Sunday, April 20, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!

ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!

-

ரசியல் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல், அதிகார முறைகேடுகள், மோசடிகள் பற்றிய செதிகள் நாளும் வெளிச்சத்திற்கு வருகின்றன. அவை நாளுக்கு நாள் பெரும் அளவிலும் பரவலாகவும், அடி முதல் முடி வரை எல்லா மட்டங்களிலும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அரசியல் கட்சிகளில் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள்; அரசியல்வாதிகள் மட்டுமல்ல, போலீசு, இராணுவம், அனைத்து மட்ட நீதிபதிகள், அதிகார வர்க்கத்தினர்;  கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், பொதுத்துறை நிர்வாகிகள் மட்டுமல்ல,  தனியார்துறை தொழில் நிறுவன நிர்வாகிகள் முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் வரை எங்கும் நீக்கமற நிறைந்து விட்டன, ஊழல்களும் அதிகார முறைகேடுகளும்.

நடைபெறும் ஊழல்கள், அதிகார முறைகேடுகளில் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன. இவற்றுள்ளும் ஒன்றிரண்டு மட்டுமே மக்கள் கவனத்திலும் செய்தி உலகிலும் சில காலம் நீடித்து நிற்கின்றன. மற்றவை புதிது புதிதான ஊழல்கள், அதிகார முறைகேடுகள் பற்றிய செய்திகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பரபரப்புகள் அடங்கி, மறந்து அல்லது மறைந்து போகின்றன; அல்லது சம்பந்தப்பட்டவர்களாலேயே அமுக்கப்படுகின்றன. வகைமாதிரிக்குக் கூட அல்ல, உள்நோக்கங்களுடன் தெரிந்தெடுத்த, அரிதினும் அரிதாக புகார்கள் விசாரணைக்கு வந்தாலும் புலன் விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணை, மேல் முறையீடு என்று இழுத்தடிக்கப்பட்டுச் சாகடிக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் குற்றவாளிகள் வழக்கமான அதிகாரம், சோகுசு வாழ்க்கை என்றுதான் இருக்கிறார்கள். ஜெயலலிதா – சசிகலா கும்பல் 42 வழக்குகளில் சிக்கினாலும் மற்ற எல்லா வழக்குகளிலிருந்தும் தப்பி, சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் 15 ஆண்டுகளாக இழுத்தடித்து நாட்டுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சட்டத்துறையையும் நீதித்துறையையும் கண்களில் விரலை விட்டு ஆட்டி, எங்களை யாரும் ஆட்டவோ, அசைக்வோ முடியாது” என எக்காளமிடுகிறது.

அரசின் வரவு -செலவுகளை ஆய்வு செய்து வழக்கமாக அறிக்கைகள் தரும் பொதுக்கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பின் கருத்துகள் – முடிவுகளைக் கையிலெடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சிகளும் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் சில ஊழல்கள், அதிகார முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. மேலும் சில விவகாரங்கள் தகவல் உரிமைச் சட்ட – சமூக ஆர்வலர்களாலும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளாலும் ஊடகங்கள் நடத்தும் புலனாய்வுகளாலும் அம்பலத்துக்கு வருகின்றன. இன்னும் சில விவகாரங்கள் கார்ப்பரேட் தொழில் கழகங்களுக்கிடையிலும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையேயும் நடக்கும் தொழில் போட்டிகள் காரணமாக வெளிவருகின்றன.

இரண்டாம் அலைக்கற்றை (2-ஜி) ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகள், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஆகியவற்றில் தொடங்கி எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு, இராணுவ நிலங்கள் விற்பனை, உ.பி.யில் பொது விநியோக (ரேஷன்) பொருட்கள் கடத்தல், கோதாவரி படுகை பெட்ரோலிய உற்பத்தியில் அம்பானியின் வரிஏப்பு, ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கொள்முதல், மகாராஷ்டிராவில் சுற்றுலா வளர்ச்சித் தொழிலுக்கு பழங்குடி மக்களின் நில அபகரிப்பு ( லவாசா ஊழல்), ஆந்திரா – கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின்  சுரங்கக் கொள்ளை; ஒரிசா, ஜார்கந்து, சட்டிஸ்கரில் வேதாந்தா, போஸ்கோ, மிட்டல், எஸ்ஸார், டாடாக்களின் இரும்பு, செம்பு, அலுமினியக் கனிமவளக் கொள்ளை, கடைசியாக நிலக்கரி ஒதுக்கீடு எனத் தொடர்ந்து பல ஊழல், அதிகார முறைகேடுகள் – இவை வெளியில் தெரிந்தவை. இன்னும் வெளிவராதவை, இதெல்லாம் இயல்பானவை, தவிர்க்கமுடியாதவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை, அமுக்கப்பட்டவை ஏராளம்.

இவற்றுள்ளும், ஆட்சியாளர்களுக்கு எதிராக வீசப்படும் குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்பிவிட காங்கிரசும், அரசியல் ஆதாயம் கருதி பா.ஜ.க., ஜெயா-சு.சாமி அடங்கிய எதிர்த்தரப்பும், அரசியல் கும்பல் தகராறு காரணமாக மாறன் சகோதரர்களும், டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதற்காகப் பத்திரிகைகளும், வானொளி அலைவரிசைகளும், வீழ்ந்துவிட்ட நம்பகத்தன்மையைத் தூக்கி நிறுத்திக் கொள்வதற்காக  சி.பி.ஐ.யும் உச்ச நீதிமன்றமும் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டும் அக்கறையும் ஆர்வமும் காட்டின. மற்ற விவகாரங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன.

இதற்கிடையே ஊழலுக்கு எதிராக மக்களிடம், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவிய பொதுக்கருத்தை – மனநிலையைப்  பயன்படுத்திக் கொள்ள அன்னாஹசாரே, கேஜரிவால், கிரண்பேடி, கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் மூலமாக பா.ஜ.க. ஆகியோர் களத்தில் குதித்தனர். குறிப்பான ஊழல், அதிகார முறைகேடு விவகாரங்களை எல்லாம் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு, பொத்தாம் பொதுவான ஊழல் எதிர்ப்பு மற்றும் ஜன லோக்பால்” கோரிக்கையை முன்வைத்து, அறவழி அடையாளப் போராட்டங்களை நடத்தினர். அரசியல் சாணக்கியம் – சகுனித்தனத்தில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசு கும்பல் இவர்களை எளிதில் முடக்கியது. பிறகு இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளோடு பின்னிப் பிணைந்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையின் இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை முன்தள்ளும் குறிக்கோளை எளிதில் சாதித்து விட்டது.

அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பலமும் நம்பகத்தன்மையுமே கட்சி சார்பற்ற அல்லது அரசியலற்றவாதம்தான். அதனால்தான் நடுத்தர வர்க்கத்தின் கணிசமான ஒரு பகுதி ஆதரவை அதனால் ஈர்க்க முடிந்தது. ஆனால், அந்த இயக்கம் பிளவுபட்டு அன்னா, ராம்தேவ் தலைமையிலான ஒரு பிரிவு பா.ஜ.க.வுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. கேஜரிவால் தலைமையிலான மற்றொரு பிரிவு தனியொரு ஓட்டுக் கட்சி அரசியல் அமைப்பாக அவதாரமெடுத்தது. இது ஆளும் கும்பலுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

கேஜரிவால் தலைமையிலான பிரிவு தனியொரு அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளதால், காங்கிரசு, பா.ஜ.க., உட்பட தற்போதுள்ள கட்சிகள் எல்லாவற்றுக்கும் எதிரான ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்தி, ஆதரவைத் திரட்ட முயல்கிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா, மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், வீரபத்திர சிங், தேசியவாத காங்கிரசுத் தலைவர் சரத்பவாரின் நெருங்கிய உறவினரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித்பவார், பா.ஜ.கட்சியின் தலைவர் நிதின் கட்கரி முதலானோரின் ஊழல், மோசடி, அதிகார முறைகேடுகள் சிலவற்றை அம்பலமாக்கியது. இதனால் மீண்டும் ஊழல் செதிகள் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. ஊழல் எதிர்ப்பு மனநிலை மக்களிடையே, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடேயே வேகம் பிடித்துள்ளது. இதை ஆதாயமாக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஒரு கருவியாகக் கொண்டு காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அணிகளுக்கு மாற்றுச் சக்தியாக அரசியல் அணியை நிறுவுவதற்கான திசையில் காகளை நகர்த்துகிறார்கள். இதற்காக, நாடு முழுவதுமுள்ள தன்னார்வக் குழுக்கள், அரசியலற்ற ஆர்வலர்கள், விளிம்புநிலை அடையாள அரசியல் குழுக்கள் போன்ற சக்திகளை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்க முயல்கிறார்கள்.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணியாளர்கள் அனைவரும் மெத்தப்படித்த அறிவுஜீவிகள்தாம். ஆனாலும் ஊழலின் தோற்றுவாய், அடிப்படையைப் பற்றி பேசாமல் அதைத் தடுப்பதற்கான, தகர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு-ஒழிப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள். ‘அரசு அதிகாரம் – அதை வைத்து தனிமனிதர் அல்லது ஒரு கும்பல் ஆதாயம் தேடிக்கொள்ளும் வெறிதான் ஊழலின் ஊற்றுக்கண்; அரசு அதிகாரத்துக்கு வெளியில் இருப்பவர்கள் அனைவரும் ஊழலினால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று இந்த அறிவுஜீவிகள் அனைவரும் வாதிட, பாமர மக்களும் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

ஆனால், இக்கருத்தில் பாதி உண்மைதான் உள்ளது. அரசு அதிகாரத்துக்கு வெளியில் இருந்தாலும், செல்வ – மூலதன ஆதிக்கம் பெற்றிருப்பவர்கள் அதிகாரத்தை விலைக்கு வாங்க முடியும்; அதை வைத்துக் கொண்டு தனிமனித அல்லது கும்பல் ஆதாயத்தைக் குவித்து கொள்ள முடியும். இப்படிச் செய்வது ஊழலின் மறுபாதி – இன்னொரு வடிவம். தனிநபர் ஆதாயம் அல்லது ஒரு கும்பலின் ( இதன் அதிநவீன வடிவம்தான் கார்ப்பரேட் கூட்டுப்பங்கு நிறுவனங்கள்) இலாபவெறியை அடிப்படையாகக் கொண்டதுதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை. இதையும், இதன் விளைவான தனியார் அல்லது கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) கொள்ளை, இலாபவெறியையும் ஊழலையும் தனியே பிரிக்க முடியாது. இதனால்தான் இப்போது ஊழல் 2 இலட்சம் கோடி, 10 இலட்சம் கோடி என்று பிரம்மாண்ட உச்சநிலைக்குப் போகிறது. அரசும், அனைத்து ஓட்டுக்கட்சிகளும், ஆளும் வர்க்கங்களும் அறிவித்துக் கொண்ட இப்புதிய தாராளவாதக் கொள்கைக்கு மாறாக, 2-ஜி விவகாரத்தை மட்டும் முன்தள்ளிக் கொண்டு போனதால் நாட்டு வளங்களைக் கொள்ளையடிப்பதில் எப்படிப் பங்குப் போட்டுக் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அரசும், அரசியல் கட்சிகளும், ஆளும் வர்க்கங்களும் அவர்களோடு உச்ச நீதிமன்றமும் மீளமுடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன.

‘அரசு அதிகாரத்தைப் பரவலாக்கி மக்களிடம் ஒப்படைக்கும் பஞ்சாயத்து ஆட்சிமுறை வேண்டும்; பொருளாதாரத்தின் உந்துசக்தியாக இலாபநோக்கு மட்டும் இருக்கக் கூடாது; பொருளாதார வளர்ச்சியின் இலக்கு கடைசி மனிதனின் தேவையை நிறைவு செயும் சமத்துவமாக இருக்க வேண்டும்’ என்று “ஊழலுக்கு எதிரான  இந்தியா’’வின் அறிவுஜீவிகள் அறிவித்திருக்கிறார்கள். காந்தி – நேரு – காங்கிரசு எதைச் சோல்லிக் கொண்டு இவ்வளவு காலமும் ஊழல் இந்தியாவைப் பெற்றெடுத்து வளர்த்துள்ளார்களோ, மீண்டும் அங்கிருந்து அதேவழியில் தொடங்கச் சொல்கிறார்கள்.  இது, பாமரர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அறிவுஜீவிகளான இவர்களுக்குத் தெரியாதா  – மக்கள் சர்வாதிகாரமும், அதன்கீழ் தொடர்ந்து நீடித்த உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டமும்தான் எல்லா ஊழல்கள், அதிகார முறைகேடுகளுக்கும் முடிவுகட்டும் என்ற உண்மை!

___________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________________

  1. அவன் எல்லோரை விடவும்- முன்னரே
    வேலைக்கு சேர்ந்தான்..

    பதவி உயர்விலும் -அவனே
    முந்திக்கொண்டான்

    வீடுகட்டியது..சொத்து வாங்கியது- என
    அவந்தான் நண்பர்களில் முதலில் இருந்தான்.

    அப்படிநிகழும் என நினைக்கவில்லை..

    துர் மரணத்தையும் -அவனே
    முதலில் பெற்றான்

    எல்லவற்றிக்கும்
    பின்னால் அது இருந்தது!!
    ஊழல்!

  2. ஆம் ஆத்மி அரசியல் அமைப்பு முதலில் இந்திய MAOISM பிரச்சினையா அல்லது தீர்வா? என்பதை உணர்ந்து சொல்லட்டும். இந்திய MAOISM ஆம் ஆத்மி அமைப்பின் நண்பகதன்மைக்கு சான்று கொடுக்கட்டும்.செய்வார்களா?

  3. Indian people are more excited by Movie news. Movie news moves them but a news about violence based on caste does not move them. They are so engrained in ‘Thuppaaki release’, ‘Paradesi press meet’, ‘Rajini coming to Shivaji 3D release’ etc. People don’t even know what they are sacrificing or missing like the basic necessities of life. What a state the people of India have come to. It is so pathetic. They vote in the same people they voted out for corruption 5 years back.

  4. ஊழல் வாதிகளின் அரசியலில் எல்லாமே ஊழல் என்றாகிவிட்டது.சி.பி.ஐ.முதல் சுப்பிறீம் கோர்டுவரை ஊழல் ஊற்றுக் கண் இருக்கும்போது சட்டம் ஒழுங்கு மக்கள் பாதுகாப்பு நாடடின் உறதித் தன்மை எல்லாமே இப்படித்தான் ஆட்டம் காணும். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க