privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசென்னைக்கு வருகிறது ''டிராபிக் ஜாம்'' வரி!

சென்னைக்கு வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி!

-

டிராபிக் ஜாம் வரிசென்னை நகரிலும், அதன் புறநகர் சாலைகளிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது நெரிசல் வரி விதிக்கும் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகவும்; இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகருக்குள் அமைந்துள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை ஆகிய மூன்றிலும் இவ்வரி விதிக்கும் நடைமுறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொடங்கிவிடுமென்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்த வரி விதிப்பைத் தவிர்க்க எண்ணும் தனியார் வாகன ஓட்டிகள், இந்தச் சாலைகளுக்குள் நுழையாமல் சுற்றிச் செல்ல வேண்டும்; இல்லையேல், அவர்கள் இந்தச் சாலைகளில் செல்லப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  இதன் மூலம் இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துவிட முடியும் என அரசு வாதிடுகிறது.

‘‘ஒவ்வொரு காரிலும் ஒரு சில்லு (Chip) பொருத்தப்படும்; அதன் மூலம் அந்த கார் இந்தச் சாலைகளுக்குள் நுழைந்தவுடனேயே, காரின் உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து வரி பிடித்தம் செய்யப்படும்” என இந்தத் திட்டத்தின் நடைமுறை சாத்தியப்பாடு பற்றி அரசு விளக்கமளித்திருக்கிறது, தமிழக அரசு.  இதனைக் கேட்பதற்கு ஹை-டெக் படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.  ஒருவேளை, கார் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், காரைத் துரத்திக் கொண்டு போலீசு போகும் போலும்.  இப்படி டிமிக்கி கொடுக்கும் கார்காரர்களை நடுவழியில் நிறுத்தி வரி வசூலிக்கத் தொடங்கினால் அல்லது போலீசு தனது “மாமூல்” கடமையை ஆற்ற வண்டிகளை ஓரங்கட்டச் சொன்னால் இத்திட்டமே கோமாளித்தனமாகிவிடும்.

இவ்வரி மூலம் போக்குவரத்து நெரிசல் குறையுமோ, இல்லையோ, அரசாங்கத்தின் கஜானைவை நிரப்பிக் கொள்ளுவதற்குப் புதிய வழி கிடைத்திருக்கிறது; குறிப்பாக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும், கண்காணிக்கும் போலீசாரின் பாக்கெட்டுகள் நிரம்புவதற்கு உத்திரவாதம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சினையையும் புதிதாகச் சட்டங்களைப் போட்டும், அதிகாரங்களைக் குவித்துக் கொண்டும் தீர்த்துவிட முடியும் என்ற ஆளும் கும்பலின் பாசிச குரூரப் புத்தி இதிலும் வெளிப்பட்டுள்ளது.

நகரமயமாக்கம் அதிகரித்ததற்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து வசதிகளை நவீனப்படுத்தாமல்,  அச்சேவையை அதிகரிக்காமல் திட்டமிட்டுச் சீர்குலைத்ததன் மூலமும், சாதாரண அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்கூட வேலைக்குப் போய்த் திரும்புவதற்குச் சொந்தமாக வாகனம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  இன்னொருபுறமோ, தனியார்மயம்  தாராளமயத்தின் செல்லப் பிள்ளைகளான புதுப் பணக்கார மேட்டுக்குடி கும்பலின் நுகர்வு வெறிக்குத் தீனி போடுவதற்கு ஏற்ப, விதவிதமான வெளிநாட்டு கார்களை உள்நாட்டிலேயே உற்பத்தி  விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு இத்துறையில் தாராளமயம் புகுத்தப்பட்டது.  குறிப்பாக, கார்கள், இரு சக்கர வாகனங்களின் விற்பனையைத் தூக்கி நிறுத்துவதற்காகவே,  வங்கிகளில் கார், பைக் லோன் வாங்குவது மிகவும் எளிமையாக்கப்பட்டது.

அரசின் இந்தக் கொள்கை சாலைகளில் கால்வைப்பதற்குக்கூட இடமில்லாத வகையில் தனியார் வாகனப் பெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  உதாரணமாக சென்னை நகரை எடுத்துக்கொண்டால், 2000ஆம் ஆண்டில் 8,48,118ஆக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 2011இல் 25,81,534 ஆகவும்; இதேகாலகட்டத்தில் கார்களின் எண்ணிக்கை 1,99,848லிருந்து 5,67,568 ஆகவும் அதிகரித்திருக்கிறது.  இதனால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் எட்டு மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

டிராபிக் ஜாம் வரிசென்னையில் மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எந்தவொரு இடத்தை அவதானித்தாலும், பொது வாகனங்களைவிட, தனியாருக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்கள்தான் முண்டியடித்துக்கொண்டு உருமி நிற்பதைக் காணமுடியும்.  இந்தத் தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, அவைகள் நகரத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவோ விரும்பாத அரசு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கைரிக்ஷாக்கள், மாட்டு வண்டிகள் போன்ற சாதாரண வண்டிகள் சென்னை நகரின் முக்கிய தெருக்களில் வந்து போவதற்குத் தடை விதித்திருக்கிறது.  பின்னர், இந்தத் தடையுத்தரவு சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படும் லாரிகள் காலை நேரத்தில் நகரின் முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று வருவதற்கு நீட்டிக்கப்பட்டது.

இத்தடையுத்தரவுகளுக்கு அப்பால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருவழிப் பாதை, புறவழிச் சாலை, விரைவுச் சாலை, மேம்பாலங்கள் என நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் அடுத்தடுத்து  அமல்படுத்தப்பட்டன.  இந்தத் திட்டங்கள் அனைத்தும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதோடு, எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தி வருகின்றன.  குறிப்பாக, சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட ஒருவழிப் பாதைகள், கால விரயத்தையும் போக்குவரத்துச் செலவையும்தான் அதிகப்படுத்தியிருக்கிறதேயொழிய, சாலை நெரிசலைக் குறைக்கவில்லை.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட பாலங்களுக்காக, புறவழி மற்றும் விரைவுச் சாலைகளுக்காக, தற்பொழுது உருவாக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காகப் பல ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தமது வாழ்விடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வலுக்கட்டாய வெளியேற்றத்தை நியாயப்படுத்துவதற்காகவே, அவர்கள் பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டனர்.

இந்த ஏழைகள் கூவம் நதிக் கரையோரத்திலும், தெருவோர நடைபாதைகளிலும் குடிசைகள் போட்டு ‘ஆக்கிரமித்திருந்ததை’ விட தனியாருக்குச் சொந்தமான கார்களும், பேருந்துளும்தான் சென்னை நகரின் முக்கிய தெருக்கள், நெடுஞ்சாலைகள் அனைத்திலும் மிகப்பெரும் ஆக்கிரமிப்பை நடத்தி வருகின்றன.  தமது வீட்டில் காரை நிறுத்தும் வசதி கிடையாது எனத் தெரிந்தும் காரை வாங்கும் மேல்தட்டு நடுத்தர வர்க்கம், தமது வீட்டு அருகிலுள்ள பொதுச் சாலைகளைத்தான் காரை நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தி வருகிறது.  இவர்களைப் போலவே, தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துகள் மற்றும் ஹுண்டாய், நோக்கியா, இன்ஃபோசிஸ் போன்ற தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் யாவும் பொது இடங்களைத்தான் இரவு நேர “பார்கிங்கிற்கு’’ப்பயன்படுத்தி வருகின்றன.  அண்ணா சாலையிலிருந்து பீட்டர்ஸ் சாலை வழியாக இராயப்பேட்டை செல்லும் வழியில் கட்டப்பட்ட மேம்பாலம், அங்குள்ள சரவண பவன் ஹோட்டலுக்குச் சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்தப் பயன்படுகிறதேயொழிய, அப்பாலத்தால் ஆயிரம் விளக்குச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

