privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்?

சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்?

-

“மேற்கத்திய பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடம் பணம் இருக்கிறது, அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதனால்தான் அவர்களால் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. அந்த மருந்துகளே இல்லை என்றால் குறைந்த விலைக்கு கொடு என்று எப்படி கேட்பீர்கள்?”

“உழைக்காத சோம்பேறி கூட்டங்கள், 1 ரூபாய் இட்லிக்கு வரிசையில் நிற்கும் ஆட்டு மந்தைகள், இவங்களுக்கு எல்லாம் புற்றுநோய் சிகிச்சை கேக்குதோ” என்று வசை பாடுகிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.

பல லட்சம் கோடிகளில் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான், ‘கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், அறிவியலை வளர்த்துச் செல்பவர்கள், மனித குலத்துக்கு தொண்டு செய்பவர்கள்’ என்று புகழ் பாடுகிறார்கள்.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தொண்டு செய்யும் இலட்சணம்தான் என்ன? இவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் முறைக்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

கிளாக்சோ ஸ்மித்கிளைன் கார்ட்டூன்
கிளாக்சோ ஸ்மித்கிளைன் மருந்து விற்று ஈட்டும் லாபம் விண்ணைத் தொடுகிறது, மருந்தக ஆராய்ச்சிக்கான செலவுகள் பாதாளத்தில் வீழ்கின்றன. மக்கள் தூக்கில் தொங்குகிறார்கள்.

கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 475 புதிய மருந்துகளை பயன்படுத்தி இந்திய நோயாளிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் 17 மருந்துகள் மட்டுமே இந்தியாவில் பரிந்துரைக்க அனுமதிக்கப்பட்டவை.

உயிரிழந்தவர்களில் 80 பேர் மட்டுமே ஆராய்ச்சிக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் விளைவாக இறந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 2005 முதல் 2012 வரையிலான 7 ஆண்டு காலத்தில் மருந்து ஆராய்ச்சிகளுக்குட்படுத்தப்பட்ட 57,303 நோயாளிகளில் உயிரிழப்புகளை தவிர 11,972 மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டன எனவும், அவற்றில் 506 மட்டுமே ஆராய்ச்சி மருந்துகளால் ஏற்பட்டவை என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலர் கேஷவ் தேசிராஜூ நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார்.

பேயர் நிறுவனத்தின் ரிவரோக்சபன், நோவார்டிஸ் நிறுவனத்தின் (அதே புற்று நோய் மருந்து கிலிவெக் புகழ் அதே நோவார்டிஸ்) அலிஸ்கிரின் ஆகிய மருந்துகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளன. ரிவரோக்சபன் ஆராய்ச்சி சோதனைகளில் 2008-ம் ஆண்டு 21 மரணங்களும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 125 மரணங்களும் பதிவாகியுள்ளன. இரண்டு கால கட்டங்களிலும் தலா 5 உயிரிழப்புகள் மட்டுமே ஆராய்ச்சி மருந்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு நோவார்டிஸ் அலிஸ்கிரின் என்ற ஆராய்ச்சி மருந்தை எனலாப்ரில் என்ற மருந்தோடு ஒப்பிடும் ஆராய்ச்சி நடத்தியதில் 47 மரணங்கள் பதிவாகியிருந்தன. அவற்றில் 1 மட்டுமே மருந்தினால் விளைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

மருந்தக ஆராய்ச்சி பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்வதிலும், அவர்களில் எத்தனை பேர் மருந்தின் நேரடி தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வகை பிரிப்பதிலும் இருக்கும் நடைமுறை சிக்கல்களை பார்த்தால் இந்த புள்ளிவிபரங்கள் பனிப் பாறையின் விளிம்பு மட்டுமே என்பது தெளிவாகும்.

புதிய மருந்துகளை ஆய்வுக் கூடங்களில் விலங்கு மற்றும் மனித செல்களிலும், பின்னர உயிருள்ள விலங்குகளிலும் செலுத்தி பரிசோதிக்கப்பட்ட பிறகு மனிதர்கள் மீது அவற்றை செலுத்தி பரிசோதிக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி பரிசோதனைகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டம் – ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கொடுத்து பரிசோதிப்பது; இரண்டாவது கட்டம்: குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டும் கொடுத்து பரிசோதிப்பது; மூன்றாவது கட்டம்: பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரவலாக கொடுத்து பரிசோதிப்பது. கூடவே மருந்து சந்தையில் விற்பனை ஆரம்பித்த பிறகு பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளுக்கான நான்காவது கட்ட பரிசோதனைகள் சில சமயங்களில் நடத்தப்படுகின்றன.

மருந்தக ஆய்வுகள்ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மீது நடத்தப்படும் முதல் கட்ட ஆராய்ச்சி பரிசோதனைகளுக்கு பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டு பங்கு பெறுவோர் அழைக்கப்படுகிறார்கள். பங்கேற்பவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. வேறு வேலையின்றி பணத்திற்காக இத்தகைய அபாயங்களை இந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த பரிசோதனையில் மருந்து உள்வாங்கப்படுதல், வளர்சிதை மாற்றம், உடலிலிருந்து வெளித்தள்ளப்படுதல் இவற்றை அளவிடுவதும், படிப்படியாக மருந்தின் அளவை அதிகரித்து மருந்தின் பாதுகாப்பு மற்றும் சகிப்புத் தன்மையை அளவிடுவதும் செய்யப்படுகின்றன.

இரண்டாம் கட்டத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு பல மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை மருந்துகள் கொடுத்து பரிசோதிக்கப்படுகின்றனர். இதில் பங்கேற்பவர்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள். அவர்களுக்கு பணம், அல்லது இலவச மருத்துவ சிகிச்சை அல்லது இலவச மருந்து வடிவத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி பரிசோதனைகள் மூலம் மருந்தின் பாதுகாப்பும் செயல்படும் திறனும் அளவிடப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கும் (நோயாளிகள்) சரி, ஆய்வு செய்பவர்களுக்கும் (மருத்துவர்கள்) சரி, எந்த நோயாளிக்கு மருந்து தரப்படுகிறது, எந்த நோயாளிக்கு வெறும் சர்க்கரை மாத்திரை தரப்படுகிறது என்று தெரிவதில்லை.

மூன்றாவது கட்ட ஆராய்ச்சிகள் பல லட்சம் நோயாளிகள் மீது உலக அளவில் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மருந்தின் பாதுகாப்புத் தன்மை, திறன், மற்ற மருந்துகளுடன் சேரும் போது ஏற்படும் விளைவுகள், மோசமான பக்க விளைவுகள், கொடுக்க வேண்டிய பொருத்தமான அளவு போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன.

மருந்தக ஆராய்ச்சி - இந்தியா
பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு இந்தியா மருந்தக ஆராய்ச்சிக்கு கவர்ச்சிகரமான நாடாக விளங்குவது ஏன்?

உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்ப, (பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் தேவைக்கேற்ப), இந்தியாவின் புதிய மருந்துகளுக்கான சட்டம் 2005-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஒரு மருந்துக்கான மருந்தக ஆராய்ச்சி சோதனைகளை மற்ற நாடுகளில் நடக்கும் போதே இந்தியாவிலும் இணையாக நடத்துவதற்கு அந்த சட்டத் திருத்தம் வழி செய்து கொடுத்தது. அதற்கு முன்பு மற்ற நாடுகளில் ஆராய்ச்சி பரிசோதனைகள் முடிக்கப்பட்ட பிறகுதான் இந்தியாவில் ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.

இதன் மூலம் வளர்ந்த நாடுகளில் மருந்தக ஆராய்ச்சி நடத்துவதற்கு ஒப்புதல் கிடைக்காத மருந்துகளை இந்திய மக்களை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி கிடைத்தது. மேலும் மருந்தக ஆராய்ச்சிகள் நடத்துவதற்கு மேற்கத்திய நாடுகளில் செலவாவதை விட இந்தியாவில் சுமார் 50% தான் செலவாகிறது. இந்தியாவின் பெரும் மக்கள் தொகை, பரவலான மருத்துவமனை வலைப்பின்னல், திறமையான மருத்துவ ஊழியர்கள் இவை அனைத்தும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு (நோயாளிகளுக்கு) நடத்தப்படும் ஆராய்ச்சி பற்றிய விபரங்கள், எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள், ரகசிய காப்பு பிரச்சனைகள், உரிமைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட வேண்டும். ஆங்கிலம் தெரியாத நோயாளிக்கு அவரது தாய்மொழியில் விபரங்கள் தரப்பட வேண்டும். தரப்பட்ட விபரங்களை முழுமையாக படித்து புரிந்து கொள்வதற்கு போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். அவற்றைக் குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் பேசி முடிவு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவே மருத்துவர் நோயாளியை சந்திக்க வேண்டும். அதற்கு பிறகுதான் பங்கேற்பவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட ஒப்புதல் அளிக்க வேண்டும். எந்த நேரத்திலும் காரணம் எதுவும் சொல்லாமல் ஆராய்ச்சியிலிருந்து விலகிக் கொள்ளவும் நோயாளிக்கு உரிமை இருக்க வேண்டும்.

மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கீழ் வரும் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.

  • இது வரை நிரூபிக்கப்படாத மருந்துகள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட உள்ளனவா?
  • இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
  • இந்த ஆய்வு எத்தனை காலம் நடத்தப்படும்?
  • இதன் பக்க விளைவுகள் என்னென்ன?
  • என்னனென்ன அபாயங்கள் ஏற்படலாம்?
  • என்னென்ன ஆய்வக சோதனைகள் நடத்தப்படும்?
  • வேறு விதமான சிகிச்சைகள் உள்ளனவா?
  • மோசமான விளைவுகள் ஏற்பட்டால் சிகிச்சைக்கான செலவுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள்?
  • தனிநபர் விபரங்களும் பதிவுகளும் ரகசியமாக வைக்கப்படுமா?
  • காப்பீடு உள்ளதா? இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு?
  • மருத்துவ நெருக்கடி ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு பரிசோதனையை நடத்தும் ஊழியர்களின் தொடர்பு எண்கள்.
  • ஒப்புதல் அளித்த அமைப்பின் செயலரின் தொடர்பு எண்கள்
  • ஒப்புதல் கையொப்பமிட்ட படிவம் நோயாளிக்குத் தரப்படுமா?
  • போக்குவரத்து, கூடுதல் மருத்துவ செலவுகள் தரப்படுமா?
  • ