக்குமுன்பு வேலை நிறுத்தத்தில் இறங்கினர். காரணம் என்ன? இங்கே தீபாவளி, பொங்கல் போல் அமெரிக்காவில் நன்றியறிதல் நாள் என்பது ஒரு மிகப் பெரிய கொண்டாட்ட தினம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காம் வியாழன் அன்று இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. ஆபிரஹாம் லிங்கன் ஆரம்பித்து வைத்த வழக்கம் இது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு போல் இதையும் அமெரிக்கர்கள் விமரிசையாக வரவேற்று மகிழ்வது வழக்கம்.

இந்த நன்றியறிதல் முடிந்த மறுதினமான வெள்ளிக்கிழமையை ”கறுப்பு வெள்ளிக்கிழமை” என்று அழைக்கிறார்கள். இதற்கு இன்னொரு பெயர், பிரம்மாண்டமான ஷாப்பிங் தினம் என்பதாகும். இந்தத் தினத்தின்போது உள்ளூர் பெட்டிக்கடை தொடங்கி வானுயர்ந்த மால்கள்வரை எல்லாவிடங்களிலும் மாபெரும் கழிவுகள் கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள். நள்ளிரவில்கூட கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்வார்கள். மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள். கடைகளிலும் மால்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் பல நாள்களுக்கு அல்லது வாரங்களுக்கு முன்பே இதற்குத் தயாராக ஆரம்பித்துவிடுவார்கள். வழக்கமான பணிநேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பணியாற்றும்படி இவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். டார்கெட் அச்சுறுத்தல்களும் பலருக்கு இருக்கும். அவசரம் என்றால்கூட விடுமுறை கிடையாது. பக்கத்து கடையைவிட அல்லது போட்டி நிறுவனத்தைவிட அதிக லாபம் ஈட்டவேண்டும் என்பதில் மட்டும்தான் நிறுவனங்கள் அக்கறை கொண்டிருக்கும் என்பதால் தொழிலாளர்களின் நிலை குறித்து யோசிப்பதற்குக்கூட அவர்களுக்கு அவகாசம் இருக்காது.

அமேசானிலும் இதே நிலைமைதான். அமேசான் என்னவோ ஆன்லைன் நிறுவனம்தான். ஆனால் உலகம் முழுக்க பல நாடுகளில் பெரிய பெரிய சரக்கு கிடங்குகளை வாடகைக்குப் பிடித்து வைத்து அங்கே பணியாளர்களை நியமித்து அவர்கள் வாயிலாகவே உலகம் முழுக்க பண்டங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது அமேசான். நேரடியாகக் கடைகளுக்குச் சென்று வாங்கும் வாடிக்கையாளர்களையும் தம் பக்கம் இழுப்பதே அமோசானின் நோக்கம். பொருள் என்றாலே ஆன்லைன்தான் என்று மக்கள் மாறவேண்டும் என்பதுதான் அதன் கனவும்கூட. அதனால் நேரடி விற்பனை விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிரடியாக விலையைக் குறைத்து, தொடக்கத்தில் இழப்பு வந்தாலும் பரவாயில்லை என்று கருதி வாடிக்கையாளர்களை மடக்கி வைத்திருக்கிறது அமேசான். தற்போது நடந்திருப்பதும் அதுதான். பிளாக் ஃபிரைடே தினத்தின்போது மக்கள் அமேசானைக் கைவிடக்கூடாது என்பதற்காக போட்டிப்போட்டுக்கொண்டு பல டெலிவரிகளை மின்னல் வேகத்தில் நடத்திக்காட்ட விரும்பியது அமேசான்.

தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே உழைப்பு இருந்திருக்கிறது. உழைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள்.

இந்த இலக்கை நிறைவேற்றும் பொறுப்பை மேற்படி அயல்பணி தொழிலாளர்கள் தான் சுமக்கவேண்டும். பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே இவர்களுடைய பாடு திண்டாட்டம்தான். வேகம், இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று சாட்டையைச் சொடுக்காத குறையாக மேலாளர்கள் முதுகில் ஏறி அமர்ந்து விரட்டத் தொடங்கிவிடுவார்கள். இரண்டு நாளில் முடிக்கவேண்டிய ஒரு டெலிவரியை ஒரே நாளில் முடி. ஒரு நாளில் முடிக்கவேண்டியதைச் சில மணி நேரங்களுக்குள் முடிக்கப் பார். சில மணி நேரம் ஆகவேண்டியதை அரை மணி நேரத்தில் ஏன் முடிக்க முடியாது? வீடு, குடும்பம், குழந்தைகளை எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமேசானே கதி என்று கிடந்தால்கூட அவர்கள் நிர்ணயிக்கும் டார்கெட்டுகளைச் சரியாக முடிப்பதற்குள் முழி பிதுங்கிவிடும்.

இத்தாலியில் உள்ள மிலான் பகுதியில் பணியாற்றும் 500 தொழிலாளர்கள் முதல்முறையாக அமேசான் கொடுக்கும் அதீத அழுத்தத்துக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் குதித்திருக்கிறார்கள். இது போக, ஊதிய உயர்வும் அவர்களுடைய முக்கியமான கோரிக்கைளில் ஒன்றாக இருக்கிறது. கூடுதல் பணி நேரத்துக்கு ஏற்ப கூடுதல் ஊதியம் என்பதையும் அமோசான் பல இடங்களில் சரியாக அமல்படுத்தவில்லை. அதற்கு எதிராகவும் தொழிலாளர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் 2,500 தொழிலாளர்கள் அமேசானுக்கு எதிரான வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உலகின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்கள். சரக்குக்கிடங்குகளில் பணியாற்றும் பலருக்கு அடிப்படை ஊதியம்கூட மிகக்குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இப்போது உயர்த்துவார்கள், பிறகு உயர்த்துவார்கள் என்று நம்பி காத்திருந்ததுதான் மிச்சம். ஊதிய உயர்வு கேட்கும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாக்கு சொல்லி தட்டிக்கழிப்பதையே நிர்வாகிகள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது போதாதென்று, கறுப்பு வெள்ளி தினத்துக்குக் கூடுதலாக உழைக்கவேண்டும், டார்கெட்டை முடிக்கவேண்டும், தவறுகள் இருக்கக்கூடாது, விடுமுறைகள் எடுக்கக்கூடாது, ஒரு நொடி தாமதமாக வந்தாலும் நடடிவக்கை என்றெல்லாம் அடுக்கடுக்காக பல நிபந்தனைகளையும் தொழிலாளர்கள்மீது விதித்து அவர்களுடைய வேதனையை அதிகப்படுத்தியிருக்கிறது அமேசான்.

இந்த வெள்ளி மட்டுமல்ல எங்களுக்கு எல்லா நாள்களுமே கறுப்பு தினங்கள்தான் என்று வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைக்குத் திரும்பமாட்டோம் என்று அறிவித்து வீதியில் திரண்டுவிட்டார்கள். மலையளவு லாபம் சம்பாதித்து, உலகமெங்கும் கிளைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் அமேசான், அதன் வெற்றிக்காக உழைப்பைச் செலுத்தும் எங்களை மட்டும்தொடர்ந்து புறக்கணித்துவருவது சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.

உலகெங்கும் தொழிலை பரப்புவதற்கு தகவல் தொழில்நுட்பம் உதவலாம். ஆனால், அதுவே உழைப்பாளிக்கு மாற்றாக முடியாது. தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே உழைப்பு இருந்திருக்கிறது. உழைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பு திடமானது, மறுக்கமுடியாதது. இதை அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் உணரப்போவதில்லை. ஆனாலும், அதை உணர்த்தவேண்டியது நம் கடமை. வேலைநிறுத்தப் போராட்டத்தால் தான் தொழிலாளர்களுடைய உரிமையை நிலைநாட்ட முடியும் என்பதை உலக முதலாளிகள் மீண்டும், மீண்டும் சொல்லித்தருகின்றனர்.

– மருதன்
புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

சோடாபுட்டி ஜீயர் புராணம் | டீசர்

344

சோடாபுட்டி ஜீயர் புராணம் – டீசர்

இப்படியாக…
சடகோப சோடாபாட்டில் ஜீயர்
டெட் லைன் பிக்ஸ் பண்ணிருக்கேர்

கெடு வச்சார்னு மொட்டையா சொல்லாதீங்கோ
எதுக்கு கெடு வச்சார்?
அதைச் சொல்லுங்கோ

அன்புச்செல்வன் வட்டிக்கு கெடு வப்பேர்
ஐடி யிலே ரிலீஸ் டேட்டுக்கு கெடு வப்பாள்

ஐயர்வாள் எதுக்கு கெடு வச்சார்
அதச்சொல்லுங்கோ

அவர் ஐயர்வாள் இல்லடா ஜீயர்வாள்
ஐ க்கும் ஜிக்கும் வித்தியாசம் தெரியாத அபிஷ்டு

நேக்கு எல்லாம் ஜிலேபி மாதிரிதான் தெரியரது
நீங்க ஜீயர்னா என்னன்னு சொல்லுங்கோ

ஆடு மேய்க்கிறவன் ஆயர்
டீ ஆத்தறவன் நாயர்
இடுப்புக்கு கீழே போடறது லோயர்
லோயர்ல இருக்கிற கோமணத்தை குச்சியில கட்றவர் ஜீயர்

 

ம.க.இ.க கலைக்குழுவின் சோடாபுட்டி ஜீயர் புராணம்…….. விரைவில்…………
பாருங்கள்! பகிருங்கள்!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com

நீதிமன்றமா இராணுவ முகாமா ? நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு) – தோழர் ராஜு உரை – வீடியோ

0

“ஜனநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ! என்ற தலைப்பின் கீழ் சென்னையில் 21.01.2018 அன்று மக்கள் அதிகாரத்தின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இதன் முந்தைய பாகம் “ஜனநாயகத்திற்கு பேராபத்து” மக்கள் அதிகாரம் அரங்கக்கூட்டம் !

நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பாலன் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“நீதித்துறையிலும், நிர்வாக துறையிலும் பாசிசம் கோலோச்சுகிறது. பாசிசத்தால் பன்சாரே, கல்பூர்கி, தபோல்கர், கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டார்கள். நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கும், லோயா வழக்கிற்கும் சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது.

வழக்கறிஞர் பாலன்

2005, நவம்பர் 26, குஜராத்தில் சொராபுதின் சேக் என்பவர் IPS உயரதிகாரிகளால் கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்த அன்றே அவருடைய மனைவி கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். இது நிர்வாக துறையில் பாசிசத்தின் ஊடுருவல்.

குஜராத்தில் அமித்ஷா, மோடி உள்ளிட்டோர் மீது ஒரு பொதுநல வழக்கு போடப்படகிறது. நீதிபதி ஜெயின் பாட்டேல் முன் இந்த வழக்கு வருகிறது. அவர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார். உடனே அவரை இடமாற்றம் செய்கிறார்கள். இது தான் பாசிச தன்மை நீதித்துறையில் ஊடுருவல்.

குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு வழக்கு மாற்றப்படுகிறது. அங்கு ‘உத்பட்’ என்ற நீதிபதி முன்னால் வழக்கு வருகிறது, அவர் அமித்ஷாவை வழக்கில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடுகிறார். உடனே அவரும் இடமாற்றம் செய்யப்படுகிறார். அதற்பின் தான் லோயா வருகிறார். அவருக்கு பல வகையில் மிரட்டல் விடப்படுகிறது.

பணம் வாங்கி கொள், இல்லையென்றால் செத்துவிடு என்று போனில் குறுஞ்செய்திகள் வருகிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார். தந்தையிடம் இந்த விசயங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். நாக்பூருக்கு திருமணத்திற்கு சென்ற அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன.

அவர் செய்த குற்றம் என்ன? அவர் நேர்மையானவர் என்பது தான். அவர் இறந்த பிறகு கோசவி என்று ஒரு நீதிபதி அந்த வழக்கை விசாரிக்கிறார். இரண்டு நாளில் 10,000 பக்கங்களை கொண்ட சி.பி.ஐ ஆவணங்களை படித்து (!), வழக்கினை தள்ளுபடி செய்கிறார். அமித்ஷா குற்றமற்றவர் என்று நீக்கப்படுகிறார். இந்த வழக்கை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் போடப்படுகிறது. தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்தவர் இருந்தார். அவர் அமித்ஷாவிற்கு சார்பாக தீர்ப்பு எழுதுகிறார். வெகுமதியாக கேரளாவின் கவர்னராகிறார். இது எல்லோருக்கும் தெரியும்.

லோயா மரணம் சந்தேகத்திற்கு உரியது என்று ஒரு பொது நல வழக்கு மும்பை நீதிமன்றத்தில், மும்பை வழக்கறிஞர்கள் போடுகிறார்கள். மும்பை நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்து கொள்கிறது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே அதற்கு இணையான ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் போடப்படுகிறது. தலைமை நீதிபதி மரபை மீறி 10 வது கோர்ட்க்கு வருகிறது. இந்த நான்கு நீதிபதிகள், தலைமை நீதிபதியை சந்திக்கிறார்கள். அதன் பிறகு தான் பத்திரிக்கையை சந்தித்து பேசுகிறார்கள். ஜனநாயகம் பேராபத்தில் இருக்கிறது என்கிறார்கள். மக்கள் முன்பு வைக்கிறார்கள்.

குஜராத்தில் ஹரேன் பாண்டியா? என்பவர் மோடி தான் குஜராத் படுகொலைக்கு காரணம் என்று கூறியதற்காக கொல்லப்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்த அவருடைய மனைவி மோடி தான் தன்னுடைய கணவரை கொன்றதாக கூறுகிறார். ஆனால் பல வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை.

இங்கு நடக்கும் நிகழ்வுகள் எதை காட்டுகிறது என்றால், இந்த நாட்டில் நீதி மறுக்கப்படுகிறது, வியாபாரமாக்கப்படுகிறது. நீதி தாமதமாக்கப்படுகிறது, பாசிசம் நெருங்குகிறது.” என தனது உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“நான்கு நீதிபதிகளும் நம்மை விவாதிக்க சொல்லியிருக்கிறார்கள் அதற்காக இந்த கூட்டம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்து விடுமோ என்று அஞ்சி தான் ஊடங்கள் இதை பற்றி பேச மறுக்கிறார்கள். அரங்கில் உள்ளவர்களுக்கு நீதிமன்றத்தின் மீது மயக்கமோ, காதலோ இருக்காது என்றே நினைக்கிறேன்.

மேலும் சமீபத்தில் செவிலியர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம் என எல்லா போராட்டங்களிலும், நீதிமன்றம் நீங்கள் முதலாளிகளுடன் பேசி கொள்ளுங்கள் என்று ஒதுங்கி நிற்காமல், மக்களுக்கு எதிராக பேசியது. இது என்ன ஜனநாயகம்? மக்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் நீதிமன்றத்திற்கும், ஜனநாயகத்திற்கும் சம்பந்தமே இல்லை. ராணுவ முகாம் போல இருப்பது நீதிமன்றம் என்று எப்படி சொல்ல முடியும், ராணுவம் போகும் வரை, மக்கள் சுலபமாக வந்து போகும் வரை ஜனநாயக அமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கைகள் கொடுமையானது.

மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. சி.பி.ஐ மீது நம்பிக்கை இல்லை. வருமான வரித்துறையின் மீது நம்பிக்கை இல்லை. ஏன்னென்றால் பிடிப்பட்ட பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இப்போது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் பொய்த்து வருகிறது.

நான்கு நீதிபதிகள் வெளியில் வந்து பேட்டியளித்தது ஒரு அசாதாரண நிகழ்ச்சி. அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஏழு பக்க கடித்ததை வெளியிட்டுயிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். ஜனநாயகத்திற்கு பேராபத்து என்று கூறியிருக்கின்றனர்.

மோடி அரசு வந்த பிறகு நீதிபதிகள் நியமனம் என்பது முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. சட்ட நாள் தினத்தில், வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது, அதில் பேசிய பிரதம மந்திரி, நீதிமன்றம் அவர்கள் எல்லைக்குள் செயல்பட வேண்டும், பொதுநல வழக்கு என்ற பெயரில், ஆட்சி செய்ய விரும்புகிறார்கள் என்று வெளிப்படையாக சொல்கிறார்.

1975 -ல் இந்திரகாந்தி அம்மையார் அவசரகால நிலையை அறிவித்தார், அப்போது ‘மிசா’ சட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்களை, எந்தவித விசாரணையுமின்றி சிறையில் வைத்தார்கள். அதன் பிறகு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஜெயபிரகாஷ் நாராயணன் மீது போட்ட வழக்கு கூட விசாரிக்க முடியாது என்றார்கள். இரண்டு நீதிபதிகள் பல ஆண்டுகள் பயத்தில் தான் அப்படி நடந்து கொண்டோம் என மன்னிப்பு கேட்டனர். அது போல 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மக்கள் எங்கள் மீது குற்றம் சொல்ல கூடாது என்பதற்காகவே நாங்கள் இப்போது வெளியில் வந்து பேசுகிறோம் என நான்கு நீதிபதிகளும் கூறியிருக்கின்றனர்.

ஜெயலலிதா இறந்ததால் ஜெயலலிதாவிற்கு குமாரசாமி தீர்ப்பு, சசிகலாவிற்கு குன்ஹா தீர்ப்பு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. அதனால் தான் ஜெயலலிதா படம் எல்லா இடங்களிலும் தொங்கி கொண்டிருக்கிறது. இது ஒரு கேலிக்கூத்து.

ஜனநாயக வெளி என்பது குறைந்து விட்டது. பிரகாஷ் ராஜ் சொல்வதை போல, கொலையை கொண்டாடுகிறார்கள், கொண்டாடுபவர்கள் மோடியை பின்பற்றுகிறார்கள் என்றார். இது தான் மிகவும் ஆபத்தானது. ஜனநாயகம் நெறிக்கப்படுகிறது. இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும்.” என தனது உரையில் கூறியமர்ந்தார்.

இறுதியில் தொகுப்பாக மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ பேசுகையில்; “தேர்தல் ஆணையம் நடுநிலையானது, மத்திய, மாநில தேர்தல் ஆணையம் எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் இருக்கிறார்கள், இனி நேர்மையாக தேர்தல் நடக்கும், என்றார்கள்.

இந்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளாக இருப்பவர்கள் யார்? இவர்கள் தான் கடந்த நாட்களில் நம்மிடம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ, கலெக்டர், மாநகராட்சி ஆணையர்கள். இவர்கள் தான் இப்போது தேர்தல் அதிகாரிகளாக பேட்ஜை மாட்டி கொண்டு நிற்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பே பால் கூடை, காய்கறி கூடையை சோதிக்கும் இவர்கள், தேர்தல் அன்று பணம் கொடுப்பதை தெரிவிக்க போன் செய்தால் யாரும் எடுக்க மாட்டார்கள்.

தேர்தல் ஆணையம் என்பது தன்னளவில் நேர்மையாக தேர்தலை நடத்த முடியாமல் தோற்று விட்டது. அதுவே நிரூபித்துவிட்டது. யாரும் இதை மறுக்க முடியாது.

அடுத்தது ரிசர்வ் வங்கி; மோடி அரசாங்கம் யாருக்கும் தெரிவிக்காமலேயே இரவோடு இரவாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்துவிட்டது என்றார்கள். நடுநிலையானது, தனியமைப்பு என்பதெல்லாம் பாதுகாக்க முடியாமல் காலாவதியாகிவிட்டது.

மற்ற இடங்களில் பிரச்சனையென்றால் நீதிமன்றத்திற்கு போகலாம், நீதிமன்றத்திலேயே பிரச்சனையென்றால் எங்கு போவது. நீதித்துறையே சிக்கலில் உள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கு, ஆதார் வழக்கு போன்ற முக்கிய வழக்குகள் நீதிமன்றத்தில் வருகின்றன. எச். ராஜா போன்றோரை நாம் விமர்சிக்கிறோம். அவரை போன்றோரை நீதிபதிகளாக நியமித்து விட்டால், கொள்ளைபுறமாக எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

நீதிமன்றத்திற்குள்ளேயே தீர்க்க முடியும் என்று நினைத்திருந்தால், நீதிமன்றத்திற்கு வெளியே நீதிபதிகள், எங்களுக்கு வேறு வழியே இல்லை என்று ஏன் கூறினார்கள். ஆகவே தனிப்பட்ட முறையில், நீதித்துறையால் ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை தோல்வியடைந்துவிட்டது.
மக்கள் போராட்டம் தான் வெற்றியை சாதிக்கும்.

மக்களுடைய ஜனநாயகம் என்பது, நீதிபதிகள் தேர்வும், தீர்ப்பும், நடவடிக்கையும், பெரும்பான்மை மக்களின் கண்கானிப்பிற்கு உட்பட்டதாக, அவர்களை விமர்சனம் செய்ய வாய்ப்புள்ளதாக மாற்றப்படும் போது தான் ஜனநாயகம் இந்த நீதித்துறையில் பாதுகாக்கப்படும். ஆனால் இந்த அமைப்பு முறையில் இது சாத்தியமில்லை.

மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் நீதித்துறையில் இருக்கும் போது தான் உண்மையாக ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும். அனிதா, உச்சநீதிமன்றம் வரை சென்று, வேறு வழியில்லை என்று நினைத்ததால் தான் தற்கொலை செய்தார். நான்கு நீதிபதிகளிடம் கடைசி நிமிடம் வரை போராடி விட்டு வேறு வழியில்லை என்பதால் தான் வெளியே வந்தார்கள்.

நடுநிலையாளர்கள், நீதித்துறையும், நிர்வாகத்துறையும் தனித்தனியாக செயல்பட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது சாத்தியமா? என்றால் இல்லை. காவிரி பிரச்சனையில் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த முடியுமா? பத்மாவதி படத்தை இவர்கள் அனுமதியில்லாமல் வெளியிட முடியுமா? யார் துப்பாக்கி வைத்திருக்கிறார்களோ? அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கான கொள்கைகையையும், இந்துவத்தையும் அமுல்படுத்த இந்த குறைந்தபட்ச ஜனநாயகமும் தடையாக இருக்கிறது. அதனால் தான் நீதித்துறை, பத்திரிக்கைத்துறை, கல்வித்துறை என எல்லாத்துறையையும் பாசிசமாக மாற்றுகிறார்கள். அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது.

மார்க்கண்டேய கட்ஜூ கூறியதை போல ஒட்டுமொத்த கட்டமைப்பும் நெருக்கடியில் இருக்கிறது. இதை இனி சரி செய்ய முடியாது. புரட்சி தான் வரனும் என்றார். அது தான் தீர்வு.” என தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியாக மக்கள் அதிகாரத்தின், சென்னை மண்டல் ஒருங்கிணைப்பாளர், தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் நன்றியுறை ஆற்றினார்.

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம், தொடர்புக்கு : 91768 01656,
E-mail: ppchennaimu@gmail.com 

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !

வெள்ளைக்காரன் – அ. முத்துலிங்கம்

சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ‘மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன்.

சிண்டரெல்லாவைச் சொல்லலாம், அல்லது ராசகுமாரனை சொல்லலாம். அல்லது தேவதையை சொல்லலாம். ஏன் சிண்டரெல்லாவின் இரண்டு சகோதரிகளைக் கூடச் சொல்லியிருக்கலாம். இது புதுவிதமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்தக் குழந்தை சொன்னது சரிதான். மணிக்கூடு இல்லாவிட்டால் கதையே இல்லையே. அதுதானே முடிச்சு. 12 மணி அடிக்குமுன்னர் சிண்டரெல்லா வீடு திரும்பவேண்டும். இதுதான் தேவதையின் கட்டளை. ஆகவே கதையில் முக்கியமானது மணிக்கூடுதான்.

அவர் குறிப்பிட்ட உணவகத்துக்கு நான் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே மழை கொட்டியது. பனியும் கொட்டியது. ஒன்று மாறி ஒன்று பெய்தது. மழைக்காக ஆடை அணிவதா அல்லது குளிருக்காக ஆடை அணிவதா? குளிருக்கு அணிந்த மேலங்கி ஓர் அளவுக்கு மழையையும் தடுத்தது. உடல் நடுங்க நான் உணவகத்துக்குள் நுழைந்தேன்.

நான் முதன்முதல் அவரை பார்க்கிறேன். பக்கவாட்டில் பார்க்கக்கூடிய விதமாக அவர் ஒரு மேசையில் உட்கார்ந்திருக்கிறார். வெள்ளை நிறம். மெல்லிய தோற்றம். வயது முப்பத்தைந்து மதிக்கலாம். கட்டம்போட்ட சட்டை. கையில்லாத கறுப்பு ஸ்வெட்டர். சிரித்தபடியே இருக்கும் வாய். கழுத்து சால்வையால் தன்னைச் சுற்றியிருந்தார்.

அவர் வெள்ளைக்காரன் என்றாலும் தமிழிலே அளவற்ற பற்றுக் கொண்டவர். தமிழை முறையாகக் கற்றவர். அதன்மேல் காதலானவர் என்றே சொல்லலாம். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒருவர் 19 வயது மட்டும் தமிழ் என்று ஒரு மொழி இருக்கிறது என்பதை அறியாதவர். அவர் பெயர் ஜொனாதன் ரிப்ளி. எப்படி தமிழால் ஈர்க்கப்பட்டார். என அவரிடமே கேட்டேன்.

ஒன்றுமே யோசிக்காமல் சட்டென்று ‘அதன் இனிமைதான்’’ என்றார். சிறுமி ‘மணிக்கூடுதான்’ என்று சொன்னதுபோல.

‘இனிமையா?’ நான் எதிர்பார்க்காத பதில். பாரதியார் கூட ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடினார். அவர் அப்படித்தானே பாடுவார். தமிழின் மகாகவியல்லவா?

எப்படி இனிமையானது என்று சொல்கிறீர்கள்?

‘நான் ஒஹாயாவிலுள்ள ஒபர்லின் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் போலா ரிச்மன் (Paula Richman) படிப்பித்த வகுப்பபில் போய் அமர்ந்தேன். அவர் தென்னாசிய பிராந்திய இலக்கியங்களில் தனித்துறை வல்லுநர். அவருடைய சிறப்புக் கல்வி ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள். சும்மா பார்க்கலாம் என்றுதான் போனேன். என் வாழ்கையே அடியோடு மாறப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அவர் பேசியதை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. அவர் ஒரு பாடலைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

அந்த ஓசை நயமும் பாடலின் இனிமையும் காதுகளில் விழுந்தது. எதிரில் வந்த பல நாட்கள் அந்த இனிமை காதுகளில் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தது. பல மாதங்களுக்குப் பின்னர்தான் அது நம்மாழ்வார் திருவாய்மொழி 1.1.4 என்று அறிந்தேன்.

அவன், இவன், உவன். அவள் இவள் உவள் எவள். ஓர் எழுத்தை மட்டும் மாற்றும்போது முழுக்கருத்தும் எப்படி மாறிவிடுகிறது. ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது. அந்தக் கணமே முடிவுசெய்தேன் நான் தமிழ்தான் படிக்கவேண்டும் என்று.

தமிழைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்தீர்களா?

இல்லையே. எனக்கு குஜராத்தி நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் போயிருக்கிறேன். அவர்கள் வீடுகளில் உணவருந்தியிருக்கிறேன். கொண்டாட்டங்களில், நடனங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருக்கிறேன். ஆனால் குஜராத்தி மொழி படிக்கவேண்டும் என்றோ, இந்தி மொழி படிக்கவேண்டுமென்றோ எனக்கு தோன்றவே இல்லை. ஆனால் தமிழ் படிக்கவேண்டும் என்ற வெறி வந்துவிட்டது.

இந்தியாவுக்குப் போய் அங்கே படிக்கவேண்டும் என்று திட்டமெல்லாம் போடத் துவங்கினேன். 1997 -ல் ஒபர்லின் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றேன். அங்கே படிக்கும்போது நாலு வருடம் சீன மொழியும் கற்றேன். உதவிப்பணத்துக்கான நேர்காணலில் என் மனம் முழுக்க தமிழ் நிரம்பியிருந்ததை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். அப்படித்தான் சீனா போக இருந்த நான் மதுரைக்குப் போனேன்.

பெற்றோர்களிடம் உங்கள் முடிவை சொன்னீர்களா?

சொன்னேன். அவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். அவர்கள் என்னைச் சுற்றி கனவுகள் கட்டி வைத்திருந்தார்கள். அவை எல்லாம் பொலபொலவென்று உடைந்தன. ‘தமிழை படித்துவிட்டு என்ன செய்வாய்? ஏன் இத்தாலிய மொழி படிக்கலாமே? பிரெஞ்சு மொழி படிக்கலாமே? ஸ்பானிஷ் படிக்கலாமே?. இது என்ன தமிழ் மொழி.? அதை படிக்க இந்தியாவுக்கு போகவேண்டுமா? என்று மிகவும் வருந்தினார்கள். என் பெற்றோர் அப்படி வருந்தி முன்னர் நான் பார்த்தது கிடையாது.

அதன் பின்னர்தான் தமிழ்நாடு போனீர்களா?

நான் மதுரைக்குப் போய் அங்கே இரண்டு வருடம் படித்தேன். ஒபர்லின் கல்லூரியில் படிப்பு முடிந்த பின்னர் நான் உடனேயே மதுரை செல்லவில்லை. விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் 10 வாரங்கள் அதி தீவிரமாகத் தமிழ் கற்றுக்கொண்டேன். தென்னாசிய கோடைகால மொழிப் பயிற்சி திட்டத்தின் கீழ் சாமுவேல் சுத்தானந்தா என்பவரிடம் தமிழ் படித்தேன். தமிழ் கற்பிப்பதில் அவர் அபார திறமையுடையவர். மதுரைக்கு என்னைத் தயார்செய்த பின்னர் அங்கே போனேன்.

இரண்டு வருடம் தொடர்ந்து அங்கே இருக்கவேண்டும். இடையில் அமெரிக்கா திரும்பக்கூடாது என்பதுதான் ஒப்பந்தம். அங்கே ஜீவன ஜோதி அமைப்பு ஏற்பாடு செய்த வகையில் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பெரியவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தேன். என் பாட்டியும் பெற்றோரும் என்னைப்பற்றி தினமும் உருகி உருகி கவலைப் பட்டார்கள். நானோ தண்ணீரில் விழுந்த மீன்குஞ்சுபோல அகமகிழ்ந்து தமிழ்நாட்டில் சுற்றினேன்.

என்னிடம் ஸ்கூட்டர் இருந்தது. அதிலே கடைகள் ஹொட்டல்கள் கோயில்கள் கொண்டாட்டங்கள் என்று ஒரு நிமிடமும் வீணாக்காமல் அலைந்தேன். தமிழில் பேசினேன். மக்கள் அன்பாகவும் ஆதரவாகவும் சொல்லித்தந்தார்கள். அமெரிக்க படிப்பறையில் படித்ததிலும் பார்க்க வீதிகளில் நிறையக் கற்றுக்கொண்டேன். நல்ல நண்பர்களைச் சம்பாதித்தேன். நான் தமிழுக்கு எவ்வளவு கொடுத்தேனோ அதிலும் பார்க்க கூடுதலாக தமிழ் எனக்குக் கொடுத்தது. இரண்டு வருடம் முடிந்த பின்னரும் எனக்கு அமெரிக்கா திரும்ப மனம் வரவில்லை. ஆனாலும் திரும்பவேண்டி நேர்ந்தது.

மீண்டும் தமிழ்நாடு போனீர்களா?

அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் நோர்மன் கட்லர் என்பவரின் வழிகாட்டலில் தென்னாசிய மொழிகளில் முதுநிலைப் பட்டம் பெற்றேன். இந்தச் சமயம் மதுரையில் இரண்டு வருடங்கள் முனைவர் எஸ். பாரதியிடம் தமிழ் கற்றுக்கொண்டேன். எல்லாமாக நாலு வருடங்கள். அதன் பின்னரும்கூட தமிழ்நாடு போய் கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி , தேவாரங்கள் என நானாகவே கற்றுக்கொண்டேன்.

தமிழ் படிப்பதில் என்ன சவால் இருந்தது?

எழுத்து தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்தான் நான் சந்தித்த முதல் சவால். ஆரம்பத்தில் இருந்து இரண்டையுமே கற்றுக்கொண்டேன். இன்றும் யாராவது வேகமாகத் தமிழ் பேசினால் எனக்கு அதை புரிந்துகொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்தபோது எனக்கு தினமும் மக்களுடன் பேசுவதிலும், புதிதாக கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் இருந்தது. மக்கள் உற்சாகப்படுத்தினர். இங்கே அமெரிக்காவில் அது கிடையாது. தமிழ் பேசிப்பழகும் வாய்ப்புகள் வெகு குறைவு.

தமிழ்நாடு மக்களைப்பற்றி?

எனக்கு ஏதோ விதத்தில் ஒரு முன்தொடர்பு இருந்தது. நான் அந்நியமாகவே உணரவில்லை. என்னை வெள்ளைக்காரன் என்று அழைத்தார்கள். ஆரம்பத்தில் ஒருமாதிரி இருந்தது, ஆனால் பழகிவிட்டது. அவர்களின் உண்மையான அன்பை ஒருநாள் உணர்ந்தேன். மதுரை வீதியில் நடந்தபோது நான் கால் தடுக்கி விழுந்துவிட்டேன். அடுத்த நிமிடம் என்னைச் சுற்றி பத்துப்பேர் நின்றார்கள். தூக்கிவிட்டார்கள். அடிப்பட்டதா என்று என்னைத் தடவித்தடவிப் பார்த்தார்கள். அத்தனை கரிசனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

அமெரிக்காவில் இப்படி நடந்திருந்தால் கிட்டவே அணுக மாட்டார்கள். அவசர உதவி வாகனத்துக்கு தொலைபேசி போயிருக்கும். நான் வெள்ளைக்காரனாக இருந்ததால் அப்படி நடந்ததா என்றும் யோசித்திருக்கிறேன். அப்படி இல்லை. மதுரை மக்கள் அப்படித்தான். கருணை நிறைந்தவர்கள்.

தமிழ்நாட்டில் 4 வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். அதன் பின்னரும் பலதடவை அங்கே போய் வந்திருக்கிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்திய சம்பவம் ஏதாவது?

ஆச்சரியம் அல்ல அதிர்ச்சி என்று சொல்லலாம். தமிழ்நாட்டு கல்வித்திட்டத்தில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் கற்காமலே ஆங்கிலத்தில் கல்வி கற்று பட்டம் பெற்று வேலைதேடி சம்பாதித்து வாழலாம். அவர் தமிழ் கற்கவேண்டிய அவசியமே கிடையாது. சிலர் ஆங்கிலத்தை முதல் பாடமாகவும் பிரெஞ்சு மொழியை இரண்டாம் பாடமாகவும் எடுக்கிறார்கள். இரண்டாம் பாடமாகக்கூட தமிழ் இல்லை.

அதுவும் தமிழ் நாட்டில். கல்லூரிகளில் ஆங்கில வகுப்புகளுக்கு போயிருக்கிறேன். மேல்தட்டு மக்கள் அழகாக உடையுடுத்தி படிக்க வருகிறார்கள். வகுப்புகள் பெரிசாகவும் அழகாகவும் இருக்கின்றன. பேராசிரியர்கள் மேல்நாட்டு முறையில் உடை தரித்திருக்கிறார்கள். மாணவர்கள் மரியாதையுடன் நடக்கிறார்கள். அழுக்கான சிறிய வகுப்பறையில் தமிழ் பாடம் நடக்கிறது. மாணவர்கள் அநேகமாக ஏழைகளாகவே காணப்படுகிறார்கள். எல்லோரும் மருத்துவம், பொறியியல், சட்டம், கணக்காளர் இப்படி நல்ல வருமானம் தரும் படிப்பையே விரும்புகிறார்கள். அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் ஆகக்குறைவாக இருந்தால் வேறு ஒன்றும் படிக்க இயலாத நிலையில் தமிழை வேண்டா வெறுப்பாக எடுக்கிறார்கள். அதுதான் ஆச்சரியம்.

இது மலையாள மாநிலத்திலோ கன்னட மாநிலத்திலோ அல்லது தெலுங்கு மாநிலத்திலோ நடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் நடப்பது தமிழ் நாட்டில். அனைவரும் ஆங்கில மோகம் பிடித்து அலைகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழுக்கு இந்த நிலை என்றால் நாம் தமிழை வளர்க்க எந்த நாட்டுக்கு போவது.

ஈழத்து இலக்கியக்காரர்களுடன் உங்களுக்கு ஏதாவது பரிச்சயம் உள்ளதா?

ஒரே ஒருவரைச் சந்தித்திருக்கிறேன். வாசுகி கணேசானந்தன். Love Marriage என்ற நாவல் எழுதியவர்; என்னுடைய நண்பர். அவரைத் தவிர இப்பொழுது உங்களைச் சந்தித்திருக்கிறேன். இனிமேல்தான் நான் ஈழத்து இலக்கியம் படிக்கவேண்டும். என்னிடம் ஒன்றிரண்டு ஈழத்து மாணவர்கள் படித்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் தமிழ் என்னை ஈர்க்கும். ‘ஓம், ஓமோம், ஓ, ஓ’ என்று ஒருவர் பேசினால் அவர் ஈழத்தமிழர் என்று எனக்கு புரிந்துபோகும். எழுத்துத் தமிழுக்கு மிக அண்மையாக அவர்கள் பேச்சுத் தமிழ் இருக்கும். எழுத்திலே ‘வந்து கொண்டிருக்கிறோம்’ என்று எழுதினால் அவர்கள் பேச்சுத் தமிழிலும் ‘வந்து கொண்டிருக்கிறோம்’ என்றே இருக்கும்

நீங்கள் பொஸ்டனில் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிந்தேனே. அது பற்றிச் சொல்லுங்கள்.

அதற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. அதன் பெயர் Community Cooks. அதிலே 700 தொண்டர்கள் வேலை செய்கிறோம். வீடு இல்லாத ஏழைகள், உணவுக்கு வழியில்லாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம். சமையல் சாமான்களையும் எங்கள் நேரத்தையும் இலவசமாகத் தருவதுதான் தொண்டு… நான் மாதத்தில் ஒருநாள் அங்கேபோய் சமையல் செய்வேன். மாதம் 3500 பேர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவோம்.

தமிழ்நாட்டு உணவு சமைப்பீர்களா?

வீட்டிலே மட்டும் நான் தமிழ்நாட்டு உணவு சமைத்து உண்பேன். சோறு, சாம்பார், ரசம், வறுவல் என்று சமைக்கத் தெரியும். நண்பர்களும் வந்து சாப்பிடுவார்கள்.. இன்னும் புதுவிதமான சமையல் பழகிக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் ஹார்வார்டில் தமிழ் படிப்பிக்கிறீர்கள் அல்லவா? அதுபற்றி சொல்லுங்கள்?

நான் ஹார்வார்டில் Preceptor ஆக இருக்கிறேன். போதனாசிரியர் என்று சொல்லலாம். இங்கே மூன்று தரநிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. முதலாவது நிலையில் எழுத்துக்கள் சொல்லிக் கொடுக்கிறோம். அது இரண்டாம் மூன்றாம் வகுப்பு மட்டும் போகும். அடுத்த நிலை 10 -ம் வகுப்பு மட்டும் என்றும் வைத்துக்கொள்ளுவோம். மூன்றாவது நிலையில் திருக்குறள், கம்பராமாயணம் சங்க இலக்கியங்கள் என மாணவர் விருப்பப்படி கற்கை நெறியை அமைத்துக்கொள்கிறோம்.

தமிழிலே உள்ள முக்கியமான பிரச்சினை எழுத்து தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருப்பது. எனக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது. ஆகவே பாடம் சொல்லிக்கொடுக்கும் போதே எழுத்தில் இப்படி வரும் ஆனால் பேசும்போது இப்படி வரும் என்று சொல்லிக் கொடுத்துவிடுகிறேன்.

மாணவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்குமே?

கிடையாது. மாணவர்கள் கப்பென்று பிடித்துவிடுகிறார்கள். எனக்கும் கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் அத்தனை இலகுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ‘உன்கூட வாழவேண்டும் என ஆசைப்படுகிறேன்..’ இதைப் பேச்சுத் தமிழில் ‘உங்கூட வாழணும்னு ஆசைப்படுறன்’ என்றும் ‘கண்டிப்பாக நாளை வருகிறேன்’ என்பது ‘கண்டிப்பா நாளை வாறேன்’ என்றும் குழப்பம் இல்லாமல் அவர்கள் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்..

நவீன இலக்கியம் சொல்லிக்கொடுக்கிறீர்களா? போதிய புத்தகங்கள் உள்ளனவா?

இப்பொழுதுதான் புத்தகங்கள் கொஞ்சம் கிடைத்திருக்கின்றன. சிறிது சிறிதாக ஒரு தமிழ் நூலகத்தை வளர்த்தெடுப்போம்… புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி. அம்பை போன்ற எழுத்தாளர்கள் மாணவர்களுக்கு பரிச்சயம். புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ சிறுகதை நிரம்பவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஹார்வார்டில் தமிழுக்கு முக்கியத்துவம் உள்ளதா?

தமிழ் தான் ஆதிச் செம்மொழியாக இன்றும் வாழும் ஒரு மொழி. அதை பாதுகாக்க வேண்டியது கடமை. ஹார்வார்ட் போன்ற முதன்மையான பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை மட்டும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை. சிந்திக்கவும் ஆராயவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மொழியின் நீண்ட சரித்திரத்தில் தமிழ் இன்று கடைசிப் படியில் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். சரித்திரத்தில் முன்னர் எப்போதும் தமிழ் இப்படியான நிலையை அடைந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட தமிழ் இவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டதில்லை. ஹார்வார்டில் நிறைய மொழிகள் கற்றுக் கொடுக்கப் படுகின்றன. ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அழிந்துபோன நிலையிலுள்ள மொழிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகளைக் கற்க நிறைய மாணவர்கள் வருகிறார்கள். இன்றும் வாழும் செம்மொழியான தமிழுக்கு அதற்கான மதிப்பு கிடையாது. மற்றைய மொழிகளுக்கு மாணவர்கள் திரள் திரளாக வருவதுபோல தமிழ் மொழிக்கும் வரவேண்டும்.

ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி?

அருமையான முயற்சி. நான் தற்போது ஹார்வார்டில் தமிழ் கற்பிப்பதால் தமிழ் இருக்கை கிடைப்பதால் என்ன நன்மைகள் கிட்டும் என்பதை சொல்லமுடியும். இங்கே கற்கும் மாணவர்களிடம் தமிழ்மீது நிறைய ஆர்வமிருப்பதை காணமுடிகிறது. அவர்களுடன் தினம் பழகும்போது அவர்களுடைய ஊக்கத்தையும் ஆர்வத்தையும் கண்டு வியக்கிறேன். முதல் வருடத்திலும் பார்க்க அடுத்த வருடத்தில் அதிக மாணவர்கள் தமிழ் படிக்க பதிவு செய்தது உற்சாகம் தரும் அறிகுறி.

நாங்கள் தமிழை ஆழமான படிப்புக்கும் தீவிரமான ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமானால் தமிழ் இருக்கை முக்கியமானதாக இருக்கிறது. இப்பொழுது காணப்படும் தமிழ் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் நாங்கள் மேலும் விரிவாக்கி பயன்படுத்தவேண்டும். பொருள்செறிவான இயங்கியல் தன்மையான ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்களின் ஊக்கமான வெளிப்பாடுகளுக்கும் ஹார்வார்ட் தமிழ் இருக்கை வடிகாலாக அமையும்.

அது மாத்திரமன்றி இங்கே நடக்கும் ஆராய்ச்சிகளும் முன்னெடுத்தல்களும் தமிழின் முக்கியத்துவத்தை உலகப்பரப்பில் நிலைநிறுத்தும். உண்மை என்னவென்றால் தமிழின் பெருமை பாதியளவுகூட வெளியே வரவில்லை. மற்றைய மொழிகளில் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை அலசும்போது இது தெரியவருகிறது. தமிழின் எதிர்காலத்துக்கு இங்கே ஓர் இருக்கை அமைவது முக்கியமானது.

****

ஜொனாதன் எழுந்து நின்றதும் நான் விடை பெற்றுக்கொண்டேன். வெளியே மழை நின்றுவிட்டது ஆனால் குளிர் அதிகமாகியிருந்தது. ஜொனாதன் போன்றவர்கள் தமிழினால் ஈர்க்கப்பட்டு அதைக் கற்க முன்வருகிறார்கள். தங்கள் வாழ்நாளையே தமிழுக்கு அர்ப்பணிக்கிறார்கள். என்ன அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது? பல செம்மொழிகள் இன்று இறந்துவிட்டன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழி இன்றும் வாழ்கிறது. அது இப்படியான தமிழ் பற்றாளர்களின் அர்ப்பணிப்பால்தான் என்பது நிச்சயமாகிறது.

நாளை ஜொனாதன் அவர் வகுப்பறைக்குள் தமிழ் கற்பிக்க நுழைவார். அங்கே ஏற்கனவே நடந்துகொண்டிருந்த ஒரு மொழி வகுப்பு அப்போது முடிவுக்கு வரும். நூற்றுக் கணக்கான மாணவர்கள் வெளியேறுவார்கள்.

ஜொனாதன் வகுப்பறைக்குள் நுழைவார். கரும்பலகையை அவருக்கு பரிச்சயமில்லாத எழுத்துக்கள். நிறைத்திருக்கும். உன்னிப்பாகப் பார்ப்பார். எப்போதோ இறந்துபோன ஒரு மொழியின் எழுத்துக்கள். அந்த எழுத்துக்களை அழித்து முடிக்க அவருக்கு இரண்டு நிமிடம் எடுக்கும். தன் மாணவருக்காக அவர் காத்திருப்பார். இரண்டு பேர் உள்ளே நுழைவார்கள்.

நன்றி :அ.முத்துலிங்கம்
முத்துலிங்கத்தின் இணைய தளம்

***

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:

லங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

இதுவரை வெளிவந்த நூல்கள் :

1. அக்கா – 1964
2. திகடசக்கரம் – 1995
3. வம்சவிருத்தி – 1996
4. வடக்கு வீதி – 1998
5. மகாராஜாவின் ரயில் வண்டி – 2001
6. அ.முத்துலிங்கம் கதைகள் – 2004
7. அங்கே இப்ப என்ன நேரம்? – 2005
8. வியத்தலும் இலமே – 2006
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – 2006
10. பூமியின் பாதி வயது – 2007
11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – 2008
12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் – ஒலிப்புத்தகம் – 2008
13. Inauspicious Times – 2008
14. அமெரிக்கக்காரி – 2009
15. அமெரிக்க உளவாளி – 2010
16. ஒன்றுக்கும் உதவாதவன் – 2011

 

பிரிகாட்டே ரோசே : இத்தாலியை உலுக்கிய இடதுசாரி கெரில்லா இயக்கம்

0

ழுபதுகளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் இயங்கின. பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் ஆதரவுத் தளம் கொண்டிருந்த இயக்கங்கள், அரசுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. இத்தாலியில் இருந்த இயக்கத்தின் பெயர் பிரிகாட்டே ரோசே (Brigate Rosse : செம் படைப் பிரிவு). 1970 ம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட இயக்கம் மாரியோ மொறேத்தி என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.

இத்தாலிய செம்படை தோன்றிய காரணத்தை புரிந்து கொள்வதற்கு, நாம் இத்தாலிய வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலேயே, இத்தாலிய கம்யூனிஸ்ட் போராளிகள் வட இத்தாலியின் பல பகுதிகளை சொந்தப் பலத்தில் விடுதலை செய்திருந்தனர். சிலநேரம், பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகள் வந்திரா விட்டால், அன்றே இத்தாலியும், அயல்நாடான யூகோஸ்லேவியா போன்று ஒரு சோஷலிச நாடாகி இருக்கும்.
அப்போது இலட்சக்கணக்கான துடிப்பான இளைஞர்கள் சோஷலிசப் புரட்சிக்குத் தயாராக இருந்த போதிலும், திருத்தல்வாதிகளாக மாறியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அதற்கு உடன்படவில்லை.இத்தாலி சோஷலிச நாடானால், நேட்டோ இராணுவம் படையெடுத்து புரட்சியை நசுக்கி விடும் என்று காரணம் கூறினார்கள். அன்றிலிருந்து, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி (PCI) அரசுக்கு ஆதரவாக முண்டுகொடுக்கும் திருத்தல்வாதப் பாதையை தேர்ந்தெடுத்தது.

உலகப்போருக்கு பிந்திய காலங்களில், குறிப்பாக ஐம்பதுகளுக்கு பின்னர் வளர்ந்து கொண்டிருந்த இத்தாலி பொருளாதாரம், எழுபதுகளில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டது. நாடு முழுவதும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. குறிப்பாக, படித்து முடித்த வாலிபர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள். படித்தாலும் வேலை கிடைக்காது என்ற விரக்தி காரணமாக பல மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தினார்கள். அத்தகைய சமூகப் பின்னணியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயார் படுத்துவது எப்படி என்று பலர் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இத்தாலி முழுவதும், மாணவர்கள் மத்தியில் மார்க்ஸ், லெனின் நூல்களைப் படிப்பதும், அதைப் பற்றி விவாதிப்பதும் பிரதானமான செயற்பாடானது. பல்கலைக்கழகங்களில் அடிக்கடி நடந்த மார்க்சிய வகுப்புகள், கூட்டங்களில் பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தான், ஆயுதமேந்திய கம்யூனிச இயக்கம் ஒன்றுக்கான ஆதரவுத் தளம் உருவானது.

திரிபுவாத இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் இணக்க அரசியலில் நம்பிக்கையிழந்த மாணவர்கள், புதிதாக ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பித்து ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதைப் பேச்சளவில் வைத்துக் கொள்ளாது நடைமுறையில் கொண்டு வர விரும்பினார்கள். அப்போது உருவாக்கப் பட்டது தான் பிரிகாட்டே ரோசே. அதற்கு நாடு முழுவதும் குறைந்தது ஆயிரம் உறுப்பினர்கள் இருந்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் இரகசியமாக இயங்கினார்கள்.

எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, இத்தாலியிலும் இடதுசாரி, வலதுசாரி வேற்றுமை, ஒரு கட்டத்தில் பகை முரண்பாடாக மாறி வன்முறை வடிவமெடுத்தது. ஆரம்பத்தில், வலதுசாரிகளான, (முசோலினியின் பாசிச கட்சியை பின்பற்றும் புதிய தலைமுறை) நவ- பாசிஸ்டுகள், இடதுசாரி மாணவர்களை தாக்குவதும், அவர்களது கூட்டங்கள், பேரணிகளை குழப்புவதும் நடந்து கொண்டிருந்தது. சிலநேரம், நவ- பாசிஸ்டுகள் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. 1980ம் ஆண்டு, போலோய்னா நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப் பட்ட சம்பவம் பாசிச வன்முறையின் உச்சம் எனலாம்.
தொடக்கத்தில் பாசிச வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்திய செம்படை இயக்கம், சில வருடங்களில் துணிகரமான தாக்குதல்கள் நடத்தும் அளவிற்கு வளர்ந்தது. தமது எதிராளிகளான பாசிஸ்டுகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றவர்கள், பிற்காலத்தில் அரசு இயந்திரத்தை ஆட்டிப் படைத்தனர்.

நேட்டோ கூட்டமைப்பின் பெயரில் இத்தாலியில் தளம் அமைத்திருந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர். ஒரு தடவை, அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரையும் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்தார்கள். இதனால், பிரிகாடே ரோசே இயக்கத்தை அழிக்கும் நோக்கில், சி.ஐ.ஏ., இத்தாலி அரசுடன் சேர்ந்து செயற்பட்டது.

அரசு அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் போன்றோரை கடத்திச் சென்று கப்பம் கேட்பதும், சுட்டுக் கொல்வதும் அதிகரித்தன. நிதித் தேவைக்காக வங்கிகளை கொள்ளையடித்தார்கள். அப்போது தடுக்க முயன்ற காவலர்களை சுட்டுக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. பத்து வருட போராட்டக் காலத்தில், 73 கொலைகள் நடந்துள்ளன.

இத்தாலி பிரதமர் ஆல்டோ மோரோ

16 மார்ச் 1978 ம் ஆண்டு, இத்தாலிய வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்த இத்தாலிப் பிரதமர் அல்டோ மோரோ, தலைநகரில் பட்டப் பகலில் கடத்திச் செல்லப் பட்டார். ரோம் நகரின் பிரதான வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த பிரதமரின் வாகனத்தை வழிமறித்த ஆயுதபாணிகள், மெய்ப்பாதுகாவலர்களை சுட்டுக் கொன்று விட்டு பிரதமரை கடத்திச் சென்றனர். தாக்குதல்தாரிகள் அலித்தாலியா விமான நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த படியால் யாரும் அவர்களை சந்தேகப் படவில்லை.

ஏற்கனவே, பிரிகாட்டே ரோசே வங்கிக் கொள்ளையடித்த பணத்தில் ஒரு வீட்டை வாங்கி மறைவிடமாக வைத்திருந்தனர். அந்தப் புதிய வீட்டில் தான் பிரதமர் பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். அவர் வாசிப்பதற்கு மார்க்ஸ், லெனின் நூல்கள் கொடுக்கப் பட்டன. அந்த வீட்டில், கடத்தியவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் தத்துவார்த்த வாதங்களும் நடந்தன. பிரதமரின் மார்க்சிய அறிவு அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எது எப்படியோ, பிரதமர் அல்டோ மோரோ தன்னைக் கடத்தியவர்களுடன் முரண்டு பிடிக்காமல் இணக்கமாக நடந்து கொண்டார். எப்படியும் ஒரு சில நாட்களில் தான் வெளியே வந்து விடுவேன் என்று நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், அரச மட்டத்தில் தனக்கெதிராக சதி நடக்கிறது என்ற விடயத்தை அன்று பிரதமர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரிகாடே ரோசே பிரதமரின் கடத்தலுக்கு உரிமை கோரினார்கள். il Messaggero பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், போட்டோகொப்பி இயந்திரத்தின் அருகில் ஒரு கடிதமும், அல்டோ மோரோவின் புகைப்படமும் இருப்பதாக அழைத்த குரல் கூறியது.

அந்த உரிமை கோரும் கடிதத்தில், “பிரதமர் மக்கள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி விசாரிக்கப் படுவார்” என்று எழுதப் பட்டிருந்தது. மேலும், அல்டோ மோரோவை விடுதலை செய்வதென்றால், சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் தமது இயக்க உறுப்பினர்களை, அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பணயக் கைதியான பிரதமர், தனது குடும்பத்தினருக்கும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கும் உருக்கமான கடிதங்கள் எழுதி அனுப்ப அனுமதிக்கப் பட்டார். குறைந்த பட்சம், குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக, அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும் என்று நம்பினார்கள்.

ஆனால், பிரிகாடே ரோசே எதிர்பார்த்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தன. “பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என்று அரசு ஒரேயடியாக மறுத்து விட்டது. அரசுடன் நல்லுறவு பேணிய, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அதையே எதிரொலித்தார். ஆளும் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர், தமது பிரதமர் தானே என்று கூட எந்த நெகிழ்வுப் போக்கையும் காட்டவில்லை.

அல்டோ மோரோ பணயக்கைதியாக தடுத்து வைக்கப் பட்டு ஐம்பது நாட்களாகியும் இத்தாலி அரசு எந்தவொரு சமரசத்திற்கும் வரவில்லை. எல்லோரும் தன்னை கைவிட்டு விட்டார்களே என்று பிரதமரும் தனது இறுதிக் கணங்களில் கலங்கி நின்றார். குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு கட்சி செவி சாய்க்கவில்லை.

இடையில் ஒரு தடவை, பிரதமர் கொல்லப் பட்டு விட்டார் என்று வேண்டுமென்றே ஒரு வதந்தியை பரப்பிப் பார்த்தனர். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் எதுவும் நடக்காது என்பது உறுதியானதும், 54 வது நாள் அல்டோ மோரோ சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது சடலம் வைக்கப் பட்டிருந்த கார், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காணப்பட்டது.

எதற்காக ஒரு பிரதமரை உயிரோடு விடுதலை செய்வதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? உண்மையில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்குள் கூட அவர் வேண்டாப் பொருளாகக் கருதப் பட்டார். அவர் கொல்லப் பட வேண்டும் என்று அதிகாரத்தில் இருந்தவர்கள் பலர் எதிர்பார்த்தனர். இத்தாலி அரசில் இருந்த தீவிர வலதுசாரிகளும், நேட்டோ இராணுவத் தலைமையும் அல்டோ மோரோ அகற்றப் படுவதை விரும்பினார்கள்.
என்ன காரணம்?

உண்மையில் அல்டோ மோரோ ஒரு நேர்மையான அரசியல்வாதி. பொருளாதாரப் பிரச்சினைகளால் சீரழிந்து கொண்டிருந்த நாட்டை காப்பாற்றும் நோக்கில், கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைக்க முன்வந்தார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தனது கட்சிக்குள் இருந்த கடும்போக்கு கம்யூனிச எதிர்ப்பாளர்களையும் ஒத்துக் கொள்ள வைத்திருந்தார்.
இத்தாலி வரலாற்றில் முதல் தடவையாக, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்து, உடன்படிக்கை கைச்சாத்திடுவது மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், எதிர்பாராத விதமாக வழியில் வைத்து அல்டோ மோரோ கடத்தப் பட்டார்.

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், இத்தாலி அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுப்பதை நேட்டோ தலைமை விரும்பவில்லை. அதே நேரம், இத்தாலி அரசியல் மட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டரசாங்கம் அமைப்பதை, தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, தீவிர இடதுசாரிகளும் விரும்பவில்லை. பிரதமர் கடத்தல் சம்பவத்தின் நேரடி விளைவாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒருபோதும் கைச்சாத்திடப் படவில்லை. இது உண்மையில் கடும்போக்காளர்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றி.

“கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி கம்யூனிசத்திற்கு அடிபணிந்து விட்டது” என்று தீவிர வலதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். அதே நேரம், “கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்து விட்டது” என்று தீவிர இடதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். பிரிகாடே ரோசேயின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. முதலாளித்துவ அரசுக்கு முண்டு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை துரோகிகளாக பார்த்தனர். கூட்டரசாங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கை துரோகத்தின் உச்சமாக கருதப் பட்டது.

பிரதமர் அல்டோ மோரோவின் கடத்தலும், கொலையும், பிரிகாடே ரோசே இயக்கத்தின் அழிவுக்கு வித்திட்டது எனலாம். அதற்குப் பிறகு நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். பிரிகாடே ரோசெயின் முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இதே நேரம், பிரிகாடே ரோசே இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை எதிரியாக்கியதால், தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆதரவையும் இழந்தது. குறிப்பாக தொழிற்சங்க தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்ற படியால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான தொழிலாளர்களை பகைத்துக் கொண்டனர்.
1980 ம் ஆண்டு, பிரிகாடே ரோசே இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டு விட்டனர். ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சில நூறு உறுப்பினர்கள், அயல் நாடான பிரான்சுக்கு தப்பிச் சென்று அகதித் தஞ்சம் கோரினார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களை நாடுகடத்துமாறு இத்தாலி அரசு, பிரெஞ்சு அரசிடம் கோரி இருந்தது. அப்போது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் இறுக்கமாக வந்திருக்கவில்லை என்பதால் பிரெஞ்சு அரசு மறுத்திருந்தது.

குறைந்தது முன்னூறு பிரிகாடே ரோசே உறுப்பினர்களாவது, பொலிஸ் கையில் அகப்படாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். சிலர் கியூபாவிலும், மெக்சிகோவிலும், அன்று சோஷலிச நாடாக இருந்த நிகராகுவாவிலும் தஞ்சம் கோரியிருந்தனர். இப்போதும் அவர்கள் இத்தாலிக்கு திரும்பி வந்தால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்பதால் புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர்.

நன்றி : தோழர் கலையரசன், கலையகம்

 

பத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ

0

“ஜனநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ! என்ற தலைப்பின் கீழ் சென்னையில் 21.01.2018 அன்று மக்கள் அதிகாரத்தின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர், பேராசிரியர் என பலரும் நீதித்துறையின் இன்றைய நெருக்கடி நிலை குறித்து பேசினர்.

பத்திரிக்கையாளர் மணி அவர்கள் பேசுகையில்; “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கண்ணையா குமார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, “நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் முடிந்த பிறகு இதுவரையில் நடக்காத விசயங்கள் நடக்கின்றன” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். பல ஊடகங்கள் இதை பற்றி பெரியதாக பேசவில்லை .

பத்திரிக்கையாளர் மணி

டெல்லியில் இருக்கும் எனது நண்பர்களிடம் விசாரித்த போது, இப்போது நான்கு நீதிபதிகள், தலைமை நீதிபதியின் மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளில் மருத்துவமனை ஊழல் போன்ற விசயங்கள் மட்டுமே பிரதானமானது இல்லை என்றும்; கடந்த ஆறு, ஏழு மாதங்களாக கொலிஜிய முறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விசயத்தில், மத்திய அரசு கூறிய 90% ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களை தான் தீபக் மிஸ்ரா நியமித்துள்ளார், இதுவே முக்கியமான குற்றச்சாட்டு என கூறுகின்றனர்.”

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தார். 2003 -ல் உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு வழக்கில் இவர் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு வருகின்றது, அந்த வழக்கிலும் இவரே நீதிபதியாக இருக்கிறார். இப்படி சட்டத்திற்கும் அப்பாற்பட்டும், இயற்கை நீதிக்கு அப்பாற்பட்டும் எல்லா விசயங்களும் இப்போது நடக்கின்றது.

குஜராத் கலவரத்தில் 3000 முஸ்லிம்கள் வெட்டி கொல்லப்பட்டார்கள். இந்த கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம், மகாராஷ்ராவிற்கு மாற்றுகிறது. இதில் மோடியை ‘நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல’; என்று விமர்சித்த நீதிபதிகள் பின்பு ஆதரவாக பேசுகிறார்கள். இப்படி நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மாறி கொண்டே வருகிறது.

இந்த விவாதம் நாடு தழுவில் அளவில் நடக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியல் நடத்த கூடியவர்கள் கண்டிப்பாக இதை செய்ய மாட்டார்கள். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் தான் செய்ய வேண்டும். எல்லோரும் கரம் கோர்த்து போராட வேண்டிய நேரம் இது, இதில் கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள், காந்தியவாதிகள் என அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் கண்டிப்பாக பி.ஜே.பி போன்ற மதவாத சக்திகள் இருக்க கூடாது.” என தனது உரையில் கூறினார்.

அவரைத் தொடர்ந்து என்.ஜி.ஆர் பிரசாத் – மூத்த வழக்கறிஞர், அவரது உரையில் “நீதிமன்றம் மாற வேண்டுமென்றால் மக்களுடைய போராட்டங்கள் இருக்க வேண்டும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் வெளியே போராடினால் தான் நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி ஜெயிக்க முடியும். நாங்கள் வாதாடியதால் தான் ஜெயித்தோம் என்று சொன்னால் நாங்கள் பொய் சொல்கிறோம் என்று அர்த்தம். மக்கள் போராட்டமே தீர்ப்பை தீர்மானிக்கிறது.

என்.ஜி.ஆர் பிரசாத் – மூத்த வழக்கறிஞர்

நீதிமன்றத்தில் நடக்கும் ஊழலை பற்றி சாந்தி பூஷண் போன்றோர் நீண்ட காலமாக பேசி கொண்டிருக்கின்றனர். தலைமை நீதிபதிகளில் 50% பேர்கள் ஊழல்வாதிகள் என்றார். அவர் சொன்னதற்கு இன்றுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை.

பிரசாந்த் பூஷண் மருத்துவக் கல்லூரி வழக்கில் ஊழல் இருக்கிறது. தலைமை நீதிபதி மீதே குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் தலைமை நீதிபதி விசாரிக்க கூடாது என்றார். தலைமை நீதிபதியோ “இந்த வழக்கில் தலையிடவில்லை” என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரே ஒரு பென்ச் யை நியமித்து, வழக்கை தள்ளுபடி செய்கிறார்.

இந்த வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கிறார். அப்படி நீதிமன்றம் வசூல் செய்தால் நாங்கள் எல்லோரும் திருப்பதி உண்டியல் போல் சில்லறைகளை அனுப்பலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். ஏனெனில் எந்த தவறும் செய்யாதவர் எதற்கு அபராதம் கட்ட வேண்டும்?

நீதிமன்றத்தில் பேச்சுரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றால் நீதிமன்ற அவமதிப்பு பிரிவை முதலில் நீக்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. பிரசாந்த் பூஷண் போன்று துஷ்வந் தவே, இந்திராஜி, காமினி ஜேஸ்வாக் போன்றோர், வெளியில் இருந்து இந்த பிரச்சனைகளை தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

நான்கு மூத்த நீதிபதிகள் வெளியே வந்து சொன்ன பிறகு தான் மக்களுக்கு தைரியம் வந்திருக்கிறது. மக்கள் தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். எல்லா இடங்களிலும் பிரச்சனை செய்ய வேண்டும். மக்கள் தான் போராடி சரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும். இங்கு நடந்து கொண்டிருக்கும் கூட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதே போல வழக்கறிஞர்கள் கூட்டம் நடத்த வேண்டும். நீதிமன்றத்திற்கு அப்பால் தான் நீதி இருக்கிறது.” எனக் கூறினார்.

பின்னர் பேசிய பேராசிரியர் கருணானந்தம் (ஓய்வு); “நீதிமன்றம் புனிதமானது என்று கூறி மாயையை உருவாக்க விரும்புகிறார்கள். இந்து நாளிதழில் உஜ்ஜல் நிகாம் என்பவர் எழுதிய கட்டுரையில் “நீதிமன்றத்திற்குள் பிளவு வந்தால் ஜனநாயகம் நிலைப்பதே சிரமமாகிவிடும்” என்று ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு பிறகு நீதிபதிகள் தங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை பற்றி பொதுமக்களிடம் பேசுவது தவறு என்றும் கூறிகிறார்.

பேராசிரியர் கருணானந்தம் (ஓய்வு)

மேலும் இந்த நாட்டின் நிலைப்பு இரண்டு அடைப்படைகளை கொண்டது, நாட்டினுடைய நாணயத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும், இரண்டாவதாக, நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டு மக்களுக்கு நாணயத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்துவிட்டது.

நீதித்துறையின் மீது நம்பிக்கை வையுங்கள், நீதிபதிகளை கடவுளாக பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

ஜனநாயகத்திற்கு பேராபத்து – ஜனநாயகம் என்றால் இவர்கள் என்ன நினைக்கிறார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்பதை தெளிவாக்கி விட வேண்டும். ஜனநாயகம் என்றால், முதலாளிகளை உருவாக்க ஒரு கட்டமைப்பு என்று நினைக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்பதற்கு ஒரு எஜமானன் தேவை, அதற்காக ஒட்டு போட்டு தேர்ந்தேடுப்பது மட்டும் தான் ஜனநாயகம், மற்றவற்றை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

ஆனால் ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள் என்று நினைக்கிறோம். இறுதி என்பது மக்களிடம் தான் இருக்கிறது. மக்கள் தான் அடிப்படையில் அதிகாரம் படைத்தவர்கள். இவர்கள் தான் தெய்வங்களை உருவாக்குகிறார்கள். அரசியலைப்பு கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மக்களால் உருவாக்கப்பட்ட அரசியலைப்பை கண்காணிக்காவிட்டால் எப்படி ஜனநாயகமாக இருக்கும். சாமானிய மக்களின் கடைசி புகளிடம் என்கிறார்கள், பணம் இல்லாமல் உச்சநீதிமனறம் செல்ல முடியுமா? பூசாரிகளாகதான் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.

அனிதா விசயத்தில் எப்படி உச்சநீதிமன்றம் போக முடிந்தது என்று கிருஷ்ணசாமி கேட்கிறார். அப்படி என்றால் சாமானிய மக்கள் போக முடியாத இடம் என்று இவர்களே ஏற்று கொள்கிறார்கள். 50% மக்களுக்கு எட்டாத இடம் எப்படி ஜனநாயக அமைப்பாக இருக்க முடியும். நீதிமன்றம் அனைவரும் அனுக கூடியதாக இருக்க வேண்டும். இவர்கள் தெய்வ குற்றம், தேச குற்றம் , தெய்வ விரோதிகள், தேச விரோதிகள் என்பார்கள். தெய்வங்களே பல தீர்ப்புகளை தவறாக எழுதியதாக புராணங்கள் இருக்கின்றன. சிவபுராணத்தில் நக்கீரனுக்கு நேர்ந்தது என்ன?

உச்சநீதிமன்றத்தில் நடப்பது சகோதர சண்டை என சிலர் கருதுகிறார்கள். சில நெறிகள் தெரிந்தே மீறப்படுகின்றன. தீபக் மிஸ்ரா, அவர் சார்ந்த வழக்கை அவரே விசாரிக்க கூடாது என்பது அடிப்படை அறம், விழுமியம், இது தெய்வத்திற்கு பொருந்ததா? நீதிமன்ற நெறிமுறைகள் நியாயமாக இருக்கிறதா? அப்படியில்லை, தீபக் மிஸ்ரா தெய்வமில்லை என்பது தெரிகிறது. பொதுமக்கள் என்றால் ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். நீதிமன்ற விசயங்களை பொதுப்படையாக விவாதிக்க வேண்டும். விமர்சனத்திற்கு உட்படாத எதுவும் ஜனநாயகமல்ல. எதுவும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். .

1951 -ல் அரசியலைப்பு சட்ட திருத்தம், இடஒதுக்கீடு சம்பந்தமாக வந்த பொழுது நீதிமன்றத்தில் சட்டவிரோதம் என்று தீர்ப்பு வந்தது. பெரியார், மக்கள் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு என போராடி, பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வர செய்தார். நீட் தேர்வை நீதிமன்றம் தான் கட்டாயப்படுத்தியது. போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டத்தில் மந்திரியை போல நீதிபதிகள் பேசுகிறார்கள்.

பி.ஜே.பி -க்கும் நீதித்துறைக்கும் கூட்டு இருக்கிறது. நீதிமன்றத்தில் தீர்ப்புகள் விளக்கப்படுவதில்லை. எதையும் தீர்ப்பாக சொல்லி விட்டு தப்பித்து கொள்கிறார்கள். இது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும். ஜனநாயகத்தில் நீதிமன்றங்கள் மக்களுக்கான அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர மக்களை ஒடுக்கும் அமைப்பாக இருக்க முடியாது. ஒடுக்குபவர்களுக்கு துணை போக கூடாது. சாமானிய மக்கள் என்பவர்கள் அம்பானி, அதானி அல்ல! சாமானிய மக்களை பற்றி அக்கறையில்லாத நீதிமன்றங்களாக இருக்கிறது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா நீதிமன்றம்? நீதித்துறை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் அதை பற்றிய விவாதங்கள் துவங்க” வேண்டும் என பேசினார்.

(தொடரும்)

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு : 91768 01656,
E-mail: ppchennaimu@gmail.com