சென்னையில் மக்கள் நடமாட்டம் மிக்க 49 இடங்களில் சாலையோரக் கடைகள் போடுவதற்கு அனுமதி கிடையாது எனத் தடை போட்டு அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகளும், போலீசும் இப்படிபட்ட கெடுபிடிகளை சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்கள், ஆம்னி பஸ்கள் மீது காட்டுவதில்லை.  மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையோரத்தில் பிழைப்புக்காக கடை போடுவதை ஆக்கிரமிப்பு எனச் சாடும் மேட்டுக்குடி கும்பல், தாம் “ஷாப்பிங்” போவதற்காக, சாலைகளின் பக்கவாட்டில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வதை ஆக்கிரமிப்பாகக் கருதுவதில்லை.  விதவிதமான சொகுசுக் கார்களில் வந்திறங்கும் அவர்கள், “இங்கே நிறுத்தக்கூடாது” என அறிவிக்கும் கம்பங்களுக்குத் தெரு நாய்கள் தரும் மதிப்புக்கு மேல் தருவதில்லை.  போலீசு தமது காரை இழுத்துச் சென்றால், அபராதம் கட்டியோ, இலஞ்சம் கொடுத்தோ காரை மீட்டுவிடலாம் என்ற பணக்கொழுப்புதான், அவர்களுக்குப் போக்குவரத்திற்கு இடையூறாக காரை நிறுத்தும் அகங்காரத்தைக் கொடுக்கிறது.  இக்கும்பலைப் போலவே ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் நடைபாதையிலும், தெருக்களிலும் ஜல்லி, செங்கல், மணலைக் கொட்டி வைத்துப் பொது இடத்தை அடாவடித்தனமாக ஆக்கிரமித்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

டிராபிக் ஜாம் வரிசென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் வேலைக்காக நகரத்திற்குள் வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்பொழுது, மேட்டுக்குடி  புதுப்பணக்காரக் கும்பல் பேய்த்தனமான வேகத்தில் தமது கார்களை ஓட்டிச் செல்வதற்காகவே புறவழிச் சாலைகள், விரைவு வழிச் சாலைகள், தங்க நாற்கரணச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.  இந்தச் சாலைகள் ஒருபுறம் சுங்க வரி என்ற பெயரில் தனியார் நடத்தும் கொள்ளைக்கான வாய்ப்பாகவும் இன்னொருபுறம் மரணச் சாலைகளாகவும் உள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடந்துவரும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களில் 38 சதவீதம் சாலைகளில் நடந்து செல்வோர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குடித்துவிட்டும், பேய்த்தனமான வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்வதும்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.  சென்னையில் தொடங்கி பாண்டிச்சேரி வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மற்ற நெடுஞ்சாலைகளைவிட விபத்துக்கள் அதிகம் நடப்பதைக் கண்டுபிடித்த போலீசார், அச்சாலையில் பறந்து செல்லும் வாகனங்களின் வேகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை.  மாறாக, அச்சாலையையொட்டி அமைந்துள்ள கிராம மக்களிடம், “சாலையைக் கடக்கும்பொழுது ஜாக்கிரதையாகக் கடக்க வேண்டும்” என்ற அறிவுரையைத்தான் அள்ளி வீசியுள்ளனர்.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டி மரணத்தில் முடியும் விபத்துக்களை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள்தான் தண்டனை வழங்கப்படுகிறது.  இத்தண்டனையைப் பத்து ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்.  அப்பொழுதுதான் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்ற பயம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரித்துள்ளது.  இந்த எச்சரிக்கையைக் கண்டு பிழைப்புக்காக ஓட்டுநர் வேலை பார்க்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேண்டுமானால் பயப்படலாமே தவிர, குடி, கும்மாளம், உல்லாசம் என நவநாகரீகப் பொறுக்கி கலாச்சாரத்தில் மூழ்கிப் போயுள்ள மேட்டுக்குடி கும்பல் இதைக் கண்டு மிரண்டு போகாது.

இதுவொருபுறமிருக்க, பி.எம்.டபிள்யூ. போன்ற வெளிநாட்டுக் கார்களைப் பேய்த்தனமாக ஓட்டிச் சென்று பாதசாரிகளைக் கொன்றுபோட்டுள்ள வழக்குகளில் போலீசாரே மேல்தட்டுக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டு, அவர்களைத் தப்பவைத்து வருகின்றனர்.  டெல்லியிலும், மும்பயிலும், அகமதாபாத்திலும் நடந்துள்ள பல சாலை விபத்துக்களை இதற்கு ஆதாரமாகத் தரலாம்.

தனியார்மயமும் தாராளமயமும் கொண்டுவந்துள்ள “பப்” கலாச்சாரம்தான், குடித்துவிட்டு பேய்த்தனமாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் குரூரமான களிவெறியாட்டத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டுள்ளது.  இக்கேடுகெட்ட பொறுக்கிக் கலாச்சாரத்தை ஒழிக்க முயலாமல் தண்டனையை அதிகப்படுத்தலாம் என்ற ஆலோசனை, வழக்குப் பதியும் அதிகாரம் கொண்ட போலீசாரின் மாமூல், இலஞ்ச வேட்டைக்கும், குற்றவாளிகளைத் தப்பவைக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் பயன்படுமேயொழிய, விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடாது.

டிராபிக் ஜாம் வரி

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரி போடும் திட்டம் ஏற்கெனவே சிங்கப்பூர், ஹாங்ஹாங், இலண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது.  அக்கொள்ளையைத் தமிழகத்திலும் இறக்குமதி செய்ய எத்தணிக்கிறது, பாசிச ஜெயா கும்பல்.  இன்று தனியார் வாகனங்கள் மீது விதிக்கப்படும் இவ்வரி நாளை பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீதும் விதிக்கப்படும் நிலை உருவாகலாம்; மேலும், டெல்லி, மும்பய் நகரங்களில் உள்ளது போன்று ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் நகரின் சில முக்கிய பகுதிகளுக்கு வந்துபோவதற்கும் தடை விதிக்கப்படலாம்.

காலை நேரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் காட்டி, வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் நுழைந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்து, அவற்றைப் புறவழிச் சாலையாகத் திருப்பிவிட்டுள்ள அரசு, இது போன்ற கட்டுப்பாடு எதையும் தனியார் கார்களுக்கு, குறிப்பாக ஸ்கார்பியோ, சுமோ, இனோவா போன்ற பெரிய சொகுசு கார்களுக்குக்கூட விதிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கூவம் நதிக்கரை ஓரமும், குப்பங்களிலும் குடிசை போட்டு வாழ்ந்து வந்த உழைக்கும் மக்கள் சிங்கார சென்னையை உருவாக்குவதற்காக அங்கிருந்து பிடுங்கி எறியப்பட்டுவிட்டனர்.  ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியால் சென்னை நகர்ப்புறப் பகுதியில் நடுத்தர வர்க்கம்கூட வீட்டு வாடகை கொடுத்து வாழ முடியாத சூழலும் உருவாகிவிட்டது.  இப்படி பல்வேறு காரணங்களால் புறநகர்ப் பகுதிக்குத் துரத்தப்பட்ட நடுத்தர, அடித்தட்டு மக்கள் தமது பிழைப்புக்காக நகரின் மையத்திற்கு வந்து செல்ல வேண்டுமானால், நெரிசல் வரி கட்ட வேண்டும் என்ற அடுத்த தாக்குதலைத் தொடுக்க தயாராகி வருகிறது, ஆளுங்கும்பல்.  அதாவது, காசுள்ளவன்தான் இனி நகரத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியும்; நகர்ப்புறமும், அதன் தெருக்களும் இனி பணக்காரர்களுக்குச் சொந்தம் என்பதுதான் இந்த நெரிசல் வரியின் பின்னே மறைந்துள்ள திட்டமாகும்

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஐரோப்பிய நாடுகளில் பல நல்ல போக்குவரத்துக் கொள்கைகள் உண்டு. உதாரணமாக, பார்க்கிங் கட்டணம் மிக அதிகம். நல்ல பொதுப்போக்குவரத்து வசதிகள். இப்படியான கொள்கைகளை இங்கும் அரசு அமல்படுத்த வேண்டும். மேட்டுக்குடியை அல்லது மிடில் கிளாஸை வசைபாடுவதால் பயனில்லை. அதைத் தவிர்க்கலாம். இங்கு யாரும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்பதே உண்மை. இதில் உழைக்கும் வர்க்க ஆட்டோ டிரைவர்களும் உண்டு.

    • வாகனங்களை முரட்டுத்தனமாக ஓட்டுவது 99% ஆட்டோ டிரைவர்களும் டாக்ஸி டிரைவர்களும்தான்.

  2. என்னங்க நீங்க தனியார் வாகனங்கள் சாலையில்தான் நிறுத்தப்படுகிறது என்கிறீர்கள். அரசு போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் சாலைக்கு வெளியேதான் நிறுத்தப்படுகின்றன. பனிமனை தவிர்த்து பேரூந்து நிலையத்தில் நிறுத்தியும் இடப்பற்றாக்குறை.

  3. // //போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரி போடும் திட்டம் ஏற்கெனவே சிங்கப்பூர், ஹாங்ஹாங், இலண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. அக்கொள்ளையைத் தமிழகத்திலும் இறக்குமதி செய்ய எத்தணிக்கிறது, பாசிச ஜெயா கும்பல்.// //

    உங்களது இந்தக் கட்டுரை மிகத்தவறான புரிதலில் எழுதப்பட்டுள்ளது. தனியார் கார்கள் மீது பயன்பாட்டுக் கட்டணம் என்பது அவர்கள் பொதுச்சொத்தான சாலையை மிதமிஞ்சிப் பயன்படுத்துவதற்கான கட்டணமே ஆகும். இதனைக் கொள்ளை என்றோ, சாதாரண மக்களுக்கு எதிரானது என்றோ கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

    // //இன்று தனியார் வாகனங்கள் மீது விதிக்கப்படும் இவ்வரி நாளை பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீதும் விதிக்கப்படும் நிலை உருவாகலாம்.// //

    இதுவும் தவறான புரிதல்தான். தனியார் கார்களுக்கு கட்டணம் விதப்பதென்பது அவற்றை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தி – பொதுப்போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்பதுதற்காகத்தான். மேலும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனியார் கார்கள் மீது விதிக்கும் கட்டணத்தை பொதுப்போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காகவே செலவிடுகின்றனர்.

    // //காசுள்ளவன்தான் இனி நகரத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியும்; நகர்ப்புறமும், அதன் தெருக்களும் இனி பணக்காரர்களுக்குச் சொந்தம் என்பதுதான் இந்த நெரிசல் வரியின் பின்னே மறைந்துள்ள திட்டமாகும்// //

    காரில் போகிறவன் அவனுக்கு உரிமையானதை விட அதிக இடத்தை அக்கிரமிக்கிறான். அப்படிப்பட்ட மிதமிஞ்சிய பயன்பாட்டினால் காசில்லாதவனுக்கு இடம் கிடைக்காமல் போகிறது. இந்நிலையில் காரில் போகிறவன்மீது கட்டணம் விதிப்பது எவ்வாறு காசில்லாதவனுக்கு எதிரானதாகும்?

    • காரில் போகிறவனுக்கு காசு விதிச்சால் ‘ காசுள்ளவன்தான் இனி நகரத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியும்’ என்பார்கள்.

      காசு விதிக்கவில்லை என்றால், காரில் போகிறவனுக்கு தான் நகரம் என்பார்கள்.

      • சீனு, வினவு எழுதிவிட்டார்கள் என்பதற்காக எல்லாவற்றையுமா எதிர்ப்பது?

        அருள், இந்த வரி கார், இரு சக்கரவாகனங்கள் என எல்லாவற்றுக்குமே அமலுக்கு வரும். (வெளிநாடுகளில் அப்படித்தான்)பொதுப் போக்குவரத்து வசதி இல்லாத ஊரில் தனியார் வாகனங்களுக்கு வரி என்றால் அது அநீதி அல்லவா? பஸ்சை நம்பமுடியாமல்தானே பலரும் டூவீலரை வாங்குகின்றனர், குடும்பத்துடன் நால்வர் பயனிக்க கார்களில் போகின்றனர். அவர்களை பிளாக்மெயில் செய்து வரி பிடுங்குவது என்பது ஜேப்படி திருடனைப்போல அரசு செயல்படுவதையல்லவா காட்டுகிறது. உடனடியாக சென்னைக்கு மட்டும் இன்னும் 500 பேருந்துகளாவது குறைந்தபட்சம் தேவை, இந்த அரசு அதை செய்யுமா?

        முதலில் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பொதுப்போக்குவரத்தால் இணைக்கட்டும். பிறகு வசதிக்காக தனியார் வாகனங்களில் போவோரிடம் வரி பிடுங்கட்டும், யாரும் அதை தடுக்கப்போவதில்லை

    • அருள், கட்டுரையை கூர்ந்து படித்துப் பாருங்கள், காரில் போகிறவன் காசு கொடுத்தால் டிராபிக் ஜாம் தீர்ந்து விடாது, தனியார் வாகனங்களை நெரிசல் உள்ள சாலைகளில் தடை செய்வதையும், அவைகள் சுற்று வழியில் செல்ல மட்டும் அனுமதிக்கப்படவேண்டும் என்றுதான் கூறுகிறது. குறைந்த பட்சம் சொகுசுக்கார்களையாவது தடை செய்தால் சென்னை நகரில் ஓரளவு நெரிசல் குறையும். நெரிசல் உள்ள சாலைகளில் பொது வாகனங்களுக்கு வசதியை ஏற்படுத்த வேண்டுமென்றால் இதுதான் வசதி.

      அடுத்து இந்த வரி வரும் பட்சத்தில் கார்களை வைத்திருக்கும் அனைவரும் காசை வீசியெறிந்து விட்டு சாலைகளை பயன்படுத்துவார்கள். இது எந்த விதத்தில் சாலைகளில் நெரிசலை குறைக்கும் என்று உங்களால் விளக்க முடியுமா? இறுதியில் ஆட்டோ, டாக்சிகள், நகரப் பேருந்துகள் அனைத்தும் வரி கட்டினால்தான் இந்த சாலைகளில் போக முடியுமென்று ஆகும். அந்த வகையில் நகரத்து சாலைகளை மேட்டுக்குடியினர் மட்டும்தான் பயன்படுத்தலாம் என்றும் ஆகும்.

      ஆகவே தனியார் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் எந்த வரியும், திட்டமும் நெரிசலை குறைத்து விடாது. இந்த எளிய உண்மை கூட புரியவில்லை என்றால் என்ன செய்வது?

      • //ஆகவே தனியார் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் எந்த வரியும், திட்டமும் நெரிசலை குறைத்து விடாது. இந்த எளிய உண்மை கூட புரியவில்லை என்றால் என்ன செய்வது?//

        தனியார் மயம் தாராளமயம் உலகமயத்தில் வந்து எல்லா பிரச்சனையும் நெட்டுகுத்து இட்டு நிற்பது எப்படி கண்டுபிடிக்கிறீங்க பாஸ்

        யூ ஆர் கிரேட்

        • பின்ன இல்லயா பாஸ், தனியார்மயம் வர்லேன்னா நீங்க ஏர்டெல்ல நமீதாவோட சர்வீஸ் போட முடியுமா – உங்களுக்கு நெட்டுகுத்து இட்டு நிற்பதே அதனாலதானே பாஸ், பில்லுல அவுனுக ஏமாத்துனத சொன்னேன்

          • தனியார் மயம் வரலைன்னா யாரோ ஒருத்தர் வீட்டில போன் இருக்குமே அந்த மாதிரி பி எஸ் எண் எல் லைன் மட்டும் வச்சி கிட்டு நாம புரட்சியை எப்படி பாஸ் நடத்துவது

            • பாஸ், உங்களால நமிதாவோட புரட்டாசி நடத்த முடிந்த காரணத்தினால் நீங்க தனியார் ஏர்டெல்லை ஆதரிக்கலாமா? அரசு பி.எஸ்.என்.எல் ஐ டிரை பண்ணுங்க நமீதா அளவுக்கு இல்லேன்னாலும் அவங்களால முடிஞ்சதை ஏற்பாடு செய்வாங்க.

  4. சுவாமி
    // //முதலில் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பொதுப்போக்குவரத்தால் இணைக்கட்டும். பிறகு வசதிக்காக தனியார் வாகனங்களில் போவோரிடம் வரி பிடுங்கட்டும், யாரும் அதை தடுக்கப்போவதில்லை// //

    நீங்கள் குறிப்பிடுவது சரியான கருத்துதான்.

    சென்னை நகருக்கு தேவை:

    1. எல்லா சாலைகளிலும் சரியான நடைபாதை,
    2. மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக அதிகரித்தல்,
    3. முதன்மை சாலைகளில் இலவச வாகன நிறுத்தங்களை ஒழித்தல்,
    4. அகமதாபாத் நகரில் உள்ளது போல பேருந்து விரைவு போக்குவரத்து திட்டம் (BRT),
    5. தனியார் கார்கள் மீது நெரிசல் கட்டணம் (இருசக்கர வண்டிகள் மீதல்ல),
    6. பள்ளிகளிச் சேர்க்கையில் “அண்மைப்பள்ளி முறையை” கட்டாயமாக்குதல்

    – இவைதான் நெரிசலைத் தீர்க்கும். மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படையில்தான் முன்னுரிமைகளும் அமைய வேண்டும். இதில் எதைச்செய்தாலும் அது ஒட்டுமொத்த போக்குவரத்துக்கு நன்மையாகவே அமையும்.

    ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு மேம்பாலம், அடுக்குமாடி வாகன நிறுத்தம், கூடுதல் சாலை, மோனோ ரயில் என்று நிலைமையை இன்னும் மோசமாக்கக்கூடிய திட்டங்களைத்தான் அரசாங்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் முன்வைக்கின்றன.

    ஒரு பேருந்தின் இடத்தை 3 கார்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு பேருந்தில் 60 – 70 பேர் செல்லும் நிலையில், 3 கார்களில் சராசரியாக 6 பேர்தான் செல்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான இடத்தை பணம் படைத்தவர் ஆக்கிரமிப்பது என்ன நீதி?

    சாலை என்பது அரசின் பணத்தில், மக்கள் பணத்தில் போடப்படுகிறது. அதில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே அளவுதான் உரிமை உண்டு. அளவுக்கதிகமாக பொது இடத்தை ஆக்கிரமிப்பவர் மீது அதற்கான உண்மைச் செலவை வசூலித்து அதனை ஏழைக்கான போக்குவரத்துக்கு செலவிட வேண்டும் என்பதுதான் நெரிசல் கட்டணத்தின் தத்துவம் ஆகும்.

    கார்கள் மீது கட்டணம் என்பதை இருசக்கர ஊர்திகள் மீது கட்டணம் என்று குழப்பிக்கொள்ள தேவை இல்லை.

    • திட்டம் என்னவோ நல்ல திட்டம் தான்.

      ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது விதிகப்படும் வரியில் குறைந்த பட்சம் பத்து முதல் பதினைந்து ரூபாய் சாலை மேன்பாட்டிக்கு வாங்கபடுகிறது, அதில் எத்தனை ரூபாய் செலவிடப்படுகிறது.

      ஒவ்வொரு வாகனத்தின் விற்பனையிலும் விற்பனை வரி விதிக்க படுகிறது. அவைகள் எங்கே போகின்றன?

      இது ஏழை பணக்காரன் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்ல. அதிகார வர்க்கம் மற்றும் வரி செலுத்தும் வர்க்கம் சார்ந்த பிரச்னை.

    • எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்துப் போட்டு புரிந்துகொள்ளும்போது எல்லாமே அபத்தமாகத்தான் தெரியும். பதிவின் சாரம் தெளிவாகவே உணர்த்துகிறது. பணக்கொழுப்பெடுத்த மேட்டுக்குடிக்கு இது ஒன்றும் பொருட்டாக இருக்காது. புதுப்பணக்கார கும்பல்கூட சிறிது யோசக்குமே தவிர அதை மறைத்துக் கொண்டு பகட்டுக்காக இந்த வரியைக் கொடுத்துவிடும். இந்த திட்டத்தின் மூலம் துவக்கத்தில் பாதிக்கப்படப் போவது ஆட்டோ மற்றும் டாடா ஏஸ் போன்ற வாகனங்களை வைத்து பிழைக்கும் உழைக்கும் வர்க்கம்தான். மேலும், பணக்கார கும்பல் வரியைக் கட்டிவிடுவதால் சாலையை ஆக்கிரமிக்கும் செயல் முன்பு போல் தொடரும் இதனால் மீண்டும் நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதன் காரணமாக வரி இருசக்கர வாகனங்களும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுவரையில் இந்த அரசுகள் போட்ட திட்டங்கள் அனைத்தும் நகரத்தை விட்டு உழைக்கும் மக்களை (மேல்மட்டத்தினருக்காக) தூர எறிந்திருக்கிறது என்பதுதான் அனுபவம், இதிலிருந்து புரிந்துகொள்ளும்போது அபத்தம் நிசப்தமாகிவிடும்.

  5. Mr Vel and others.Forget about purchasing new buses.Even 3000 buses already purchased are kept in all depots of the transport corporations for months together for want of dates for inaguration by CM/Transport Minister.That is why the buses which are running already are parked outside the depots.

    • எதற்கு முதல்வர் வரவேண்டும்?

      அணைத்து வாகனங்களும் ஒரே நாளில் தயராகி இருப்பதற்காண வைப்புகள் குறைவு, பிறகு ஏன் இந்த காத்திருப்பு?

      முட்டாள் மனிதர்கள். விளம்ப்பர பிரியர்கள்.

  6. தூங்கரவனை எழுப்பலாம்; தூங்குரா மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது. அருள் has narrow focus; no broad outlook at all. உலகத்தில் இருக்கும் எல்லா கொடுமைகளுக்கும் புகை தான் காரணம் என்று நினைக்கிறார்; தவறு. பாருங்கள் இதை..

    இந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை; தொடர், பகுதி-1
    http://www.nambalki.com/2012/06/1.html

    சமூக நீதியை மட்டும் எவனும் தொடக கூடாது! மலம் அள்ளுவது தவறு என்றால், அதற்க்கு போராடுவார்களாம்! இதை இங்கு சொன்னால் அதில மட்டும் தான் சிரிப்பார்கள்; எதற்கு போராடுவது என்ற விவஸ்தைye இந்தியாவில் எந்த “சமூக நீதி காக்கும் புயல்களுக்கு” கிடையாது.

    அது என்ன புரட்சிப் புயல், வைகைப் புயல் மாதிரி! சமூக நீதி காக்கும் புயல்! நல்ல கூத்துபா!

    மலம் அள்ளுவது தவறு என்று கோர்ட்டுக்குப் போகணுமாம்!

    • தோழர் வலிப்போக்கன் மற்றும் மிஸ்டர் குயாதி, இது போன்ற பின்னூட்டங்கள் வருத்தமளிக்கிறது 🙁

      ஏதோ சபலத்தில் எங்கள் தியாகு தனது செல்பேசியில் தெரியாத்தனமாக நமீதா சர்வீஸை ஆக்டிவேட் செய்து விட்டார். வடித்த ஜொள்ளுக்காக காசு பணத்தை இழந்தும் விட்டார். ஆனால், வெள்ளேந்தியாக அதையும் அவரே தான் வெளியே சொன்னவர். அதற்காக அவரை இப்படியா போட்டு வாருவது? CWP கட்சிக்காக உழைத்த களைப்பை வேறு எப்படித்தான் போக்கிக் கொள்வதாம்?

      தியாகு, தயவு செய்து கவலைப்படாதீர்கள்.

      ட்ராபிக் ஜாம் வரியெல்லாம் திருப்பூருக்கு வரக்கூடாது என்று எல்லாம் வல்ல சுசி ஆத்தாவுக்கு வேண்டிக் கொண்டு கூழ் ஊத்துங்கள். வந்தாலும், அது முதலாளித்துவத்தின் விதி என்று லெனின் சொன்னதாக நாமே அவிழ்த்து விட்டுக் கொள்ளலாம் – இந்தப் பயலுவ அதை க்ராஸ் செக் பண்ணவா போறாய்ங்க?

