செய்தி-53
மேலும் படங்களுக்கு – சாதீ முகிலனின் ஓவியங்கள்
தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 31 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவது வழக்கமாம். காரணம், தமிழகத்தில் தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற நிலைமையை விரைவில் உருவாக்க முதல்வர் விரும்புவதால், தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியுள்ளாராம்.
இந்த பரிசுத்தொகையை பெறுவதற்கு அம்மாவின் அரசு கூறும் தகுதிகளில் சில:
“உள்ளுர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொதுக்கோயில், குடிநீர்க் கிணறு, கடைகள், ஒட்டல்கள், குளம், ஏரி, சலூன் ஆகியவற்றைச் சுதந்திரமாக அனுபவிக்கும் கிராமமாக இருக்க வேண்டும்.
இதர சமூகத்தினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருத்தல் வேண்டும்.”
பரிசு பெறுவதற்கான தகுதிகளாக கூறப்பட்டிருப்பவற்றை கவனமாகப் படித்துப் பாருங்கள்.
“தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக்கிணறு போன்ற தீண்டாமைக் கொடுமைகள் உங்கள் ஊரில் இருக்கக் கூடாது – அப்போதுதான் பரிசு” என்று கூட சொல்லவில்லை. அவ்வாறு கூறுவதை கவனமாகத் தவிர்த்திருப்பது ஏன்?
“கூடாது” என்பதுதான் சட்டம். அதை மீறி தனிச் சுடுகாடும், தனிக்கோயிலும், தனிக்குவளையும் தமிழகமெங்கும் இருக்கின்றன. ஆனால் இத்தகைய தீண்டாமைக் குற்றங்களுக்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
குற்றத்துக்கு தண்டனையில்லையாம். குற்றமிழைக்காதவர்களுக்கு பரிசாம்.!
லஞ்சம் வாங்கினால் தண்டனை என்பதற்குப் பதிலாக, வாங்காமலிருப்பவர்களுக்குப் பரிசு அறிவிப்பது போல,
பாலியல் வல்லுறவு குற்றத்தை தண்டிப்பதற்குப் பதிலாக, பெண்களை சமமாக நடத்தும் ஆண்களுக்குப் பரிசு அறிவிப்பது போல, தீண்டாமையை ஒழிக்க பரிசு அறிவித்திருக்கிறார் அம்மா.
தமிழகத்தில் தீண்டாமைக் குற்றங்கள் தலைவிரித்தாடுவதையும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லை என்பதையும் மறைப்பதற்குத்தான் இந்த பரிசு நாடகம்.
அதிக விளக்கம் தேவையில்லை.
தலித் மக்களுக்கு எதிரான கொலை, பாலியல் வல்லுறவு போன்ற கொடிய குற்றங்களிலேயே 5% குற்றவாளிகள் கூட தமிழகத்தில் தண்டிக்கப்படுவதில்லை.
திருவண்ணாமலை ஆடையூர் கிராமத்தில் சமீபத்தில் இரு தலித் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததற்காக, தம் குழந்தைகளை ஆதிக்க சாதியினர் பள்ளிக்கே அனுப்பவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் கம்பளத்து நாயக்கர் சாதியினர், சத்துணவு சமையல் பணியாளர்களாக தலித் பெண்கள் இருப்பதால், தங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என்று கூறியதை ஏற்று அந்தப் பெண்களை இடமாற்றம் செய்திருக்கிறது அரசு.
தலித் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தமக்குரிய நாற்காலியில் கூட உட்கார அனுமதிக்கப்படுவதில்லை.
இதுபோல நூற்றுக்கணக்கான தீண்டாமைக் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டபோதிலும், அவை எதிலும் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதே இல்லை. ஏனென்றால் தீண்டாமையை குற்றம் என்று சட்டத்தில் எழுதி வைத்திருந்தாலும், அரசு அப்படிக் கருதவில்லை என்பதே உண்மை.
அதனால் அம்மா பரிசு அறிவிக்கிறார்.
பரிசுத்தொகை கோடி ரூபாய் என்று அறிவித்தாலும், தீண்டாமை ஒழியாது. ஏனென்றால் அது ஆதிக்க மனோபாவம்.
இப்போ, அம்மாவுக்கு நாம் ஆயிரம் கோடி கொடுத்து, “இனிமேல் கட்சிக்காரங்க யாரும் காலில் விழவோ, வளையவோ நெளியவோ கூடாது”ன்னு அறிவிக்கச் சொன்னா, அது நடக்குமா?
கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான்.
______________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்: