கார்ப்பரேட் முதலாளிகள் இந்தியத் தொழிலாளர்களை எந்தவிதமான தடையும் இல்லாமல் கொள்ளையடிக்க ஏதுவாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தங்களை நிறைவேற்ற உள்ளது, மத்திய அரசு. இதன் மூலம் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் உரிமைகள் பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் அமுலானால் ஏற்படவிருக்கும் விளைவுகள் :
எட்டு மணி நேரம் வேலை என்பது பறிபோய் தினசரி 15 மணிநேரம் வேலை செய்வது கட்டாயமாக்கப்படும்.
தொழில் பழகுநர் (அப்ரண்டிஸ்), பணி நிரந்தரம் என்பது ஒழிக்கப்பட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த (காண்டிராக்ட்) முறை நிரந்தரமாகும்.
தொழிற்சாலை ஆய்வாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டு தொழிலாளர்களது உயிருக்கும், வேலைக்கும் உத்திரவாதம் இல்லாமல் போகும்.
பெண்களை இரவுப் பணியில் ஈடுபடுத்துவது கட்டாயமாக்கி, அதிக வேலைச்சுமை, குறைந்த கூலி கொடுத்து வரம்பற்ற சுரண்டல் நடத்த முதலாளிகளுக்கு அதிகாரம் தரப்படும்.
ஷிப்டு, மிகைநேரப்பணி அனைத்துக்கும் ஒரே சம்பளம் என்னும் கொடூரம் சட்டத்திருத்தம் மூலம் நிறைவேற உள்ளது.
இது வெறும் சட்டத்திருத்தம் மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியநாட்டின் அனைத்து மக்களின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.
வெள்ளையர்கள் ஆண்ட போது கூட இப்படிஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை.
இதனை எதிர்த்து கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருச்சி பகுதிகளில் உள்ள புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொழிலாளர்கள் சார்பில் காலை 10 மணிக்கு கோவை சிங்கநல்லூர் பேருந்து நிறுத்தம் முன்பாக பேரணி துவங்கி முற்றுகை போராட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது.
காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. காலை 10 மணியளவில் தடையை மீறி கோவை சிங்கநல்லூர் பேருந்து நிலையம் முன்பு அனைத்துப் பகுதி தோழர்களும் ஒன்றுகூடி மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி அவர்களின் தலைமையில் பேரணியாகச் செல்ல முற்பட்டனர்.
காவல்துறை தடுத்து நிறுத்தவே, தோழர்கள் அந்த இடத்திலேயே 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். இறுதியில் கைது செய்யப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் புகழ்பெற்ற பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் அமைந்திருக்கிறது ராணுவ பொதுப்பள்ளி ஒன்று. ஏறக்குறைய 800 மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி அது. அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை (16-12-2014) காலை 10.30 மணிக்கு பள்ளியின் முதலாவது வாயிலில் துணை ராணுவப் படையினரைப் போல உடையணிந்த தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 6 தற்கொலைப் படையினர் நுழைந்தனர். அவர்கள் நடத்திய குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஏறக்குறைய 132 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 160 பேர் இதுவரை இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மூன்று நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி என்றோ குழந்தைகள் என்றோ கூட பாராமல் இந்த பயங்கர படுபாதகச் செயலை செய்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்குள்ளே உள்ளார்ந்த இயல்பாய் இருக்கும் சக மனிதன் குறித்த நேசம் இங்கே துளியளவு கூட இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த பயங்கர நிகழ்வு. அதே நேரத்தில் உலகில் இது முதல்முறையாகவும் நடக்கவில்லை.
பாகிஸ்தானில் தூய இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என 2007-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசுலாமிய தீவிரவாத இயக்கம் அவ்வப்போது சிறியதும் பெரியதுமான பல தாக்குதல்களை பொதுமக்கள் (முசுலீம்கள்) மீதும் ராணுவத்தின் மீதும் நடத்தியிருந்தாலும் இதுதான் இதுவரையிலான தாக்குதல்களில் பெரியது, கொடூரமானது. எட்டு மணி நேரம் வரை நீடித்த பயங்கரவாதத் தாக்குதல் இது. பாக் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து திருப்பி தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
‘’கைபர் மற்றும் வடக்கு வஜிரிஸ்தானில் எங்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி வரும் பாக் அரசின் ஷர்ப் இ அஸ்ப் (Sharp and cutting straight) நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுடைய மக்களின் வேதனையை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாக்குதல்’’ என்று அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ஹொராசனி தெரிவித்துள்ளார். இந்த முட்டாள்களின் கோரிக்கை இதுதான் என்றால் இனி இவர்களை ஆதரிக்க கூடியோரும் கூட இவர்களின் வேதனையை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். முன்னிலும் அதிகமாய் இவர்களை அழிப்பதற்கே இந்த தாக்குதல் உதவி செய்யும் என்பது கூட இந்த முட்டாள் பயங்கரவாதிகளுக்கு தெரியவில்லை.
2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக நவாஸ் ஷெரீப் சொன்ன போதிலும், 2014 ஜூன் துவங்கி பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் இந்த நடவடிக்கையில் அப்பாவி மக்களையும் உள்ளிட்டு 1600 பேர் வரை இறந்துள்ளனர். கூடுதலாக ஆளில்லாத விமானங்கள் மூலம் அமெரிக்கப் படையும் இங்கே தாக்குதல் நடத்துவது வழக்கம். கொல்லப்படுவதற்கென்றே பிறந்தவர்களைக் கொண்ட நாடு போல பாகிஸ்தான் மாற்றப்பட்டுவிட்டது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப் சாயை சுட்டவர்களும் இதே தெஹ்ரிக் இ தாலிபான் கூட்டத்தினர்தான். மலாலா துவங்கி ஒபாமா, மோடி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வரை இந்த பள்ளி தாக்குதலை கண்டித்திருக்கின்றனர்.
தாக்குதல் பற்றி குறிப்பிட்ட மலாலா இது கோழைத்தனமானது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் ராணுவத்தை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே பாக் ராணுவம்தான் இந்தியாவில் இந்துமதவெறியர்களால் தூற்றப்படுகிறது. பெற்றோர்களின் மன வேதனையை பகிர்ந்து கொள்வதாக கூறுகிறார் ஒபாமா. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் உண்டு.
‘’இறந்தவர்கள் என்னுடைய குழந்தைகளைப் போல, ஆகவே இது என்னுடைய துயரம் போன்றது’’ என்கிறார் நவாஸ் ஷெரீப். அன்றாடம் குண்டுவெடிப்புகளால் குதறப்படும் பாகிஸ்தானின் துயரத்தை இத்தகைய ரெடிமேடான அறிக்கைகள் எந்த அளவு பகிரும்? இம்ரான்கானும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஐநா செயலர் பான் கி மூன் இதனை எப்படியும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் தடைகளால் பத்து இலட்சம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திய கடமை உணர்வின் பேச்சிது.
குழந்தைகளைக் கொன்றது கோழைத்தனமானது என்று சொன்னவர்களில் முக்கியமானவர் இந்திய பிரதமர் மோடி. சங்க பரிவாரங்களால் கொல்லப்பட்ட குழந்தைகளும் குதறப்பட்ட பெண்களும் அவர்களின் உறவினர்களும் இந்த ‘கோழைத்தனத்தை’ மோடியை விட நன்கு அறிவார்கள்.
குஜராத்தில் மோடியின் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள்
“மாணவர்களில் பத்து வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் தான் தேடி கொல்லச் சொல்லியிருக்கிறோம். எங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிடில் இதுபோல செயல்படும் 146 ராணுவப் பள்ளிகளையும் தாக்குவோம்’’ என்று பாகிஸ்தான் தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்பாவிகள் எனும் போது பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் சாவதற்கு தகுதியானவர்கள் என்று ‘பெருந்தன்மையுடன்’ முடிவு செய்யுமளவுதான் இந்த காட்டுமிராண்டிகளின் சிந்தனை இருக்கிறது. இந்த சிந்தனையின் பயன் என்ன? இன்னும் அதிக அளவில் எல்லை மாகாண பழங்குடி மக்கள் அமெரிக்கா மற்றும் பாக் இராணுவத்தால் கொல்லப்படுவார்கள்.
ஆப்கானை ஒட்டிய பகுதியில் பழங்குடி மக்களிடையே செல்வாக்காக இருக்கும் இந்த இயக்கத்தின் முதல் தலைவரான பைதுல்லா மசூதுவை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் 2009-ல் சுட்டுக் கொன்றது. தற்போது தலைவராக இருப்பவர் ஹக்கிமுல்லா மசூத். இந்த பள்ளி தாக்குதலில் யாரையும் பிணையக் கைதிகளாக வைக்கும் நோக்குடன் தீவிரவாதிகள் வரவில்லை. முடிந்தவரை சுட்டுக் கொல்வது, தற்கொலைப் படையாக மாறுவது, ராணுவம் முன்னேறாதபடி கண்ணிவெடிகளைப் புதைப்பது என்ற பேரழிவு நோக்கத்துடனேயே அவர்கள் செயல்பட்டனர்.
ஆப்கானில் தாலிபான் அரசை தாக்கி ஒழித்த அமெரிக்காவிற்கு எதிராக தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த தெஹ்ரி இ தாலிபான் இயக்கம். இதன் போக்கில் இந்த தாலிபான்களை எதிர்க்கும் அமெரிக்க அரசுக்கு உதவியாக பாகிஸ்தான் அரசு மாறிய பிறகு இவர்கள் பாக் அரசையும் கடுமையாக எதிர்க்கின்றனர். கூடவே கடுமையான ஷரியத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், பாகிஸ்தானை அதி தீவிர இசுலாமிய மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்பதும் இவர்களது நோக்கம்.
இத்தகைய மத பயங்கரவாதிகளை நாம் கண்டிக்கிறோம். இவர்களெல்லாம் இசுலாமிய மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உலா வரும் கயமைத்தனத்தையும் நாம் முறியடிக்க வேண்டும். ஏழ்மையிலும் பயங்கரவாதத்திலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு இவர்களும் முக்கியமான எதிரிகள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த படுகொலையை கேள்விப்பட்ட மாத்திரத்தில் யாரும் கடும் அதிர்ச்சியடைவதும், இந்த கொலைபாதகத்தை செய்தவர்களை கண்டிப்பதும் இயல்பானதே. ஆனால் ஒரு பிரச்சினையை அதன் கொடூரமான காட்சிப்படிமங்களை வைத்து மட்டும் முடிவு செய்வதாக அது சுருங்கி விடக்கூடாது. ஏனெனில் அரசு ரீதியான அதிகாரப்பூர்வமான பயங்கரவாதிகளும், அவர்களின் ஊடகங்களும் கூட இந்த துயர நிகழ்வை வைத்து குளிர்காய்கின்றனர்.
வியட்நாமில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசிய அமெரிக்கா இன்று பாகிஸ்தானிய குழந்தைகளுக்கு கண்ணீர் வடிக்கிறது.
ஏனெனில் இந்தியாவில் இந்துமதவெறியர்கள், உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் அனைவரும் இதை வைத்து இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னொரு புறம் நெஞ்சினுள்ளே பார்ப்பனியத்தையும் தோற்றத்தில் முற்போக்கையும் கொண்டிருக்கும் பார்ட் டைம் முற்போக்காளர்கள் பலரும் இந்த சம்பவத்தை வைத்து எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நொட்டம் சொல்லாதீர்கள் என்று அவதாரத்தை கலைத்துவிட்டு உறுமுகின்றனர்.
உலகில் எந்த மதமும் தனது மதக் கொள்கையின் கீழ் முழு உலகையும் கொண்டு வருவதற்கான ஆசையைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அது துளியளவு கூட சாத்தியமில்லை. முதலாளித்துவ உற்பத்தி ஆரம்பித்து, வளர்ந்து ஏகாதிபத்தியமாகி மேல்நிலை வல்லரசாகி விட்ட இந்த காலத்தில் முழு உலகையும் கட்டுப்படுத்துவது பொருளியல் உலகின் எஜமானர்களான ஏகாதிபத்தியங்களே அன்றி பண்டார பரதேசிகளோ, பாதிரியார்களோ, முல்லாக்களோ இல்லை. ஒருவேளை இந்த முட்டாள்கள் அப்படிக் கூறிக் கொண்டாலும் அது பவர் ஸ்டார் என்று தன்னை காசு கொடுத்து அழைக்க வைக்கும் ஜந்துவின் அற்பத்தனமாக மட்டுமே இருக்கும். இத்தகைய மதக் கனவுகளுக்கு உலகமெங்கும் உள்ள ஆளும் வர்க்கங்கள் எப்போதும் புரவலராக நடந்து கொண்டு பயன்படுத்தி வருகின்றன.
அது போல இசுலாமிய சர்வதேசியம் என்பதும் அமெரிக்கா காசு கொடுத்து கற்றுக் கொடுத்து பரப்பச் செய்த ஒரு புரட்டே அன்றி வேறல்ல. ஈராக்கில் சதாமை வளர்த்து விட்டு, அதே போல ஆப்கானில் தாலிபான்களை உருவாக்கி ஆளச் செய்து பின்னர் வேலைக்காகாது என்று அவர்களை அழிக்க நினைத்தது அமெரிக்கா. ஆதரித்ததற்கும், அழிப்பதற்கும் அமெரிக்க நலனே காரணமே அன்றி வேறல்ல. ராம்போ பட வரிசையில் ஆப்கான் முசுலீம்களை அற்புதமான பழங்குடி போராளிகளாக காண்பித்த ஹாலிவுட், பின்னர் அவர்களை கொடூரமான காட்டுமிராண்டிகளாகக் காட்டி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக அமெரிக்க தலைமையிலான ஒற்றைத் துருவ வல்லரசு ஆதிக்கத்தை கேள்வி கேட்கக் கூட இங்கே உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லை. அதனால் அமெரிக்க ஆதிக்கத்தினால் பாதிக்கப்படும் நாடுகளின் போராட்டம் இத்தகைய மதத் தீவிரவாதிகளால் சில நாடுகளில் கையிலெடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மதத்தீவிரவாதிகள் தன்னை எதிர்ப்பதை அமெரிக்காவும் விரும்பிகிறது. இவர்களை வில்லன் போல காட்டிக் கொண்டு தனது ஆதிக்கத்தை தொடருவதற்கு அமெரிக்காவிற்கு சதாம் உசேனும், பின்லேடனும், தாலிபான்களும் எப்போதும் தேவைப்படுகிறார்கள்.
இந்த உலகில் இசுலாமிய நாடுகளில் இயல்பாக ஜனநாயகமும், கம்யூனிசமும் துளிர்விட ஆரம்பித்த காலத்தில் தன்னுடைய கேடான நோக்கத்திற்காக்க அவற்றை ஒழித்து மத பிற்போக்குவாதிகளை ஆட்சியில் அமர்த்தி இன்று வரை பாதுகாத்து வருவதும் இதே அமெரிக்காதான். அன்று அதை ஆர்ப்பரித்து மகிழ்ச்சியடைந்த சோசலிச முகாமின் எதிரிகள் இன்று பாக் குழந்தைகளுக்கு கண்ணீர் விடுவதில் முதல் ஆளாய் நிற்கிறார்கள்.
அமெரிக்கத் தாக்குதலுக்கு அஞ்சி ஓடும் ஈராக்கிய குடும்பங்கள்.
இந்த ஏகாதிபத்திய சதுரங்க ஆட்டத்தில் சிக்கியதனால்தான் பொதுவில் இசுலாமிய மதம் இருக்கும் நாடுகளில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் வளருவதற்கே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. வளைகுடா நாடுகளில் அது சுத்தமாக இல்லை. துருக்கி, துனிஷியா போன்ற நாடுகளில் அது வென்றிருக்கிறது. வங்கதேசம், மலேசியா போன்ற நாடுகளில் அது இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது.
இசுலாமிய மக்கள் மற்ற மத மக்களைப் போல வர்க்கங்களால் பிரிந்திருக்கிறார்களே அன்றி மதத்தினால் ஒன்றுபட்டிருக்கவில்லை. அப்படி ஒரு மத ஒற்றுமை இருப்பதாகக் காட்டுவதுதான் அமெரிக்கா மற்றும் அதன் அடிவருடிகளான சவுதி ஷேக்குகளின் ஆதிக்கத்திற்கு பாதுகாப்பு. மதம் என்பது ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட உரிமையே அன்றி சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் அதை அனுமதிக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.
ஆனால் இசுலாமிய மதவாதிகள் இதற்கு எதிராக வர்க்கம் கடந்த மதம் என்று தூய இசுலாத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களை உருவாக்கியது அமெரிக்காதான் என்றாலும் இந்த மதவாதிகளை இசுலாமிய மக்கள் புறந்தள்ள வேண்டும். முசுலீமாக இருந்து கொண்டு நாத்திகராய் இருப்பதும், கம்யூனிஸ்டாய் வேலை செய்வதும் பல்வேறு முசுலீம் நாடுகளில் உண்டு. இவற்றையெல்லாம் ஒழித்து விட்டு வெறும் மத மனிதராய் இசுலாமியர்களை மாற்ற வேண்டும் என்பதே இசுலாமிய மதவாதிகளின் இலக்கு.
அமெரிக்க – இசுரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் கொலை செய்யப்படும் பாலஸ்தீன குழந்தைகள்
இதன் அதி பயங்கர வெளிப்பாடுதான் பாகிஸ்தான் தாலிபான்கள் போன்றவர்களின் பள்ளி தாக்குதல்கள். ஆகவே மதத்தை மதத்தின் இடத்தில் மட்டும் வைத்து விட்டு தங்களது சமூக பொருளாதார கோரிக்கைகளுக்கு வர்க்க ரீதியாக அணிதிரளுவதே இசுலாமிய மக்களின் சொந்த பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. இதை பிறப்பால் முசுலீம்களாய் வாழும் நண்பர்கள் பரிசீலிக்க வேண்டுமாய் கோருகிறோம்.
அதே நேரம் இந்த மதவாதம் இசுலாத்திற்கு மட்டும உரிய பிரச்சினை அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் ஆட்சியில் வாழும் நாம் இதை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மதங்களை தனது கேடான நோக்கத்துக்கு பயன்படுத்தி ஆதாயம் அடையும் அமெரிக்காதான் தற்போது சி.ஐ.ஏ. பயங்கரவாத சித்ரவதைகளை வெளியிட்டுள்ளது. பயங்கரம் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ். மட்டுமல்ல அது அவர்களின் ஆசானான சி.ஐ.ஏ. மூலம்தான் என்ற புரிதல் அவசியம்.
மேலதிகமாக இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இசுலாமிய மக்கள்தான். பாகிஸ்தானில் இவர்களால் கொல்லப்படுவது அப்பாவி முசுலீம் மக்கள்தான். ஷியாக்களின் மசூதிகளில் வெடித்த குண்டுகளின் இரைச்சல் நித்தம் கேட்கிறது. ஈராக்கின் மனித ஓலத்திற்கு என்றுமே ஓய்வு கிடையாது.
ஆகவே பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி வைத்து விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.
எங்களது குடும்பத்தினரை கொன்ற பாக் இராணுவத்திற்கு அதன் வலியை உணர வைக்கவே இப்படி செய்தோம் என்று தாலிபான்கள் கூறியிருப்பது வேறு யாரையும் விட பாக் இராணுவத்தின் சிப்பாய்களுக்கு புரியும். இந்த சிப்பாய்களோ இல்லை அவர்கள் போரிடும் தாலிபான்களோ இருவரும் சாதாரண மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.
இவர்களை மோதவிட்டு ஆதாயம் பார்க்கும் அமெரிக்காவும், பாகிஸ்தான் ஆளும் வர்க்கமும், கண்டன அறிக்கையையும், குண்டுகளையும் எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் இருக்கிறது கூக்கே சுப்ரமணியசாமி கோவில். 12-12-2014 அன்று மதன் பி. லோகூர் மற்றும் ஆர். பானுமதி அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, இக்கோவிலில் நடைபெறும் ‘மட் சனா’ சடங்குகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பத்திருக்கிறது.
மட் சனா அல்லது உருளு சேவையின் படி பார்ப்பனர்கள் தின்று போட்ட எச்சியிலையில் பிற சாதிகள் உருளுவதன் மூலமாக பல்வேறு நோய்கள் தீரும் என்பது இந்துப் பார்ப்பனியம், இதர சாதிகளுக்கு வழங்கிய மருத்துவ சேவையாகும். காசுள்ளவனுக்கு கார்ப்பரேட் மருத்துவம், ஏழைகளுக்கு ஏதுமற்ற அரசு மருத்துவமனை என்பது மோடி துரிதப்படுத்தும் உலகமயமாக்கும் என்றால் ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஏழை பக்தர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனியம் அளிக்கும் சேவை இதுதான்.
தலித் சிறுவன் தண்ணீர் குடிக்கப் போனால் மண்டையை உடைக்கும் பார்ப்பனியம் எச்சியிலையில் உருளச் சொல்கிறது.
இப்படி எச்சியிலையில் உருளும் இந்த ‘மரபு’ அல்லது ‘தொன்மம்’ அல்லது ‘ஐதீகம்’ இன்னும் சற்றும் நாசூக்காக சொன்னால் ‘நம்பிக்கை’ கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருவதாகவும் இது ‘இந்துப் பாரம்பரியம்’ என்றும் மனுதாரரின் எதிர்தரப்பு, பார்ப்பன மனுநீதியை உச்ச நீதிமன்றத்தில் நாட்டியிருந்தது. இந்தப் பாரம்பரியத்தின் பேரில்தான் சூத்திர-பஞ்சமர்களும், தமிழும் கருவறையில் நுழைவதற்கு இன்று வரை அனுமதியில்லை.
மூட நம்பிக்கை என்று சொன்னால் ஒட்டு மொத்த பார்ப்பனியத்திற்கு வேட்டு வைக்க வேண்டிவரும் என்பதால் இக்கோயிலை ஏற்று நடத்தும் கர்நாடக அரசுத் தரப்பு, பார்ப்பனர்கள் தின்று போட்ட எச்சியைலையில் உருளுவது பொது அமைதி, நன்னடத்தை மற்றும் உடல் நலத்திற்கு தீங்கானது என்று புது ராகம் பாடியிருக்கிறது. எனில் தனிக்குவளையில் தலித்துக்கள் குடிப்பதோ, சேரிகளில் முடக்கப்படுவதோ கூட சுகாதாரம்தானே என்று ஆர்.எஸ்.எஸ் தத்துவ அறிஞர்கள் வாதிடலாம்.
எச்சியிலையில் உருளுவது மருத்துவம் தொடர்பானது (!) என்பதால் பார்ப்பனியம், இந்து எதேச்சதிகாரம் என்ற வாதங்களுக்குள் செல்லாமல் உடல் நலம்-சாதி என்ற கோணத்தில், முன்னர் நடந்த வழக்கை, நீதிமன்றங்கள் சாட்சியங்களாக மனசாட்சியின்றி புரட்டிக்கொண்டிருந்ததைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதிகள் ‘உயர்’ சாதி இந்துக்களின் நகத்தையும் மயிரையும் தின்றால் நோய்கள் தீரும் என்ற ‘மரபை’ அரசு தடைசெய்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி எச்சியிலையில் உருளுவதையும் தடைசெய்ய வேண்டும் என்பதை வழக்கறிஞர்கள் ஒருவாதமாக முன் வைத்திருக்கிறார்கள்!
ஏற்கனவே கர்நாடக உயர் நீதி மன்றம் இவ்வழக்கை வேறு விதத்தில் அணுகியிருந்ததையும் கவனிக்க வேண்டும். அதாவது பார்ப்பனர்கள் தின்றுபோட்ட எச்சியிலையில் உருளுவதற்குப் பதிலாக பார்ப்பன கடவுளான சுப்ரமண்யத்திற்கு படைக்கிற நைவேத்யங்களை வைத்து உருளுவதன் மூலமாக இந்து மதத்தின் தொன்மத்தை மேற்கொண்டு தொடரலாம், ‘மட்-சனா’ என்பதற்கு பதிலாக ‘ஏதே-சனா’ என்று அழைக்கலாமென பரிந்துரைத்து எச்சியிலைக்கு பதிலாக உண்டகட்டியில் உருளுங்கள் என்று இந்து பாசிசத்திற்கே உரிய கரிசனத்தை நிலைநாட்டியிருந்தது. உச்சநீதிமன்றமே உச்சிக்குடுமி மன்றமாக இருக்கும் போது கருநாடக உயர்நீதிமன்றம் மட்டும் உருப்படியான மன்றமாக இருப்ப வாய்ப்பில்லை.
தற்பொழுது வழங்கியிருக்கும் இடைக்காலத் தடையே கர்நாடக உயர் நீதி மன்றத்தின் உண்டகட்டி ஆலோசனையை நிறுத்தியிருக்கும் இடைக்காலச் செயல் தான். எச்சியிலையில் உருளுவது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்கிற வாதத்தை வேறு வழியில்லாமல் ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதில் இடதுசாரி இயக்கங்கள், ஜனநாயக அமைப்புகள், தலித்துகள், சமயங்களில் நீதிபதிகளும் (பானுமதி, தில்லைகோயில் நிர்வாகத்தை அரசின் கீழ் கொண்டுவர புரட்சிகர இயக்கங்கள் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தவர்) இருந்தாலும் கூட பார்ப்பன எதேச்சதிகாரத்தைப் பற்றி பேசாமல் தொடர்ச்சியான களப்போராட்டங்களை முன்னெடுக்கமால் இந்துப் பாசிசத்தை முறியடிக்க முடியாது. அப்படி பார்ப்பனியத்தை முறியடிக்க வேண்டுமானால் அதன் மற்றொரு பரிமாணத்தை நாம் கவனிக்க வேண்டும்.
சம்பவம்-2;
மேச ராசிக்கு அஷ்டம சனி, ரிசபத்திற்கு கண்ட சனி, சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம சனி, விருச்சத்திற்கு ஜென்மச் சனி, தனுசுக்கு விரயச் சனி என்று சனி பகவான் கலந்து கட்டி அடிக்கவிருக்கிறார்.
வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி 16-12-2014 அன்று பிற்பகல் 2.43 மணி அளவில் சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறாராம். இதனால் மிதுனம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களாம். ஏனெனில் சனியின் சஞ்சாரம் இங்கு இல்லையாம். அதே சமயம் கடகம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு லைட்டா ஏதாவது நடக்கலாமாம். மாறாக, மேசம், ரிசபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு நோ சான்ஸ். ஜீரோ டாலரன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இனி வரும் காலங்கள் இவர்களுக்கு மிகக் கடினம்! மேம்போக்காக பார்த்தாலே சனியின் பார்வையே படிநிலையாகத்தான் இருக்கிறது! மொத்தமுள்ள 12 ராசிகளில் 6 ராசிக்காரர்களுக்கு அதாவது 50% பேருக்கு வாழ்வு கர்ண கொடூரமாக இருக்கப்போகிறது.
மேச ராசிக்கு அஷ்டம சனி, ரிசபத்திற்கு கண்ட சனி, சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம சனி, விருச்சத்திற்கு ஜென்மச் சனி, தனுசுக்கு விரயச் சனி என்று சனி பகவான் கலந்து கட்டி அடிக்கவிருக்கிறார். இதுதவிர மற்ற மூன்று ராசிக்காரர்களுக்கு அதாவது 25% பேருக்கு வாழ்க்கை சற்று கடினம். மீதுமுள்ள 25% பேர்மட்டும் தான் ஓகோவென்று வாழப்போகிறார்கள். சனியின் பார்வையே பாசிசமாக இதுதாண்டா இந்து மதம் என்று 75% பேருக்கு மறுப்பும் 25% பேருக்கு விருப்பும் தெரிவிக்கிறது! சதவீதக்கணக்கே இப்படி இருக்கிற பொழுது மக்கள் சனியை எப்படி அணுகுகிறார்கள்? முதலாளித்துவத்திற்கு இந்து-பார்ப்பனியம் எப்படி இசைவாக இருக்கிறார்? என்பதை மேற்கொண்டு பார்க்க வேண்டும்.
இந்து மதத்தில் மட்டும் தான் கெட்ட கடவுள் நல்ல கடவுள் என்று இரு வகுப்புகள் உண்டு. இதில் சனி கெட்ட கடவுளாவர். இவர் பொங்கு சனியாக இருந்தாலும் சுயம்புவாக இருந்தாலும் திருமணக் கோலத்தில் இருந்தாலும் சனி சாமி வேண்டாத சாமி! பிறகு எதற்கு இத்தனை கெட்டப்பு! டிசம்பர் 16 லிருந்து அடுத்த பதினைந்து நாட்களுக்கு திருநள்ளாறில் தரிசனத்திற்காக வரும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் ‘சனியே தயவு செய்து எங்களை விட்டு விடு’ என்று இறைஞ்சுகிறார்கள். பக்தர்களின் கோரிக்கை எதுவாக இருப்பினும் இது பக்தியல்ல என்பது தெளிவாகும். ஏனெனில் மிரட்டி பணிய வைப்பது பக்தியல்ல. அது பாசிசமாகும்.
சனிப்பெயர்ச்சியின் போது பெருமாளை சேவிக்கச் சொல்கிறார்கள். அனுமாருக்கு வெண்ணெய்யும் உளுந்த வடையும் சாத்தச் சொல்கிறார்கள். ஏனெனில் சனி, பெருமாளிடம் வாக்கு கொடுத்திருக்கிறாராம். உனது பக்தர்களை நான் பீடிக்க மாட்டேன் என்று சனி சொல்லியிருக்கிறாராம். ஒரு கடவுளுக்கு உளுந்த வடை இலஞ்சம் கொடுத்தால் மற்றொரு கடவுளின் பிடியில் இருந்து தப்பலாம் என்றால் உளுந்தவடைக்குதானே பவர் ஜாஸ்தி!
இது ஒரு புறமிருக்க, தனியார்மயமும் தரகுமுதலாளித்துவமும் சிறுவணிகத்தை அழிக்கிற பொழுது தொழில் நட்டம் என்று சொல்கிற விரயச் சனி, வேலை வாய்ப்பை முதலாளித்துவம் நசுக்குகிற பொழுது அதற்குக் காரணமாக ஜென்மச் சனி, பைபாஸ் சர்ஜரி செய்ய வசதியில்லாமல் செத்துப்போகிற குடும்பத் தலைவன்களின் மரணத்திற்கு காரணம் கண்டச் சனி இது தவிர வீட்டுக்கடன், கோர்ட்டு வாய்தா, திருமணம் தள்ளிப்போவது என்று இச்சமூகத்தின் அனைத்து சீர்கேடுகளுக்கும் பார்ப்பனியம் சனியை ஒற்றை ஆளாய் கைகாட்டுகிறது. பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஒன்று சேர்ந்து இயங்குகிறதே என்று சொல்கிறோமோ அது இப்படித்தான்.
ஒரு கடவுளுக்கு உளுந்த வடை இலஞ்சம் கொடுத்தால் மற்றொரு கடவுளின் பிடியில் இருந்து தப்பலாம் என்றால் உளுந்தவடைக்குதானே பவர் ஜாஸ்தி!
பிரச்சனைகளுக்கு காரணம் என்று சனியையே கைகாட்டுபவர்கள் தீர்வுக்கு முதலாளித்துவத்தைக் கைகாட்டுகிறார்கள்! அதனால் தான் எட்டாவது மாதம் வயிற்றில் குழந்தை இருந்தாலும் நாள் நட்சத்திரம் பார்த்து சனிக்கிழமையைத் தவிர்த்து, பிறக்காத குழந்தைக்கு லக்னம் பார்த்து தனியார் மருத்துவமனையில் குழந்தையை அறுத்தெடுக்க தயங்குவதில்லை நடுத்தர வர்க்கம். தனியார் மருத்துவமனைகளும் இதற்காக சீசனை திறந்துவைத்திருக்கின்றன. கத்தி வைத்தாலும் வைக்காவிட்டாலும் டெலிவரி பேக்கேஜ் 7777-ல் இருந்து மூன்று இலட்சம் முடிய அறிவிக்கிற பொழுது பார்ப்பனியம் எப்படி முதலாளித்துவத்திற்கு தரகனாக இருக்கிறது என்பதையும் அறியலாம்.
இப்பொழுது முடிவுரைக்கு வருவோம். கூக்கே சுப்ரமண்ய கோவிலிலே இந்துப் பார்ப்பனியம் தன் சக மனிதனையே எச்சியிலையில் உருள வைப்பதை மரபு என்று சாதிக்கிறது. அரசும் ஆளும் வர்க்கமும் நீதி அமைப்புகளும் விசயத்தை பூசி மெழுகுகின்றன. ஓர் இடைக்காலத் தடையால் இந்தச் சமூகத்தின் ஆன்மா ஒன்றும் தட்டியெழுப்பப்படவில்லை. சமூகமே பார்ப்பனிய எச்சியிலையில் தான் இருக்கிறது என்பதை தில்லையாக இருந்தாலும் கூக்கேவாக இருந்தாலும் பார்க்கிறோம். இரண்டாவது சம்பவத்தில் பார்ப்பனியம் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதைப் பார்க்கலாம். பக்தி என்பதோ, கடவுள் என்பதோ இங்கு இல்லை. கத்தி முனையில் கடவுளை பார்த்து கடவுளே வராதே என்று மக்களை கும்பிட வைக்கிறது பார்ப்பனியம். முதலாளித்துவச் சுரண்டலுக்கு சனி பகவான் படிமமாக இருக்கிறார், பார்ப்பனியம் இயங்கு வடிவமாக இருக்கிறது.
ஆக இதற்கு தீர்வு என்ன? நாம் நம்மை ‘பார்ப்பனியத்தை எதிர்க்கிற அதிதீவிர விமர்சகர்களாக மாற்றிக்கொள்ளாதவரை’, ‘முதாலாளித்துவத்தை எதிர்க்கிற வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்காதவரை’ இந்த சமூகம் எச்சியிலையில் உருளுவதையோ எள் தீபம் ஏற்றுவதையோ தடுத்துவிட முடியாது.
மணிப்பூரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரும் ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டம் பதினைந்தாம் ஆண்டை எட்டியுள்ளது.
ஐரோம் சர்மிளா (படம் : நன்றி http://indianexpress.com )
கடந்த நவம்பர் 6-ம் தேதியன்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியுள்ளன. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர் மருத்துவர் பினாயக் சென் “ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ஜனநாயகத்தின் சாரத்தையே அழிக்கிறது, நியாயத்தின் பாதையை தடுக்கிறது. மணிப்பூரில் இரண்டு தலைமுறையினர் சுதந்திரத்தின் பொருள் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.
2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோன் எனுமிடத்தில் பேருந்துக்காக நின்றிருந்த அப்பாவி பொதுமக்கள் பத்து பேரை அசாம் துப்பாக்கி படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமது அன்றாட வேலைகளுக்காக போய்க் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள். கொல்லப்பட்டவர்களில் 1988-ம் ஆண்டில் சிறார் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதைப் பெற்ற 18 வயது சினம் சந்திரமணி சிங்கும், அவரது சகோதரர் ராபின் சிங்கும், ஒரு 68 வயது மூதாட்டியும் அடக்கம்.
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கையெறிகுண்டு தாக்குதலுக்கு பதிலடியாக அப்பாவி பொதுமக்கள் மீது இப்படுகொலை நடத்தப்பட்டது.
ஐரோம் சர்மிளாவின் அறைச் சுவரை மக்கள் அவருக்கு பரிசாக அளித்த போஸ்டர்கள் நிரப்பியிருக்கின்றன (படம் : நன்றி : http://indianexpress.com )
1958-ம் ஆண்டு நாகாலாந்தில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டத்தை கொண்டுவந்தது இந்திய அரசு. பின்னர் அதை படிப்படியாக வடகிழக்கின் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தியது. இச்சட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒடுக்குவதற்கு காலனியாதிக்கவாதிகள் கொண்டுவந்த 1942-ம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு ஒப்பானது.
இச்சிறப்பு அதிகாரச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் அதிகாரிகள் மட்டுமல்ல சாதாரண படை வீரர்கள் கூட, பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, முன் அனுமதியின்றி எவரையும் சோதனையிடவும், சட்டத்தை மீறுபவர்களாகத் தாம் சந்தேகிக்கும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் அதிகாரத்தை வழங்குகிறது. அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் மீதான குற்றங்களை விசாரிக்கவோ, வழக்கு தொடுக்கவோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மலோன் படுகொலைகள் நடந்த மூன்றாம் நாளே, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நிபந்தனையின்றி முற்றிலுமாக விலக்கக் கோரி, உண்ணநிலைப் போராட்டத்தை துவங்கினார்,ஐரோம் சர்மிளா. இன்றும் போராட்டம் தொடர்கிறது.
ஐரோம் சர்மிளா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 309-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி தற்கொலைக்கு முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்; அதற்கு ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஐரோம் சர்மிளாவை கைது செய்து மருத்துவமனையில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது மணிப்பூர் அரசு. ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டதும், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனை சிறையில் அடைத்துவிடுகிறது. தற்போது அந்தச் சட்டப்பிரிவு நீக்கப்பட்டாலும் ஐரோம் சர்மிளா மீது வேறு ஏதாவது பிரிவின கீழ் வழக்கு போடுவார்கள். அரசின் நோக்கம் அவர் உயிர் துறக்க கூடாது என்பதல்ல, இராணுவத்தின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதே!
ஐரோம் சர்மிளா (படம் : நன்றி http://indianexpress.com )
ஐரோம் சர்மிளா இம்பாலின் கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் கடைசி குழந்தையாக பிறந்தவர். சர்மிளாவின் தந்தை ஐரோம் நந்தா ஒரு கால்நடை மருத்துவ உதவியாளர். மற்ற மணிப்பூர் குழந்தைகளைப் போலவே மணிப்பூரின் நாயகர்கள் மற்றும் புரட்சியாளர்கள் பற்றிய கதைகளை கேட்டு வளர்ந்தார் ஐரோம் சர்மிளா. “நாங்கள் அரசுக்கு எதிராக போரிடும் புரட்சியாளர்கள் மற்றும் காணாமற்போனவர்களைப் பற்றி கதைகளை கேட்டு வந்தோம். அவர்களை நெருக்கமாக பழகியவர்கள் போல உணர்ந்தோம். சில நேரங்களில் நான் அவர்கள் எங்கள் வீட்டு புழக்கடையில் நடந்து போவது போல கற்பனை செய்து கொள்வேன்” என்று அவர் நினைவு கூர்கிறார். மணிப்பூரில் இராணுவத்தின் இருப்பை உணராத குடும்பமே இருக்க முடியாது.
மணிப்பூரின் மன்னனை 1891-ம் ஆண்டு போரில் வென்றதிலிருந்து அதை தனது ஆளுகைக்குட்பட்ட சமஸ்தானமாக பராமரித்து வந்தது பிரிட்டிஷ் அரசு. அதை எப்போதும் இந்தியாவுடன் இணைக்கவில்லை. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரிட்டன் வெளியேறிய பின் 1948-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை தந்து பொதுத் தேர்தலை நடத்தியது.
1949 அக்டோபரில் மணிப்பூர் மன்னரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷில்லாங்கில் அவரை வீட்டுக்காவலில் வைத்து, மணிப்பூரில் இராணுவத்தை குவித்து அவரை மிரட்டி இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது இந்திய அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் கலைக்கப்பட்டன. இதுதான் மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்ததன் சுருக்கமான வரலாறு.
ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வரும் கடந்த 15 ஆண்டுகளில் நிலைமை எந்த விதத்திலும் மேம்பட்டுவிடவில்லை. அவரது உண்ணாவிரதத்தைத் தூண்டிய படுகொலைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அசாம் துப்பாக்கிப் படைப்பிரிவு இன்று வரை போராளிகளுடனான துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே சிக்கி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சாதிக்கிறது. இப்படுகொலைக்கான வழக்கு இன்னும் நீதிமன்ற வாசலையே எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அக்குற்றவாளி சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது. டிசம்பர் 5 (2014) அன்று இப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கண்துடைப்பு நிவாரணமாக ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராணுவத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக வல்லுறவு குற்றவாளிகளுக்கும், பச்சைப் படுகொலை குற்றவாளிகளுக்கும், தண்டனையிலிருந்து விலக்குரிமையை (Impunity) சிறப்பு அதிகாரச்சட்டம் வழங்குகிறது.
“ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பாதுகாப்பை வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு வழங்கக் கூடாது; வல்லுறவுக் குற்றமிழைக்கும் இராணுவத்தினரை, மற்றெல்லா குற்றவாளிகளையும் போல நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க வேண்டும்” என்று கூறுகிறது பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து விசாரித்து அறிக்கை அளித்த வர்மா கமிசன். அந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு பொதுநல வழக்கிற்கு பதிலளிக்கையில் 2007 முதல் 2012 வரையிலான 5 ஆண்டுகளில் மணிப்பூரிலிருந்து மொத்தம் 1671 போலி மோதல் கொலைப் புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 191 புகார்களை விசாரித்ததில், அனைத்தும் போலி மோதல் கொலைகள் என்பது உறுதியானது என்றும், மீதமுள்ள வழக்குகளை விசாரிக்கவிடாமல் அம்மாநில அரசு, பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுவருவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இவற்றில் ஆறு போலிமோதல் கொலைகளை வகைமாதிரியாக எடுத்துக் கொண்டு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஹெக்டே கமிசன், அவை அனைத்தும் போலிமோதல் கொலைகளே என்றும் ஆயுதப்படையினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்தது. அந்த அறிக்கையை குஜராத்தில் போலி மோதல்களுக்கு பேர் பெற்ற புகழ் மோடியின் தலைமையில் இயங்கும் இப்போதைய மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
இந்த முட்டுக்கட்டைகளையும் மீறி போலி மோதல்படுகொலைகள் விசாரணைக்கு வந்துவிட்டால், அவ்வழக்குகளை இராணுவமே விசாரித்துத் தீர்ப்பளிக்கலாம் எனச் சலுகை வழங்குகிறது, உச்ச நீதிமன்றம். உதாரணமாக, காஷ்மீர் பத்ரிபால் படுகொலையை விசாரித்த சி.பி.ஐ இராணுவத்தின் ஐந்து அதிகாரிகளை குற்றவாளிகள் என குற்றப்பத்திரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை கொண்டு மத்திய அரசும் இராணுவமும் விசாரணையை முடக்கி வந்தன. உச்சநீதிமன்றமோ குற்றவாளி இராணுவத்திடமே இப்படுகொலைகள் தொடர்பாக இராணுவ விசாரணையை நடத்திக்கொள்ள விட்டுவிட்டது. தனது உள்விசாரணையில் அதிகாரிகள் மீதான குற்றசாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று அவர்களை விடுவித்துவிட்டது இராணுவம்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என 2005-ம் ஆண்டே அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது.
முன்னாள் இராணுவத் தளபதியும், இன்றைய வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான வி.கே சிங், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் இராணுவத்திற்கு எந்த சிறப்பான சலுகையையும் அளித்துவிடவில்லை என்றும் அச்சட்டம் இல்லையெனில் கிளர்ச்சியாளர்கள், பிரிவினைவாதிகளுக்கு எதிராக இராணுவத்தால் செயலாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இது இவருடைய கருத்து மட்டுமல்ல. எல்லா இராணுவ தளபதிகளும், ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளும் இதைத்தான் கூறுகிறார்கள்.
ஆனால், இச்சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம்.
“சிறப்பு அதிகாரச்சட்டம் ஒரு வெறுக்கத்தக்க சட்டம் என்றும் அதற்கு நாகரீக சமூகத்தில் இடமில்லை” என்றும் ப.சிதம்பரம் இப்போது கூறியுள்ளார். இதே ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது சிறப்பு அதிகாரச்சட்டத்தை நீக்குவதற்கு எம்முயற்சியும் எடுக்கவில்லை. பிப்ரவரி 6, 2013-ல் ஒரு கருத்தரங்கில் பேசிய சிதம்பரம், தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகளுக்கு ஆய்தப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதில் உடன்பாடு இல்லாத போது அரசு எப்படி சட்ட திருத்தத்தை கொண்டுவர இயலும் என்று கூறினார். எனில் இந்தியாவை ஆள்வது மக்கள் பிரதிநிதிகளா இராணுவமா?
இச்சட்டத்தை நீக்கக்கூடாது என்ற இராணுவத்தின் கருத்து தான் பா.ஜ.கவின் கருத்தும். மோடி அரசும் இக்கொடிய சட்டத்தை நீக்குவதைப் பற்றி பரிசீலிக்கக்கூட இல்லை. மாறாக, இந்திய சட்ட கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் தற்கொலை முயற்சி குற்றச் செயல் அல்ல என IPC 309 சட்டப்பிரிவை சட்ட புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க மோடி அரசு முடிவெடுத்துள்ளது. இதுதான் ஐரோம் சர்மிளாவின் போராட்டத்துக்கு இந்த அரசு முன் வைத்திருக்கும் ‘தீர்வு’.
ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் தேவை குறித்த பொது வாக்கெடுப்பை அச்சட்டம் அமுலில் உள்ள எந்த மாநிலத்திலும் நடத்த இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை.
இந்திய அரசியல் அமைப்பு என்பது மக்களுக்கு விரோதமானது, மக்களை ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கங்களுக்கு அனைத்து ஆயுதங்களையும் வழங்குகிறது என்பதை நிரூபித்துக் கொண்டே தொடர்கிறது ஐரோம் சர்மிளாவின் போராட்டம்.
16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com pukatn@gmail.com
_______________________________________________________________________
16.12.2014
பத்திரிகைச் செய்தி
சிறுபான்மை மக்களை மதம் மாற்றும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்!
ஆட்சியைப் பிடித்த ஆறே மாதத்தில் இந்தியாவை கூறுகட்டி விற்பதை அதிவேகமாக செய்து வருகிறது மோடி அரசு. கூடவே தனது பார்ப்பனிய இந்துமதவெறி பாசிச செயல் திட்டத்தையும் புயல் வேகத்தில் நிறைவேற்றி வருகிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், புராணக் குப்பைகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, அவற்றையே வரலாறு என்று திரிப்பது, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது என்ற வரிசையில் தாய் மதத்திற்குத் திரும்புதல் என்ற பெயரில் கட்டாய மதமாற்றத்தை அரங்கேற்றி வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.
படம் : நன்றி http://indianexpress.com
புகழ்பெற்ற தாஜ்மஹால் நகரமான ஆக்ராவில், இருநூறு ஏழை முஸ்லீம்களை, ஆர்.எஸ்.எஸ்-இன் அடியாள் படையான பஜ்ரங்தள் கும்பல் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பழைய – வீணான பொருட்களை சேகரித்து வாழும் ஏழைகள். மேற்கு வங்கத்திலிருந்து பிழைக்க வந்த பரிதாபத்திற்குரியவர்கள், இம்மக்கள்.
ரேசன் கார்டு, ஆதார் அடையாள அட்டை, உதவித்தொகை, போலீஸ் தொல்லையிலிருந்து பாதுகாப்பு என ஒருபுறம் ஆசை காட்டியும், மறுபுறம் குடியிருக்கும் இடத்தை விட்டு காலி செய்துவிடுவோம் என மிரட்டியும் நடத்தப்பட்ட மதமாற்றம் இது.
50 இடங்களில் ஒரு லட்சம் சிறுபான்மையினரை மதமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயித்து, வரும் டிசம்பர் 25 (கிருஸ்துமஸ்) அன்று 4000 கிருத்துவர்களையும், ஆயிரம் முஸ்லீம்களையும் மதமாற்றம் செய்யப்போவதாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவுடி சாமியார் ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் மண்டலத் தலைவர் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
மதமாற்றம் செய்ய மட்டும் மாதம் 50 லட்சம் ரூபாயும், போக்குவரத்து செலவுக்கு எட்டு முதல் பத்து லட்சம் ரூபாயும் செலவழிப்பதாக ராஜேஸ்வர் சிங் அறிவித்துள்ளார். வழிபாடு எதுவும் நடக்கவில்லை எனப் பொய் பிரச்சாரம் செய்து அறுபது கிருஸ்தவ தேவாலயங்களையும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கைப்பற்றியுள்ளது. கடந்த 2003 வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது இப்போதைய மிரட்டல் வழியில் உ.பியிலும், உத்திரகாண்டிலுமாக 2.73 லட்சம் பேரை மதம் மாற்றினர்.
இந்தியாவில் மதமாற்றம் என்பது பார்ப்பனியக் கொடுங்கோன்மை காரணமாகவே வரலாறு நெடுகிலும் நடைபெற்று வருகிறது. விவேகானந்தர் எனும் இந்து சாமியாராலேயே “பைத்தியக்காரர்களின் நாடு” என்று அழைக்கப்பட்ட நம்பூதிரிகளின் சாதிக் கொடுமையில் சிக்கியிருந்த கேரளமோ, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சனாதன கிரிமினல் பிடியில் மாட்டியிருந்த குமரி மாவட்ட நாடார் சாதி மக்களோ, கம்மா-ரெட்டி காட்டுமிராண்டித்தனத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்த ஆந்திரத்து தலித் மக்களோ, ஒரிசாவின் பழங்குடியினரோ, வரலாற்று ரீதியாகவே பார்ப்பனியத்தின் பண்பாட்டு பிடியை ஏற்க மறுத்த வட கிழக்கு மக்களோ, நிலவுடமை ஆதிக்கத்தின் இறுமாப்போடு தலித் மக்களை ஒடுக்கி வரும் இந்தி பேசும் மாநிலங்களோ…இங்கெல்லாம் மதமாற்றம் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் பெருமூச்சாகவே இருந்தது.
இந்துமதவெறியர்கள் தூற்றுவது போல மதமாற்றம் என்பது வாளின் முனையிலோ இல்லை பால்பவுடர் தயவிலோ நடைபெறவில்லை. ஒருவேளை வாழ்க்கை வசதிகள் கிடைக்கும் என்பதால் ஏழைகள் மதம் மாறுகிறார்கள் என்றால் அது பார்ப்பனியத்தின் நிலவுடமை சமூகம் தோற்றுவித்த வறுமைதான் அடிப்படை. அப்போதெல்லாம் இகலோக வசதிகளுக்காக ‘தாய் மதத்தை’ – தாயை விற்றுவிட முடியுமா என்று நொள்ளை நியாயம் பேசினார்கள், இந்துமதவெறியர்கள்.
இப்போது அதே இகலோக வசதிகளை கொடுப்போம் என்று ஆசை வார்த்தையோடு, அதிகார மிரட்டலையும் சேர்ந்து மதம் மாற்றுகிறார்கள். இசுலாம், கிறித்தவம் போன்று இந்துமதம் அடிப்படியிலேயே ஒரு மதத்திற்குரிய அடிப்படைகளை கொண்டிருக்கவில்லை என்றார் அம்பேத்கர். அதனால்தான் இந்து மதம் மற்ற மதங்களைப் போல தனது மதத்தில் வெளிநபர்கள் யாரையும் சேர்ப்பதை விரும்பவில்லை, முயலவுமில்லை. காரணம் இது சாதி ஏற்றத்தாழ்வை ஆன்மாவாகக் கொண்டிருக்கும் ஒரு அதிகார அமைப்பு.
இப்போதும் கூட இவர்கள் மதம் மாற்றினாலும் அந்த மக்கள் வங்கதேச முசுலீம்கள் – ஆதலால் தலித்துக்கள் எனும் அடையாளத்தோடுதான் அங்கே நடத்தப்படுவார்கள். பாஜக அதிகாரத்தில் இல்லாத போது இந்தியா முழுவுதம் மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் என்று ஊளையிட்டதும் இதே கூட்டம்தான். ஆட்சிக்கு வந்த பிறகு அந்த தடை சட்டம் மற்ற சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமெனஅமல்படுத்தி விட்டு, இவர்கள் “தாய் மதம்” திரும்புதலுக்கு இது பொருந்தாது என்று மதம் மாற்றுவார்கள்.
பார்ப்பனியம் என்னதான் முயன்றாலும், எத்தனை இலட்சம் பேரை மதம் மாற்றினாலும் சாதி ஏற்றத்தாழ்வு எனும் கொடுங்கோன்மை இங்கே இல்லாமல் போய்விடாது. இந்து மதத்தின் கொடுமைகளுக்கு எதிராக மதம் மாறினார்கள் எனும் வரலாற்று உண்மை, இப்போதும் பொருள் இழந்து விடவில்லை. கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.
படம் : நன்றி reuters
‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற மோசடி முழக்கத்தின் கீழ் நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, மேலும் 12 அணு உலைகளை நிறுவி மக்களை நிரந்தர ஆபத்தில் வைத்திருப்பது, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் உட்பட அனைத்து மானியங்களையும் வெட்டி வயிற்றிலடிப்பது, சமையல் எரிவாயுவுக்கு வங்கி கணக்கின் பெயரில் மறைமுக மானிய வெட்டு என பீடை நடை போடுகிறது மோடி அரசு.
நாட்டின் மீதும், மக்களின் மீதும் பொருளாதார பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கலாச்சார ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு பார்ப்பன பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து அலைகிறது. இந்தியாவை இந்து நாடு என மறைமுகமாக அல்ல பகிரங்கமாகவே அறிவிக்கிறது.
பெரியார், அம்பேத்கர் உட்பட ஏராளமான அறிஞர்களாலும், வரலாற்றறிஞர்களாலும் குப்பை என்றும் சாதிவெறிக் கிரிமினல் சட்டத் தொகுப்பு என்றும் இகழப்பட்ட பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்களையும், பகவத் கீதையையும் ஊதிப்பெருக்கி இந்து வெறியைத் தூண்டுகிறது இக்கும்பல்.
கீதையை தேசிய நூலாக்குவதன் மூலம் கருத்தியல் ரீதியாகவே பார்ப்பனிய மேலாதிக்கத்தை பறைசாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கிறிஸ்மஸ் விடுமுறையை ரத்து செய்வதன் மூலம் பள்ளி மாணவரிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச சமத்துவ உணர்வையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். பெரியார் உருவாக்கிய பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி மதம் பார்க்காத சமத்துவ நடைமுறைகள், சாதி மறுப்பு திருமணங்கள், பகுத்தறிவு ஆகிய பண்புகள் கோலோச்சிய தமிழகத்தில் கால்பதிக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெளிப்படையாக கூட்டங்களையும் பயிற்சியையும் நடத்துகிறது.
அனைத்து ஓட்டுக்கட்சிகள், இனவாதிகள், சாதியக் கட்சிகள், அனைவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு துணைபோகும் அபாயகரமான சூழலில் மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டிய வரலாற்று கடமை நம் முன் நிற்கிறது. எனவே பார்ப்பனியத்திற்கு பாடை, கட்ட உழைக்கும் மக்களை அணிதிரட்ட, மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.
இவண், காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளி இயற்கை சூழலோடு சிறப்பாக இயங்கி வருகின்றது. பல்வேறு அரசு பள்ளிகளுக்கிடையே இப்பள்ளி முன்னுதாரணமாக இயங்கி வருகின்றது. அம்மையப்பனைச் சுற்றி ஏறத்தாழ 20 கிராமங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே இங்கே பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளி வளாகத்தின் மையப்பகுதியில் பெரிய பாழடைந்த கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து மாணவ,மாணவிகளின் உயிரைக் குடிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இக்கட்டிடத்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் ஏராளமாக உள்ளன.
பள்ளியின் மையத்தில் உள்ள பழைய பாழடைந்த கட்டடம்.
பாழடைந்த இந்தக் கட்டிடத்தில் உள்ள கொடிய பாம்பு போன்றவைகள் மற்ற வகுப்பறை கட்டிடங்களில் செல்வதும்ர மாணவர்கள் இதனைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடுவதும், ஊழியர்கள் அதனை விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்தக் கோரி, பலமுறை நேரிலும், புகார் மனுவிலும் கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதுவரை அந்தப் பாழடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அதனால், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து 01.12.2014 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் நேரடியாக மனு கொடுத்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் 99434 94590
ஊரையே காத்த ஆறு – அதற்கு
உன்னை விட்டால் வேறு யாரு?
முகம் கிழிந்து கிடக்குது பாரு
ரத்தம் கொதிக்குதடா மணல் மீது!
சேர்வராயன் தொடங்கி
சேரும் இடம் வரைக்கும்
வண்டல் வழங்கிய ஆறு,
மக்களை
வாழ வைக்கும் வெள்ளாறு!
அதன் தொண்டைக் குழியே
தூர்ந்து போகுது பாரு,
துடிக்கத் துடிக்க
கழுத்தை அறுக்கும் குவாரிகளை
வெட்டி எறி வேரோடு!
நம் உதிரம் கலந்த ஆறு
உருக்குலைந்ததை பாரு,
மண்ணுயிர்க்கெல்லாம்
பால் வார்த்த வெள்ளாறு – அதன்
மார்பை டிப்பர் லாரிகள்
நசுக்கிய தடம் பாரு,
நம் உறவில் கலந்த ஆறு
ஒருவன் கொள்ளைக்கா கூறு?
நம் கண்ணைத் தோண்டுவதாரு
கலெக்டர், போலீசு, தாசில்தாரு,
ஆற்றைச் சுரண்டும் அதிகாரத்தின்
அடக்குமுறைகள் மீறு!
எத்தனை தலைமுறை
பருகிய ஆறு!
எத்தனை கால்நடை
பழகிய ஆறு!
எத்தனை பறவைகள்
உரசிய ஆறு!
எத்தனை உயிரினம்
நம்பிய ஆறு!
அத்தனை உணர்ச்சியும்
அடி மணல் பாரு! – இதை
மொத்தமாய்க் கொல்லும்
குவாரிகளை மூடு!
நாணல் பூ நிழல் விழுந்தாலே
கூசும் நம் ஆறு – அதை
நாலாபக்கமும் பொக்லின் நகங்கள்
குதறி எடுப்பதைப் பாரு,
இயற்கையின் மடி அறுக்கும்
எந்திரங்கள் நம் தாய் மீது,
ஆற்றை அழிக்கும்
வன்முறைக்கு எதிராக
ஆயிரம் கரங்களாய்ச் சேரு!
ஆற்றை காக்க முடியாத
ஓட்டு கேட்கும் தேர்தல் எதற்கு?
கூட்டு சேர்ந்து மணலை
கொள்ளையடிக்கும் கட்சிகளை
வெள்ளாற்றில் வைத்து நொறுக்கு!
சுட்டுப் பொசுக்கிய வெயிலிலும்
நமக்கு சுரந்து கொடுத்த ஆறு!
ஒட்டச்சுரண்டிய போதும் – இப்போது
மக்கள் ஊற்றெடுக்கும் ஆறு!
மணல் பரப்பெல்லாம் பாரு – மடியாத
உழைக்கும் மக்களின் வரலாறு
மக்கள் என்றால் கார்மாங்குடி – என
தமிழகமே நெஞ்சு நிமிர்கிறது!
போராட்ட உணர்ச்சியின் தடம் பதிந்து
வெள்ளாற்று மணலும் சிவக்கிறது!
நம் கர்ப்பம் சிதைப்பது யாரு?
அவன் கைகளை முறிக்கும்
போராட்டப் பெருக்கில்
பொங்கும் வெள்ளாறு!
உலகையே அச்சுறுத்திச் சென்ற பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களின் வரிசையில் புதிய வரவாகச் சேர்ந்திருக்கிறது எபோலா எனப்படும் இரத்த ஒழுக்கு தொற்றுநோய். காங்கோவின் எபோலா நதிக்கரையையொட்டி 1976-களில் தோற்றமெடுத்த இந்த உயிர்க்கொல்லி நோய், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவ்வப்பொழுது பரவி ஏறத்தாழ 2,500 பேரைப் பலிகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலைமையோ முன்பைவிட அச்சமூட்டுவதாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நைஜீரியா, லைபிரீயா, செனகல், சியாரா லியோன், கினியா ஆகிய நாடுகளில் பரவத் தொடங்கிய இத்தொற்றுநோய்க்கு இதுவரை 5,000 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த டிசம்பர் மாதத்திற்குள் இச்சாவு எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுவிடும் என்பதோடு, உலகமயத்தின் விளைவாக நோயும் கண்டம் விட்டு கண்டம் பரவிவிடும் என்ற அச்சமும் உலகெங்கிலும் பரவியிருக்கிறது.
ஆப்பிரிக்க கருப்பின மக்களை அடிக்கடித் தாக்கி வரும் எபோலா நோய் கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளோ, தடுப்பூசிகளோ ஆராய்ச்சி நிலையைத் தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை. இந்த அலட்சியத்திற்கு மருந்து உற்பத்தியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் நிறவெறியும் இலாபவெறியும்தான் காரணமாகும். குறிப்பாக, கனடா அரசின் பொது சுகாதாரத் துறை பத்தாண்டுகளுக்கு முன்பே இந்நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்கி அதற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளபோதும், அம்மருந்தினை உற்பத்தி செய்யும் உரிமையை கனடா அரசிடமிருந்து பெற்றுள்ள நியூலிங்க் ஜெனடிக்ஸ் என்ற அமெரிக்க மருந்து கம்பெனி. அம்மருந்தை சந்தைக்குக் கொண்டுவராமல் முட்டுக்கட்டை போட்டுவருகிறது. ஏகாதிபத்திய கம்பெனிகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் சொத்துடமை சட்டத்தைப் பயன்படுத்தி நியூலிங்க் நிறுவனம் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டு, கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைச் சோதித்துப் பார்க்கக்கூட முடியாதபடி தடைபோட்டு வருவதாக மேற்குலக அறிவியலாளர்கள் பலரும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மருந்தே இல்லாத இந்த நிலையும்; தனியார்மயம்-தாராளமயம் ஆப்பிரிக்க கண்டத்து நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் வறுமையும் ஏழ்மையும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளும்; உள்நாட்டுச் சண்டையாலும் ஏகாதிபத்திய கொள்ளையாலும் அந்நாடுகளின் அரசுகள் போண்டியாகி நிற்பதும்தான் நோய் தீவிரமாகப் பரவுவதற்கும், சாவு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.
51 மருத்துவர்களே உள்ள லைபீரியாவிற்கும் (மக்கள்தொகை 42 இலட்சம்) 136 மருத்துவர்களே உள்ள சியாரா லியோனுக்கும் (மக்கள்தொகை 60 இலட்சம்) இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது மருத்துவர்களும், தாதிகளும், அடிப்படையான சில மருந்துகளும்தான். எபோலா நோயை எதிர்கொள்ளக்கூடிய முழுத் திறன் தன்னிடம் இல்லாதபோதும், இந்த மனிதாபிமான உதவியைச் செய்வதற்காக மருத்துவர்களையும் தாதிகளையும் கியூபா அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால், எபோலா வைரஸின் காப்புரிமையையும், அந்நோய்க்கான மருந்து உற்பத்தி உரிமையையும் பெற்றுள்ள பெரியண்ணன் அமெரிக்காவோ லைபீரியாவிற்கு மருத்துவ உதவி என்ற போர்வையில் 3,000 சிப்பாகளைக் கொண்ட படையணியை அனுப்பி வைத்திருக்கிறது.
ஏழை நாடுகள் மீதான தனது இராணுவத் தலையீடை மனித உரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் நியாயப்படுத்தி வரும் அமெரிக்காவுக்கு, அவசரகால மருத்துவ உதவி என்ற புதிய முகாந்திரம் கிடைத்திருக்கிறது. இதனாலேயே, மனிதப் பேரழிவாகக் கருத வேண்டிய இந்நோய்த் தாக்குதலை, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாக, தீவிரவாதத் தாக்குதலைப் போல வரையறுத்துள்ளன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.
_______________________________ புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
_______________________________
அன்பார்ந்த மாணவ – மாணவிகளே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே,
பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் சென்னையில், வரும் 17-ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்திருந்தோம். தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போராட்டம் ஒரு நாள் தள்ளி, 18-ம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப் போராட்டத்தையொட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பெண்கள் கல்லூரிக்கிளை மாணவத் தோழர்கள் சென்னை நகரம் முழுவதும் சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரிகளான ராணிமேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, காயிதேமில்லத், எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, லேடி விலிங்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய கல்லூரிகளில் பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் மாணவிகள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
ஆர்வமுடன் கையெழுத்திடும் மாணவர்கள், பேராசிரியர்கள் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதை பார்த்த பெண் போலீசாரும் தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டுள்ளனர். இப்பிரச்சாரங்களை பார்க்கும் மாணவிகள் அதை படம் பிடித்து பேஸ்புக்கில் போடுவதையும் செய்கின்றனர். இந்த வகையில் புமாஇமு தொடங்கியுள்ள கலாச்சார சீரழிவுக்கு எதிரான இப்போராட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள இச்சமூகத்தை தட்டி எழுப்ப நள்ளிரவிலும் பிரச்சாரம்
மாணவிகள் மத்தியில் மட்டுமின்றி சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை (கடற்கரையையொட்டிய சாலை) ஆகியவற்றில் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் புமாஇமு மாணவிகள் தீவீர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பிரசுரங்களை கேட்டு வாங்கி படித்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
கலாச்சார சீரழிவை கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த உரக்கத்தில் உள்ள மனிதர்களை தட்டி எழுப்பும் வகையில் நள் இரவிலும் (இரவு 12 மணிக்கும் ) பேருந்து, ரயில்களில் ஓயாமல் பிரச்சாரங்களை செய்து வருகிறது புமாஇமுவைச் சார்ந்த புரட்சிகர மாணவிகள் படை.
கலாச்சார சீரழிவுக்கு எதிரான பிரச்சார நடைப்பயணம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்திற்கு அனைத்துதரப்பு மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் – இளைஞர்களுடன் புமாஇமு வின் புரட்சிகர கலாச்சார படை 15-ம் தேதி மதுரவாயலில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் வரை நடைப்பயணமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
டிசம்பர் – 18, சென்னையில்…
பாலியல் வக்கிரத்தைத் தூண்டும்
ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்!
பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை ஆதரியுங்கள்.
போராட்டத்திற்கு வாருங்கள்.
வருபவர்கள் எமது புமாஇமு அலுவலக எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கடந்த 2-12-14 அன்று மணல் குவாரியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வெள்ளாற்றுப்பகுதி மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் நடத்திய முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மாவட்ட நிர்வாகம் மணல் குவாரியை தற்காலிகமாக மூடி உத்திரவிட்டது. மேலும் மணல் கொள்ளை குறித்தும் விதி முறை மீறல் குறித்தும் விசாரணைக்கும் உத்தரவிட்டது.
பின்னர் எந்த முன்னறிவிப்பும் இன்றி எந்தவிதமான அதிகாரிகள் விசாரணையும் இன்றி மணல் குவாரியை துவக்கி வழக்கம் போல் கொள்ளை தொடரப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தை விரிவுபடுத்தும் முகமாக வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் எனத் தொடங்கப்பட்டு மருங்கூரை சேர்ந்த எம்.ஜி.பி. பஞ்சமூர்த்தி அதன் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த 11 உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.
நேற்று (15-12-14 அன்று) காலை 10.00 மணி முதல் மணல் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி முற்றுகைப் போராட்டம் நடந்து வருகிறது.
வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திவரும் இப்போராட்டத்தில் வெள்ளாற்று இரு கரைகளிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள், ஆண்கள், பெண்கள் பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
சுமார் 4 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் வந்தார். காவல் துறை புடைசூழ பந்தலுக்கு வந்தார்; அவர் “போராட்ட குழுவினருடன் பேச்சு நடத்த வேண்டும்” என்று அழைத்தார். .
“மக்கள் சாப்பிடாமல் இருக்கிறார்கள். கஞ்சி காய்ச்சி கொண்டு இருக்கிறோம். நாங்கள் சாப்பிட்ட பின்புதான் பேச முடியும்” என்று வழக்கறிஞர் ராஜு கூறினார். இதனை கைதட்டி வரவேற்றனர்.
ஆர்.டி.ஓ இதனால் காத்திருந்தார். சற்று நேரம் கழித்து டி.எஸ்.பி பாண்டியன் மீண்டும் வந்தார். “உங்களுடைய கோரிக்கை என்ன” என்று கேட்டார்.
“எங்களது ஒரே கோரிக்கை மணல் குவாரியை மூட வேண்டும்” என்பதுதான் என்றார் ராஜு.
ஆர்.டி.ஓ. “குவாரியை மூடமுடியாது” என்றார்.
“அப்படியானால் பேசமுடியாது” என்றார் ராஜு.
இருந்தாலும் டி.எஸ்.பி. பேச்சை முடிக்க விடாமல், “உங்களுடைய மற்ற கோரிக்கைகளை கூறுங்கள்” என்றார்,
“கார்மாங்குடி மணல் குவாரியில் ஆண்டுக்கு 10,91,000 கன மீட்டர், அதாவது 67000 யூனிட் மணல்தான் எடுக்க அனுமதி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட மணலை ஒருமாதத்திலேயே எடுத்து முடித்துவிட்டார்கள். மேலும் இதில் பல விதி மீறல்கள் நடந்துள்ளன. மணல் குவாரியை அரசே நடத்துகிறது என்று சொல்லுகிறார் அதிகாரி. அப்படியானால் ஏன் விதி மீறல்கள் நடக்கின்றன.”
“சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தின் விதிமுறை படி ஆற்றின் கரையில் மணல் எடுக்க கூடாது. 3 அடி ஆழத்துக்கு மேல் எடுக்கக்கூடாது. எந்திரங்களை வைத்து எடுக்க கூடாடது என்று விதிமுறை உள்ளது. அது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது” என்றார் தோழர் ராஜு.
ஆனால் வருவாய் கோட்டாட்சியர், “விதிமுறை மீறல் இல்லை என்று பொதுப்பணித்துறை அறிக்கை கொடுத்துள்ளது” என்றார். மக்கள் இதை கடுமையாக எதிர்த்தார்கள்.
“விதிமீறல் இல்லை என்றால் கடந்த ஓராண்டு காலமாக மணலுக்காக பொதுப்பணித்துறை வாங்கிய பணம் எவ்வளவு என்ற கணக்கை கொடுங்கள்” என்று கேட்கப்பட்டது.
“அதைக் கொடுத்து விட்டால், போராட்டத்தை கைவிட்டுவிடுவீர்களா என்று DSP கேட்டார்.
“போராட்டத்தைகைவிட வேண்டுமென்றால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். முதலில் கணக்கை கொடுங்கள்” என்று கேட்கப்பட்டது.
“அந்தக் கணக்கை நீங்கள் பொதுப்பணித்துறையிடம் போய் கேளுங்கள்” என்றார்.
“அதெல்லாம் எங்கள் வேலையில்லை. அரசு என்றால் மாவட்ட நிர்வாகம்தான். எனவே நீங்கள்தான் தரவேண்டும்” என்றார் ராஜு.
“இந்த ஆவணங்களை வாங்கிக்கொண்டு நீதிமன்றத்துக்கு போங்கள்” என்றார்.
“நீதிமன்றம் போவது போகாதது எங்கள் பிரச்சனை. நீங்கள் முதலில் ஆவணக் கணக்குகளை கொடுங்கள்” என்றோம.
“குவாரியை மூடுவது இங்கே முடிவு செய்யப்படவேண்டியது இல்லை, அது அரசின் முடிவு” என்றார் டி.எஸ்.பி.
“அப்படியானால் விதியைமீறி அடிக்கப்பட்ட கொள்ளை, அதிகாரிகளுக்கு, அரசியல் தலைவர்களுக்கு, ஊராட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள லஞ்சம் இதைப்பற்றி நான் புகார் தருகிறேன். இதன்மீது நடவடிக்கை எடுங்கள், வழக்கு பதிவு செய்யுங்கள்” என்று கோரப்பட்டது.
புகார்மனுவை பெற்றுக்கொண்டார் டி.எஸ்.பி. அதன்பின் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
மீண்டும் டி.எஸ்.பி வந்து, “உங்களுடைய போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள் காலையில் வந்து தொடரலாமே, எதற்கு உங்களுக்கு வீண்கஷ்டம், பொதுமக்களுக்கும் கஷ்டம்” என்றார்.
ஆனால் அவரது கோரிக்கை அனைத்து மக்களாலும் நிராகரிக்கப்பட்டது. இரவிலும் மணல் குவாரியிலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர், மக்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடனும் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.பி பஞ்சமூர்த்தியுடனும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் நேற்று (15-12-2014) இரவு 10.30 மணி அளவில் நடத்திய தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு:
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்று ஆறு மாதங்கள் முடிவதற்குள்ளாகவே இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் ஒரு அங்குலம்கூட முன்னே நகர்ந்திராதபோது, கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பு எகிறிப் பாய்ந்தது எப்படி? ஊரான் சொத்தைக் கொள்ளையடித்து திடீர்ப் பணக்காரர்கள் உருவாவது போல, நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதன் வழியாகத்தான் அவர்களின் சொத்து மதிப்பு எகிறியிருக்கிறது. இக்கொள்ளைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் புரோக்கர் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது.
காப்பீடு துறையில் 49 சதவீதம் வரை அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு ஏற்பச் சட்டத் திருத்தம் கொண்டுவருவது; முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்துவது; நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது; பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 52 சதவீதம் அளவிற்குக் குறைப்பது, பல்லாயிரம் கோடி சொத்துக்களைக் கொண்டுள்ள ரயில்வே துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவது – என அவரது அரசு அறிவித்துவரும் சீர்திருத்தங்கள் இந்த புரோக்கர் வேலைக்குச் சான்று பகர்கின்றன. நரேந்திர மோடி தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் வேகத்தைப் பார்த்தால், அவரது ஆட்சிக் காலம் முடிவதற்குள் இந்த நாடே கார்ப்பரேட் முதலாளிகளின் தனிப்பட்ட சொத்தாகிவிடும்.
இத்தனியார்மய நடவடிக்கைகளை நாட்டின், மக்களின் நலனை முன்னிறுத்தித்தான் செய்வதாக வாய்பந்தல் போட்டு வருகிறார், மோடி. கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கோரியபடி தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த முயலும் அவர், அதற்கு உழைப்பே வெல்லும் எனப் பெயரிடுகிறார். தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாப்பதற்காகவே நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கப் போவதாக அறிவிக்கிறார், அவரது நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இந்த அறிவிப்பையும் இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளிகளின் சங்கங்கள் இணைந்து நடத்திய இந்தியப் பொருளாதார மாநாட்டில் வெளியிடுகிறார், அவர். அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற கவர்ச்சித் திட்டத்தைத் தொடங்கிவைத்தபொழுது, இது பொருளாதாரத் தீண்டாமையை ஒழிப்பதற்கான முயற்சி என்றார், மோடி. ஆனால், இத்திட்டத்தின் பின்னே சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் சீர்திருத்தம் மறைந்திருந்தது இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.
மோடி அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
பாசிஸ்டுகள் எப்பொழுதுமே மக்களை மயக்கும் கவர்ச்சி முழக்கங்களின் மூலம்தான் தமது நோக்கத்தை ஈடேற்றிக் கொள்கிறார்கள். இட்லர்கூட தேசிய சொசலிசம் என்ற முழக்கத்தைத்தான் மக்கள் முன் வைத்தான் என்பதை நாம் இங்கு நினைவுகூர்வது அவசியமானது. மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது நல்ல காலம் பொறக்கப் போகுது என முழங்கியதன் பின்னே முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நல்லகாலம்தான் இருந்தது, இருக்கிறது என்பதைத்தான் அவரது இந்த ஆறு மாத கால ஆட்சி நிரூபித்திருக்கிறது.
பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான தடைகளை உடைத்தெறிய வேண்டும் என ஜி-20 நாடுகள் மாநாட்டில் சூளுரைத்திருக்கிறார், மோடி. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதற்கு எதிராக விவசாயிகள் போராடத் துணிந்தால், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் போராடத் துணிந்தால், மானிய வெட்டுகளுக்கு எதிராகப் பொதுமக்கள் போராடத் துணிந்தால், அப்போராட்டங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி இதற்கு வேறு பொருள் கொள்ளமுடியாது. காங்கிரசு அணிந்துகொண்டிருந்த மனித முகத்துடன்கூடிய பொருளாதார சீர்திருத்தம் என்ற முகமூடியெல்லாம் மோடிக்குத் தேவைப்படவேயில்லை.
முந்தைய காங்கிரசு கூட்டணி அரசில் சில சில்லறை சலுகைகளை விவசாயிகளுக்கு அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை, கார்ப்பரேட் முதலாளிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப திருத்துவதற்கு மோடி அரசு முடிவு செய்திருப்பதும்; எதிர்வரும் ஜனவரி 1 முதல் சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை நாடெங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதும் இந்திய மக்களுக்கு மிகக் கொடூரமான கெட்ட காலம் நெருங்கிவிட்டதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டை 49% வரை அதிகரிக்க அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கொல்கத்தா நகரில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் நடத்திய சாத்வீகப் போராட்டம் : மெழுகுவர்த்திகளால் மோடியைச் சுட்டுவிட முடியாது.
மானியப் பணத்தைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் போடுவது என்ற நடைமுறை, மானியத்தை வெட்டுவதற்கான தந்திரமான திட்டமாகும். ஏனென்றால், இத்திட்டப்படி ஒவ்வொரு குடும்பமும் சமையல் எரிவாயு உருளையை சந்தை விலையில் – கிட்டதட்ட 900 ரூபாய் கொடுத்து வாங்கிய பிறகுதான் மானியம் வங்கிக் கணக்கில் போடப்படும். மாதச் சம்பளக்காரர்களே மாதக் கடைசியில் தடுமாறி நிற்கும்பொழுது, தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் எரிவாயு உருளையை இனி எட்டாக் கனியாக்கிவிடும். சமையல் எரிவாயுவிற்கு அடுத்து, உணவு மானியத்திலும் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுகமாக வெட்டிவிடுவதற்குத் தயாராகி வருகிறது, மோடி அரசு.
மானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்பதை பிரீமியம் ரயிலும், டீசல், பெட்ரோல் மீதான கலால் வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதும் உணர்த்துகின்றன. பிரீமியம் ரயில் கட்டணம், அந்த ரயில் புறப்படும் தேதியும் நேரமும் நெருங்க நெருங்க பல மடங்காக ஏறிக்கொண்டே போகும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தனியார் ரயில் பயண முகவர்கள் பயணிகளின் அவசரத்தையும், டிக்கெட்டுக்கான டிமாண்டையும் பொருத்து சட்டவிரோதமாக அடித்துவந்த கொள்ளையை, மோடி அரசு பிரீமியம் ரயில் மூலம் சட்டபூர்வமாக ரயில்வே துறையே கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடாக மாற்றிவிட்டது. மேலும், முன்பதிவு பயணச் சீட்டு, உடனடி பயணச் சீட்டு வழங்கும் சேவைகளை முழுக்கமுழுக்கத் தனியாரிடம் ஒப்படைக்கும் ஏற்பாடு மூலம் கள்ளச் சந்தைக்கான புதிய வாய்ப்புகளைச் சட்டபூர்வமாகவே திறந்துவிட்டுள்ளது.
சமீபத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்த பிறகும், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விற்பனை விலை குறையவில்லை. இதற்குக் காரணம், கச்சா எண்ணெயின் விலை சரிந்த நேரம் பார்த்து, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதுதான். இதுவொரு தந்திரமான முடிவு. இந்த உயர்வின் மூலம் இரட்டை இலாபத்தை மோடி அரசு அடைந்திருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை சரிந்தாலும், தனது வரி வருவாய் சரியாமல் இருப்பதற்கு ஏற்ப இந்த வரி உயர்வை அமலாக்கியது ஒன்று. மற்றொன்று, எதிர்காலத்தில் கச்சா எண்ணெயின் விலை உயரும்பொழுது கூடுதலாக வரி வருவாய் கிடைப்பதையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது.
ஏகாதிபத்திய முதலீட்டாளர்களின் முழுநம்பிக்கையைப் பெறுவதுதான் இந்த அரசின் இலட்சியமாக இருக்கிறது. அதற்கேற்றபடி வங்கித் துறை, காப்பீடு துறை, ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை என கேந்திரமான துறைகள் அனைத்திலும் தனியார்மயம் கிடுகிடுவென புகுத்தப்படுகிறது. காப்பீடு துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடை அனுமதிக்கும் முடிவை முந்தைய காங்கிரசு அரசே எடுத்திருந்தது. அதற்குப் பின்வந்த மோடியோ அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களும் காப்பீடு துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ப அத்துறையைச் சூதாடிகளுக்குத் திறந்து விடுகிறார்.
தனியார்மயம் என்பதே பொதுச் சொத்துக்களை ஏகாதிபத்திய முதலாளிகளும், உள்ளூர் தரகு முதலாளிகளும் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுதான் – அச்சொத்து அலைக்கற்றையாகவோ, நிலக்கரி வயலாகவோ, பொதுத்துறை நிறுவனங்களாகவோ இருக்கலாம். மைய – மாநில அரசுகள், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியோர் இக்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் மாமா வேலையைத்தான் கௌரவமாகவும் சட்டபூர்வமாகவும் செய்து கொடுக்கின்றன. அந்த வகையில் நரேந்திர மோடி கார்ப்பரேட் முதலாளிகளின், முதலீட்டாளர்களின் மனம் கவர்ந்த மாமாவாக இருக்கிறார். தனது முதல் பட்ஜெட்டிலேயே நல்ல இலாபத்தில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளைத் தனியாரிடம் விற்கும் முடிவை அறிவித்திருந்த மோடி அரசு, இப்பொழுது நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை தடாலடியாக எடுத்திருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் மாடர்ன் பிரட், வீ.எஸ்.என்.எல்., பால்கோ எனப் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனங்கள் தனியார் வசமான பின்னே வேலையிழப்புதான் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினையாக உருவெடுத்தது. சென்னை-கிண்டியில் அமைந்திருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்டது. இப்பொழுது அந்நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. அங்கு வேலை பார்த்துவந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. நமக்குப் பொதுத்துறை நிறுவனமாகத் தெரிவது தரகு முதலாளிகளின் கண்களுக்கு ரியல் எஸ்டேட்டாகத் தெரிகிறது என்பதுதான் உண்மை. ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் வேலையைப் பாதுகாப்பதற்காகவே அவற்றைத் தனியார்மயமாக்க முடிவு செய்திருப்பதாக”க் கூசாமல் புளுகி வருகிறார்.
தொழிற்சாலைகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வரி ஏய்ப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பின்தேதியிட்டு வரி விதிக்கும் சட்ட முன்வடிவு கைவிடப்படுகிறது. இதுவரை இருந்து வந்த வணிக வரிச் சட்டங்கள் கைவிடப்பட்டு, அதனிடத்தில் பொருள் மற்றும் சேவை வரி என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தும் முயற்சி தீவிரப்படுத்தப்படுகிறது. இத்திருத்தங்கள் மூலம் முதலீட்டாளர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த “இன்ஸ்பெக்டர் ராஜ்”-க்கும், சிவப்புநாடா முறைக்கும் முடிவு கட்டுவதாக அறிவிக்கிறது, மோடி அரசு. கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் மீது அரசிற்கு இருந்துவந்த பெயரளவிலான கட்டுப்பாடுகளும், கண்காணிக்கும் உரிமையும் கைவிடப்படும் அதேவேளையில், மக்கள் மீதான கண்காணிப்போ ஆதார் அட்டை உள்ளிட்டுப் பல்வேறு வழிகளில் தீவிரமடைகிறது.
“எட்டப்பனை நல்லவனாக்கிவிட்டார் எனது அருமை நண்பர் தொண்டைமான்” – இது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வந்துள்ள புகழ்பெற்ற வசனம். மோடியின் ஆட்சி அந்த வசனத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. எட்டப்பனிடத்தில் மன்மோகன்சிங், தொண்டைமான் இடத்தில் நரேந்திர மோடி என்பதுதான் வேறுபாடு.
“டாஸ்மாக்” – சாராயக் கடைகளுக்கு, மின்வாரியம் வசூல் மையங்களுக்கு, “பிரீமியம்” ரயில்களுக்கு இவ்வளவு தொகை கல்லாக் கட்ட வேண்டும்” என்று தான்தோன்றித்தனமாக ஒரு இலக்கு வைத்து அரசே கொள்ளையிடுவது – வழிப்பறி செய்வது பற்றிய செய்தி விமர்சனம் எழுதுவதற்கு எண்ணினோம்; ஆனால், இத்தனை நாட்களில் இத்தனைப் பேரைக் கொல்வது என்பதாக அரசே இலக்கு வைத்து கொலை செய்யும் ஒரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.
நவம்பர் 8 அன்று, சட்டிஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம், பென்டாரி என்ற கிராமத்தில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு கருத்தடை சிறப்பு முகாமில், 83 பெண்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ததில் 13 பெண்கள் மரணமடைந்தார்கள். அடுத்த இரண்டு நாட்களில் அதே மாவட்டத்தில் உள்ள குவரெல்லா கிராமத்தில் நடந்த கருத்தடை சிறப்பு முகாமில், 56 பெண்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ததில் ஒரு பழங்குடிப் பெண் மரணமடைந்தார். இவ்விரு முகாம்களிலும் மேலும் பல பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்மாநிலத்தின் வெவ்வேறு மருத்துமனைகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பென்டாரி கிராமத்தில் நடந்த கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பின் உயிருக்குப் போராடும் நிலையில் பிலாஸ்பூர் மருத்துவமனையில் கிடத்தப்பட்டுள்ள இளம் தாய்மார்கள்.
“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற வசனம் எல்லா சந்தர்ப்பவாதக் குரூரங்களையும் அரசியல் கிரிமினல் குற்றங்களையும் நகைச்சுவை வேடிக்கையாக்கித் தட்டிக்கழிக்கும் தப்புவிக்கும் விசயங்களாக்கி விட்டதைப்போல, நமது மக்களின் அன்றாடச் சாவுகள் சகஜமாகிவிட்டன. பிழைகளோடு எழுதப்பட்ட காகிதத்தைக் கசக்கிக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போடுவதைப் போல இந்தச் சாவுச் செய்திகள் துச்சமாக மதிக்கப்பட்டு, மறந்து போய்விடுகின்றன.
உணர்வுகள் மரத்துப்போன இந்தத் “தேசத்தில்” மக்கள் உயிர்களுக்கு இவ்வளவுதான் மதிப்பு! ஆனால், உணர்வுகள் இன்னமும் மரத்துப்போகாத கொஞ்சம் பேருக்கு இந்த சட்டிஸ்கர் மாநிலச் சாவுச் செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கிறது!
கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் டாக்டர் குப்தா
ஏனென்றால், இச்சாவுகள் ஏதோ மருத்துவச் சிகிச்சையின்போது, “கிரிமினல்” அலட்சியத்தால் நேர்ந்துவிட்ட தவறுகள் அல்ல. இவ்வாறான “சாவுகள்” நிகழ்வற்கான எல்லா காரணிகளையும் -அடிப்படைகளையும் மருத்துவ மற்றும் அரசு நிர்வாகமே உருவாக்கி வைத்திருந்தது; இவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியங்கள் மனித மதிப்பீட்டிற்கு, அதுவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் மதிப்பீட்டிற்கு அப்பாற்பட்டதும் அல்ல. ஆகவே, தெரிந்தே நிகழ்த்திய இச்சாவுகளை ஏன் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலை என்று சொல்லக்கூடாது! அதுவும், இவ்வளவு காலத்துக்குள் இவ்வளவு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்து செய்து முடித்த கொலைகள் என்று ஏன் சொல்லக் கூடாது!
பிலாஸ்பூரில் சிறப்பு முகாம்களில் நடத்தப்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகள், மக்கட்தொகையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவது என்ற நோக்கில் மட்டுமல்ல, அங்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும் பெண்களைக் கொலை செய்வதன் மூலம் மக்கள் தொகையைக் குறைப்பதும் நடந்திருக்கிறது. இன்னும் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். “அங்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்ட பெண்களில் எல்லோரும் செத்து விடவில்லை; ஆகவே, இப்படி நடக்கும் என்பது தங்களுக்குத் தெரியாது, நேர்ந்துவிட்ட சாவுகளுக்குத் தாங்கள் பொறுப்பல்லவென்றும்” அச்சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்தவர்கள் வாதாடவும் கூடும்.
ஆனால், கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் குறித்த முந்தைய அனுபவங்கள் அடிப்படையில் விதிக்கப்பட்ட தடைகள்,நெறிமுறைகள், வழி காட்டுதல்கள் எல்லாவற்றையும் இலக்கு ஒன்றையே குறியாக வைத்து பிலாஸ்பூர் சிறப்பு முகாம்களில் மீறப்பட்டுள்ளன. இந்த வகையில் அதிகாரிகள், ஆட்சியாளர்களோடு கூட்டுச்சேர்ந்து, தொழில்முறை “தர்மங்களை-நெறிமுறைகளை” மீறி மருத்துவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். அரசு விருதுகளையும் பதவி உயர்வுகளையும் பரிசுத்தொகைகளையும் குறிவைத்து போலி மோதல்களை (“என் கவுண்டர்களை”) அரங்கேற்றும் இராணுத்தினர், துணை இராணுவத்தினர், போலீசைப்போல இம்மருத்துவர்கள் கொலைகாரர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள்.
இலக்கு வைத்து நடத்தப்பட்ட கருத்தடைக் கொலைகளை எதிர்த்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் மகளிர் அமைப்புகளும் இணைந்து டெல்லியிலுள்ள சட்டிஸ்கர் பவன் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்.
“ஓர் உதவியாளரை வைத்துக்கொண்டு ஒரு மருத்துவர், மூன்று ‘லேப்ரோஸ்கோப்’ கருவிகளைக் கொண்டு ஒருநாளைக்கு முப்பதுக்கும் மேலாக கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடத்தக்கூடாது. மேலும் சில அறுவைச் சிச்சை மருத்துவர்களையும் உதவியாளர்களும் ‘லேப்ரோஸ்கோப்’ கருவிகளும் இருந்தாலும் ஒரு முகாமில் ஒருநாளைக்கு ஐம்பதுக்கும் மேலாக கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடத்தக்கூடாது” என்று உச்சநீதிமன்றம் 2008-ஆம் ஆண்டு தடை விதித்திருக்கிறது. (ஏற்கெனவே, இவ்வாறான பல கொலைகள் நடந்திருப்பதால்தான் உச்சநீதி மன்றம் தடை விதிக்க நேர்ந்திருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்!)
ஆனால், பென்டாரி என்ற கிராம சிறப்பு முகாமில் ஒரே நாளில் 5 மணிநேரத்தில் 83 பெண்களுக்கும், குவரெல்லா கிராம சிறப்பு முகாமில் ஒரே நாளில் 56 பெண்களுக்கும் ஒரே உதவியாளரை வைத்துக்கொண்டு ஒரே மருத்துவர் ஒருநாள் விட்டு ஒரு நாள் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இரத்தப் போக்கோ, தொற்றோ ஏற்படக்கூடாது என்பதற்காக சிறுதுளைபோட்டு அறுவைச் சிகிச்சை செய்யும் ‘லேப்ரோஸ்கோப்’ முறையைப் பயன்படுத்தினாலும், குறித்த நேரத்தில் இத்தனை பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்பதால் அக்கருவியைக் கொதிநீரில் கழுவிக்கூட (அப்படி ஒருமுறை செய்வதற்குக் குறைந்தது 20 நிமிடம் பிடிக்கும்) அடுத்தடுத்த பெண்களுக்குப் பயன்படுத்தவில்லை.
மூன்றாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டு பாழடைந்த மருத்துவமனைக் கட்டிடத்தில், படுக்கை வசதிகள் ஏதுமின்றி, தரையில் கிடத்தி, நஞ்சாகிப்போன ‘லேப்ரோஸ்கோப்’ கருவியை வைத்துத்தான் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதனால், அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்ட பெண்களுக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட்டது; சீழ்கட்டியது, வலியால் துடிதுடித்துப்போன அவர்கள் ஒவ்வொருவராக மாண்டுபோனார்கள். காலாவதியாகிபோன மற்றும் கலப்பட மருந்துகளே கொடுக்கப்பட்டன. அதன் பிறகு நடந்த விசாரணையில் மருந்துக் கொள்முதலில் ஊழல்கள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறன.
ஏன் இவ்வளவு முறைகேடுகள்? ஏன் இவ்வளவு அவசரம்? ஏதுமறியாத ஏழைப் பெண்கள் இப்படிக்கொல்லப்படுவது நிற்குமா? அறிவிக்கப்படாத அரசிதழான “தி இந்து” எழுதுகிறது, “கருத்தடை செய்து கொள்ளும் பெண்களுக்கு ஈட்டுத்தொகைகள் வழங்குவதும் மற்றும் மருத்துவர்களுக்கு அறுவைச் சிகிச்சை எண்ணிக்கைகளுக்கேற்ப ஊதியமளிப்பதும், கருத்தடை இலக்குகளை எட்டுவதற்கான உயிர்க் கொல்லி நிர்ப்பந்தம் இருக்கும் வரை விதிகள் மீறப்படுவதும், மரணங்கள் நிகழ்வதும் வருத்தமளிக்கும் வகையில் நீடிக்கும். இதை மேலும் மோசமாக்குகிறது குழந்தைகள் பிறப்பு, பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பதின்மர்களின் ஆரோக்கியம் குறித்த 2020 ஆண்டுக்குள் ‘ஆயிரமாண்டுகளின் வளர்ச்சி இலக்கு’.
இதைச் சாதிப்பதற்கான வழிவகையாகக் கருத்தடைக்கு மாறுபாடுகளின்றி அரசாங்கம் கவனம் செலுத்துவது இருக்கிறது. ‘உயர் கவனத்துக்குரிய பதினோரு மாநிலங்களின்’ முதலமைச்சர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநல மத்திய அமைச்சகம் 2014, அக்டோபர் 20 அன்று அனுப்பிய கடிதத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. இம்மாநிலங்களில் கருத்தடை செய்து கொள்ளும் பெண்களுக்கு ஈட்டுத் தொகையும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களுக்கு ஊதியமும் அதிகரிக்கப்பட்டன. வேறுபிற கருத்தடை முறைகளோடு ஒப்பிடும்போது அறுவைச் சிகிச்சை செய்யும் எண்ணிக்கை ஏற்கெனவே நமது நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. கருத்தடை அறுவைச் சிகிச்சைக்காகப் பெண்களைத் திரட்டுமாறு அங்கீகரிக் கப்பட்ட சமூக சுகாதார ஊழியர்களை (ஆஷா) நிர்ப்பந்திக்கும்போது, அதன் பொருள் இதுதான்: இம்மாநிலங்களில் பாதுகாப்பான கருத்தடைமுறைகள் குறித்த ஆலோசனைகளும் தகவல்களும் குறைவான அளவிலேயே வழங்கப்படும்.”
அழிந்துவிடும் நிலையில் உள்ள பைகா பழங்குடி இனத்தவருக்கு கருத்தடை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வினத்துப் பெண்ணுக்கு தடையை மீறி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மாண்டுபோனதைப் பற்றிக் கேட்டதற்கு, அவள் ஒப்புதலோடுதான் செய்ததாக மந்திரி சொல்கிறார். இதிலிருந்தே தெரிகிறது, அப்பெண்ணுக்கு என்ன, எப்படிப்பட்ட ஆலோசனைகளும் தகவல்களும் வழங்கப்பட்டிருக்கும் என்பது!
இந்து ஏடு தரும் செய்தியிலிருந்தே தெரிகிறது: இத்தனை நாட்களில் இத்தனை பேரைக் கொல்வது என்பதாக அரசே இலக்கு வைத்து கொலை செய்தது என்பது கற்பனையோ அல்லது மிகையான குற்றச்சாட்டோ அல்ல, ஆதாரபூர்வமான உண்மைதான்!
பீகார் மாநிலத்தின் நேபாள எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் 2003-ல் நடந்த கருத்தடை சிறப்பு முகாமின் கோரக் காட்சி (கோப்புப் படம்)
‘உயர் கவனத்துக்குரிய பதினோரு மாநிலங்களில்’ ஒன்று தமிழ்நாடு என்பது மட்டுமல்ல, கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் மாண்டுபோவதில் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதும் தமிழ்நாடுதான். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளிலும், பாலியல் குற்றங்களிலும் கூட முதலிடத்தில் இருப்பதும் தமிழ்நாடு தான். கடந்த ஒரு மாதத்தில் 27 குழந்தைகளைப் பலிகொடுத்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளங் குழந்தைகள் மூச்சுத்திணறி மாண்டு போவதில் மேற்கு வங்கத்தை விஞ்சி முதலிடத்துக்குப் பாய்வதும் தமிழ்நாடுதான்.
40 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா நிறைவேற்றிய உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சியால் அமெரிக்கப் பாதுகாப்புக்கும் எல்லை தாண்டிய நலன்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள்” என்ற தேசியப் பாதுகாப்பு ஆய்வறிக்கை (NSSM 200) பின்வரும் செய்தியைச் சொல்லுகிறது. “அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வளர்ச்சியடையாத நாடுகளின் கனிம வளங்கள் அதிகரித்த அளவில் தேவைப்படும். இந்நாடுகளில் ஏற்படும் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக வளங்களையும் மூலாதாரங்களையும் அமெ ரிக்கப் பொருளாதாரம் பெறுவது தடைப்படக் கூடும். எனவே, இந்நாடுகளின் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானது” என்கிறது, அந்த அறிக்கை.
மக்கள்நலத் திட்டங்களைக் காட்டிலும் அதிகமாகக் கருத்தடைத் திட்டங்களுக்கு இந்திய அரசு செலவிட்டிருக்கிறது. ஏகாதிபத்திய மற்றும் கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களுக்காக இலக்கு வைத்து நமது நாட்டுப் பெண்களின் கருப்பைகளை நச்சுக் கருவிகளைக் கொண்டு அறுக்கிறார்கள், அரசும் ஆட்சியாளர்களும்.
மனித உரிமை பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை
11ம் ஆண்டு விழா நிகழ்வுகள்
மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மடீசியா, மீனாட்சி அரங்கத்தில் 6.12.2014 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளைச் செயலர் லயனல் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.
மனித உரிமை தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ளவும், மனித உரிமைக்கான போராட்ட உணர்வைத் தூண்டும் விதமாகவும் இந்த நிகழ்வு நடந்தது.
லயனல் அந்தோணி ராஜ்
“கடந்த 10 ஆண்டுகளில் மனித உரிமைப் பிரச்சனைகள் இந்தியச் சமூகச் சூழலிலும் தமிழக அரசியல், சமூக சூழலிலும் மிகக் கடுமையானதாக மாறி வருகின்றன. மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மனித உரிமைக்கான போராட்டம் முன்னை விட அத்தியாவசியமாகிறது.
சுவரொட்டி ஒட்டக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. சமீபத்தில் ம.உ.பா.மை. ஒட்டிய சுவரொட்டிக்காக வழக்குப் போட்டுள்ளதாக போலீசு தெரிவித்தது. அ.தி.மு.க.வினர், சாதி அமைப்புகள், மத அமைப்புகள், சினிமாக்காரர்கள் என்று பலதரப்பினரும் சுவரொட்டி ஒட்டுகின்றனர், ஆனால் போலீசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ‘சுவரொட்டி ஒட்டுவதற்கு முதலில் காவல் உதவி ஆணையர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாநகராட்சியிடம் அனுமதி பெற்று மீண்டும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றுத் தான் சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும்’ என்கிறார்கள். பொதுக் கூட்டங்களுக்கு நீதிமன்றத்திலே அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ம.உ.பா. மையம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. ஜெயா மீதான தண்டனையை வரவேற்றும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல் கொள்ளை, கல்வி தனியார் மயம், மதுரைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் என பல பிரச்சனைகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்திருக்கிறோம்.
தொடக்கத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் பலரும் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதில் உறுப்பினராக இருப்பது பயன்படும் எனக் கருதுகிறார்கள். இது உறுப்பினர்களைப் பாதுகாக்கும் அமைப்பு அல்ல, மக்களுக்காகப் போராடி வருகிற அமைப்பு. சட்டபூர்வமாகவும், சட்டத்திற்கு வெளியேயும் போராடும் அமைப்பு. போராடத் தயாராக இருப்பவர்கள் இதிலே உறுப்பினராகச் சேருங்கள்”
என அறைகூவி லயனல் அந்தோணி ராஜ் உரையாற்றினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு விவகாரம் பற்றி மக்கள் கலை இலக்கிய கழக மாநில பொதுச்செயலாளர்தோழர் மருதையன்.
தோழர் மருதையன்
அவரது சிறப்புரையிலிருந்து சில கருத்துக்கள்….
“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்குப் பிரச்சனை இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஆனால் தமிழக அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருக்கின்ற பிரச்சனை. 2006-ம் ஆண்டு தி.மு.க அரசு கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி கோயில் பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். அர்ச்சகராகப் பயிற்சி பெற்ற, தகுதி உள்ள மாணவர்களுக்குப் பணி வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார்கள். இதனால் தகுதி பெற்ற அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள்.
இந்தப் பிரச்சனை இப்போது உச்ச நீதிமன்றத்தில் இறுதிக் கட்ட விசாரணையை எட்டி இருக்கிறது. சில ஆண்டுகளாக போக்குக் காட்டி வந்த இந்த வழக்கு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் முடிந்துவிடும் எனக் கருதுகிறேன். இந்த வழக்கில் மனித உரிமை பாதுகாப்பு மையம், அர்ச்சக மாணவர்கள் சார்பில் ஒரு தரப்பினராக இணைந்துள்ளது. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை முன் வைத்த பெரியாரின் தற்போதைய வாரிசுகள் இதில் தலையிடவில்லை. தி.க. தலையிடவில்லை. தி.மு.க. தலையிடவில்லை. மாணவர்கள் தற்போது அனாதையைப் போல் கேட்பாரில்லாதவர்களாக இருக்கிறார்கள். திராவிட வாரிசுகள், பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் இதை செய்வதற்குத் துப்பில்லை.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கு மிகுந்த செலவு ஆகிறது. வழக்கறிஞர்களுக்கு மிகுந்த அளவு பணம் தரவேண்டும். நடிகர்கள் கால்சீட் போல் வழக்குக்கு ஆஜராவதற்கு வழக்கறிஞர்கள் பணம் கேட்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது உடனே பணத்தைத் திரட்டிக் கொண்டு ஓட வேண்டும். திட்டமிட்ட முறையில் கூட உச்சநீதிமன்றம் செயல்படுவதில்லை. கீழமை நீதிமன்றத்தைவிட தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகிறது உச்ச நீதிமன்றம். இதுவரை இவ்வழக்கில் 20 தடவை வாய்தா வாங்கி யிருக்கிறார்கள். ஆனால் தற்போது தமிழக அரசு நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக் கொள்கிறோம் என்று பேசிவருகிறது. அதன் அர்த்தம் ஆகம விதிப்படி உள்ள கோயில்களைத் தவிர அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிற கோயில்களில் பணி நியமனம் என்கிறார்கள். அர்ச்சக மாணவர்களைச் சங்கத்தை விட்டு விலகிவிடுமாறு மிரட்டினார்கள். அவர்களையும் நாம் தொடர்ச்சியாகப் பாதுகாக்க வேண்டியதிருந்தது.
சமீபத்தில் வீரமணி கருவறை நுழைவுப் போராட்டம் அறிவித்தார். ஆனால் போராட்டம் நடைபெறவில்லை. இந்த வழக்கில் இவர்கள் அனைவரும் கள்ள மவுனம் சாதித்து வருகிறார்கள். தங்கள் சொத்துக்களை, அரசியலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்கிறார்கள். இதை மக்கள் கண்டித்துப் போராட முன்வர வேண்டும்.
பெரியார் 1972-ல் கருவறைப் போராட்டம் அறிவித்தார். அதன் பின் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார். ஆகம விதிப்படி தகுதியுள்ளவர்கள் அர்ச்சகராவதற்குப் பதில் வாரிசு அடிப்படையில் 70% அர்ச்சகராக உள்ளனர். இதைக் கண்டித்து அரசு நீதிமன்றத்திற்குப் போயிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
தில்லைக் கோயிலை அறநிலையத்துறை எடுக்க உத்தரவு வாங்கிக் கொடுத்தோம். இது 2009-ம் ஆண்டு வழக்கு. பார்ப்பன நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தது. இந்த நீதிபதி தான் சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடைவிதித்தவர். ஜெயாவுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர். தில்லை வழக்கில் எங்களால் முடிந்த வரை போராடிப் பார்த்தோம். கட்டபஞ்சாயத்துப் போல சொத்து தீட்சிதர்களுக்குப் போனது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கில் தமிழக அரசு எதிரிகளுக்குத் துணை போகிறது. இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக நாம் போராடுவதற்குக் காரணம் தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு மரபு உள்ளது. அந்த மரபின் தொடர்ச்சியாகத் தான் நாம் இதை எதிர்த்துப் போராடி வருகிறோம். இந்த மரபைத் தான் ஒழித்துவிடத் துடிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல்.
தற்போது தருண் விஜய்க்குத் தமிழ் மீது திடீர்க் காதல். நடிக்கிறார்கள். திருவள்ளுவரைப் பிரபலப்படுத்துவது, தமிழ் பற்றிப் பேசுவது. இதெல்லாம் செய்கிறார். ஆனால் தருண் விஜய் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார். சமஸ்கிருதத்தை ஏற்க மறுப்பவர்களைத் தேச விரோதிகள் என்றார்.
சமீபத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தி வருகிறார்கள். ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கிறார்கள். ராஜராஜன் தான் பார்ப்பனர்களைக் கொண்டு வந்து குடியமர்த்தி பார்ப்பனியம் தழைத்தோங்க வழி வகுத்தான். பெரியார் சிலையை உடைத்தது போன்ற பல தருணங்களிலும் நாம் போராடி வந்திருக்கிறோம். பெரியார் சிலையை உடைத்த போது இராமனை செருப்பால் அடித்தோம்.
சமீபத்தில் பா.ஜ.க மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி ராமனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் முறைகேடாகப் பிறந்தவர்கள் என்றார். நாம் கேட்க வேண்டும் ராமன் யார்? அவன் அப்பன் யார் என.
பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்கப் போகிறோமா? அல்லது சரணடையவா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கில், பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம். வழக்கிற்கு வக்கீல் வைத்தால் போதும். எங்களுக்கு நீதிமன்றத்தில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் போராடாமல் தோற்கக்கூடாது என்பதால் போராடி வருகிறோம்.”
“தாதுமணல் கொள்ளை” ஆவணப்படம் வெளியிடுவதற்கு முன்பாக அதைக் காட்சிப் பதிவு செய்த போது எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி ம.உ.பா. மையத்தின் மாவட்டத் துணைச் செயலர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசியதாவது,
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
“கிரானைட் கொள்ளையைப் போல் தாது மணல் கொள்ளை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிக்கை தருகிறார். உடனே உண்மையறியும் குழு அமைத்து விசாரணைக்குச் செல்கிறோம். கடற்கரைப் பகுதி முழுக்க அழிவு. வைகுண்டராசன் ஆட்கள் எங்களைப் பின்தொடர்வது, மிரட்டுவது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருந்தது.
பெரியதாழையில் வைகுண்டராசனின் சகோதரர் சுகுமாரன் கடல் நீரைத் திருடி, கடலை ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அங்கே இருந்த தூண்டில் வளைவுப் பாலத்தை அழித்துவிட்டார். தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தினோம். அதில் வந்து ரவுடித்தனம் செய்து கூட்டத்தைக் கலைக்கப் பார்த்தார்கள். எஸ்.பி, டி.ஐ.ஜியிடம் பேசினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நமது தோழர்கள் கம்பு, தடி என களத்தில் இறங்கிய பின் தான் போலீசு வந்து அவர்களை அப்புறப்படுத்தியது.
சமீபத்தில் வைகுண்டராசன் மீது சி.பி.ஐ. லஞ்ச வழக்கு போட்டுள்ளது. அதற்காகத் தூத்துக்குடியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த பிரச்சனையில் நாம் தலையிட்டதிலிருந்து விலகிக்கொள்ள எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஒருவர் பிரச்சாரத்தின் போது ரூ 25,000/- நன்கொடை தந்தார். அவர் நோக்கம் சந்தேகத்திற்கு உரியதாக இருந்ததால் அதை திருப்பித் தந்தோம். பணம் தருவது அல்லது போலீசு, ரவுடிகளை வைத்து மிரட்டுவது என்று செயல்படுகிறார் வைகுண்டராசன். அவருடைய உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படாத, பணத்திற்கு மசியாத ஆட்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் கடைசி வரையில் செயல்படுவோம்.”
“தாது மணல் கொள்ளை” ஆவணப்படத்தை தோழர் மருதையன் வெளியிட, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலர் திருநாவுக்கரசு அவர்கள் பெற்றுக் கொண்டார்.
“தாது மணல் கொள்ளை” ஆவணப்பட வெளியீடு
“தாதுமணல் – கிரானைட் – ஆற்றுமணல் கொள்ளை : சகாயம் குழு விசாரணையை முடக்கும் அரசு! தீர்வு என்ன?” என்ற தலைப்பில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேசியதாவது,
“கொசு கடித்தால் அனிச்சைச் செயலாக அதை அடிக்கிறோம். அதுபோலத்தான் நமது பிரச்சனைகளுக்கு உடனே எதிர்வினை ஆற்ற வேண்டும். நம்மைப் பாதிக்கின்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக நாம் ஏன் போராடவில்லை. அதற்குத் தான் இந்தக் கூட்டம். ஒருவர் பிச்சை எடுக்கிறார் என்றால், ஒரு பிரச்சனைக்குப் போலீஸ் வழக்குப் பதியவில்லை என்றால், ஒரு பெண் தீக்குளிக்க முயன்றால் நாம் ஏன் என்று கேட்க வேண்டும்.
தோழர் சி ராஜூ
சகாயம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். 23 ஆண்டுகள் சர்வீஸில் 22 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். நாங்கள் அவரை நாமக்கல் கலெக்டராக இருந்த போது சந்தித்திருக்கிறோம். ஒரு தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் 7 பேர் இறந்து போனார்கள். உடனே நாங்கள் ‘தேர்தலுக்குத் தேவையற்ற பிணங்கள்’ என்று சுவரொட்டி ஒட்டினோம். கலெக்டர் சகாயத்தை சந்தித்து பீகார் தொழிலாளர்கள் பிணங்களை அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உத்தரவு பெற்றுத் தந்தோம். ஆனால் இயற்கை வளக் கொள்ளையில் சகாயம் என்ன செய்ய முடியும்?
ஒவ்வொரு ஊழலிலும் நாம் அதன் மதிப்பைச் சொல்ல முடியும். ஆனால் வைகுண்டராசன் கொள்ளை எவ்வளவு, அதன் மதிப்பு எவ்வளவு எனச் சொல்ல முடியாது. இதைச் சொல்லத்தான் சகாயம். ஆனால், இதைச் சொல்லவிடக் கூடாது என நினைக்கிறார்கள். அதனால்தான் தடைபோடுகிறார்கள்.
உமாசங்கர் ஐ.ஏ.எஸ். எல்காட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த போது சில மின்னணுப் பொருட்கள் வாங்குகிறார். ஆனால் அதில் ராஜாத்தி அம்மாள் தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அதை உமாசங்கர் புறக்கணித்தார். மாறன் சகோதர்களை என்.எஸ்.ஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார். எவ்வளவு கொள்ளை, திருட்டு, யார் உடந்தை என வாக்கு மூலம் தாக்கல் செய்தார். அதன் விபரங்களை ம.உ.பா.மையம் வாங்கி வழக்குப் போட்டோம்.
சகாயமும் எந்த உண்மையையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக மதுரையோடு நிறுத்துகிறார்கள். ஆற்று மணல், தாது மணல் கொள்ளைகளை விசாரிக்க விடாமல் முடக்குகிறார்கள். ஒருவேளை சகாயம் கொள்ளைகள் குறித்து நடவடிக்கைக்குப் பரிந்துரை கொடுப்பார். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ககன்தீப்சிங் பேடி அறிக்கையைத் தந்தார். அரசு வெளியிடவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றால் மதுரையில் வெளியிட நீதிமன்றம் உத்திரவிட்டது. சென்னை நீதிமன்றம் வேண்டாம் என்றது.
சகாயம் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி ஒரு வழக்குத் தொடுத்தார். அதன் அடிப்படையில் விசாரிக்க குழு நியமித்தது நீதிமன்றம். ஆனால் தமிழக அரசு அதை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றது. ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. மீண்டும் மேல் முறையீடு செய்தார்கள். ஆனால் ரூ 10,000/- அபராதம் போட்டது உயர் நீதிமன்றம். சகாயம் மதுரைக்கு வருவதற்கு ரயிலில் இடம் கூட ஏற்பாடு செய்து தரவில்லை தமிழக அரசு. சென்னையிலிருந்து காரில் வந்துள்ளார். நீதிமன்றத்தில், தான் எந்த மாவட்டத்தில் எந்தப் பிரச்னையைப் பற்றி விசாரிக்க வேண்டும் எனக் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மதுரையை மட்டும் பார்த்தால் போதும் என்று இப்போது சொல்லிவிட்டது உயர் நீதிமன்றம்.
ஆற்று மணலை பொதுப்பணித்துறை மட்டும் தான் அள்ளுகிறது என்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு முழுக்க முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் பினாமிகள் தான் அள்ளுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் இயற்கை வளக் கொள்ளைகள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் போலீஸையும் கூட்டிக் கொண்டே திருட வருவது போலத்தான், சுற்றுச் சூழல் ஆணையம், அனைத்து அரசு அதிகாரிகள், காவல் துறை ஆகியவர்களின் துணையோடு தான் கொள்ளை நடக்கிறது. கல்வி விசயத்தில் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக சிங்காரவேலர் கமிட்டி செயல்படுகிறது.
ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கிறார்கள். அதற்குச் சுற்றுசூழல் துறை அனுமதி அளிக்கிறது. மேலும் எதிர்த்தால் பசுமைத் தீர்ப்பாயம் போங்கள் என்கிறார்கள். அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவர் மணல் கொள்ளையின் கூட்டாளியாக இருப்பார். அங்கே வழக்கைப் பதிந்து விட்டு வழக்குப் போட்டவர் காசை வாங்கிக் கொண்டு கழண்டு கொள்கிறார். வக்கீல் தனியாக வாதாடிக் கொண்டிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை எத்தனையோ பேரை வாழ வைத்திருக்கிறது. ராஜாவிலிருந்து அதைப்பற்றி எழுதிய ஊடகங்கள் வரை நீதிமன்றம், அரசு, அதிகாரவர்க்கம் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. சகாயம் இன்று செய்யவேண்டியது இதுதான். விசாரணையை முடக்க நினைக்கும் அனைவரையும் அம்பலப்படுத்துவதுதான். அவர்களைத் தண்டிக்க நாங்கள் போராடுகிறோம் என அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆற்று மணல் கடத்தலில் கூட ‘லஞ்சம் வாங்கியவர்களைக் கைது செய்’ என எங்கள் பகுதியில் சுவரொட்டியைத்தான் முதலில் ஒட்டினோம். மணல் கொள்ளை விசயத்தில் மக்கள் போராட வருகிறார்கள். சிறுவர்கள் கூட கூரையை எரித்து துணிச்சலோடு போராடினார்கள். அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்சியைத் தாண்டி போராட்டத்திற்கு வந்தார்கள். நாம் போராடாமல் இருப்பதற்கு எவ்வளவு விலை வேண்டும் என்கிறார்கள். அதற்கு ஒரே விலை தான் உள்ளது. அது மக்கள் விடுதலை மட்டும் தான். நாங்கள் புரட்சிகர பாரம்பரியம் உள்ள அரசியலால் வழி நடத்தப்படுகிறோம். அது தான் அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்துவோம்”
எனக் கூறி முடித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு : தண்டனை ஜெயலலிதாவுக்கா? தமிழ்ச் சமுதாயத்துக்கா? என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் உரையாற்றினார். (அந்த உரையின் சுருக்கத்தை தனிப் பதிவாக வெளியிடுகிறோம்).
தோழர் மருதையன் உரைக்குப் பின்னர் மையம் வீதி நாடக இயக்கத்தின் சார்பில் ‘கௌரவக் கொலை’ நாடகம் நிகழ்த்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இறுதியாக வாஞ்சிநாதன் நன்றி தெரிவிக்க கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்திற்குப் பெருந்திரளாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், விவசாயிகள், பட்டறைத் தொழிலாளர்கள், தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அரங்குக்கு வெளியே திரையில் நிகழ்ச்சிகள் திரையிடப்பட்டது. அங்கும் நூற்றுக் கணக்கில் மக்கள் இறுதிவரை இருந்து கூட்டத்தைச் சிறப்பித்துப் புதிய புரிதலுடன் சென்றனர்.
தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை மாவட்டக் கிளை