      முதலாளித்துவம் எப்படி விதியோ அப்படியே சோசலிசமும் விதி என்று சொல்லி விடுங்கள் – இதைப் படிப்பவர்கள் தலைவிதி இப்படியிருக்கும் போது யாரால் தான் காப்பாற்ற முடியும்?

      ஜெய் தியாகு ஜெய், CWP ஜெய், சங்கர் சிங்

    • //தனியார்மயம் வர்லேன்னா ஏர்டெல்ல நமீதாவோட சர்வீஸ் போட முடியுமா?//

      உங்களை நீங்களே தோழர் என அழைத்து கொள்வதால் சொல்கிறேன் நமீதாவுடன் அதிக நட்பாக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என தெரிகிறது எனவே மச்சி வழிப்போக்கன் என பெயரை மாற்றி கொண்டால் நல்லது:)

  7. கட்டுரையில் ஒரு இடத்தில் கூட பாதசாரிகளின் சிரமம் பற்றி எதுவும் இல்லையே! நடைபாதை ஆக்கிரமிக்கும் கடைகள் வணிக வளாகங்கள் மற்றும் கட்டுப்பாடில்லாத ஷேர் ஆட்டோ போக்குவரத்து பற்றி பேச வேண்டும். இரு சக்கர வாகனங்கள் வாங்க முக்கிய காரணம் பேருந்தின் அபரிமிதமான கட்டணம் தான். கார் வாங்கும் காரணத்தை நீங்கள் சொல்லி விட்டீர்கள். ஒரு உண்மை என்னவென்றால், கார் வைத்திருப்பவர்கள் எந்த காரணம் கொண்டும் பேருந்திலோ மோனோ ரயிலிலோ செல்ல மாட்டார்கள்.

  8. //ஏதோ சபலத்தில் எங்கள் தியாகு தனது செல்பேசியில் தெரியாத்தனமாக நமீதா சர்வீஸை ஆக்டிவேட் செய்து விட்டார். வடித்த ஜொள்ளுக்காக காசு பணத்தை இழந்தும் விட்டார். ஆனால், வெள்ளேந்தியாக அதையும் அவரே தான் வெளியே சொன்னவர்//

    நெம்ப கஸ்டம்யா உங்களோட நட்பு சக்தி நித்தி என்பதற்காக நான் ரஞ்சிதா சர்வீசை எடுத்துக்க முடியுமா ? 🙂

    • ‘குட்டி’ முதலாளி தியாகு அவர்களே, நீங்கள் புரட்சியின் நட்பு சக்தி என்ற உரிமையில் சொல்கிறேன், நீங்கள் விடும் ஜொள்ளில் நீங்களே வழுக்கிவிழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

      பி.கு. – குட்டி முதலாளி என்பதை தியாகுவின் நமிதா சர்வீசோடு தெடர்ப்பு படுத்தி யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்

  9. பணக்காரனுக்கு வரி இல்லை என ஒரு நூறு பதிவுகளும்
    பணக்காரனுக்கு வரி போடுவது பிரச்சனை இல்லை என 50 பதிவுகளும்
    எழுதி எல்லாரும்க்கும் குஸ்டம் வந்து சொறிய ஆரம்பிக்கும் போது
    பதில் சொல்வார் நமது அண்ணன் வினவு

    • <> நீங்க வந்தாச்சு அப்புறம் எப்படி குஸ்டம் வரும்ன்னேன், குஸ்டத்துக்கே குஸ்டம் வந்தா – Its a medical Miracle, I say

      • குயாதி, ஆங்கிலத்திலே பி.எச்சி.டி பட்டம் பெற்றவரான எங்கள் தியாகுரு, அவ்வப்போது தமிழில் கொஞ்சம் தடுமாறுவார். இதற்கும் குருவின் நமீதா கிறக்கத்துக்கும் முடிச்சுப் போட மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.

        தியாகுருவே,

        //பணக்காரனுக்கு வரி இல்லை என ஒரு நூறு பதிவுகளும்
        பணக்காரனுக்கு வரி போடுவது பிரச்சனை இல்லை என 50 பதிவுகளும்//

        குருமகா சந்நிதானத்தின் பார்வைக்கு பதிவில் இருந்து சில வரிகள்…

        //இன்று தனியார் வாகனங்கள் மீது விதிக்கப்படும் இவ்வரி நாளை பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீதும் விதிக்கப்படும் நிலை உருவாகலாம்; மேலும், டெல்லி, மும்பய் நகரங்களில் உள்ளது போன்று ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் நகரின் சில முக்கிய பகுதிகளுக்கு வந்துபோவதற்கும் தடை விதிக்கப்படலாம்.

        காலை நேரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் காட்டி, வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் நுழைந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்து, அவற்றைப் புறவழிச் சாலையாகத் திருப்பிவிட்டுள்ள அரசு, இது போன்ற கட்டுப்பாடு எதையும் தனியார் கார்களுக்கு, குறிப்பாக ஸ்கார்பியோ, சுமோ, இனோவா போன்ற பெரிய சொகுசு கார்களுக்குக்கூட விதிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. //

        பணக்காரனுக்கு வரி போடுவதல்ல பிரச்சினை – அது மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விடக்கூடாது என்பதே பிரச்சினை என்று எழுதப்பட்டுள்ளது.

        ஷேக்ஸ்பியர், ஷெல்லி, குய்யாங்கோவா போன்றோர்களின் இலக்கியங்களிலேயே நீங்கள் அதிகமாக உலாத்திக் கொண்டிருப்பதால் தமிழைப் படிக்க சிரமப் படுகிறீர்கள் என்று நினைக்கிறேன் 🙁

        குயாதி, இந்த முறை விட்டு விடுங்கள். அடுத்த முறை பாருங்கள் எங்காளு கரீட்ட செய்வாரு.

  10. வினவு // //ஆகவே தனியார் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் எந்த வரியும், திட்டமும் நெரிசலை குறைத்து விடாது. இந்த எளிய உண்மை கூட புரியவில்லை என்றால் என்ன செய்வது?// //

    நெரிசல் கட்டணம் என்பதே “தனியார் கார்களைக் கட்டுப்படுத்தும்” ஒரு முறைதான். கார்களைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், “நெரிசல் கட்டணம்” தவறு என்று சொன்னால் எப்படி?

    தனியார் வாகனங்களை கட்டுப்படுத்துவது என்றால் என்ன? என்று விளக்கினாலாவது பரவாயில்லை. அதைவிடுத்து “எளிய உண்மை கூட புரியவில்லை” என்றால் எப்படி? எனது அறிவுக்கு எட்டியதை இங்கே எழுதியுள்ளேன்.

    குழப்பும் வினவு: கார்களைக் கட்டுப்படுத்தினால் ஏழைகளுக்கு ஆபத்தாம்!
    http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_09.html

    • அருள், ஒரு எளிய கேள்வி. இந்த நெரிசல் வரியைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கும் பெட்ரோல் விலையும் அதன் மீதான வரியும் வாகன நெரிசலை குறைத்துவிட்டதா என்ன? கட்டுரையில் குறிப்பிட்டப்படி இது நெரிசலை குறைக்க துளியும் உதவாது மாறாக அரசு கஜானாவைத்தான் நிறப்பும். முதலில் கூரை ஏறி கோழிபிடிக்கட்டும் இந்த அரசு

      • ஒவோவ்வொரு நகர்திலையும் போக்குவரத்து,நெரிசல் போன்ற பிரச்சனைக்கு காரணம் ரியல் எஸ்டேட் தான்.

        எல்லா எடமும் பறந்து அதே அளவு வளர்ச்சியுடன் இருந்த நிலத்தோட விலையில வித்தியாசம் இருக்காது.

        அப்போ பந்த நிலத்துல போட்டவனுக்கு பெரிய லாபம் இருக்காது.

        அதான் காரணம், தமிழகத பொறுத்தவரை எவளவோ பரவ இல்ல.

        கிராமத்துல கூட ஓரளவு முன்னேற்றம் இருக்கு. மற்ற மாநிலங்களில் எல்லாம் நெலமை இன்னும் மோசம்.,

        பல கோடி பேருக்கு மூணு நாலு நகரங்கள் மட்டுமே.

        • ஹரி, கட்டிடங்கள் பிரச்சனை சரிதான் ஆனால் சென்னையில் 2000ஆம் ஆண்டில் 8 லட்சமாக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 2011இல் 25லட்சமாகவும்; இதேகாலகட்டத்தில் கார்களின் எண்ணிக்கை 2 லட்சத்திலிருந்து லிருந்து 5.5லட்சமாகவும் அதிகரித்திருக்கிறது. இதுதானே பிரதான காரணம். இப்படி மானாவாரியாக வாகன எண்ணிக்கை உயர என்ன காரணம்? அரசு பொதுப்போக்குவரத்தை பின்தள்ளி தனியார் போக்குவரத்தை ஊக்குவிப்பதுதான்.

    • ஹரி, 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது இரண்டரை மடங்கு விலையில் விற்கிறது பெட்ரோல், வாகன நெரிசலோ 8 மடங்கு உயர்ந்திருக்கின்றது. எனவே ஏதோ இப்போதுதான் பெட்ரோல் விலை உயர்ந்ததைப்போல நீங்கள் கருதினால் அது தவறு. போலவே அதனால் வாகன நெரிசல் குறையும் என்று நினைத்தாலும் தவறுதான். அதெல்லாம் சத்தியமேயில்லை. பெட்ரோல் 100 ரூபாய் ஆனாலும் கூட மக்கள் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும் ஏனெனில் இங்கே பொதுபோக்குவரத்தின் அளவும் தரமும் அதளபாதாளத்தில் உள்ளது.

      • பொதுப்போக்குவரத்து மட்டும் எப்படி தீர்வாகும்? பொதுப்போக்குவரத்திர்காக 8000 பேரூந்துகள் விடுகிறார்கள் என்றால் அவை மட்டும் நெரிசலை ஏற்படுத்தாதா?
        நகரமாக்கல் என்ற பெயரில் அனைத்தயும் நகரைச் சுற்றியே உருவாவதை த்டுக்கவேண்டும். ஒரு மாநிலத்தின் எல்லா இடங்களிலும் பரவலாக தொழில் வளத்தை பெருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் தரமான அனைத்து பொருட்களும், மருத்துவமும் கிடைக்க வகை செய்யவேண்டும். இதையெல்லாம் இந்த எடுபுடி அரசுகள் செய்யுமா!

        • ஜேசு, உங்கள் கருத்து சரிதான் ஆனால், ஒரு கோடி பேருக்கு மேல் வாழும் சென்னை போன்ற நகரத்த்தை தீடீரென யாரும் காலி செய்துவிடமுடீயாதல்லவா? அதுவரை என்ன செய்வது? நகரம் என்பது அதில் வாழும் மக்களுக்குச் சொந்தம் என்று நான் கருதுகிறேன், எனவே மலிவு விலையில் விரிவான பொதுபோக்குவரத்து அவசியம் என நான் கருதுகிறேன். இது அரசின் பொருளாதார தேவையை நீண்டகால நோக்கில் தீர்க்கும ஆற்றலும் உடையது. மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும் உடனடி பலனும் கிட்டும்

  11. போக்கு வரத்து நெருசலை குறைக்க

    1.பதிவு செய்யப்படாத வாகனங்களை தடை செய்யப்பட வேண்டும் என்பது மனிதர்களால் மேனுவலாக இயக்கப்படும் சைக்கிள் ரிக்சா போன்றவை தவிர்க்கவும் வேண்டும் அந்த தொழிலாளர்களுக்கு ஆட்டோகளை வாங்க அரசு உதவி செய்து மெனுவல் ரிக்சாகளை
    நிறுத்த வேண்டும்

    2.லைசென்ஸ் இல்லாதவர்கள் வண்டியை ஓட்டினால் வண்டி பரிமுதல் செய்யப்படவேண்டும்
    என சொல்லலாம்

    3.நமது நாட்டின் போக்குவரத்து சட்டங்கள் நீண்ட நெடுநாட்களுக்கு முன்பு வரையப்பட்டவை
    அவை சீர்திருத்தம் செய்யப்படவும் மாற்றி அமைக்கப்படவும் வேண்டும் மக்களுக்கு
    போக்குவரத்து விதிகளை பற்றிய விழிப்புணர்வு தரப்படவேண்டும் (ஒரே ஒரு சைக்கிள்
    அல்லது கார் மொத்த டிராபிக் ஜாமுக்கும் காரணமாக இருக்கலாம் ஏழைதான் காரணம்
    பணக்காரன் காரணம் என்பது இயந்திரகதியான சிந்தனை இந்த விசயத்தில்)

    இதை எல்லாம் செய்யாமல் ரோட்டில் செல்ல வரி வசூலிப்பது போக்குவரத்தை சீர்
    செய்ய அல்ல மாறாக பெரிய முதலாளிகளின் கார்கள் கம்பெனிகளுக்கு விரைந்து செல்ல
    வழிவகை செய்யவே

    • என்னையா நடக்குது இங்க, தியாகு பதிவை படிச்சிட்டு அதுக்கு ஆதரவான கருத்துகளையெல்லாம் பிண்ணூட்டத்துல போடுறாரு… ஒலகம் அழியப்போவுது, ஒலகம் அழியப்போவுது

    • தல தியாகு, இந்த கொமாரு உங்களை ‘பதிவை படிச்சிட்டு பின்னூட்டம் போடுறதா’ அசிங்கமா திட்டிபுட்டாரு, நாங்க அதையெல்லாம் நம்பல, நீங்களும் ஒன்னும் மனசுல வச்சுகாதீங்க, ஆனாலும் ஒரு டவுட்டுன்னேன்!

      (ஒரே ஒரு சைக்கிள் அல்லது கார் மொத்த டிராபிக் ஜாமுக்கும் காரணமாக இருக்கலாம் ஏழைதான் காரணம் பணக்காரன் காரணம் என்பது இயந்திரகதியான சிந்தனை இந்த விசயத்தில்)னு எழுதியிருக்கீங்க.

      நீங்க ஏழைக்கும் பணக்காரணக்கும் எடையில நடு சென்டர்ல நடு குத்தலா நிக்க முயற்சி செய்வது தெரியுது ஆனாலும் எப்புடீண்ணே எப்புடி? தம்மாத்தூண்டு ஒரு சைக்கிள் எப்புடீண்ணே டிராபிக் ஜாமுக்கு காரணமா அமையும்? ஒத்த கையில அந்த கருமாந்திரம் புடிச்ச சைக்குல தூக்கி அந்தாண்ட வீசிடலாமே? ஆனா காரை எப்புடி அப்புடி?

      ஒரு வேளை ஒரு ஏழை டிரைவர் ஓட்டும் கார் – அல்லது பெரும் பணக்காரன் தொப்பை கொறைய ஓட்டும் சைக்கிள்னு எதாவது தத்துவ முடிச்சு கிடிச்சு இருக்கா

      இந்த மன்னாரு வந்து என்னைய வையரதுக்குள்ளார முடிச்ச அவுத்துவிடுங்கண்ணே, இல்லேன்னா அன்னந்தண்ணி செல்லாது.

      மீ த பாவம் 🙁

  12. சுவாமி

    // //அருள், ஒரு எளிய கேள்வி. இந்த நெரிசல் வரியைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கும் பெட்ரோல் விலையும் அதன் மீதான வரியும் வாகன நெரிசலை குறைத்துவிட்டதா என்ன? கட்டுரையில் குறிப்பிட்டப்படி இது நெரிசலை குறைக்க துளியும் உதவாது மாறாக அரசு கஜானாவைத்தான் நிறப்பும்.// //

    நெரிசல் கட்டணம் நெரிசலை குறைக்க துளியும் உதவாது என்பது மிகத்தவறான, ஆதாரமற்ற கருத்து.

    நெரிசல் கட்டணத்தால் – அதற்கு முன்பு இருந்ததை விட சாலையில் நெரிசல் குறையும், விரைவாக பயணம் செய்ய முடியும், காற்று மாசுபாடு குறையும் என்பதை இதற்கு முன்பு நெரிசல் கட்டணத்தை செயல்படுத்திய நகரங்களின் அனுபவம் உணர்த்துகிறது.

    ஒரு எடுத்துகாட்டிற்கு லண்டன் நகரில் ஏற்பட்ட விளைவுகளை இங்கே காண்க: http://en.wikipedia.org/wiki/London_congestion_charge

    நெரிசல் கட்டணத்தை உயர்த்தும் போது பேருந்துகள் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே சரி.

  13. Jesudoss
    // //பொதுப்போக்குவரத்து மட்டும் எப்படி தீர்வாகும்? பொதுப்போக்குவரத்திர்காக 8000 பேரூந்துகள் விடுகிறார்கள் என்றால் அவை மட்டும் நெரிசலை ஏற்படுத்தாதா?// //

    பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மூன்று கார்கள் செல்லும் இடத்தில் ஒரு பேருந்து செல்ல முடியும். மூன்று கார்களில் சராசரியாக 6 பேர்தான் பயணம் செய்கின்றனர். ஆனால், பேருந்தில் 70 பேர் அளவுக்கு செல்கிறார்கள். எனவே, பேருந்து நெரிசலைத் தீர்க்கும் வாகனம்.

    சென்னை நகரின் மக்கள் தினமும் செய்யும் பயணங்களில் 26 விழுக்காடு பேருந்து மூலம் நடக்கிறது.அதாவது 57 லட்சம் பேர் வெறும் 3100 பேருந்துகள் மூலம் பயணிக்கின்றனர்.

    ஆனால், 32 லட்சம் தனியார் வாகனங்கள் மூலம் பயணிப்போர் இதைவிடக் குறைவு.

    எனவே, உழைக்கும் மக்களின் வாகனமான பேருந்துகள் வேகமாக இயங்க வேண்டுமெனில் – அதற்கு கார்கள் சாலையிலிருது அப்புறப்படுத்தப்பட வேண்டும். நெரிசல் கட்டணம் அதைக் கணிசமாக நிரைவேற்றும்.

  14. //சென்னையில் மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எந்தவொரு இடத்தை அவதானித்தாலும், பொது வாகனங்களைவிட, தனியாருக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்கள்தான் முண்டியடித்துக்கொண்டு உருமி நிற்பதைக் காணமுடியும். இந்தத் தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, அவைகள் நகரத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவோ விரும்பாத அரசு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கைரிக்ஷாக்கள், மாட்டு வண்டிகள் போன்ற சாதாரண வண்டிகள் சென்னை நகரின் முக்கிய தெருக்களில் வந்து போவதற்குத் தடை விதித்திருக்கிறது. பின்னர், இந்தத் தடையுத்தரவு சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படும் லாரிகள் காலை நேரத்தில் நகரின் முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று வருவதற்கு நீட்டிக்கப்பட்டது.//

    இந்த பாராவில் கைரிக்சாக்கள் ,மாட்டு வண்டிகள் ,சரக்கு லாரிகள் செல்வதை தடுக்க கூடாது
    எவ்வளவு நெரிசல் வந்தாலும் அப்படியே மாட்டுவண்டி போகனும் ,கை ரிக்சா மெதுவா
    போகனும் என்பதுதான் அர்த்தம்

    //சென்னையில் மக்கள் நடமாட்டம் மிக்க 49 இடங்களில் சாலையோரக் கடைகள் போடுவதற்கு அனுமதி கிடையாது எனத் தடை போட்டு அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகளும், போலீசும் இப்படிபட்ட கெடுபிடிகளை சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்கள், ஆம்னி பஸ்கள் மீது காட்டுவதில்லை.//

    இந்த பாராவில் சாலையோர கடைகளை போடுவதை தடுக்க கூடாது என சொல்கிறது

    இவ்வாறு எதெல்லாம் நெரிசலை அதிகமாக்குமோ அதெல்லாம் நெரிசலை குறைக்க உதவும் என தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது

  15. தியாகு
    // //இந்த பாராவில் கைரிக்சாக்கள் ,மாட்டு வண்டிகள் ,சரக்கு லாரிகள் செல்வதை தடுக்க கூடாது
    எவ்வளவு நெரிசல் வந்தாலும் அப்படியே மாட்டுவண்டி போகனும் ,கை ரிக்சா மெதுவா
    போகனும் என்பதுதான் அர்த்தம்// //

    கை ரிக்சா என்பது என்ன? மனிதனை மனிதனே இழுத்துச்செல்லும் முறைகள் ஒழிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மிதிவண்டி, மிதித்துச்செல்லும் சைக்கிள் ரிக்சாக்களுக்கு போக்குவரத்தில் இடம் உண்டு.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் கூட சைக்கிL ரிக்சா இருக்கும் போது சென்னையில் அது கூடாதா?

    அதுபோல நகர்ப்புற போக்குவரத்தில் சரக்குகள் செல்வதற்கும் நிச்சயமாக வழி இருக்க வேண்டும்.

    இதையே வேறு வகையில் கூறுவதென்றால் – நகர்ப்புற போக்குவரத்தில் எதற்கு முன்னுரிமைக் கொடுக்கிறோம் என்பதுதான் சிக்கலின் அடிப்படை.

    சரியான போக்குவரத்திற்கு சாலையில் முன்னுரிமை பின்வருமாறு அமைய வேண்டும்: 1. அவசர ஊர்தி, 2. நடைபாதை, 3. மிதிவண்டி, 4. பேருந்து, 5. ஆட்டோ, 6. சரக்கு வாகனம், 7. கார்கள், இருசக்கர வாகனங்கள், 8. கார், இருசக்கர வாகன நிறுத்தம்.

    ஆனால், இப்போது முன்னுரிமை இப்படி இருக்கிறது: 1. கார்கள், இருசக்கர வாகனங்கள், 2. கார்கள், இருசக்கர வாகன நிறுத்தம் 3. ஆட்டோ, 4. அவசர ஊர்தி, 5. பேருந்து, 6. நடைபாதை, 7. மிதிவண்டி, 8. சரக்கு வாகனம்.

    இந்த அநீதியான நிலை நீடிக்கும் வரை விடிவே இல்லை.

    • //சரியான போக்குவரத்திற்கு சாலையில் முன்னுரிமை பின்வருமாறு அமைய வேண்டும்: 1. அவசர ஊர்தி, 2. நடைபாதை, 3. மிதிவண்டி, 4. பேருந்து, 5. ஆட்டோ, 6. சரக்கு வாகனம், 7. கார்கள், இருசக்கர வாகனங்கள், 8. கார், இருசக்கர வாகன நிறுத்தம்.

      ஆனால், இப்போது முன்னுரிமை இப்படி இருக்கிறது: 1. கார்கள், இருசக்கர வாகனங்கள், 2. கார்கள், இருசக்கர வாகன நிறுத்தம் 3. ஆட்டோ, 4. அவசர ஊர்தி, 5. பேருந்து, 6. நடைபாதை, 7. மிதிவண்டி, 8. சரக்கு வாகனம்.//

      அநீதியான ஒரு வர்க்க ஆட்சி இருக்கும் வரை அநீதியான நடைமுறைதானே இருக்கும்

  16. தியாகு

    // //அநீதியான ஒரு வர்க்க ஆட்சி இருக்கும் வரை அநீதியான நடைமுறைதானே இருக்கும்// //

    “அநீதியான ஒரு வர்க்க ஆட்சி” இருக்கும் சிங்கப்பூரில் நடைபாதை, மிதிவண்டி, தொடர்வண்டி, பேருந்து ஆகியவற்றுக்கு கார்களைவிட அதிக முன்னுரிமைத் தரப்படுகிறது.

    பாரிஸ், லண்டன், சிட்னி, சீனாவில் குவாங்சூ, பிரேசிலின் குரிட்டிபா, கொலம்பியாவின் பகோட்டா என வேறுபட்ட அரசு முறைகள் கொண்ட நகரங்கள் அனைத்தும் மிகச்சிறந்த போக்குவரத்து முறையைக் கொண்டுள்ளன. நடைபாதை, மிதிவண்டி, பேருந்து போக்குவரத்துக்கு இந்த நகரங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.

    எனவே, ‘எந்த வர்க்கத்தின் ஆட்சி’ என்பது மட்டுமே முதன்மைக் காரணம் என்று கூறிவிட முடியாது.

    • //எந்த வர்க்கத்தின் ஆட்சி’ என்பது மட்டுமே முதன்மைக் காரணம் என்று கூறிவிட முடியாது//

      எந்த வர்க்கத்தின் ஆட்சி சாலை சிறந்த சாலைகளை அமைக்கும் என்பதை விட எந்த வர்க்கத்தின் ஆட்சி எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வை தரமுடியும் என்பதே சிறந்த சிந்தனையாக இருக்க இயலும்

  17. ‘எல்லா சிக்கல்களுக்கும் எது தீர்வு’ என்கிற விவாதத்திற்குள் நான் நுழையவில்லை. இந்த இடத்தில் ‘போக்குவரத்து சிக்கலுக்கு நெரிசல் கட்டணமும் ஒரு தீர்வாகும்’ என்கிற விடயத்தை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன்.

    போக்குவரத்து வசதிகள் மேம்படுவதற்கான அடிப்படைத் தேவை அரசியல் உறுதி மட்டுமே. பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு முதலாளித்துவ சனநாயக அமைப்பிலும் சாத்தியங்கள் உண்டு. சீனா போன்ற அரசமைப்பிலும் சாத்தியம் உண்டு. பாட்டாளி வர்க்க சர்வாதிகார அமைப்பிலும் கூட அது சாத்தியமாகலாம்.

  18. எந்த ஒரு பிரச்சனைக்கான தீர்வும் எந்த சார்புமற்று இங்கு இருப்பதில்லை
    கல்வி வேலை வாய்ப்பு முதல் ஜனநெருசல் வரை அனைத்தும் வர்க்க
    சார்பானதே

    சிங்கப்பூரில் வாகன நெரிசலுக்கு வரி தீர்வென்றால் ஏன் இந்தியாவில்
    அதே தீர்வு ஒத்து வராது என நீங்கள் கேட்கலாம்

    வினவு சொல்வது இங்கே மிகவும் சாதாரண மக்கள் பிழைப்புக்காக
    மாட்டுவண்டியும் கை ரிக்சாக்களும் இழுக்கிறார்கள்

    (வாகன நெரிசலுக்கு தீர்வாக வரியை வைப்பது அவர்களின் தலையிலும்
    விடியும் என்பதே

    இந்த இடத்தில் வினவு சொல்வது சரியே ஆனால் அதற்கு தீர்வாக்
    பொது போக்குவரத்தை முன்மொழிவது சரியானதல்ல என்பதும்
    எந்த முதலாளித்துவ அரசு அனைத்து சேவைகளையும் விட்டு
    விலகுகிறதோ அதே முதலாளித்துவ அரசிடம் இந்த சேவைகள்
    தொடர்ந்து நல்ல படியாக நடக்கும் என்பது வீண்கனவு
    அர்த்தமற்ற சிந்தனை- இதைத்தான் வினவுடைய தீர்வுக்கு முரணாக
    நான் சொல்வது)

    அப்படி இருக்கையில் சாதாரண மக்களும் விரைந்து செல்லவும்
    பணக்காரர்களும் விரைந்து செல்லவும் கூடிய தீர்வு ஒன்று தர
    இந்த அரசால் முடியாது (ஒரு முதலாளித்துவ வர்க்க சார்பு அரசால்)

    மற்ற நாடுகள் அதன் சமூக பொருளாதார வளர்ச்சியை கணக்கில்
    எடுக்காமல் எந்தர கதியில் இந்தியாவுடன் ஒப்பிடுவது சரியாகுமா ?

    இந்தியாவுக்கு ஒத்துவரும் ஒரு முறை நிச்சயம் எத்தியோப்பியாவுக்கு
    ஒத்துவருமா என்பதும் அப்படி எனில் புரட்சி ஒரு நாட்டில் வந்தால்
    எல்லா நாட்டுக்கும் ஏற்றுமதி செய்து விடலாம் என்பதும் கூட
    நடந்துவிடும் ஆனால் விசயம் அப்படி எளிதானது அல்லவே

    மீண்டும் விசயத்துக்கு வருவோம் பணக்காரர்களின் நலனுக்காக போடும்
    ரோடுகள் வெறும் அவர்களின் நலனுக்கானவை என குறுக்கி பார்க்கவும்
    இயலாது மொத்தமாக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதிகமாகி இருக்கிறது
    என்பதையும் கணக்கில் எடுத்து கொண்டு பார்த்தால் வள வள தார்சாலைகள்
    மேட்டு குடிக்குன்னு சொல்லி தவிர்த்து விட இயலாது

    அதே நேரத்தில் அதற்கான வரி விதிப்பை ஏழை எளியவர்கள் மேல்
    போடவும் அனுமதிக்க இயலாது

    நமது கோரிக்கை சாலைகள் வேண்டும் ஆனால் அதை பயன்படுத்த
    அனைவருக்கும் உரிமை வேண்டும் என்பதே

  19. தியாகு
    // //வினவு சொல்வது இங்கே மிகவும் சாதாரண மக்கள் பிழைப்புக்காக மாட்டுவண்டியும் கை ரிக்சாக்களும் இழுக்கிறார்கள். வாகன நெரிசலுக்கு தீர்வாக வரியை வைப்பது அவர்களின் தலையிலும் விடியும் என்பதே// //

    வினவின் கருத்து இதுதான் என்றால் அது மிகத்தவறான கருத்து.

    இந்தியாவில் தனியார் கார்களுக்கு விதிக்கப்படும் வரியை விட, ஏழைகள் பயணிக்கும் பேருந்துகள் மீது அதிக விதிக்கப்படுகிறது. கார்களை விட பேருந்துகள் மீது 270 மடங்கு அதிக வரி விதிக்கப்படுவதாக ஒரு செய்தி கூறுகிறது.

    Buses pay maximum road taxes
    http://articles.timesofindia.indiatimes.com/2008-05-19/india/27756283_1_small-car-bus-owner-private-vehicles

    ஆனால், நெரிசல் கட்டணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே. அது பொதுவாகனங்களுக்கு விதிக்கப்படக்கூடாது. குறிப்பாக ரிக்சாவும் மாட்டுவண்டியும் இதன் கீழ் வர வாய்ப்பே இல்லை.

    // //மற்ற நாடுகள் அதன் சமூக பொருளாதார வளர்ச்சியை கணக்கில் எடுக்காமல் எந்தர கதியில் இந்தியாவுடன் ஒப்பிடுவது சரியாகுமா ?// //

    “சீனாவில் குவாங்சூ, பிரேசிலின் குரிட்டிபா, கொலம்பியாவின் பகோட்டா” என்றும் நான் குறிப்பிட்டுள்ளேன். இந்த நகரங்களை சென்னையுடன் ஓரளவுக்கேனும் ஒப்பிட முடியும்.

    // //சாதாரண மக்களும் விரைந்து செல்லவும் பணக்காரர்களும் விரைந்து செல்லவும் கூடிய தீர்வு ஒன்று தர இந்த அரசால் முடியாது (ஒரு முதலாளித்துவ வர்க்க சார்பு அரசால்)// //

    முதலாளித்துவ வர்க்க சார்பு அரசு முறை மாறும் வரை “அதன்பின்பு விடிவு வரும்” என்று காத்திருப்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

    இந்தியா போன்ற சாதாரணமான, முதலாளித்துவ சார்புள்ள சனநாயக ஆட்சி முறை நடக்கும் நகரங்களில் சாத்தியமாகக் கூடிய தீர்வுதான் பொதுப்போக்குவரத்து மேம்பாடாகும்.

Leave a Reply to அருள் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க