privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மோடி : ஊடக சந்தையில் விற்காத லேகியம்

மோடி : ஊடக சந்தையில் விற்காத லேகியம்

-

JNU நேரடி ரிப்போர்ட் 6

டகங்கள் எம்மை வேட்டையாடுகின்றன (Witch Hunt), அவர்கள் நோக்கங்களுக்குத் தேவையானபடி எங்கள் தோழர்களை தவறாக சித்தரிக்கிறார்கள் (Profiling), நாங்கள் ஊடகங்களால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகின்றோம் (Media Trial)” என்பதை ஜே.என்.யு-வில் நாங்கள் சந்தித்த மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.

ஜே.என்.யு. மாணவர்கள்
ஜே.என்.யு. மாணவர்கள்

எனினும், ஜே.என்.யு விவகாரத்தில் ஊடகங்களின் போக்கு முதல் நான்கைந்து நாட்களுக்குப் பின் (பிப்ரவரி மாதத்தின் மத்தியிலிருந்து) மெல்ல ஒரு மாற்றம் ஏற்படத் துவங்கியிருந்தது. குறிப்பாக “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று மாணவர்கள் கோஷமிட்டதாக ஜீ நியூஸ், டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் மற்றும் அனேக இந்தி செய்தித் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட காணொளித் துண்டு போர்ஜரி செய்யப்பட்ட ஒன்று என்பதை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி அம்பலப்படுதிய பின் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்களின் அணுகுமுறை ஓரளவுக்கு மாறியது.

பாரதிய ஜனதாவுக்கு ஜீ டீ.வி சொம்பு தூக்கித் திரிந்ததைச் சகிக்க முடியாமல் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர் விஷ்வ தீபக், தனது வேலையை ராஜினாமா செய்தார். ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ், சேகர் குப்தா போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவான நிலையெடுத்தனர்.

ஜே.என்.யு மாணவர்கள் தங்களுக்குச் சாதகமாக ஊடகங்களின் ஒரு பிரிவு திரும்பியிருப்பதை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். இந்த முறை மோடி மிகத் தவறான இடத்தில் தவறான நேரத்தில் தவறான முறையில் கைவைத்து விட்டார் என்று நினைக்கிறார்கள். தங்களது போராட்டப் பாரம்பரியத்தைப் பற்றிய முன்யோசனையின்றி அசட்டுத் துணிச்சலோடு செயல்பட்டு விட்டார் என்று கருதுகின்றனர்.

இந்துத்துவ கும்பலோ இதற்கு நேர் எதிரான கோணம் ஒன்றை முன்வைக்கின்றது. ஜே.என்.யுவின் தயாரிப்புகளே அறிவுத்துறையிலும், பத்திரிகை துறையிலும் முக்கியமான பல இடங்களை கைப்பற்றி வைத்திருப்பதாகவும், அவர்களைக் கொண்டு தங்களுக்குச் சாதகமான செய்திகளை வரவழைத்துக் கொள்கிறார்களென்றும் சொல்கிறார்கள். தேசியம் உள்ளிட்ட விசயங்களில் தாம் முன்வைக்கும் கருத்தை ஏற்காத சிறுபான்மையான பத்திரிகையாளர்களை ஊடக விபச்சாரிகள் (Prestitutes) என்று வசைபாடுகின்றது இந்துத்துவ கும்பல்.

எப்படியிருப்பினும் ஜே.என்.யு விவகாரத்தை முன்வைத்து ஊடகங்களிடையே மிகத் தெளிவான பிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. இந்தப் பிளவு ஜே.என்.யு விவகாரத்தைத் தொடர்ந்து வெளிப்படையாகத் தெரியத் துவங்கியுள்ளது என்றாலும், இது தனித்துவமான நிகழ்வல்ல. இந்தப் பிளவிற்கு கடந்த சில ஆண்டுகளில் அரசியல் அரங்கில் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே இந்தப் போக்கை நாம் கருத வேண்டும்.

 …

 ஜே.என்.யு விவகாரத்திற்கு பின்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீப காலமாக முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவு மோடி மற்றும் பாரதிய ஜனதா கும்பலை ஓரளவு விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுகின்றன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீட்பராக கருதி காலில் விழுந்த ஒருவரை ஏன் இன்று விமர்சிக்க வேண்டும் என்கிற கேள்வி நம்முன் வருகிறது.

ஒருவேளை முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு பகுதியினர் ’திருந்தி’ விட்டனரா?

நாம் ஒரு ஏழு மாதங்களுக்குப் பின் செல்வோம். அப்போது தேசிய ஊடகங்களின் மிக முக்கிய பேசு பொருளாக இருந்தது ஷீனா போரா கொலை வழக்கு. தனது சொந்த மகளையே கொன்று விட்டார் என இந்திராணி முகர்ஜி என்பவரின் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்திராணி முகர்ஜி ஒரு மேட்டுக்குடி சீமாட்டி மட்டுமின்றி தில்லி மற்றும் மும்பையின் ’பார்ட்டி கலாச்சார’ உலகில் புழங்கும் பெரும் புள்ளியுமாவார். அவரது கணவர் ஒரு ஸ்டார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர்.

indrani with husband
இந்திராணியும் அவரது கணவரும்

சென்ற ஆகஸ்டு மாத முதல் வாரம் துவங்கி தொடர்ந்து தேசிய அளவிலான செய்தித் தொலைக்காட்சிகளின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நேர அடுக்கு (Prime time slot) இந்திராணி முகர்ஜிக்காக ஒதுக்கப்பட்டது. அவருடைய கதையில் விறுவிறுப்புகளையும், கவர்ச்சியையும் தேடிய ஊடகங்கள் ஆலாய்ப்பறந்து கொண்டிருந்தன.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டும் சுமார் ஒன்பது முறை வணிக முக்கியத்துவம் வாய்ந்த நேர அடுக்குகள் இந்திராணி முகர்ஜிக்காக ஒதுக்கப்பட்டன. அது தவிரஅந்தக் கொலை வழக்கே முக்கியத்தும் பெற்ற பேசு பொருளாக இருந்தது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பேசி விட்டுத் தூர எறிந்த இந்திராணியின் கதைகளைக் கைப்பற்ற மற்ற தொலைக்காட்சி சேனல்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

அதே காலகட்டத்தில் தான் (ஆகஸ்ட் 17ம் தேதி) கோப்ரா போஸ்ட் என்கிற புலனாய்வு இணையதளம் தனது இரகசியப் புலணாய்வு (Sting Operation) ஒன்றை வெளியிட்டது. வட இந்தியாவில் பதனி டோலா, லக்‌ஷ்மண்பூர் பதே போன்ற இடங்களில் தலித்துகளைக் கொன்று ரத்த வெறியாடிய ரண்வீர் சேனா என்கிற நிலபிரபுத்துவ மாஃபியா கும்பலைச் சேர்ந்த, படுகொலைகளை நேரடியாக முன்னின்று நடத்தியவர்கள் கோப்ராபோஸ்டின் இரகசிய கேமராவுக்கு அளித்திருந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளியாகியது.

ranveer sena
ரண்வீர் சேனா தலைவர் பிரம்மேஷ்வர் சிங்

அதில் தங்களது செயல்களுக்கு உள்ளூர் பாரதிய ஜனதா தலைவர்களில் இருந்து தேசிய தலைவர்கள் வரை உதவி செய்தனர் என்கிற விவரங்களும் இடம் பெற்றிருந்தன. ரண்வீர் சேனா ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. பாரதிய ஜனதாவோ தற்போது மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி.

எதார்த்தமாக பார்த்தால் இந்த சூழலில் என்ன நடந்திருக்க வேண்டும்? பாரதிய ஜனதாவை இந்த ஊடகங்கள் உண்டு இல்லை என்று கிழித்தெறிந்திருக்க வேண்டும். ஆனால், தலித் படுகொலைகளுக்கு மிக அப்பட்டமாக பாரதிய ஜனதா தலைவர்கள் உதவி செய்துள்ளார்கள் என்பது ஆதாரத்தோடு அம்பலமான அந்த வாய்ப்பை எந்த ஊடகங்கமும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்றைக்கு கன்னையா குமாருக்கும், ஜே.என்.யுவிற்கும் அனுசரணையான செய்திகளை வெளியிடுவதாக சொல்லப்படும் ஊடகங்களும் கூட அன்று பாரதிய ஜனதாவை அம்பலப்படுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் புறக்கணித்து விட்டு இந்திராணி முகர்ஜியின் மலிவான கதைதகளை தேடி வெளியிட்டு வந்தன.

கடந்த சில ஆண்டுகளாக தேசிய ஊடகங்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன?

2 ஜி அலைக்கற்றை ஊழல் – நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் – காங்கிரசே ஊழல் – அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு – ஜன்லோக்பால் வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் – ராம்தேவின் கருப்புப் பண எதிர்ப்பு – இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் ஊழலும் கருப்புப் பணமுமே காரணம் – இதை ஒழிக்கப் போவது யார்? அன்னா ஹசாரேவுக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையே முட்டல் மோதல் – மோடி என்கிற் மீட்பரின் வருகை – மோடியும் பாரதிய ஜனதாவும் அளித்த வாக்குறுதிகள் – தேர்தலில் மோடியின் வெற்றியை முன் அனுமானித்தல் மற்றும் அவருக்கு சொம்பு தூக்குதல் – மோடியின் வெற்றி –முசாபர் பூர் கலவரம் – தாத்ரி கொலை – மாட்டுக்கறி சாப்பிடுவது தேச விரோதமா, அநாச்சாரமா? – தில்லியில் பாரதிய ஜனதா வெற்றியை முன் அனுமானித்தல் – கேஜ்ரிவால் பதவியேற்றதும் அவரைக் கிண்டல் செய்தல் – பீகாரில் பாரதிய ஜனதா வெற்றியை முன் அனுமானித்தல் – லாலு, நிதிஷ் வென்றதும் லாலுவின் பழைய ஊழல்கள் நினைவுக்கு வருவது – ரோஹித் வேமுலா – ஜே.என்.யு – சியாச்சின் பனிச்சரிவு – தேச பக்தியின் மகாத்மியங்கள்!

பல்வேறு திருப்பங்களோடு சென்று கொண்டிருக்கும் மேற்படி திரைக்கதையில் இடையிடையே “-” இந்த குறி வரும் இடங்களில் பாடலோ அல்லது கிளுகிளுப்புக் காட்சிகளோ இடம் பெற்றால் தான் பார்வையாளர்களுக்கு அலுப்பில்லாமல் இருக்கும். எனவே அவற்றை பாலிவுட் கிசுகிசு, ஹிர்திக் ரோஷனின் மனமுறிவு, கரிஷ்மா கபூரைக் கொடுமைப்படுத்தும் கெட்ட கணவன், விராட் கோலிக்கும் தோனிக்கும் இடையே நடக்கும் லடாய்கள், இந்திராணி முகர்ஜி, சல்மான் கானின் சமீபத்திய காதல் போன்றவற்றை இட்டு நிரப்பி விடுகிறார்கள்.

இப்படியாகச் சென்று கொண்டிருந்த முதலாளித்துவ செய்தித் தொலைக்காட்சிகளின் பயணத்தை இந்துத்துவ பாசிசம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குலைத்துள்ளது. தேசியம் குறித்த விவாதங்களிலும் சரி மற்றும் மாட்டுக்கறி போன்ற கலாச்சார விசயங்களிலும் சரி – தாம் முன் வைக்கும் கோணத்திற்கு கொஞ்சம் மாற்றிப் பேசும் பிரிவினரின் மேல் கொலை வெறியோடு விழுந்து பிடுங்கும் இந்துத்துவ கும்பல், அவர்கள் தங்களுடைய எதிரணியை நோக்கி நெட்டித் தள்ளுகின்றனர்.

தாராளவாத ஜனநாயக விழுமியங்களுக்குப் பழகிய முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவினருக்கு மோடியின் பொருளாதாரக் கொள்கைகளோடு எந்த முரண்பாடுகளும் இல்லை. உலகமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதற்குத் தேவையான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்பதிலோ, ஏகாதிபத்திய மூலதனச் சேவையிலோ மோடி ஈடுபடுவதில் இவர்களுக்கு ஒத்த கருத்து தான் உள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி மூலதன உலகிற்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வாக்குறுதிகளாகவே தேங்கி நிற்கின்றன. ஜி.எஸ்.டி மசோதா போன்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அவரே விரும்பும் வேகத்தில் அமலாக்குவதற்கு ராஜ்யசபா தடையாக நிற்கின்றது. ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கை எனும் முட்டையை இந்துத்துவ ஓட்டுக்குள் ஒளித்து கொண்டு வருவது என்கிற இந்துத்துவ கும்பலின் உத்தி பாராளுமன்ற முட்டுச் சந்துக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இறுதியாக எஞ்சியதெல்லாம் இந்துத்துவ ஓட்டுக்குள் இருக்கும் கூ முட்டை தான்.

Media set
ஊடக அரங்கம்

இந்தப் பின்னடைவுகளை மறைத்துக் கொள்ள தோற்றுப் போன பாசிஸ்டின் வெறியோடு கலாச்சார அரங்கில் தமது பாசிச செயல்பாடுகளை இந்துத்துவ கும்பல் முடுக்கி விட்டுள்ளது. எந்த வகையில் முதலாளிய உலகிற்குக் கொடுதிருந்த பொருளாதார வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்திருப்பதால், கலாச்சார அரங்கை கைப்பற்றுவதன் மூலம் சமூகத்தை பிளவுபடுத்தி இந்து ஓட்டு வங்கியை உத்திரவாதப்படுத்திக் கொள்ளும் முனைப்பின் விளைவு தான் ரோஹித் வேமுலா, ஜே.என்.யு, மாட்டுக்கறி உள்ளிட்ட விசயங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வெறியாட்டம்.

முதலாளிய ஊடகங்களின் தாராளவாத ஜனநாயகப் பிரிவினருக்கோ ஆர்.எஸ்.எஸ் கும்பலின் போங்காட்டம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. பரீட்சையில் மதிப்பெண் வாங்கும் பொறுக்கி மாணவனென்றால் கூட சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் இவர்கள் தேர்வில் முட்டை மதிப்பெண் வாங்கிய பொறுக்கி மாணவனாக மோடியைக் காண்கிறார்கள். அதனடிப்படையில் இருந்தே தங்களது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்தப் பிரிவினரின் (என்.டி.டீ.வி, சி.என்.என், ஹெட்லைன்ஸ் உள்ளிட்ட தாராளவாத ஜனநாயகப் பிரிவினர்) மெல்லிய முனகல்களை போர்க்குரலாக மாற்றிய பெருமை திருவாளர் மோடியையும் அவரது சமூக வலைத்தள அடிமைகளையே சாரும்.

இந்தியா எதிர்கொண்டு நிற்கும் சகல நோய்களுக்கும் தீர்வாக பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தின் 56 இன்ச் அகல மார்பு கொண்ட தாது புஷ்டி லேகியம், லாட்ஜ் மருத்துவர் கொடுக்கும் மருந்தைப் போல் சரியான நேரத்தில் கைகொடுக்கவில்லை என்பதை இரண்டாண்டுகளுக்கு முன் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்த நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினர் உணர்ந்துள்ளனர். வளர்ச்சி வேண்டுமென்றால் கொஞ்சம் ’அப்படி இப்படி’ இருந்தால் கூட பரவாயில்லை என்று பரந்த மனதோடு ப்ரவீன் தொகாடியா, சாமியாரிணி ப்ராச்சி, யோகி ஆதித்யநாத் போன்றவர்களைக் கூட ஓராண்டுகளுக்கும் மேலாக சகித்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.

வங்கிக் கணக்கில் பத்து லட்சம் லட்சியம், சம்பளதாரர்களுக்கு வரிமான வரி விலக்கு நிச்சயம் என்கிற இவர்களின் இன்பக் கனவுகளின் மேல் கோதாவரி படுகையில் அம்பானி தோண்டியெடுத்த கழிவுகளைக் கொட்டியுள்ளார் மோடி. இவர்களுக்கு இப்போது புதிய லேகியம் தேவைப்படுகின்றது. ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் வாடிக்கையாளர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினரான இவர்கள் இப்போது வெளிப்படையாகவே நேரங்கெட்ட நேரமாகப் பார்த்து ‘குஜராத் லேகியம்’ காலை வாரிவிட்டதென முனகத் துவங்கி விட்டனர்.

தங்களது வாடிக்கையாளர்களான நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினரிடையே தோன்றி வளரத் துவங்கியிருக்கும் அதிருப்தி மற்றும் மோடியின் தோல்விகளால் மெல்ல அதிகரித்து வரும் மூலதன உலகத்தின் அதிருப்தி இவ்விரண்டோடு சேர்த்து தாராளாவாத ஜனநாயகம் வழங்கும் விமர்சன சுதந்திரத்தின் மேல் இந்துத்துவ பாசிஸ்டுகள் தொடுத்திருக்கும் கொலைவெறித் தாக்குதலும் சேர்கிறது. இந்தப் பின்னணியில் இருந்து தான் முதலாளிய ஊடகங்களின் ஒரு பிரிவு ஜே.என்.யு விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக எடுத்துள்ள நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

எனினும், இந்த விமர்சனங்களோடு கூடவே புதிதாக ஒரு மீட்பரை களமிறக்குவதற்கான கதவுகளை ஊடகங்கள் மூடி விடவில்லை.

rajdeep sardesai
ராஜ்தீப் சர்தேசாய்

ட்விட்டரில் மோடியை மிகத் தீவிரமாக விமர்சிக்கும் ராஜ்தீப் சர்தேசாய், அதே கையோடு ஆம் ஆத்மி கட்சியின் கீச்சுகளைப் பகிரவும் செய்கிறார் என்பது தற்செயலானது அல்ல. வாடிக்கையாளர்களை ஏமாற்றிய பழைய லேகியத்திற்கு பதிலாக எதிர்காலத்தில் புதிய லேகியத்தை சந்தைப்படுத்துவதற்கும் அதன் மூலம் தங்களது டி.ஆர்.பிக்களை தக்கவைத்துக் கொள்வதற்குமான கதவையும் திறந்தே வைத்துள்ளனர், எதிர்காலத்தில் புதிய லேகியத்திற்கு கிராக்கி ஏற்படும் போது அப்படியொன்றை ஊருக்கு முன் கடைபரப்பி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கைப்பற்றி வைத்திருக்கும் முதலிடத்தில் அமர்வது இதன் பின்னே உள்ள சந்தை நலன்.

ஊடகங்களின் சந்தை நலன் ஒருபுறம் இருக்க, பொருளாதார அரங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுகாலனியாக்க செயல்பாடுகள் சமூகத்தில் வர்க்கப் பிளவை மேலும் மேலும் கூர்மையடையச் செய்கின்றது. கலாச்சார அரங்கில் புகுத்தப்படும் பாசிச செயல்திட்டங்கள் அந்தப் பிளவை மேலும் ஆழமாகவும் அகலமாகவும் ஆக்குகின்றது. கொஞ்சம் முற்போக்கான தாராளவாத ஜனநாயகத்தின் பின்னே மறுகாலனியாக்க பொருளாதார தத்துவங்களை ஒளித்துக் கொள்ளும் வாய்ப்பை மோடி பறித்துள்ளார். மோடியை விமர்சிப்பதும், பாரதிய ஜனதாவின் கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதும் தேசவிரோதமாக’ நிலைநாட்டப்பட்டுள்ளது. ’மறுகாலனிய வளர்ச்சியும்’ ‘பாசிச இந்துமயமாக்கமும்’ கைகோர்த்துள்ள நிலையில் இரண்டில் ஒன்றை ஏற்றுக் கொண்டு மற்றொன்றை மட்டும் எதிர்க்க முடியும் என்று நம்புகிறவர்கள் ஒன்று அம்பலமாகிறார்கள் அல்லது இந்துத்துவ கும்பலாம் ஒட்டுமொத்தமான எதிர்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தற்போதைக்கு முற்போக்குப் பாத்திரம் ஏற்றுக் கொண்டுள்ள முதலாளிய ஊடகங்களில் உள்ள ஒரு பிரிவினர் பொருளாதார விசயங்களின் மோடியின் கருத்தை ஏற்றுக் கொள்கிறவர்களாகவே உள்ளனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு அதிகரிக்கும் வேகம், பாசிசத்தின் முன்னெடுப்புகளைப் பொருத்து எதிர்காலத்தில் அவர்கள் எந்தப் பக்கம் நிற்பார்கள் என்பது முடிவாகும்.

அவர்களது முடிவை மோடி எதிர்மறையில் துரிதப்படுத்தும் போது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் நேர்மறையிலேயே நிர்பந்திக்க வேண்டும்.

–    தொடரும்

– வினவு செய்தியாளர்கள்.

முந்தைய பாகங்கள்:

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க