privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்... ஆரம்பம்!!

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்!!

-

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்... ஆரம்பம்!!

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -8

vote-012காந்தி தேசத்தின் காவலர்கள்  ஈழத்தமிழர்களை சிங்கள பேரினவாதத்தின் வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற கருணைக்கொலை செய்திருந்தால் கூட நன்மைக்கே என்று நாங்கள் சந்தோசமாய் செத்திருப்போம். காலங்காலமாய் எங்களை  நம்பவைத்து  முதுகில் குத்தியே பழக்கப்பட்ட இந்தியா, ஈழத்தமிழனுக்கென்றே ஓர் கொம்பு சீவியது. அதுதான் இந்திய அமைதிப்படை. இந்தியாவில் காந்தியை பின்பற்றுபவர்களும் சரி, இலங்கையில் புத்தரின் பெயரால் ஆட்சி செய்பவர்களும் சரி இருசாராருமே எங்களின் இரத்தத்திலும், கண்ணீரிலும்தான் அதிக சந்தோசம் காண்பார்கள் போலும்.

ஏற்கனவே இலங்கை ராணுவத்தின் வன்கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த எங்களை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்து ஈழத்தில் அப்பாவித் தமிழர்களான எங்கள் மீது போர்தொடுத்த கொடுமையை நாங்கள் சொல்லியழுதாலும் தீராது. இந்திய அமைதிப்படையை ஆங்கிலத்தில் Indian Peace Keeping Force-IPKF என்று கொண்டாலும், ஈழத்தமிழர்கள் சொல்வழக்கில் அது Indian People Killing Force என்றே சொல்லப்படுகிறது. அதாவது, ஈழத்தமிழர்களை கொல்வதற்கென்றே உருவாக்கப்பட்ட படை என்றுதான் சொல்வார்கள்.

எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சிங்களராணுவமும், புதிதாக அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவமும் சரி ஒரே மாதிரித்தான் தெரிந்தார்கள். இந்திய அமைதிப்படை என்னும் போது, அது ஏனோ எங்களுக்கு அதிகமாகவே வலிக்கத்தான் செய்கிறது. ஒருவேளை அது தமிழ்நாடும், ஆறரை கோடி தமிழர்களும் இருந்தும் எங்களுக்கு இந்த அவலங்கள் நிகழ்ந்ததே என்ற ஈழத்தமிழர்களின் ஆதங்கமாக இருக்கலாம்.

ஏற்கனவே ஆண்டாண்டு காலமாய் ராணுவ அடக்குமுறையினாலும், ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற ராணுவ நடவடிக்கையாலும் சோர்ந்து போயிருந்த எங்களுக்கு இந்திய ராணுவத்தின் வருகை ஓர் தற்காலிக விடுதலையை தரும் என்றுதான் நம்பியிருந்தோம். வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்கு போகும் போது இருந்த வலி திரும்பி வரும்போது ஏனோ அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும், இதுவும் ராணுவம் என்கிற பயத்தை மட்டும் எங்களின் மனங்களிலிருந்து முற்றுமுழுதாக அகற்ற முடியவில்லை.

வழி நெடுக இந்திய ராணுவமும் எங்களை கொடுமைப்படுத்துமா என்றெல்லாம் கேள்விகேட்டே என் சித்தப்பாவின் உயிரை நான் எடுத்துவிட்டேன். அதற்கு அவர் அப்போது சொன்ன பதில்தான் அந்த வயதில் என்னை வாய்பிளந்து கேட்கவைத்தது. இந்தியா ராணுவத்தை அனுப்பியது ஈழத்தமிழர்கள் பாலுள்ள அக்கறையால் அல்ல. அது அவர்களின் தேசிய நலன் சார்ந்தது என்றார். எனக்கு அது அப்போது புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. மாணவப்பருவத்தில் படிப்பு, நட்பின் அரட்டைகள், இனிமையான எதிர்காலக் கனவுகள் இப்படித்தானே அநேகமானவர்களுக்கு வாழப்பிடிக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? போர் பூமியில் மாணவப்பருவத்தின் அத்தனை சந்தோசங்களையும் இழந்த எனக்கு அது ஏனோ ஓர் வடுவாக என்மனதில் இன்றுவரை பதிந்துதான் விட்டது.

சரி, இனிமேலாவது நாங்கள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போகலாம், எங்கள் சொந்தமண்ணில் எங்களுக்கு பிடித்த இடங்களில் அடையாள அட்டை இல்லாமலே சுதந்திரமாய் நடமாடலாம், குண்டுச்சத்தங்கள் இல்லாமல் தூங்கலாம், குறிப்பாக பதுங்குகுழி வாழ்க்கையிலிருந்து விடுதலை, அடிக்கடி தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்து எப்போது தலை மீது குண்டுவிழும் என்று பயப்படத்தேவையில்லை, உலகில் பெரும்பான்மையான மக்களைப்போல் நாங்களும் ஓர் இயல்பு வாழ்க்கை வாழலாம் என்று, காந்திதேசத்தின் மகாத்மா எப்படி எதிர்கால இந்தியாவை கனவு கண்டாரோ அப்படியொரு வாழ்க்கையை நாங்கள் சொற்ப காலமெனும் ஈழத்தில் வாழப்போகிறோம் என்ற சந்தோசக் கற்பனையுடன்தான் வடமராட்சிக்கு திரும்பினேன். என் அத்தனை சந்தோசமும் அமைதிப்படை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கியிருந்தது.

அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்ப ஆரம்பித்திருந்தார்கள். வழிநெடுக பார்த்தவர்களிடமெல்லாம் இந்தியராணுவம் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்களா என்றெல்லாம் விசாரித்தபடியே ஊர்வந்து சேர்ந்தோம். எல்லோரும் சொன்னது, “ஓம், ஓம் (ஆம்) ஒரு பிரச்சனையும் இல்லை. அவங்கள் நல்லவிதமாகத்தான் ஆக்களை நடத்துறாங்கள். நீங்கள் பயப்படாமல் போங்கோ” என்பதுதான். சிங்கள பேரினவாதத்தின் ராணுவ கைக்கூலிகளிடம்  மிதிபட்ட எங்களை யாராவது மனிதர்களாக மதித்தால் நிச்சயமாக கண்கலங்கி விடுவோம். ஆரம்பத்தில் இந்தியராணுவம் அப்படித்தான் எங்களை கண்கலங்க வைத்தார்கள். எங்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதுதானே எங்கள் அறுபது வருட கோரிக்கை.

எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு ஈழத்தில் அகாலமரணமான எங்களின் உறவுகளுக்காய் எந்த ராணுவ இடையூறுமின்றி, தலையில் குண்டு விழும் என்ற பயமின்றி  வாய்விட்டு அழமுடிந்தது இந்த நாட்களில்தான். இதற்காக இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும். ஆனால், பிற்காலத்தில் எங்களின் கண்ணீரின் காரணகர்த்தாக்களாகவும் இவர்களே இருந்தார்கள்  என்பது சோகத்திலும் சோகமான விடயம். ஊருக்கு வந்து எங்கள் வீட்டைப் பார்த்தபோது எங்களின் உரிமைகளைப் போலவே உடமைகளும் சிதைக்கப்பட்டும், சிதறடிக்கப்பட்டும் கிடந்தன.  ஊருக்கு வந்து சேர்ந்ததும் சிலகாலம் செத்தவீடு, துக்கவிசாரிப்புகள், உடைமைகளின் இழப்புகள், உடைந்த எங்களின் வீடுகளை சரிப்பண்ணி ஏதோ வீடு என்ற ஓர் கட்டிடத்தை உருவாக்குவது இப்படித்தான் நகர்ந்தது.

அது தவிர முகாமிலிருந்து முன்னேறிய சிங்கள ராணுவத்தால் ஆங்காங்கே புதைக்கப்பட்ட Land Mine என்று சொல்லப்படும் கண்ணிவெடிகளால் காலை இழந்த ஆடு, மாடு, மனிதர்கள் பற்றிய சோகம் ஒருபுறமும், தெருவில் இறங்கி நடந்தால் காலை இழந்துவிடுவோமோ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது. பேச்சுவழக்கில் கண்ணிவெடி, “மிதிவெடி” என்றே அழைக்கப்படுகிறது.  அப்படி கண்ணிவெடியில் மிதித்தால் என்ன செய்யவேண்டும் என்றும் பொதுவாகவே ஈழத்தமிழர்கள் அறிந்துதான் இருந்தார்கள். இந்த மிதிவெடிகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

போர் நடக்கும் இடங்களில் இவை பெரும்பாலும் விதைக்கப்படுகின்றன. இதனால் பலர் கால்களை இழந்து அங்கவீனர்கள் ஆகிறார்கள். ஒரு காலத்தில் இதைப் பற்றி விளம்பரப் படுத்த ஓர் உலகப்பிரபலம் வேண்டுமென்று யார் நினைத்தார்களோ, மறைந்த இங்கிலாந்தின் இளவரசி டயானாவை வைத்து பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அவரால் கண்ணிவெடியின் அவலத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்ட ஜெனீவாவில் ஐ. நா. சபையின் முன் மூன்றரை கால் நாற்காலி ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. ஈழத்திலும் இந்த கண்ணிவெடியால் பலர் கால்களை இழந்திருக்கிறார்கள்.

சரி, எதற்கு இப்போது இதைப்பற்றி பேசுகிறேன் என்றால் இன்று வன்னியில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்று சிங்கள அரசு சொல்லும் நொண்டிக் காரணங்களில் ஒன்று இந்த மிதிவெடிகள்தான். ஐ. நாவும் தங்களிடம் அதை அகற்றும் பணிக்கு தர பணம் இல்லை என்கிறது. சிங்கள அரசும் யாரும் பணம் தரமாட்டார்களாம் என்று மூக்கால் அழுகிறது. அட, இவர்கள் சொல்லுமளவிற்கு அப்படியேதும் மிதிவெடிகள் இருந்தால்தானே யாராவது அதை அகற்ற முடியும். இப்படித்தான், வன்னியில் இல்லாத கண்ணிவெடியை இந்தியாவின் ஏறக்குறைய இரண்டாயிரம் ராணுவம் இன்றுவரை அகற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது.

எப்படியோ, இந்திய ராணுவம் புலிகளை அழிக்கவேண்டும் என்று வந்த நோக்கத்தின் முதல் கட்டவேலையை சுபமே தொடங்கினார்கள்.  இந்தியராணுவம் தெருவில் போவோர், வருவோரையெல்லாம் மறித்து ஜூஸ் கொடுத்தார்கள் எங்கள் ஊரில். “நீங்கள் ஒப்பரேஷன் லிபரேஷனால் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். உங்களுக்கு உதவத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். என்ன உதவி வேண்டுமானாலும் எங்களின் முகாமில் வந்து தெரிவியுங்கள்” என்றெல்லாம் ஆரம்பத்தில் தேனொழுகப் பேசினார்கள். சிங்கள ராணுவம் இதையெல்லாம் சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருக்க மாட்டோம். இந்திய ராணுவம் சொன்ன போது அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.

அப்படி முகாமில் சென்று இவர்களோடு பேசியவர்களிடம் அவர்களின் அவலவாழ்வைப் பற்றி கேட்டதை விட புலிகளைப் பற்றித்தான் அதிகமாக இந்திய ராணுவம் கேட்டதாகச் சொன்னார்கள். வல்வெட்டித்துறையை சுற்றியிருந்த ஊர்களான பொலிகண்டி, உடுப்பிட்டி என்ற ஊர்களிலும் இந்திய ராணுவ முகாம்கள் இருந்தன. இவையிரண்டும் முற்றுமுழுதாக இந்தியராணுவம் மட்டுமே இருந்த முகாம்கள். அமைதிப்படைக்கு இந்த சிறிய ஊர்களில் இத்தனை  ராணுவமுகாம்கள் தேவையா என்ற கேள்விக்கெல்லாம் பதில் இந்திய மேலாதிக்க அரசியலைப் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.

பொலிகண்டி முகாம் பொதுமக்களின் வீடுகளை மட்டுமே முகாமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டு உரிமையாளர்கள் சிலர் போய் நியாயம் கேட்டபோது இந்தியராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடுப்பிட்டி இராணுவமுகாம் பெண்கள் பாடசாலை ஒன்றை இராணுவமுகாமாக மாற்றி விட்டு, ஒருபக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் மற்றபக்கம் பாடசாலையை நடத்தும் படியும் சொன்னார்கள். அப்படித்தான் சிலகாலம் நடந்தது. ஆனால், அங்கு கல்வி கற்க வந்த மாணவிகளிடம் இவர்கள் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகவும், மாணவிகளை கிண்டல் செய்வதாகவும் நிறையவே கேள்விப்பட்டேன். பெற்றோர் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவே பயந்தார்கள். பின்னாட்களில் அது முழுவதுமாக இந்திய ராணுவமுகாமாகவே மாற்றப்பட்டுவிட்டது.

வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் சேர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் இருவருமே எங்களின் அன்பைப் பெறுவதில் போட்டி போட்டார்கள்.  ஒரு கட்டத்தில் எங்கள் மீது யார் அதிகம் அன்பாய் இருக்கிறார்கள் என்பதில் சிங்கள ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே போட்டியே வந்து காமெடி கலாட்டாக்களும் இடம்பெற்றது. இந்திய ராணுவம் ஜூஸ் கொடுத்தால், சிங்கள ராணுவம் ஜூசோடு ஏதாவது சாப்பாடும் கொடுத்தார்கள். முதன்முதலாக நாங்களும், சிங்கள சமூகமும் சகோதர உறவுகள் என்றார்கள். இந்திய ராணுவம் மூன்றாம் மனிதர்கள் என்றார்கள். இந்திய ராணுவத்தோடு பேசாதீர்கள், உங்களை எப்போதுமே நாங்கள்தான் காப்பாற்றுவோம் (அதன் பொருள் உங்களை நாங்கள் மட்டும்தான் அழிக்கலாம் என்பதுதான்)  என்றெல்லாம் அன்புக்கட்டளை போட்டார்கள்.

நாங்கள் தான் பலியாடுகள் ஆயிற்றே. எந்தப்பக்கம் தலையை ஆட்டினாலும் தலையை வெட்டுவார்கள். அதனால் தமிழ் சினிமா வடிவேல் கதாபாத்திரங்கள்  மாதிரி “ஆஹா” என்று முழித்து, பொதுவாக சிரித்து, பொதுவாக தலையை ஆட்டி பரிதாபத்திற்குரிய பிறவிகளாய் ஆனோம்.  ஆனால், இன்று சிங்கள சமூகமும் இந்தியாவும் சகோதர உறவுகள் போலவும், ஈழத்தமிழர்கள் மூன்றாம் தர பிரஜைகளாகவும் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். அதனை அப்படியே இவர்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை.

அமைதிப்படை என்றால் போர் புரியும் இருதரப்பையும் போர் செய்யாமல் கண்காணிப்பதுதானே வேலை. இப்படித்தான் நாங்கள் ஆரம்பத்தில் நம்பினோம். இவர்கள் அமைதிப்படைக்குரிய ஐ. நா மற்றும் சர்வதேச விதிமுறைகளை மதித்து ஈழத்தில் அமைதியை நிலைநாட்டுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், இந்திய அமைதிப்படை என்ன செய்தது? போரை தடுக்க வந்தவர்களே எங்கள் மீது போர் தொடுத்தார்கள். தற்பாதுகாப்புக்கு மட்டுமே ஆயுதம் தரிக்கவேண்டியவர்கள் அத்தனை போராயுதங்களையும் எங்கள் மீது ஏவிவிடத் தவறவில்லை. யாழ்ப்பாணத்தில் விமானம் மூலம் குண்டு கூடப் போட்டார்கள். அடிக்கடி ரோந்து போகிறோம் பேர்வழி என்று வீதி வீதியாய் ஊவலம் போய் எங்கள் வயிற்றில் பீதியை கிளப்பினார்கள்.

தங்கள் பாதுகாப்புக்காக எங்களை கைதிகள் போல் பிடித்து வைத்தார்கள். ஒரு தடவையல்ல பலதடவை இப்படி நான் கைதியாக்கப்பட்டேன். கேட்பார் கேள்வியின்றி வீடு புகுந்து நேரம் காலமில்லாமல் வீட்டிலிருந்த என்னையும் என் தாயாரையும் அதேபோல் வீதியில் போனவர்களையும் இழுத்து வந்து ஓர் இடத்தில் கூட்டமாக இருத்தி வைப்பார்கள். பெரும்பாலும் ஆண்களைத்தான் கைது செய்தார்கள். எங்கள் வீட்டில் ஆண்கள் இல்லாததால் என் தாயார், தங்கை, நான் கைதிகளானோம்.

பெரும்பாலும் அன்றாடம் வேலைக்குப் போகிறவர்கள், பால் மற்றும் மரக்கறி விற்பவர்கள், வயதானவர்கள் இப்படித்தான் இவர்களிடம் மாட்டுவார்கள். இந்த வழியால் புலி போனதா என்று கேட்பார்கள். வீட்டிற்குள் இருக்கும் எனக்கு வீதியில் போனது புலியா  அல்லது பிசாசா என்று எப்படித்தெரியும்? இப்படித்தான் பதில் சொல்ல நினைப்பேன். ஆனால், என்னை பிறகு அடித்து விடுவார்கள் என்ற பயத்தினால் அடக்க ஒடுக்கமாக பதில் சொன்னேன். இளைஞர்கள் என்றால் அடித்துத்தான் கேள்வி கேட்டார்கள்.

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கானால் இரத்தம் கொதிக்கும். யாருடைய மண்ணில் வந்து யார் யாரை அதிகாரம் செய்வது? இப்படி அன்று  மணிக்கணக்கில் வீதியில் ஓரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை சோதனை போடுகிறோம் என்று வரம்பு மீறிவிடுவார்களா என்று பயந்துகொண்டே ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்தேன். இந்திய ராணுவம் என்னிடம் வரம்பு மீறி நடந்த சம்பவங்களும் அடிக்கடி என் நினைவுகளில் வந்து வலியை கொடுக்காமல் இல்லை. ஆனாலும், என்னுடன் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் வரும். இவர்கள் அங்கெ இங்கே பராக்கு பார்க்கும் நேரம், ஏன் எங்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சன்னக்குரலில் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். சத்தமாய் ஏதாவது பேசினால் என்ன பேசினீர்கள் என்று ஒரே போடாய் போட்டுவிடுவார்கள்.

பசி, தாகம், இயற்கை உபாதை என்று எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்தியராணுவ படை எங்களை போ என்று சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். சொந்த மண்ணிலேயே இன்னோர் நாட்டு ராணுவத்திடம் அடிமையாய் போன  அவலம் மனதில் எரிச்சலையும் கோபத்தையும்தான் கிளப்பியது. ஆனால் என்ன செய்ய முடியும். கைதிகளாய், கையாலாகாதவராய் அமைதியாய் இருந்தோம். மனம் வலித்தது. ஆனாலும், கண்ணீர் விடக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்.

இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது. இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார். என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம். ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன். நாங்கள் மட்டுமே பெண்கள். இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன். எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.

இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது. அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு. ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார் “சரிம்மா, என்னோட வாங்க  உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார். நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.

அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார், “நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”. அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம். ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு. அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன். “நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று. ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.

அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன். உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம், ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும். ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க, அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன். நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள். அவர் பெயர் சொல்லவில்லை. சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன். தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார். ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார். நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார். சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார். ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள். தெருவில் வந்து நில்லுங்கள். வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள், ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று. ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை. இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு. நன்றிகள் சகோதரரே.

அன்று முதல் இன்றுவரை எல்லா அரசியல் மற்றும் ராணுவ விமர்சகர்களின் விமர்சனம் அல்லது ஒப்பீடு “ஈழம் இந்தியாவின் வியட்நாம்” என்பதுதான். அவர்கள் இந்தியா அல்லது இந்திய அமைதிப்படை (என்னைப்பொறுத்தவரை அது இந்திய ராணுவம்) ஈழத்தில் ஏன் தோற்றது என்று அதற்குரிய காரணத்தை அடுக்குகிறார்கள். இந்தியா தன் முழுப்பலத்தையும் அதாவது படை மற்றும் ஆயுத பலத்தை பிரயோகிக்கவில்லை என்று இவர்கள் சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே எரிச்சல்தான் வருகிறது. ஐயா, அறிவாளிகளே இந்திய ராணுவம் வந்தது “அமைதிப்படை” என்ற பெயரில். பிறகேன் நீங்கள் உங்கள் பலத்தை எங்கள் மீது மொத்தமாக பிரயோகிக்க முடியவில்லை என்று மூக்கால் அழுகிறீர்கள்? நீங்கள் கொஞ்சமாக பிரயோகித்த பலத்துக்கே நாங்கள் ஏறக்குறைய மூவாயிரம் அப்பாவிகளை இழந்து விட்டோம். இதில் முழுவதுமாக நீங்கள் படைப்பலத்தை காட்டினால் நாங்கள் என்னாகியிருப்போம்?

இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றால் அதன் “மை லாய்” (Mai Lai)  கிராமங்களை பற்றியும் பேசுங்களேன். இந்தியாவின் வியட்நாமில் எங்கள் ஊர்கள் மை லாய் கிராமங்களாய் பலிகொள்ளப்பட்டதை, அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்பட்டதை இவர்கள் பேசமாட்டார்கள். வினவு எனக்கு கொடுத்த இந்த அருமையான சந்தர்ப்பத்தில் நானாவது அதன் வலிகளை நினைவு கூரலாம் என்று நினைக்கிறேன்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

    • தீர்வஹா சொல்ல முடியாது சமமஹா சொல்ல முடியும் இந்திய முஸ்லிம்களின் நிலைமையை

  1. இந்தியாவை வரைபடமாக, பாரதமாதா பூசைப்படமாக சிலாகிக்கும் பொய்மை தேசபக்திக் குஞ்சுகள் இந்த அமைதிப்படையின் அடக்குமுறை குறித்து என்ன பதில் சொல்லுவார்கள்?

  2. ரதி உங்களது நினைவுகள் தொடரட்டும். இந்திய மேலாதிக்கத்தின் வன்மங்களை உங்களது வலி நிறைந்த அனுபவங்கள் தோல்உரிக்கட்டும்.

  3. உங்களது கசப்பான நினைவுகளை விதையுங்கள்! மனதில் புதைக்காதீர்கள்
    ! அவை இந்திய அரசுக்கு எதிரான ஒரு பெரும் புரட்சிக்கு தூண்டுகோலாக அமையட்டும்! பேரினவாதத்திற்கு பேரிடியாக அமையட்டும்! தொடர்க உங்களது எழுத்துப்பணி !

  4. ரதி,

    இதையும் பாருங்கள் :

    நான் எப்போது அடிமையாயிருந்தேன்
    http://www.shobasakthi.com/shobasakthi/?p=507

    நான் எப்போது அடிமையாயிருந்தேன்

    நேர்காணல்: புஸ்பராணி

    ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஸ்பராணி. தலைமறைவுப் போராளிகளிற்குச் சோறிட்டு வீட்டிற்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியற் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும் கலகக்காரி.

    தமிழரசுக் கட்சியின் தொண்டராக ஆரம்பிக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வு எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுதந் தாங்கிய இளைஞர் போராட்டக் குழுக்களின் பக்கம் அவரைக் கூட்டிவந்தது. சில வருட இயக்க அனுபவங்களிலேயே போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர் இயக்க அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டாலும் தொடர்ந்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. புஸ்பராணி 1986ல் ஃபிரான்சுக்குப் புலம் பெயர்ந்தார்.

    ஈழப் போராட்டத்தில் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஸ்பராணியைச் சந்தித்து ‘எதுவரை” இதழிற்காகச் செய்யப்பட்ட இந்நேர்காணல் அவரின் புத்தகத்திற்கான ஒரு முன்னுரைபோல அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியே. ஒன்றரைமணி நேரங்கள் நீடித்த இந்த நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் பதிவு செய்யப்பட்டது.

    சந்திப்பு: ஷோபாசக்தி
    படங்கள்: தியோ ரூபன்

    ——————————

    இந்திய ராணுவம் ஈழத்தில் மிக கொடுமையான அக்கிரமங்களை, மீறல்களை செய்தன. அதை பற்றி நிறையவே கேள்விபட்டுள்ளேன்.

    மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் :
    ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நூல் அனைவராலும் அவசியம் படிக்க்பட வேண்டிய ஒன்று. பெரிய புத்தகம். ஒரு புத்தக கடையில் சில வருடங்களுக்கு முன்பு அதை சிறிது நேரம் புரட்டிப்பார்த்து, அங்காங்கே படித்தேன். தொடர்ந்து வாங்கி படிக்க மன திடமில்லை. மிக கொடுமையான விவரிப்புகள். அனைத்து தரப்பினராலும் செய்யப்பட்ட வன்கொடுமைகளை விரவாக சொல்கிறது இந்நூல். வாங்கமல் திரும்பிவிட்டேன். i regret missing it now. பிறகு அதை பார்க்க முடியவில்லை. வாங்க வேண்டும்.

  5. முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய இராணுவ அமைப்பு என்பது எக்காலத்திலும் மக்களுக்கான இராணுவ அமைப்பாக செயல்படமாட்டாது என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவே இப்பதிவு துணைசெய்துள்ளது.

    இலங்கை தமிழர்களின் விடுதலை, சுதந்திரம்
    நாட்டின் விடுதலைக்காக உயிரையே கொடுக்க முன்வந்த இளைஞர்கள்/இளைஞிகள் இயக்கங்களுக்கிடையே நடந்த அராஜகங்களால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். முதாலளித்துவ இராணுவ அமைப்பாக இயக்கங்கள் மாறி, எரிந்து கொண்டிருந்த தேசபக்தியை வெறும் செவகம் செய்வதற்கே இளைஞர்கள்/இளைஞிகள் மாற்றப்பட்டார்கள். விளைவு…(?)

    அக்கறையுள்ள ம/லெ/மா கொள்கை அமைப்புகள் வாயை திறந்துகொண்டு வெளியே செயலுக்கு வாருங்கள். வெறுமனே மறைந்துநின்றுகொண்டு மறைபொருளில் பேசியும் எழுதியும் என்ன பயன்? போராட்டத்தை முன்நகர்த்த சரியான கொள்கை அமைப்புகள், இருக்கின்ற தளத்தில் பணியாற்றக்கூடிய மிக முக்கிய தேவை இப்போது உள்ளது. இதை ஒரு அறைகூவலாக எடுத்துக்கொள்ளுங்கள்.

    • என்னது தங்கைகளை அண்ணன்கள் உறவு கொண்டார்களா (உன் பாசையில்)?????? யோவ் Shanmugalingam (Toronto Canada 416-431-5095), சும்மா உளறாதீர்… உன் மரியாதையை காப்பாத்திக் கொண்டு சென்று விடு…

      Lenin
      Chennai, India
      Mobile: 09444877443

  6. //Tamils were never raped by Indian Army. They were raped by Tigers and put the blamed on IPKF.//

    அப்ப மிசோராமிலும், அசாமிலும், மணிப்பூரிலும் பெண்களை கற்பழித்து இந்திய ராணுவத்தின் மீது பழி போடுவது கூட புலிகள் தானே

    அட்றா சக்கை

  7. ஈழப்போரின் இறுதி நாட்கள்
    http://www.shobasakthi.com/shobasakthi/?p=488

    ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்

    ஈழப்போரின் இறுதி நாட்கள்

    இம்மாத ‘காலச்சுவடு’ இதழில் ‘ஈழப்போரின் இறுதி நாட்கள்’ என்ற மனம் பதைக்க வைக்கும் நீள்கட்டுரை வெளியாகியிருக்கிறது. புலி ஆதரவாளர்கள், அரச ஆதரவாளர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் முன்முடிவுகளையும் சாய்வுகளையும் சற்றே தள்ளிவைத்து விட்டு நிதானமாகப் படிக்க வேண்டிய கட்டுரையிது.
    இந்தக் கட்டுரை ராஜபக்ஷவின் கைக்கூலிகளால் எழுதப்பட்டது என்றோ, ஒட்டுக்குழுக்களின் சித்துவேலை என்றோ பழிக்கப்படலாம் அல்லது இதைக் கண்டுகொள்ளாமலே விடும் தந்திரமும் நடக்கலாம். ஒருவர் உண்மையை எதிர்கொள்ள மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை என்பதைத்தான் இப்போதைக்குச் சொல்லிவைக்க முடிகிறது.

    http://www.kalachuvadu.com/issue-116/page47.asp

    கட்டுரை

    வன்னியில் என்ன நடந்தது?

    களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு

    ஈழப்போரின் இறுதி நாட்கள்

    காலச்சுவடு 1994இல் மீண்டும் துவங்கப்பட்ட காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இதழியல் அறங்களில் ஒன்று, எந்தப் படைப்பையும் மறைவான பெயரில் வெளியிடுவதில்லை என்பது. இது தமிழக எழுத்துக்களுக்கு உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டாலும் இலங்கை அரசியல் சூழலைக் கருதி அன்றிலிருந்தே விதிவிலக்காகப் பல ஈழத்துப் பதிவுகளை மாற்றுப் பெயர்களில் வெளியிட்டு வருகிறோம். எனினும் அவர்கள் அடையாளம் எங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுதியவர் அடையாளம் தெரியாமல் ‘காலச்சுவடில்’ வெளிவந்த முதல் எழுத்து ‘அநாமதேயன் குறிப்புகள்’. மீண்டும் இலங்கை அரசியல் சூழலைக் கணக்கில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது.

    இலங்கையில் இப்போது அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் முகாம்கள் பற்றிய முதல் நிலை அனுபவக் கட்டுரை ஒன்றைக் ‘காலச்சுவ’டில் வெளியிட வேண்டும் என்று விரும்பினோம். அத்தகைய ஒரு முகாமிலிருந்த நண்பர் ஒருவருடன் கைபேசியில் தொடர்புகொண்டேன். வன்னி அனுபவங்கள் பற்றியும் முகாம் வாழ்க்கை பற்றியும் எழுதி அனுப்புவதாகக் கூறியவரின் 40 பக்க கையெழுத்துப் பிரதிகள் பொது நண்பர் ஒருவர்வழி, முதல் பதிவான வன்னி அனுபவங்கள் மின்னஞ்சல்வழிக் கிடைத்தன. தன்னுடைய பெயரையோ முகாம் பெயரையோ வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்தார் நண்பர். ஏற்றுக்கொண்டோம்.

    இலங்கை அரசு பற்றி மட்டுமல்ல விடுதலைப்புலிகள் பற்றியும் கடுமையான விமர்சனங்களுடன் இந்தப் பதிவு அமைந்துள்ளது. இந்த நண்பருடன் எனக்கு சுமார் 15 ஆண்டுகள் தொடர்பு உண்டு. விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்தார். 1999இல் சேரனின் நேர்காணல், விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்களுடன் ‘காலச்சுவ’டில் வெளிவந்த பின்னர் என்னுடன் பல ஆண்டுகள் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டார். வெறும் வாய்ச்சொல் வீரர் அல்ல. விடுதலை இயக்கத்தில் நம்பிக்கைகொண்டு வன்னியில் வாழ்ந்த அவரது அனுபவங்களை நாம் திறந்த மனதுடன் அணுக வேண்டும். முகத்தில் அறையும் யதார்த்தங்களை நேர்மையுடன் எதிர்கொள்வது நம்மை வலுப்படுத்தும். நாம் கட்டிக் காக்க விரும்பும் பிம்பங்களைவிடப் போர்க்களத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவங்களும் ரத்தசாட்சியான உண்மைகளுமே முக்கியமானவை.

    கண்ணன்

    அன்புள்ள கண்ணன்,

    உங்களுடன் கதைத்ததில் நிறைய மகிழ்ச்சி. பேசுவதற்கு எவ்வளவோ விசயங்கள் உள்ளன. ஆனால் சூழலும் நிலைமையும் அதற்கு வாய்ப்பாக இல்லை. தவிர கைபேசி மூலமான உரையாடல் அதற்குரியதும் இல்லை. பிற வழிகளில் பேசுவதற்கு வாய்ப்பும் இல்லை.

    வன்னி நிலைமைகள் – வன்னியில் என்ன நடந்தது என்பதைச் சாட்சி நிலையில் நின்று எழுத வேண்டும். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன? எப்படி இந்த வீழ்ச்சி ஏற்பட்டது? இந்த வீழ்ச்சிக்கு யார் யார் காரணம்? ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு சக்திக்கும் எவ்வளவு பொறுப்பு? போராளிகள் தோற்றார்களா, தோற்கடிக்கப்பட்டார்களா? சிங்கள இராஜதந்திரத்தின் ரகசியம், அதன் வீரியம், சிங்கள அரசின் மேலாதிக்க உபாயம், இந்தியா வகித்த, வகித்துவரும் பங்கு, வகிக்க வேண்டிய பாத்திரம், சர்வதேசச் சமூகத்தின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும், தமிழ்மக்களின் 50 ஆண்டு காலப் போராட்டப் பாதையின் போக்கு, ஜனநாயகம் பற்றிய தமிழ் மக்களின் புரிதல், பன்மைத்துவத்தை ஏற்கமுடியாத உளவியல் உருவாக்கம், சாதிய மனோபாவத்தின் கூட்டுருவாக்கம் எப்படி முஸ்லிம் விரோத, பிற அமைப்புகளின் மீதான காழ்ப்புணர்ச்சியாக உருமாற்றம் பெற்றது, ஈழப்போராட்டம் புலிகளின் போராட்டமாகச் சுருங்கியதும் புலிகளின் மீதான தடைகளும் எதிர்ப்புகளும் எப்படி ஈழப்போராட்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாக மாறின என்பதைப் பற்றியுமாகப் பல நிலைகளில் சாட்சிநிலை நின்று எழுதப்பட வேண்டும். அப்படியொரு எண்ணமும் உண்டு. ஆனால், இப்போது நாங்கள் இருக்கின்ற முகாம் சூழலி

    முழு கட்டுரை :
    http://www.kalachuvadu.com/issue-116/page47.asp

  8. நன்றி ..ரதி..உங்கள் மனக்குமுறல்கள் தொடரட்டும் .. தமிழ் மண்ணில் பிறந்திருந்தும் ஈழத்து ரத்தம் மண்ணில் விழுகையில் ஒன்றும் செய்யாத கையலகதவர்கள் கூட்டத்தில் நானும் ஒருவனே ..இன்றும் தமிழகத்தில் , ஈழமும் புலிகளும் தமக்கு சற்றும் தொடர்பில்லாத வேற்று நாட்டு சங்கதிகள் என்ற எண்ணம் இருக்கவே செய்கிறது ..எம் கருத்தை ,நியாயம் என்றாலும் , மற்றவர் மனதில் திணிக்க முடியாத நிலை தான் இங்கு..உங்கள் குமுறல்கள் அதை மாற்றதா ? என்ற ஏக்கம் மட்டும் இப்போது …

  9. //இன்றும் தமிழகத்தில் , ஈழமும் புலிகளும் தமக்கு சற்றும் தொடர்பில்லாத வேற்று நாட்டு சங்கதிகள் என்ற எண்ணம் இருக்கவே செய்கிறது //

    இது முழுக்க முழுக்க உண்மை. செல்வி. ரதியிடம் இதை நான் எடுத்து சொல்ல பல தடவைகள் முயற்சித்திருக்கிறேன். இந்த எண்ணம் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு இன்னும் அழுத்தமாகப் பதிந்து விட்டது. இறுதிப் போரின் போது தமிழகத்திலிருந்து தேவையான அளவு குரல் எழும்பாததன் காரணமும் இதுவே.

    • ராஜீவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை ஒரு முகாந்திரமாகக் கொண்டு, பயங்கரவாத பீதீயூட்டி ஈழப் போராட்டத்தை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதில் அரசு வெற்றிபெற்றது என்ற அடிப்படையில்தான் புலிகளை விமர்சிக்கலாம்.

      மேலும், இயல்பாகவே ஒரு முக்கிய விசயத்தையும் பலரும் கவனிப்பதில்லை(தலைவர்கள் மறைத்து விடுகிறார்கள்) ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் வேவ்வேறு தேசிய இனங்கள்.

      • //ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் வேவ்வேறு தேசிய இனங்கள்.//

        உண்மைதான். ஆனால் எல்லோரும் மனிதர்கள்தானே. அந்த வகையில் யாரும் பேசலாம். இது தமிழ் பேசும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் பொருந்தும். ஒரு நாட்டில் பிறந்து ஒரு மொழி பேசும் மனிதர்களை சொந்த வீடுகளிலிருந்து ஓட விரட்டியவர்கள் புலிகள். எல்லா ஈழத் தமிழர்களுக்கும் அவர்கள்தான் தெய்வங்கள் என்பது ஆதிக்க சாதி இந்துவின் பேச்சு. இதில் நாணயமோ பிற இனத்தவர் மீது கரிசனமோ துளியும் இல்லை.

        //ராஜீவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை//

        மரண தண்டனை கொடுக்கும் தகுதியை புலிகளுக்கு வழங்கியது யார்? இந்தக் கட்டைப் பஞ்சாயத்து திமிரை தமிழகத்தில் கொண்டு வந்ததால்தால் புலிகள் வெறுத்து ஒதுக்கப் பட்டார்கள்.

        • // //ராஜீவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை//

          மரண தண்டனை கொடுக்கும் தகுதியை புலிகளுக்கு வழங்கியது யார்?//

          ஈழத் தமிழர்களை கொல்வதற்கு இந்திய ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கியது யார்?

        • This is pure LTTE propaganda without an iota of truth. IPKF was forced into a war by the LTTE. Indian soldiers did not go to SL to kill Tamils. Any way, LTTE bringing their gun culture to the shores of India spelled doom for them ultimately. Good for Srilanka Tamils that they dont have to live under fascists anymore.

        • //IPKF was forced into a war by the LTTE. //

          ஹாஹா… யுத்தத்திற்கு புலிகள் காரணம். வன்புணர்ச்சிக்கு?

          புலிகள் இந்திய ராணுவத்தை வன் புணர்ந்தனரா வித்தகன்?

        • http://www.tamilnation.org/intframe/india/warcrimes/index.htm

          //”..the Indian Army came here, massacred innocent Tamil civilians, raped our women and plundered our valuables. The acronym IPKF will always stand for Indian People Killing Force where we are concerned. We will one day erect a memorial in the heart of Jaffna town, in the centre of Hospital Road, in memory of all the innocent civilians – ranging in age from the very old past 80 to young children massacred by the IPKF and to the women who were raped.” IPKF – Innocent People Killing Force, Dr. T. Somasekaram

          “…as an Indian I feel ashamed that under the Indo Sri Lanka agreement, our forces are fighting with Tamils whom they went to protect…I believe that the Indian Government had betrayed its own culture and ethics…The guilt, therefore, rests entirely on those who sent them to do this dastardly business of fighting in Sri Lanka against our Tamil brothers and sisters…” India’s former Foreign Secretary, A.P.Venkateshwaran, speaking in London in April 1988//

        • நண்பர் திரு.வித்தகன்,

          //IPKF was forced into a war by the LTTE.//

          அப்பட்டமான பொய். “Intervention in Sri Lanka: the I.P.K.F. experience retold” By Harkirat Singh என்ற புத்தகத்தில் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. LTTE-IPKF போர் ஏற்பட்டதற்குக் காரணமே ஜெ.என்.தீட்சித் மற்றும் எம்.கே. நாராயணன் திரை மறைவில் நடத்திய செயல்கள் தான். மாற்றுக் கருத்து இல்லை.

        • வித்தகன், இலங்களை என்பது இந்தியாவை விட பலமடங்கு சிறிய நாடாயிருப்பினும் ராஜதந்திர ரீதியில் அவர்கள் இந்தியாவைவிட பலமடங்கு மேல். இந்தியாவின் பெரியண்ணன் தனத்தை தனக்கு சாதகமாக மாற்றி, அமைதி ஒப்பந்தத்தை அமலாக்கும் பொறுப்பை நைசாக இந்தியாவிடமே தள்ளிவிட்டு அதன் மூலம் இந்தியா LTTE முரண்பாட்டை தோற்றுவித்தது ஜெயவர்தனே அரசின் மாஸ்டர் ஸ்டிரோக், ஒரே கல்லில் பல மாங்காய். கொஞ்சமும் அறிவில்லாமல் இருவரும் வகையாக சிக்கி சின்னாபின்னமானதுதான் மிச்சம். இதில் ஜெயவர்தனே அரசு LTTEக்கு ஆயுதம் கொடுத்து, இந்திய இராணுவத்துக்கு தடவாளம் கொடுத்து, ச்சே…உண்மையில் இதைப்பற்றிய ஒரு திறந்த ஆய்வு தேவை. இதை அவசியம் படியுங்க்ள https://www.vinavu.com/2008/10/23/eelam1/

        • வித்தகன் good for Srilanka Tamils that they dont have to live under fascists anymore. என்று நீங்கள் கோபத்தில் சொல்கிறீர்கள். இப்போது நடக்கும இராஜபட்ச ஆட்சி என்ன ஜனநாயக ஆட்சியா? புலிகளிடம் பாசிசத்தன்மை இல்லை என்று நான் சொல்லவில்லை ஆனால் அது எத்தகைய பாசிசம்? ஒரு பேரினவாதத்தை பாசிசத்தை எதிர்த்து வளர்ந்தது. அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நீங்கள் இந்த பதிவை வாசிப்பது நலம் https://www.vinavu.com/2009/09/04/raya3/

  10. வித்தகன்,

    தமிழ்நாட்டில் ராஜீவின் மரணத்திற்குப்பின் ஈழ ஆதரவு குறைந்தது, சரி. ஆனால், இறுதிப்போரில் ஆதரவுக்குரல் தமிழ்நாட்டில் எழாததற்கு, அது மட்டும் தான் காரணமா? என்ன சொல்லவருகிறீர்கள்?

  11. ரதி. ராஜீவ் கொலையால் புலிகள் மீது சாதாரணத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கசப்பும், இறுதிப்போர் புலிகளைக் குறிவைத்து இலங்கை ராணுவம் நடத்துகிறது என்ற எண்ணமும், அது சரிதான் என்கிற கருத்தும் தான் தமிழக மக்களை ஊமையாக்கி விட்டன. அதனால்தான் ஒரு சில தீக்குளிப்புகள், சில்லறை அரசியல்வாதிகளின் பல போராட்டங்கள், போரில் சாதாரண ஈழத் தமிழர்கள் அடைந்த துயரங்கள் எல்லாம் பரவலாகத் தெரிந்தும் காங்கிரசுக்கு மீண்டும் ஆட்சி வழங்கப் பட்டது. புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்ட அன்று எக்குறையும் இன்றி சகஜ வாழ்வு தொடர்ந்தது. புலிகள் ராஜீவையும் பத்மனாபாவையும் அழிப்பதற்கு தமிழ் நாட்டுக்குள்ளேயே துப்பாக்கி கலாசாரத்தைக் கொண்டு வராமல் இருந்திருந்தால் அவர்களுக்கு பொது மக்கள் மத்தியில் அவப் பெயர் வந்திருக்காது. ஒன்று நினைவில் கொள்ளுங்கள். இந்திய அமைதிப் படையை வென்றதாக புலிகள் மார்தட்டிக் கொண்டதை எந்த இந்தியனும் ரசித்ததே கிடையாது. அப்போதிலிருந்தே ஈழமும் புலிகளும் வேற்று நாட்டவர் என்பது பெரும்பான்மைத் தமிழர்களின் மனதில் பதிந்து விட்ட எண்ணம். இணையத்தில் உணர்ச்சி வசப் படுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள். தமிழகத்தில் ஈழ ஆதரவு 80 சதம் இருக்கலாம். புலி ஆதரவு 20க்கும் கீழே தான் இருக்கும்.

    • வித்தகன்,
      ராஜீவின் ஒரு மரணத்திற்காய் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் நிறையவே விலைகளை கொடுத்தாகிவிட்டது. இனிமேலும் இதைப்பற்றியெல்லாம் பேசி, விதண்டாவாதம் செய்து எங்களுக்கு போன எந்த உயிரும் திரும்பி வரப்போவதுமில்லை; இந்தியா சகுனியாட்டம் ஆடும் வரையில் எங்கள் உரிமைகளும் கிடைக்கப்போவதில்லை. புலிகளை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களின் ஜனநாயக உரிமை. அதைப்பற்றியெல்லாம் நான் சொல்ல ஏதுமில்லை. புலிகளின் இழப்பை ராஜீவின் விடயத்தால் நீங்கள் எவ்வளவு தான் நியாப்படுத்தினாலும், புலிகளின் இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்றுதான். புலிகள் இல்லாத ஈழத்தமிழன் இன்று அரசியல் அநாதை தான்.
      இணையத்தில் உணர்ச்சிவசப்படுபவர்களை நம்பி ஏமாற வேண்டாமா? நீங்கள் என்னைப்பற்றி ஏதோவொன்றை தீர்மானித்துவிட்டுத்தான் எழுதுவீர்கள் போலும். ஆனால், அது என்னவென்றுதான் எனக்கு புரியவில்லை, போகட்டும். தமிழ்நாட்டு சட்டசபையிலிருந்து இந்திய நாடாளுமன்றம் வரையில் இந்த அரசியல்வியாதிகள் ஈழத்தமிழர்கள் பால் அக்கறையுள்ளது போல் நீட்டி முழக்கி வில்லங்கத்துக்கு தெரியாத தமிழில் பேசி… இந்த …… ஜென்மங்களின் இம்சை தாங்கமுடியவில்லை. இவர்களை விட இணையத்தில் உணர்ச்சிவசப்படுபவர்கள் எவ்வளவோ மேல். 

    • Dear Mr. வித்தகன்,

      உங்களுக்கும் ஒரு சில தமிழக தமிழர்களுக்கும் வேண்டுமானால் ராஜீவ் ஒரு மிகப்பெரிய நேசிக்கக் கூடிய தலைவராக இருக்கலாம். அதனால் அவருடைய இழப்பு உங்களுக்கு ஈடு செய்ய முடியாததாக இருக்கலாம். ஆனால் ஈழத் தந்தை செல்வாவின் கொள்கைக்கு எதிரான ஒரு ஒப்பந்தத்தை ஈழ மக்கள் மீது திணிக்க முயன்று, அதை பிற போராளிக் குழுக்களை ஏற்கச் செய்து, அதற்கு ஒத்து வராத விடுதலைப் புலிகளை பிற போராளிக் குழுக்களின் மூலம் அழிக்க நினைத்து, அது முடியாமல் பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் இந்திய ராணுவத்தால் பலியாவதற்கு காரணமான ராஜீவ்காந்தி களை எடுக்கப்பட்டதற்கு ஈழத் தமிழர்கள் யாரும் வருத்தப்பட மாட்டார்கள் (RAWவிடம் இணைந்து அதற்கு உதவியவர்கள் உயர் மட்டத்தில் இருந்த இரு பார்ப்பனர்கள் – எம்.கே.நாராயணன் மற்றும் தீட்சித்). ஈழத் தமிழர்கள் மனநிலையில் ராஜீவ் மரணம் நியாயமானதுதான்… அதை இனி மேல் பேசிப் பயனில்லை.

    • //ராஜீவ் கொலையால் புலிகள் மீது சாதாரணத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கசப்பும், இறுதிப்போர் புலிகளைக் குறிவைத்து இலங்கை ராணுவம் நடத்துகிறது என்ற எண்ணமும், அது சரிதான் என்கிற கருத்தும் தான் தமிழக மக்களை ஊமையாக்கி விட்டன.//

      அப்படி எனக்கு தோன்றவில்லை. ராஜீவ் கொலையை தவறு என்று என்னிடம் சொன்னவர்கள் இதுவரையில்லை (சில பார்ப்பனர்கள், ஆர் எஸ் எஸ்க்காரர்கள் விதிவிலக்கு).

      ராஜீவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். அதை புலிகள் செய்த விதம், நேரம் இப்படி பல விசயங்களில் அது சாதகமானதாக இல்லாமல் போய்விட்டது. இதுதான் இந்த விசயத்தில் புலிகளுக்கான விமர்சனம்.

  12. ராசிவ் காந்தியை புலிகள் கொன்றதற்க்கு முக்கிய காரணம், பழிவாங்குவது அல்ல. (அதுவும் ஒரு துணை காரணியாக இருக்கலாம்). 199ஒஇல், இந்திய பிரதமர் வி.பி.சிங், இந்திய ‘அமைதி’ படையை திரும்பப் பெற்றார். 1991இல் மத்திய அரசு கவிழ்ந்து, பாரளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ppoடது. ராஜிவ் வெற்றி பெற்று மீண்டும், பிரதமரானால், இலங்கைக்கு மீண்டும் இந்திய படைகளை அனுப்புவர் என்ற (மிக தவறான) அனுமானம். இது தான் முக்கிய காரணம் என்று ஒரு யூகம். one angle for the motive for this assasination which cost LTTE and its supporters a lot. they lost their base in TN and India. a strategic mis-calculation due to poor intellegence gathering mechanism of LTTE then. Almost equal to the blunder in boycotting the 2006 SL parliamentary elections which paved way for Rajapakse to defeat the more moderate Ranil.

    • நண்பர் திரு.அதியமான்,

      உங்களின் யூகம் வேடிக்கையாக உள்ளது. இந்திய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிலேயே அது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறப்பட்டுள்ளது. மற்றபடி 2006 தேர்தலை புறக்கணித்தது மிகப்பெரிய தவறு தான்.

  13. எங்களின் வலிகளைப் புரிந்து கொண்டு இங்கே பதில் எழுதிய அனைவருக்கும் என் நன்றிகள்.  அதியமான், உங்கள் இணைப்புக்களுக்கு நன்றி. இன்னும், இந்திய ராணுவம் ஈழத்தமிழர்களுக்கு செய்த அட்டூழியங்களின் இணைப்புகளையும் நீங்கள் கொடுத்திருக்கலாம். “a strategic mis-calculation” இதைத்தான் இப்போது இந்தியா ஈழம், மற்றும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.  

    • ரதி ஏன் இன்னும் இங்கே பிடிவாதமாக எழுதிக்கொண்டிருகிரீர்கள் என்று தான் எங்களை போன்ற ஈழ தமிழர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எவளவுதான் நடைமுறை யதார்த்தம் பற்றி எழுதினாலும் இவர்கள் ராஜீவ் கொலை என்ற ஒன்றை சுற்றியே அதை விவாதிப்பார்கள். இங்கு அவர்கள் அதைத்தான் இப்போதும் செய்து கொண்டு இருகிறார்கள். நடைமுறை யதார்த்தம் பற்றி எழுதுவது இருக்கட்டும் தோழி அதற்கு முதல் நாம் நடைமுறை நாடகங்கள் என்ன என்பதை கற்றுகொள்வது நல்லது. ( எனது தமிழில் பிழை இருந்தால் மனிக்கவும் )

      • நண்பர் கான்ப்ரோ. புலிகளைக் குறை சொன்னாலே ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேசுபவர்கள் என்ற மூளைச் சலவை கருத்தை தயவு செய்து விட்டு விடுங்கள். புலி ஆதரவுக் குரல் கேட்கும் போதெல்லாம் ராஜீவ் கொலையை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. புலிகளைப் புகழாமல், (நேரடியாகவோ மறைமுகமாகவோ) யார் வேண்டுமானாலும் எழுதுங்கள். அதன் பின் சாதாரணத் தமிழர்களைப் பற்றி மட்டும் பேசுவோம்.

        • நண்பர் அதியமான்
          அதைத்தான் நானும் தோழி ரதி அவர்களிடம் வேண்டி நிற்கின்றேன். ஏனெனில் ஈழம் பற்றி பேசினால் புலிகள் பற்றியும் பேச வேண்டி வரும். புலிகள் பற்றி பேசினால் இங்கு வாக்குவாதம் தான் வரும். எனது கணிப்பின்படி இங்கு ஈழத்தமிழர் அவலம் பற்றி பேச ஒரு பாத்து வருடங்களாவது செல்லும். ஈழம் மயானமான பின் அதுபற்றி பேசி கொண்டிருக்கலாம்

        • நண்பர் திரு.வித்தகன்,

          அதையே தான் நானும் சொல்கிறேன். ரதி அவர்கள் கட்டுரையில் எந்த இடத்திலும் புலிகளுக்கு ஆதரவாக எழுதியதாகத் தெரியவில்லை. பின்னர் எதற்காக ஈழத் தமிழர்களின் கஷ்டங்கள் பற்றி ஒருவர் சொல்லும் இடத்தில் பின்னூட்டமிடும் மற்றவர்கள் புலி அரசியலை பற்றி பேசுகிறார்கள்? இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களை மட்டும் பேசலாமே.

          அப்படின்னா ஆதாரமில்லாமல் புலிகளை தரக்குறைவாகப் பேசினால் NO OBJECTION… (For example., Shanmugalingam.Ponnampalam சொன்னது மாதிரி Tamils were never raped by Indian Army. They were raped by Tigers and put the blamed on IPKF) ஆனால் அதை மறுத்து பின்னூட்டமிட்டால் (ஒரு சிலருக்கு அது புலிகளை ஆதரித்து பேசுவது போல் தெரியும்) மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் எனச் சொல்லி ஒரு OBJECTION.

  14. நான் ராஜீவ் காந்தி ரசிகன் அல்ல. இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது தவறு என்று நினைப்பவன். அவர்களுக்கும் புலிகளுக்கும் மூண்ட போரில் மிகவும் வேதனைப் பட்டவனும் கூட. ஆனால் இந்த மண்ணிலேயே புலிகள் வன்முறைக் கலாசாரத்தைக் கொணர்ந்ததும், ராஜீவ் காந்தி மட்டும இதற்கு பலியாகவில்லை பதமாநாபாவும் மேலும் பதினான்கு பேரும் சேர்த்துதான், இது நமக்கு சரிவராது இவர்களோடு கூட்டு சேர்வது ஃபாசிசத்திற்குத் தரும் ஆதரவு என்று உணர்ந்து, பெரும்பான்மைத் தமிழர்களைப் போல, இனிமேல் இதில் தலையிடக் கூடாது என்று மனத்தால் ஒதுங்கியவன். இதற்கிடையில் உலகில் நான்காம் பெரிய ஆர்மியை தோற்கடித்துவிட்டோம் என்ற சுய தம்பட்டம் காதில் விழும் போது இன்னமும் தூர விலகி விட்டோம். தேவையானபோது திரும்ப வர முடியாத அளவு வெகு தூரம்….

  15. வித்தகன் உங்கள் கருத்து பெரும்பாண்மை தமிழர்களுடைய கருத்து அல்ல. ராஜீவ் காந்தி கொலையை கருணாநிதியை தோற்கடித்து ஜெவை ஆட்சியில் அமர்த்தியவுடன் மறந்து விட்டனர். அமைதிப்படையின் தோல்வியைப்பற்றி யாரும் அலட்டவேயில்லை. எனவே இறுதிப்போருக்கும் குறிப்பிட்ட இந்த இரண்டு விடயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை…..

    இருந்தாலும் தமிழக மக்களின் dispassionate approach விவாதிக்கப்படவேண்டிய ஒன்றுதான்… எந்த வகையிலென்றால்… இந்தியாவிலேயே மணிப்பூரிலும் காசுமீரிலும் ஈழத்தை ஒத்த நிலைமை பல ஆண்டுகளாக நீடித்திருக்கும் போது யாருக்கோ நடப்பது என அக்கறயற்றிருந்த தமிழன் இப்போது தனது தமிழனம் அழியும் போதும் அலட்டவில்லை …

    மனிதன் கொஞ்ஞம் கொஞ்சமாக தனது சமூகத்தன்மையை இழந்து வருகின்றான் என்பதுதான் எனது கருத்து அதுதான் இதுபோன்ற நிலைமைகளை தோற்றுவிக்கின்றது. மற்ற காரணங்களெல்லாம் கொசுறு… தெருவில் ஒருவர் அடிபட்டு டிராபிக் ஜாம் ஆகும் போது உதவுபவர் முதல் கோலங்கள் சீரியலுக்கு நேராமாச்சு என புலம்புபவர் வரை பலவகை மனிதர்களை பார்க்க முடியும்… இது போன்ற பல உதாரணங்களை கொண்டு சமூக apathy பற்றி ஒரு ஆய்வு தேவை…

    • உங்கள் மேற்குறித்த கருத்துடன் என்னால் முழுமையாக ஒத்துப் போக முடியாவிட்டாலும் என்னை சிந்திக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

    • Thats right Mr.ஜார்ஜூ புஸ். வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் மனநிலையில் வேறுபாடு உள்ளது. பெரும்பான்மையான தமிழகத் தமிழர்கள் நாட்டால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் என்ற மனநிலையில் வாழ்பவர்கள். இந்த நிலையில் தமிழ் தேசியம் என்ற மனநிலைக்கு மறுபடி அவர்கள் வருவது என்பது சாத்தியம் ஆகுமா இல்லையா என்பதுதான் பிரச்சனைக்குரிய கேள்வி.

      லெனின்.

      • அன்பு லெனின், தமிழ் தேசியம், இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலைகளில் நிலைத்திருக்க முடியாத ஒரு அறிவியல்பூர்வமற்ற தத்துவம். தனித்தமிழ் தேசம் இருந்தால் மக்கள் பிரச்சனையெல்லாம் தீரும் என்பது ஒரு பெரிய மோசடியாகும். தவிர தமிழ்தேசியம் சரியென நீங்கள் ஏற்றுக்கொண்டால் பின் சிங்கள தேசிய வெறியையும் நியாயப்படுத்த வேண்டியிருக்கும். குறுகிய கால கிளர்ச்சி மனோபாவத்தை உண்டுசெய்வதை தவிர வேறொரு சாதனையையும் தமிழ் தேசியம் மட்டுமல் என்த குறுந்தேசிய அரசியலும் செய்ததில்லை செய்யவும் முடியாது. அதே நேரத்தில் ஈழப்பிரச்சனைக்கு தனிஈழம்தான் தீர்வு என்ற முடிவுக்கு வர நமக்கு தமிழ்தேசிய அரசியல் தேவையில்லை. ஒரு தேசிய இன அடக்குமுறை நிலவும் பொழுது பிரிந்து போவதுதான் சாத்தியமான ஒரே தீர்வு.
        தமிழ்தேசியத்திற்கெதிராக நான் இந்திய தேசியத்தை வைக்கவில்லை, இந்தியா பல தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதுதான் என் கருத்து.
        இதெயொட்டி நாம் இங்கே விவாதிப்பது ஒரு வகையில் பதிவின் நோக்கத்தை பாதிக்கும். எனவே விரைவில் பேசுவோம்.

        • நண்பர் கேள்விக்குறி,

          தமிழகத் தமிழர்கள் ‘திராவிட’ மாயையிலிருந்து வெளியே வர வேண்டும். தமிழர்களும் ஒரு தேசிய இனம் என்பதை இங்குள்ளவர்கள் உணர வேண்டும். தமிழ்தேசியம் பற்றி நிச்சயம் ஆய்வு தேவை. வேறொரு பதிவில் விவாதிக்கலாம். உங்கள் மறுமொழிக்கு நன்றி.

    • மனிதர்கள் சமூகத்தன்மையற்று போகின்றனர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உலகமயம் தோற்றுவித்திருக்கும் நுகர்வு கலாச்சாரம் பெருக பெருக மனிதன் பண்டங்களை நுகருவதை தவிர எந்த ஒரு உருப்படியான சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

  16. நான் தனியாக எதுவும் எழுதத் தேவையே இல்லை.
    இந்த விடயத்தில் வித்தகன் கூறியதை வழி மொழிகிறேன்.

    இந்த விடயத்தைப் பொருத்தவகையில் வித்தகன் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான தமிழர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறார்.

  17. எங்கள் ஊரிலிருந்து வந்த ஒரு வீரரை மறக்காமல் இங்கு குரிபிட்டமைக்கு மிக்க நன்றி, மேலும் அதே ஊரை சேர்ந்த எங்கள் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி. நாட்டால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் ஆயினும் தமிழ் தேசியம் மலர துடிக்கும் பலரில் நானும் ஒருவன்.

    • கார்த்தி, 

      உங்கள் வருகையும், பதிலும் சந்தோசமாக இருக்கிறது. என் தாயார் தான் அவரைப்பற்றி என்னை விட அதிகம் பேசிக்கொண்டிருப்பார். அவர் யாரென்று தெரிந்தால் எங்கள் அன்பையும் நன்றியையும் எங்கள் சார்பில் தெரிவிக்கவும். நன்றி. 

      • உங்கள் பதிலை கண்டதும் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு வேறு ஏதேனும் விவரம் அறிந்தால் தெரிய படுத்தவும். கண்டுகொள்ள எதுவாய் இருக்கும். —- நல்ல மாற்றத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கும் ஒரு தமிழன்

        • கார்த்தி, 

          எனக்கு அந்த சகோதரர் தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்று சொன்னதை தவிர வேறெந்த விவரமும் தெரியாதே? அதற்கு மேல் சொல்லும் நிலையில் அவரும் இல்லை. மேற்கொண்டு வற்புறுத்தி கேட்கக்கூடிய நிலையில் நாங்களும் இருக்கவில்லை. நான் நொய், நொய் என்று அலட்டியதால் தான் அவர் தன் ஊரையாவது சொன்னார். அவர், அந்நாட்களில் எந்த முகாமில் இருந்தார் என்று மட்டும் வேண்டுமானால் சொல்லமுடியும். அது உதவுமா? 

        • கார்த்தி,
          அவர் சிறிது காலம் இருந்தது பொலிகண்டி முகாமில். இது யாழ்ப்பாணம் வடமராட்சியில் கடற்கரையோரமாக உள்ள ஓர் ஊர். இதற்கு மேல் அந்த சகோதரரைப் பற்றி எனக்கு எந்த விவரமும் தெரியவில்லை. உங்கள் முயற்சி வெற்றிபெற என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 

    • //ங்கள் ஊரிலிருந்து வந்த ஒரு வீரரை மறக்காமல் இங்கு குரிபிட்டமைக்கு மிக்க நன்றி, மேலும் அதே ஊரை சேர்ந்த எங்கள் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி. நாட்டால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் ஆயினும் தமிழ் தேசியம் மலர துடிக்கும் பலரில் நானும் ஒருவன்.//

      மானாமதுரைக் காரர்கள் எல்லோருமே எப்போதுமே அப்படித்தான் இருப்பார்கள். மகிழ்ச்சி!

  18. ஈழ போரில் ஈடுபாடி இருந்திருந்தால் கருணாநிதியும் காங்கிரசும் எப்படி ஜெயித்திருக்கும் ?

  19. ஈழ போரில் தமிழக தமிழர்களுக்கு ஈடுபாடு இருந்திருந்தால் சென்ற தேர்த்தலில் கருணாநிதியும் காங்கிரசும் எப்படி ஜெயித்திருக்கும் ?

    ராஜீவ் கொலையோடே எல்லாம் போச்சு , பிரபாகரன் மரணம்கூட எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

    • நண்பர் மதி,

      //ஈழ போரில் தமிழக தமிழர்களுக்கு ஈடுபாடு இருந்திருந்தால் சென்ற தேர்தலில் கருணாநிதியும் காங்கிரசும் எப்படி ஜெயித்திருக்கும்?//

      தமிழகத் தமிழர்களைப் பற்றி நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் கட்சி சார்ந்து உள்ளனர். மற்றும் சிலர் ஜாதி சார்ந்து உள்ளனர். சில தமிழ் உணர்வாளர்களும் உள்ளனர். மீதமுள்ளோர் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள்; அவர்களுக்கு மனிதநேயம் இருக்குமே தவிர வெளியில் வந்து ஒரு எதிர்ப்பை காட்டும் அளவிற்கு அவர்களுக்கு ஈடுபாடு இருக்காது. ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் ஈழத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தான்; புலிகளுக்கும் தான். ஆதரவு என்றால் எப்படி — ஆதாவது நண்பர்களிடம் பேசிக் கொள்ளும் போதும், கட்சி உறுப்பினர்களிடையே உரையாடிக் கொள்ளும் போதும், ஒரு கருத்துக் கணிப்பு நடத்தும் போதும் ஆதரவு இருக்கும். ஆனால் அதுவே தேர்தல் என்று வரும் போது அவர்கள் நிச்சயம் கட்சி சார்ந்தும், ஜாதி சார்ந்தும், ஒரு சிலர் பணம் சார்ந்தும் தான் வாக்களிப்பார்கள்.

      ஆனால் 2004 தேர்தலை காட்டிலும் இம்முறை காங்கிரஸ் தமிழகத்தில் சற்று அடிதான் வாங்கியது. இதுதான் ஆரம்பம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரை, மக்களிடம் ஈழ ஆதரவு என்பது ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பது போல் தான்.

  20. Kanbro,

    உங்கள் தமிழிலும் பிழையில்லை, சொன்ன கருத்திலும் பிழையிருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் ஏன் இன்னும் “பிடிவாதமாக” இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்? என்னைப்பற்றி ஈழத்தமிழர்களிடமிருந்து இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் என்று நான் எதிர்பார்த்ததுதான். நீங்கள் எவ்வளவு காலமாக வினவு தளத்தை பார்க்கிறீர்களோ தெரியவில்லை எனக்கு. நான் ஏறக்குறைய இந்த தளம் ஆரம்பித்ததிலிருந்து இங்கே உலவுகிறேன். வினவின் புலிகள் பற்றிய சில கருத்துகளோடு எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால், அவர்கள் ஒருபோதும் ஈழத்தமிழர்கள் பக்கம் உள்ள நியாயத்தை மறுப்பவர்கள் அல்ல. வினவு அல்லது தமிழ்நாடு தமிழர்கள் புலிகளை விமர்சித்தால் அது தவறென்று யாரும் சொல்ல முடியாது. ஈழத்தமிழர்களில் துரோகிகளும் உள்ளார்கள். தமிழ்நாட்டு தமிழர்களில் எங்களுக்காக உயிரை கொடுத்தவர்களும், எங்களுக்குகாக எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் குரல் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். எனது பதிவில் புலிகளைபற்றி பேசுவது என் நோக்கமல்ல. ஈழவிடுதலையை புலிகளை தவிர்த்து பார்க்க முடியாததால் அது எப்படியோ என் பதிவுகளோடு சம்பத்தப்படுத்தப்பட்டு பார்க்கப்படுகிறது. அது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது.  புலிகளைப்பற்றி வினவு கட்டுரை எழுதினால் பெரும்பாலும் இங்கே புலி எதிர்ப்பாளர்கள் தான் (ஈழத்தமிழர்கள்) வந்து கும்மியடித்துக் குரவை பாடிக்கொண்டிருந்தார்கள். ஈழத்தமிழர்கள் சிலர் இன்னும் கும்மியடித்துக்கொண்டிருக்கிரார்கள். என்னைத்தவிர வானதி (அவர் இப்போது வராமலே விட்டுவிட்டார்), செந்தில், லெனின் போன்றோர் தான் தொடர்ந்து, ஈழவிடுதலையில் புலிகள் யார், ஈழ விடுதலையில் அவர்களின் பங்கு என்ன என்பதை பற்றி ஏதோ எங்களின் அறிவுக்கு எட்டியவரையில் பேசிக்கொண்டிருந்தோம். அது கூட நாங்கள் புலிகளை நேசிப்பததால் தானே அன்றி, நாங்கள் புலிகளின் பிரதிநிதிகளாக அல்ல. அப்போதெல்லாம் நானும் நினைப்பதுண்டு, எங்களவர்கள் தங்களுக்குள் இணையத்தில் எங்களின் பெருமை பேசாமல் இங்கே வந்து ஏன் எங்கள் பக்க நியாயங்களை சொல்லக்கூடாது என்று? எங்களுக்குள்ளேயே எப்போதும் பேசிக்கொண்டிருந்தால் எங்கள் பக்கமுள்ள நியாயம் மற்றவர்களுக்கு புரிந்துவிடாது. எங்கள் கருத்தை மற்றவர்கள் ஏற்கலாம் அல்லது அதை ஏற்காமலும் போகலாம். என்னைப்பொறுத்தவரை அது அல்ல முக்கியம். குறைந்தபட்சம் எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை என் மூச்சுள்ளவரை எங்கு வேண்டுமானாலும்  நான் சொல்லிக்கொண்டுதான் இருக்கப்போகிறேன். மற்றப்படி உங்கள் ஆதங்கம் நியாயமானது தான். இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வந்த எங்களின் அவலத்தை வித்தகன் என்ற நண்பர் ஒருவரின் கருத்து அதன் நோக்கத்தை திசை திருப்பிவிட்டது. எங்களின் வலி, அவலம் அது எங்களுக்குத்தான் பெரிதாகத்தெரிகிறது. அவருக்கு அவரின் தலைவர் மரணம் பெரிதாகத்தெரிகிறது. அவ்வளவுதான்.  
    வித்தகன்,  

     இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் சுபாஸ் சந்திர போஸ், பகத் சிங்க் போன்றோரின் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டு, காந்தி மட்டும் தான்  சுதந்திரத்திற்காக போராடினார் என்று ஓர் மாயை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஈழவிடுதலை போராட்டத்திலும் அதையே செய்து, புலிகளை ஓரம் கட்டி ஈழத்தமிழர்களை விலை பேசி விற்கும் கைங்கரியத்தை சில துரோகிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். உங்கள் தலைவர்கள் செய்த தியாகங்களை போல் தான் புலிகள் செய்த தியாகங்கள் எங்களுக்கு பெரிதாக தெரிகிறது. //புலிகளைப் புகழாமல், (நேரடியாகவோ மறைமுகமாகவோ) யார் வேண்டுமானாலும் எழுதுங்கள்.// ஓர் தமிழ்நாட்டு தளத்தில் நான் எழுதுகிறேன் என்பதால் இந்த அறிவுரையா? உங்களை ஓர் ஜனநாயக வாதி என்ற என் கருத்தை உடைத்துவிட்டீர்கள். Thanks a lot  to Viththakan and so many others.

    வினவு , 

    மன்னிக்கவும், இந்த பதிவின் நோக்கம் திசை திருப்பப் பட்டதால் நான் இப்படி ஓர் நீண்ட பதிலை எழுத வேண்டி வந்துவிட்டது. 

    • ரதி அவர்களுக்கு,

      மன்னிக்கவும். செந்தில் மற்றும் லெனின் இரண்டும் நான் தான். இதை முன்னரே ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். எனது முழுப் பெயர் செந்தில்குமார் (என்ற) லெனின் பிரகாஷ்.

      நன்றி. உங்களின் கட்டுரை வினவில் தொடரட்டும்.

    • //சுதந்திரத்திற்காக போராடியவர்களில் சுபாஸ் சந்திர போஸ், பகத் சிங்க் போன்றோரின் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டு, காந்தி மட்டும் தான் சுதந்திரத்திற்காக போராடினார் என்று ஓர் மாயை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.//

      ரதி. ஈழ விடுதலைக்குப் போராடிய அமிர்தலிங்கம், பத்மநாபாவை அழித்து விட்டு தன பெயரை மட்டுமே புலிகள் நிலை நிறுத்திக் கொண்டதுதான் உண்மையான பிரச்சினை. உங்கள் உதாரணத்தின் உண்மைப் பொருள் உணராமல் நீங்கள் அதை எடுத்தாண்டு விட்டீர்கள். காந்தி தேசத் தந்தையாக இருந்தாலும் பகத் சிங்கிற்கும் பிறருக்கும் மரியாதை உண்டு. உங்கள் ஊரில் ஒருவர் கடவுள் மற்றவர்கள் துரோகிகள்! எந்த ஊரில் இருப்பதன் பெயர் ஜனநாயகம் சகோதரி?

      • வித்தகன், 
        இந்த விவாதம் என் பதிவின் நோக்கத்தை தாண்டி விவாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆனாலும், அமிர்தலிங்கம், பத்மநாபா போன்றோர் ஈழவிடுதலைக்காய் “போராடினார்கள்” என்று சொல்வது உங்களுக்கே ரொம்ப ஓவராய் தெரியலையா? இதை நான் பலமுறை என் பதில்களில் சொல்லிவிட்டேன், ஆனாலும், இன்னொருமுறை சொல்கிறேன். ஈழவிடுதலைக்காய் போராடுபவர்கள் யார், யார் யாரென்பதை ஈழத்தமிழர்கள் தான் தீர்மானிக்கவேண்டும். உங்கள் புலி எதிர்ப்பை இன்னோர் பதிவில் இன்னும் விவரமாக விவாதிக்கலாம். அதுவரை நன்றி. 

        • சரி ரதி. பதிலுக்கு நீங்களும் இந்தியா பற்றி இனிமேல் கருத்து சொல்லாமல் இருங்கள். யார் யாருக்கு நாங்கள் எவ்வளவு மரியாதை தருகிறோம், இல்லை என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. அதை இந்தியர்களே முடிவு செய்து கொள்கிறோம். இந்திய ஜனநாயகம், இந்திய ராணுவம் பற்றியெல்லாம் குறை சொல்லாமல் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். நானும் தலையிடாமல் இருக்கிறேன். இந்திய அமைதிப் படையின் அட்டூழியம் என்ற தலைப்பையும் எடுத்துவிடுங்கள். நானும் புலி எதிர்ப்பைப் பதியாமல் இருக்கிறேன்.

        • வித்தகன் விதண்டாவாதம் செய்யவேண்டாம். இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டூழியங்கள் அப்போது இந்திய பத்திரிக்கைகளிலேயே விமர்சிக்கப்பட்ட ஒன்றுதான். நீங்கள் அப்போது சிறுவனாக இருந்திருக்கலாம் அதனால் அது தெரியாமல் போயிருக்கலாம், அப்படி உங்களுக்கு ஒரு விசயம் தெரியாமல் இருப்பதனாலேயே அது நடக்கவில்லை என ஆகிவிடுமா? மேலும் இங்கே ரதி தனக்கு நேர்ந்த அனுபவத்தை எழுதுகின்றார், அதில் இந்திய அமைதிப்படையின் அட்டுழியங்கள் தொகுக்கப்படும்போது நீங்கள் அதை எப்படி மறுக்க முடியும்? இந்திய மக்களையே அடக்க அதிகாரம் இல்லாத இந்திய இராணுவம் இலங்கை மக்களை எப்படி அதிகாரம் செய்யமுடியும். அந்த அடக்குமுறையை ஆக்கிரமிப்பை எதிர்ப்பதுதான் பொறுப்புள்ள இந்தியனின் கடமை.

          இந்திய அமைதிப்படையின் அட்டுழியங்களை அம்பலப்படுத்தும்போது அதை தர்க்கரீதியாக எதிர்கொள்ளுங்கள். அதை விடுத்து ஊசிப்போன பாணியான அவன் மட்டும் செய்யவில்லையா என்பதை கேட்கவேண்டாம்.

        • ரதி,

          ///// ஆனாலும், அமிர்தலிங்கம், பத்மநாபா போன்றோர் ஈழவிடுதலைக்காய் “போராடினார்கள்” என்று சொல்வது உங்களுக்கே ரொம்ப ஓவராய் தெரியலையா? இதை நான் பலமுறை என் பதில்களில் சொல்லிவிட்டேன், ஆனாலும், இன்னொருமுறை சொல்கிறேன். ஈழவிடுதலைக்காய் போராடுபவர்கள் யார், யார் யாரென்பதை ஈழத்தமிழர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.//////

          விடுதலை புலிகள் ‘மட்டும்’ தான் ஈழத்திற்காக உண்மையாக போராடியவர்கள். மற்றவர்கள் அனைவரும் (repeat : அனைவரும்) போலிகள் / துரோகிகள். அழிக்கப்பட வேண்டியவர்கள். அப்படிதானே ? இந்த அணுகுமுறை தான் புலிகள் அழிந்தற்க்க்கு அடிப்படை காரணம் என்பதை உங்களைப் போன்றவர்களால் புரிந்த கொள்ளவே முடியாது.

          அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வன் போன்றவர்களை கொன்றழித்தன் விளைவு, இன்று ஈழர்களுக்காக உலக அரங்கிலும், இலங்கையில் குரல் கொடுக்க வலிமையான,
          உருப்படியான தலைவர்கள் எவரும் இல்லை. 80களின் மத்தியில் தமிழகத்தில் நடந்து
          பொதுக்கூட்டங்களில் அமிர்தலிங்கம், சிறீசபாரத்தினம், உமா மகேஸ்வரன் (எ) முகுந்தன் போன்ற பலரின் பேச்சையும் கேட்டிருக்க்றேன். பல விசியங்களை பலரிடமும் கலந்து அறிந்துகொண்டேன். அதானால்தான் வெறும் உணர்சி குவியலான
          உங்களுடன் மாறுபடுகிறேன்.

        • வித்தகன் கீழே உள்ள 3 தொடுப்புகளையும் தரவிறக்கம் செய்து படிக்கவும். இது இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த ‘அட்டுழியங்களின்’ தொகுப்பு. விடுதலைப் புலிகள் வெளியிடானாலும், இதில் உள்ள பல தகவல்கள் இந்திய பத்திரிக்கைகளிலிருந்து பெறப்பட்டவை அவை ஆதாரத்துடன் இருக்கின்றன.
          200MB அளவு. PDF ஃபைல்கள்
          http://www.mediafire.com/?emj0zigyjyu
          http://www.mediafire.com/?i5tzkzyjfny
          http://www.mediafire.com/?tz1mvzdgggz

      • ‘காந்திய’ வழியில் வாங்கிய ‘சுதந்திரத்தை’ அனுபவிக்கும் நண்பர் திரு. வித்தகன்,

        இந்தியாவில் இருப்பது தான் உண்மையான ஜனநாயகமா? ச்சி த்தூ…

        நீங்களும் இந்திய உளவுத்துறை, காங்கிரஸ் மற்றும் ராஜீவ் ஈழ விடயத்தில் மூக்கை நுழைத்தது தவறு என்று ஒத்துக் கொள்ளுங்கள், நானும் புலிகளை உணர்ச்சிப் பூர்வமாகப் பார்ப்பதை நிறுத்திவிடுகிறேன்… நீங்கள் மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால் ஏன் ஈழத் தமிழர்கள் உங்களைப் பற்றிப் பேசப் போகிறார்கள்… யோசித்தீர்களா? மற்ற படி அமிர்தலிங்கம், பத்மநாபா போன்றோர் பற்றி பேசி இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களை மறைக்காதீர்.

  21. லெனின். இந்தியாவைத் தலையிடச் சொல்லி ஈழத் தமிழர்கள் கேட்டிருக்கக் கூடாது. இந்தியா தலையிட்டிருக்கக் கூடாது. போதுமா? இப்போது உணர்ச்சி வசப் படாமல் புலிகளைப் பார்க்கிறீர்களா?

    ஆதிக்க சாதி இந்துக்கள் மட்டும்தான் விடுதலைப் புலிகளைக் கொண்டாட முடியும். ஒரு தலித்தோ முஸ்லீமோ புலிகளைக் கொண்டாட மாட்டார்கள். காலம் காலமாக வாழ்ந்த வீடுகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் முஸ்லீம்களை ஆட்டு மந்தை போலப் புலிகள் விரட்டியது தெரியுமா? அதற்குக் காரணமும் பொறுப்பும் யார்? இந்திய ஜனநாயகத்தின் மேல் துப்பும் பெரும் அறிவாளியான உங்கள் மீது இந்த விஷயத்துக்காக யார் துப்பப் போகிறார்கள்?

    • நண்பர் திரு. வித்தகன்,

      இந்தியாவைத் தலையிடச் சொல்லி ஈழத் தமிழர்கள் கேட்டிருக்கக் கூடாது என்று நீங்கள் சொல்வது தவறு. இனவெறிக்கு ஆளாகும் மக்கள் நம் இனத்தவர் (தமிழர்கள்) அதிகம் வாழும் நாடு என்ற முறையிலும், தன் சொந்தங்கள் சிலர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற முறையிலும், பக்கத்து நாடு என்ற முறையிலும் வல்லரசு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவிடம் உதவி கேட்பது நியாயம்தான். ஆனால் இந்திய அரசு ஈழப் பிரச்சனையில் நடந்து கொண்ட விதம் தான் இங்கு விவாதிக்கப் பட வேண்டிய விடயம். ஆனால் நீங்கள் இந்தியா திரை மறைவு காய் நகர்த்தல்கள், துரோகங்கள் செய்வார்கள், அதை பேசக் கூடாது, ஈழத் தமிழர்கள் கேட்டதுதான் தவறு என்பதுபோல் வாதிடுகிறீர்கள்.

      • என்ன லெனின் இந்திய ஆட்சியாளர்களைப் பற்றி தெரிந்துதான் பேசுகிறீர்களா! ஒரு ஏகாதியபத்திய அடிவருடி, தன் சொந்த நாட்டு மக்களையே ஒடுக்கும் ஒரு அரசு, ஈழ மக்களுக்கு உதவுமா? நகைப்பாக இருக்கிறது. ஆற்றல்மிக்க அர்ப்பணிப்புமிக்க ஈழப்போராளிகளை நாங்கள் மதிக்கிறோம். இவர்கள் ஒரு சரியான தலைமையின் கீழ் போராடியிருந்தால் இன்னேரம் தனீஈழம் சாத்தியமாயிருக்கும். அனைத்து போராளிகளின் தியாகங்களையும் நாசமாக்கிவிட்டனர் வி.பு.  

      • லெனின். உதவி என்று கேட்டவுடனேயே உதவி செய்பவர்களின் தலையீடு வந்து விடும். உதவி கேட்போம். சொன்னதை மட்டும் செய்து வைத்து விட்டுப் போ என்ற சட்டம் எங்கும் செல்லாது. இந்தியா தலையிட்டு பிரபாகரனை பிரதமராக்கிவிட்டு ஒதுங்கும் எனப் புலிகள் நினைத்திருந்தால் அது தவறுதலாகத்தான் முடியும் என்று அவர்கள் உணராமல் போனது வருந்தத்தக்கது. இதுவே புலிகள் – இந்திய அமைதிப் படை இடையில் போர் மூள முதல் காரணம்.
        ஈழம் உருவாக வேண்டும். ஆனால் அதில் இந்தியத் தலையீடு இருக்கக் கூடாது. இந்தியனாகவும் தமிழனாகவும் ஜனநாயகவாதியாகவும் இதுவே என் விருப்பம்.

        • வித்தகன், மீண்டும் வரலாறு தெரியாமல் குழம்புகின்றீர்கள்… இந்தியாவை தலையிடு என்று ஈழத்தமிழர்கள் கேட்கவில்லை.. இலங்கையிலுள்ள கலவரமான சூழலை பயன்படுத்திக்கொண்டு தனது பிரன்திய வல்லரசாகும் நோக்கத்திற்காக விடுதலைப்புலி உள்ளிட்ட போராளிக்குழுக்களுக்கு பணமும், ஆயுதமும் வழங்கி வளர்த்துவிட்டது இந்திய அரசும் ‘ரா’ அமைப்பும்.-இதில் ஒரே மைதானத்தில் மூலைகளில் புலிகளை அழிக்க இலங்கை இராணுவத்திற்கும், இன்னோரு மூலையில் இலங்கை இராணுவத்தை அழிக்க புலிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்ட சம்பவமெல்லாம் உண்டு – மேலும் அவ்வியக்கத்தினர் கொள்கை பற்றோடு இருக்க்ககூடாது என்பதை உறுதி செய்து கொள்வதற்காக அவர்களுக்கு கள்ளக் கடத்தல் வரை பழக்கிவிட்டது இவர்களே. யாராவது ஒரு அமைப்புதான் இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்ற நிர்பந்தத்தை உறுவாக்கி சகோதர கொலைகளை ஊக்குவித்த்தும் இவர்களே. புலிகளை பாசிஸ்டாக மாற்றியதில் பெரும் பங்கு இவர்களுடையதே. இந்த கள்ள உறவை இராஜதந்திர ரீதியில் இந்தியாவைவிட புத்திசாலித்தனமாக செயல்பட்ட இலங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இந்தியா கையாண்ட அதே உத்திகளை கொண்டு இந்தியாவையும் புலிகளையும் பகையாளி ஆக்கியது.

          ஈழவிடுதலைப்போராட்டத்தை கருவிலேயே சிதைத்த பெருமை இந்தியாவைத்தான் முதலில் சேரும். நீங்கள் ஒரு இந்தியர் என்றால் முதலில் இதற்காக இந்தியாவை கண்டியுங்கள். அதைவிடுத்து புலிகள் திட்டுவது மல்லாக்கப்படுத்து காரி உமிழ்வதைப்போலத்தான்

        • கேள்விக்குறி,

          /////மேலும் அவ்வியக்கத்தினர் கொள்கை பற்றோடு இருக்க்ககூடாது என்பதை உறுதி செய்து கொள்வதற்காக அவர்களுக்கு கள்ளக் கடத்தல் வரை பழக்கிவிட்டது இவர்களே. யாராவது ஒரு அமைப்புதான் இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்ற நிர்பந்தத்தை உறுவாக்கி சகோதர கொலைகளை ஊக்குவித்த்தும் இவர்களே. புலிகளை பாசிஸ்டாக மாற்றியதில் பெரும் பங்கு இவர்களுடையதே. ////// அருமையான ‘கண்டுபிடிப்பு’ ; விட்டால் ராஜிவை கொலை செய்ய தூண்டியதும் ரா தான் என்றும் சொல்வீர்கள் போல. வாழ்த்துக்கள்.

        • வித்தகன், விடுதலைப்போராட்டத்தை சிதைக்கும் வேலையை இந்தியா இலங்கையில் மட்டுமா செய்தது?

          வடகிழக்கு மாகாணங்ககளில் போதை மருத்துகளை புழக்கத்தில் விட்டும், புளூபிலிம் பார்களும் திறந்து இளைஞர்களை சீரழித்தது, இன்றும் கூட இந்தியாவில் அதிகமாக போதைமருந்துவசப்பட்டவர்கள் அங்குதான் அதிகம். மதசார்பற்ற காசுமீர் விடுதலை இயக்கத்தை சிதைக்க, இசுலாமிய மதவெறி இயக்கங்களை வளர்த்து இந்து முசுலீம் பிரச்சனையாக மாற்றியது, இலங்கை போராளிகளுக்கு பணமும் கள்ளக்கடத்தலும், இதுதான் சமகாலத்தில் (80s) போராட்ட இயக்கங்களை ஒடுக்க இந்தியாவின் உளவுத்துறையின் அனுகுமுறை…கடாவை வளர்த்த பின் அது மார்பில் பாய்ந்தால் புலம்புவதில் பயனில்லை, காஷ்மீர், வடகிழக்கு எல்லா இடங்களிலும் பாய்ந்தது, அதன் விளைவு காஷ்மீர் வட கிழக்கில் இன்று வரை இராணுவ ஆட்சி. இலங்கைக்கு ஆக்கிரமிப்பு இராணுவம்.

          ஆப்கானில் தாலிபானும், இராக்கில் சதாமையும் உருவாக்கிய அமெரிக்காவின் நிலை என்ன? இதில் இன்னமும் ஆலிவுட்டில் அமெரிக்கா ஆப்கானிலும் இராக்கிலும் போர்செய்வதை பற்றி தேசப்பற்று படம் எடுக்கின்றார்கள், அதுபோலத்தான் இருக்கிறது உங்கள் தேசபக்தியும். உண்மையிலேயே உங்களுக்கு தேசபக்தியிருந்தால் உங்கள் தேசத்தின் தவறுகளை கண்டிப்பதிலிருந்து துவங்குங்கள். கண்மூடித்தனமான தேசபக்திதான் பாசிசத்தின் அடித்தளம்.

        • இதில் என் கண்டுபிடிப்பு என்ன இருக்கின்றது அதியமான், முன்னாள் இயக்கத்தினர் அல்லது அவர்களோடு தொடர்பு கொண்டிருந்த யாரையும் கேட்டுப்பாருங்களேன்…. தவிர நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு வரிகளை தவிர எனது பின்னூட்டத்தில் மற்ற கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

          பின்குறிப்பு – ஒரு நாட்டின் உளவுத்துறை தனது நாட்டின் அதிபர்-பிரதமரை கொல்வது என்ன புதியதா? இந்தியாவில் என்ன நடந்தது என்பது நமக்கு இன்னமும் தெரியவில்லை ஆனால் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி என்று சில வதந்திகள் உண்டு… உண்மை என்றேனும் வெளிவராமலா போகும் பார்ப்போம்.

        • நண்பர் திரு. வித்தகன்,

          அப்படியென்றால் இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளும் ஏற்பட்ட போருக்கும் RAWவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறீர்களா?

        • நண்பர் திரு. வித்தகன்,

          //ஈழம் உருவாக வேண்டும். ஆனால் அதில் இந்தியத் தலையீடு இருக்கக் கூடாது. இந்தியனாகவும் தமிழனாகவும் ஜனநாயகவாதியாகவும் இதுவே என் விருப்பம்.//

          அதுதான் பெரும்பாலானோரின் விருப்பம். ஆனால் ஈழம் உருவாக இந்தியா அனுமதிக்குமா? அனுமதிக்காதே. அதானே பிரச்சனை. தனி ஈழத்தை இந்திய அரசு என்றுமே ஆதரித்ததில்லை… ஆதரிக்கவும் செய்யாது. ஆனால் திபெத் விடுதலையை ஆதரிக்கும்.

        • அன்பு லெனின்,
          நீங்கள் சில அரசியல் சூழ்ச்சிகளை (ராஜதந்திரம்) புரிந்து கொள்ளுதல் அவசியம்
          தெற்காசியவில் அமெரிக்காவுக்கு சிறந்த அடியாளாகும் முயற்சியிலும் பிரான்திய பேட்டை ரவுடியாகும் முயற்சியிலும் இருக்கும் இந்தியாவின் சீன எதிர்ப்பு அரசியல் தான் திபெத். மற்றபடி சொந்த நாட்டு மக்களைப் பற்றிய அக்கரையில்லாத இந்தியாவுக்கு திபெத் நாட்டைப்பற்றி மயிரளவுக்கு கூட கவலை கிடையாது.

          முன்பு இலங்கை மேல் ஆதிக்கம் செலுத்த ஈழ விடுதலை பயன்பட்டது அதனால் இந்தியா ஆதரவளித்தது. இப்போதோ சீன இலங்கை கூட்டு ஏற்பட்டவுடன் இலங்கைக்கு தன்னை நண்பனாக காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயத்திலும், அது சீனாவுடன் அதிகமாக நெருங்க விடாமல் தடுக்கும் நோக்கத்தினாலும் ஈழம் இந்தியாவின் நலனுக்கு உகந்ததில்லை எதனால் எதிர்ப்பு மட்டுமல்ல, இலங்கைக்கு பதிலாக ஒரு போரையே நடத்திவிட்டது.
          இதுதான் யதார்தம்.

        • நண்பர் கேள்விக்குறி,

          நீங்கள் சொன்ன அரசியல் சூழ்ச்சிகள் ஏற்கனவே தெரிந்ததுதான். அதான் திபெத்தை ஆதரிக்கும் இந்தியா ஈழத்தை ஆதரிக்காது என்று சொன்னேன். நன்றி.

        • நல்லது லெனின்…இங்கே சிலர் இன்னமும் தனி ஈழம் கொடுத்தால் தனி திராவிடநாடு கேட்பார்கள் என்று அதனால்தான் தனிஈழத்திற்கு இந்தியா எதிரி என்ற வகையில் பொருளில்லாத இன அரசியல் பேசுகின்றனர் அதனால்தான் அதை சொல்லவேண்டியதாயிற்று.

  22. ரதி,நீங்கள் மானசீகமாக நேசிக்கும் விடுதலைப்புலிகளின் தியாகங்களை உங்களது கட்டுரைகளில் எழுதினால் அவர்களது தவறுகளும் அம்பலப்பட நேரிடும் என்பதினால் அவற்றை எழுத தவிர்க்கிறீர்கள் என நினைக்கிறேன். 

  23. //கொள்கை பற்றோடு இருக்க்ககூடாது என்பதை உறுதி செய்து கொள்வதற்காக அவர்களுக்கு கள்ளக் கடத்தல் வரை பழக்கிவிட்டது இவர்களே//

    இதற்கு யார் காரணம் என்பதை தனியாக விவாதிப்போம். முதலில் போராளிகள் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பதை ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி.

    • வித்தகன் நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் அல்ல மனிதகுல வரலாற்றை பயிலும் மார்க்சிய மாணவன். விடுதலைப்புலிகளின் தியாகத்தின் மீது மிகுந்த மதிப்பு கொண்ட அதே நேரத்தில் அவர்கள் தலைமை மீது விமர்சனங்களும் உன்டு.

      • எனக்கும் அவர்கள் தலைமை மீது விமரிசனம் உண்டு. ஏராளமானோரின் உயித்தியாகம் வீணாகி விட்டதே என்ற வருத்தமும் உண்டு. வன்முறை தவிர்த்துப் போராடி ஈழமக்கள் தானாகவே தனி நாடு பெற முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு.

        • வன்முறை கொண்டு ஒரு அரசாங்கம் அடக்கும் போது எதிர் வன்முறையில்லாமல் போராடுவது சாத்தியமில்லை. அதே நேரத்தில் துப்பாக்கியை மட்டுமே நம்பி மக்களிடத்திலிருந்து தனிமைப்பட்ட போராட்டமும் பயன்தராது. மக்கள் திரளுடன் இணைந்த அரசியல் போராட்டமும் அதன் துணையாக இராணுவ தாக்குதல்களும் இரண்டும் வேண்டும்… நேபாளம் சமிபத்தில் இதில் ஒரளவுக்கு வெற்றிபெற்றது எனலாம்.

        • வி.புலிகளும் “ஓரளவு” வெற்றி பெற்றனர். அது போதாது. ஈழத் தமிழர்களுக்குத் தேவை – அடி வருடிகளிடம் மயங்காத நாணயமான தலைமை. காந்தியும் நெல்சன் மண்டேலாவும் போல ஒரு தனனலமற்ற புத்திசாலி அரசியல்வாதி வேண்டும். அவர் மக்களை வழி நடத்த வேண்டும். துப்பாக்கி தூக்கிப் பிரயோசனமில்லை.

        • நண்பர் திரு. வித்தகன்,

          தமிழர்களிடம் ஒரு கெட்ட குணம் உண்டு. அதாவது மக்களாக அணி திரண்டு போராடாமல் தனக்காக யாரவது போராட வருவார்களா என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் மனநிலை. அப்படி யாராவது போராட வந்தவுடன் உடனே அவர்கள் தான் நமக்குக் கடவுள் என்று சொல்லி ஒதுங்கி விட்டு தத்தமது வேலைகளை பார்க்கச் சென்றுவிடுவர். ஏன் நீங்கள் வந்து போராட்டத்தில் கலந்துகொள்ளலாமே என்று கேட்டால் ‘அட எதுக்குங்க போராட்டம் அதான் நமக்காக போராடுவதற்கு அவர்கள் இருக்கிறார்களே’ என்று சொல்லி ஒதுங்கிக் கொள்வர். ஆனால் சீக்கியர்கள் இந்தக் குணத்தில் சற்று மாறுபட்டவர்கள் என நினைக்கிறேன். அவர்களிடம் மக்களாக ஒன்று சேர்ந்து போராடும் குணம் உண்டு.

          தமிழர்கள் என்றைக்கோ சாதி மறந்து ‘தமிழ் மக்கள்’ என்ற உணர்வுடன் ஒன்று சேர்ந்திருந்தால் இன்று உலக அரங்கில் தமிழர்களின் நிலை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் மே 18ற்குப் பின் உலகத் தமிழர்கள் சற்று மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய நாளில் ஈழப் பிரச்சனை உலக அரங்கில் இன வெறிப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது என்றே நினைக்கிறேன்.

        • காந்தி ஒரு கடைந்தெடுத்த துரோகி அவரைப்பற்றி விவாதித்து நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை, மண்டேலா… அவரது இப்போதைய நடத்தையை வைத்து அவரது வரலாற்றை மதிப்பிடுவது சரியில்லையெனினும் அவர் எதற்கு போராடினாரோ அது இன்னமும் கிடைக்கபெறாமல் இருக்கின்றார்.

          நான் குறிப்பிட்டுள்ள சூழ்நிலை – நிலவும் சூழ்நிலை – அரசு வன்முறையுடன் ஆயுதம் கொண்டு ஒடுக்கும் போது அதற்கு எதிர் வன்முறையில்லாத போராட்டம் முளைக்ககூட முடியாது. இராணுவம் அரசியல் இரண்டும்தான் தேவை, நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது அப்படித்தான். ஆனால் இந்தியாவின் தலையீடு அதிகரித்த்வுடன் மாவோயிஸ்டுகள் ஆட்சியை தூக்கியெறிந்து மீண்டும் மக்கள்போராட்டத்தில் இறங்கிவிட்டனர். இப்படிப்பட்ட தலைமைதான் ஈழத்திற்கு தேவையேயற்றி காந்தியைபோல துரோகியோ அல்லது மன்டேலா போன்ற பொம்மயோ அல்ல.

      • //கடைந்தெடுத்த துரோகி அவரைப்பற்றி விவாதித்து நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை//

        நமக்குள் இசைவு வர வாய்ப்பே இல்லை. விட்டு விடுங்கள்.

        • வித்தகன், நீங்கள் பெரியாரிஸ்டுகளைப்போல கருத்துமுதல்வாத நோக்கில்லேயே ஒரு விசயத்தை அணுகுகின்றீர்கள், நானோ பொருள்முதல்வாதி ஆனாலும், அதனாலும் நம்முள் இசைவு வர வாய்ப்பே இல்லை என்று நான் கருதவில்லை… சற்று தாமதமாகலாம்.

  24. xxxxஉதவி கேட்போம். சொன்னதை மட்டும் செய்து வைத்து விட்டுப் போ என்ற சட்டம் எங்கும் செல்லாது.xxxx
    கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு இருந்தாலும் கேக்கறேன்… எங்கூட்டுக்கு திருடன் வந்தான்னு வைய்யி, பக்கத்து ஊட்டுகாரன எல்புக்கு கூப்டு திருடன தெர்துன பின்னாடி, பக்கத்து ஊட்டுக்காரன் என் பொண்டாட்டி மேல கைய வச்சா நான் என்னா செய்யனும்? நீங்களே சொல்லுங்க வித்தகன் அண்ணே

    • ஏழர தம்பி, திருடன் வந்தான்னு கூப்பிட்டிங்க. உதவிக்கு வந்ததும் ரெண்டு பேரும் சேந்து அடிச்சீங்க. ஏண்டா வம்புன்னு திரும்பி வந்ததும் எங்க வீட்டுக்குள்ள வந்து குண்டப் போட்டீங்க. அப்பறம் திரும்ப திருடன்னு திருடன்னு கத்தினதும் நாங்க வரவே இல்ல. ஏண்டா வரலன்னு கத்தறீங்க! என்ன நியாங்க இது!

      இந்தியா மட்டுமில்லிங்க… சண்ட சமாதானம்னு வந்திட்டா எந்த ஒரு மூன்றாவது ஆளுமே தனக்கு என்ன ஆதாயம்னுதான் பார்ப்பான். சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் காரன் உதவியோட இந்திய சுதந்திரத்த வாங்கிருந்தா என்ன ஆயிருக்கும்? அதே மாதிரித்தான் ஈழ விடுதலையும் இந்தியத் தலியீட்டுல கிடச்சா முழுமையில்லாமலேயே இருக்கும். வெளியாள் உதவி இல்லாமலே கிடைச்சாதான் அது முழுமையான சுதந்திரம். மத்தபடி இந்திய தேசப் பற்று இருக்குறதால நான் இப்படிப் பேசறேன்னு புரிஞ்ச்சிக்காதிங்க. குரங்கு கிட்ட குடுத்து அப்பத்த ரெண்டா வகுந்து குடுக்க சொன்னா தனக்கு ஒரு பங்கு எடுத்துக்காம தராது. இது உலக நியதி.

  25. இந்திய அமைதிப்படையின் அட்டூழியம் ஒன்றினை உங்கள் முன் வைக்கிறேன்.
    இந்திய காம வெறியர்களாள் கீரிமலை கிராமம் சுற்றி வளைக்கப்படுகிறது. சிவன் கோவில் அய்யர் வீட்டினுள் வெறியர் நுழைந்தனர். அங்ஙே அய்யர் தனது மனைவி, மகள், மருமகன் உடன் இருகிறார். வெறியர் கூட்டதின் பார்வை அங்குள்ள பெண்கள் மீது படுகிறது.உடனே அய்யரும் மருமகனும் கயிற்றால் கட்டப்படுகின்றனர்.நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த அவர்கள் கத்துகின்றனர்.மிக பெரிய பாரத வல்லரசை அவர்களது கத்தல் என்ன செய்து விட முடியும், வெறியர் கூட்டம் தனது வேலையை காட்டுகிறது, இரு பெண்களும் அவர்களது கணவர், தந்தை கண்களின் முன்கற்பழிக்கப் படுகிறார்கள்.அப்போது கயிற்றுக் கட்டை அறுத்துக் கொண்டு மனைவியை காப்பாற்ற முயற்சித்த அய்யரின்மருமகன் சுட்டுக் கொல்லப் படுகிறார். 14 இந்திய வெறியன்களாள் மாறி மாறி கற்பழிக்கப்பட்ட பின் அந்த பெண்கள் இருவரும் அவர்களது பெண் உறுப்பிலேயே சுட்டுக் கொல்லப் ப்டுகின்றனர். அய்யகோ என்னால் இதற்கு மேல் எழுத முடியவில்லையே

    • இதற்க்கு இந்தியாவை பெரிதும் நேசிக்கும் யாரேனும் பதில் சொல்ல முடியுமா? அந்த நேரத்தில் அந்த ஆண்கள் இருவரும் எதிர்த்து சண்டை போடாமல்(முடிந்த வரையில்) வெறுமனே பார்த்து கொண்டிருக்க சொல்கிறிர்களா?

  26. இங்கே தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய ஏகாதிபத்திய அரசின் அடிமைகள். கொஞ்ச நஞ்சமிருந்த சுய மரியாதையும், கௌரவமும் சுயநலமிக்க அரசியல்வாதிகளாலும், கேடுகெட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் சீரழிக்கப் பட்ட சொரணை கெட்டவர்களாக்கப்பட்டார்கள். இப்போது சுயநலம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. இந்திய தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரத்தின் கொலை அடுத்த தேர்தலிலேயே மறக்கப் பட்டு விட்டது. எனவே கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்சிக் காரர்களுக்கு வேண்டுமானால் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் ஒப்பற்றவர்களாக/கடவுளாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழினத்தைப் பொறுத்தவரை அவர்களால் தீமை மட்டுமே அதிகம்.

  27. “ஒரு கொலையைச் செய்தவனை விட, கொலைச் செய்ய தூண்டிவிடுபவனே முதல் குற்றவாளி.” என்பர்; அவ்வாறே புலிகளை தீவிரவாதிகள் என அன்மையக் காலங்களிலும், தற்போதையக் காலக் கட்டத்திலும் பரப்புரை செய்து வரும் இந்தியாவே, அன்று அப்பாவி ஈழத் தமிழர்கள் இளைஞர்களிடம் ஆயுதத்தை வழங்கி, பயிற்சியும் வழங்கி அவர்களை வளர்த்துவிட்டது. பின்பு தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் எனும் கருத்தையும் கூறிவருகிறது. அப்படிப்பார்த்தால் தீவிரவாதத்தை அன்மைய நாடுகளில் தனது நலன் சார்ந்து விதைத்து வரும் இந்திய தேசம் தான் அழிக்கப் பட வேண்டியது.

  28. சிந்தனையுள்ள மனிதர்களாச் சற்று சிந்துத்துப் பாருங்கள் ஒரு உண்மை உங்களுக்கு புரியும். அந்த உண்மையென்பது இந்தியா ஒரு சதிகார நாடு. அதன் அன்மைய நாடுகளின் முன்னேற்றத்தை பொருக்க முடியாத நாடு. அதற்கு இணையாக தென்னாசியப் பிராந்தியத்தில் வளர்ந்து விடக்கூடாது என நினைக்கும் அதிகேவலாமான நாடு. குறிப்பாக இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் பிரிந்துச் சென்றதன் பின்னர், எந்த ஒரு பாக்கிஸ்தானியனின் உயர்வையும் இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை. பாக்கிஸ்தானியர் என்றால் இந்தியர்களின் மனதில் எதிரிகளாகவே இருக்க வேண்டும் எனும் நோக்கில் ஊடகப் பரப்புரையின் ஊடாக இந்திய மக்களின் மனங்களில் விதைத்து வருகிறது. ஏன்? பாக்கிஸ்தானில் ஒரு நல்லவன் கூட இல்லையா? ஒரு திறமைசாலி கூட இல்லையா? அவ்வாறான எந்த கருத்தையும் கூறாது பாக்கிஸ்தானின் குறைகளை மட்டுமே ஏன் இந்தியா கூறிவருகிறது? பதில், பாக்கிஸ்தான் வளர்ச்சி இந்தியாவிற்கான வயிற்றெச்சிலாக இருப்பதுவே காரணம். ஆனால் உண்மை என்ன வென்றால் பாக்கிஸ்தானும் இன்று உலகளவில் எல்லா நாடுகளிலும், எல்லா நிலைகளிலும், இராணுவ வலுநிலை உட்பட இந்தியாவுக்கு சரிநிகராக வளர்ந்து நிற்கிறது என்பது தான். இந்த வளர்ச்சி தான் இந்தியாவிற்கு வயிற்றெச்சலை உண்டு பன்னுகிறது.

  29. இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாக்கிஸ்தான், இன்று இந்தியாவுக்கு சவாலான நிலையில் வளர்ந்து நிற்பதனை தாங்கிக்கொள்ள முடியாத இந்திய நரி அரசு, இந்தியாவின் தென் பகுதியிலும் தமிழர் வளர்ந்து விட்டால், அது பாக்கிஸ்தானை விடவும் உயர்வாகவும், வலுமிக்கதாகவும் வளர்ந்து விடும் பொறாமையின் வெளிபாடே, ஈழத்தமிழரின் போராட்டத்தை முதுகின் பின்னால் இருந்து குத்தும் சதிகார வேலைக்கு காரணமானது. ஈழம் மலர்ந்தால், கூடவே தமிழ் நாட்டுத் தமிழர்களின் ஒருமைப்பாட்டுடன் ஈழத்தின் வளர்ச்சி இந்தியாவுக்கே சவாலாகிவிடும் அச்சம் இன்னொரு காரணம். இதனை இவ்வாறும் பார்க்கலாம். தமிழர்கள் என்றுமே ஆற்றல் மிக்கவர்கள். இந்தியாவின் அனுவாயுத தலமை விஞ்ஞானியும் ஒரு தமிழர் (அப்துல் கலாம்), அமெரிக்காவில் ஆஸ்கார் விருது பெற்றவரும் தமிழர் (ஏ. ஆர். ர்ஹ்மான்), மனித உரிமை ஆனைத்தின் செயலரும் தமிழர் ( நவநீதம்பிள்ளை) இப்படி ஒவ்வொரு துறையிலும் தமிழர் சிறந்து உலகெங்கும் விளங்கின்றனர். அதிலும் உலகித் தமிழர்களின் கவனத்தை ஒருமித்தே தன்பால் ஈர்த்து போரியல் ரீதியிலும் ஒரு சிறு படையணியைக் கொண்டு பெறும் படைகளோடு மோதும் ஆற்றல் மிக்கவர்களாய் தமிழர் வளர்வதும், இந்தியா தென்னாசியப் பிராந்தியக் கனவுக்கு சவாலாகிடும் என்று பயந்தே இந்தியா அதற்கே உரிய தனித்துவக் குணத்துடன் மகிந்தாவின் பின்னால் நின்று குத்தியது. உண்மையில் தமிழீழம் என்று ஒன்று மலர்ந்து, அது வளர்ந்தால், அதோனோடுடானான தமிழ்நாட்டு உறவும் வலுப்படும் போது உலக அரங்கில் இந்தி எனும் ஆதிக்க நிலை உலகில் இருந்தே ஒரம் கட்டப்பட்டு விடும். மொத்தத்தில் முதுகுல் இந்தியா குத்தியதும் தமிழனுக்குப் பயந்துதான். போர் முடிந்தப் பின்னர் 6௦,௦௦௦ பேரை புதிதாக இராணுவத்துக்கே இலங்கைத் திரட்டிக்கொண்டிருப்பதும் நாளைய தமிழனுக்கு பயந்து தான். 

  30. உண்மையில் தமிழன் உலகில் பலம் மிக்கவன் தான். தமிழனை அழிப்பதாக இருந்தால், அது இன்னொரு தமிழனால் மட்டும் தான் முடியும். உலகில் அனைத்து தமிழனும் கட்டாயம் உணரத்தான் வேண்டும். 3௦  ஆண்டுகால ஈழப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மயிரையும் புடுங்க முடியாத இலங்கை சிங்கள இராணுவம், இப்போது திடீரென எப்படி வெற்றிப்பெற்றது என ஆளாளுக்கு அங்கலாய்த்துக்கொள்கின்றனர். உண்மை என்னவெனில், இலங்கை இரண்டு இலட்சம் இராணுவத்தை பெருக்கியும், நவீன ஆயுதங்களை உலகமெல்லாம் பிச்சை எடுத்தும் செய்ய முடியாததை எப்படி செய்தது என்றால், அது இன்னொரு தமிழனான கருனாகரன் எனும் தமிழனை வைத்துத்தான் என்பது எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். ஆம்! பிரபாகரனால் தோற்றுவிக்கப்பட்டு, பயிற்சிவிக்கப்பட்ட ஒரு (முன்னால் புலிதான்) இன்னால் துரோகியாகி சிங்களைத்தை வெற்றிப் பெற வைத்தான். ஆம் தமிழனை இன்னொரு தமிழனை வைத்துத்தான் இங்கே வெற்றிக்கொள்ளப்பட்டது. 

Leave a Reply to தொங்கதுரை பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க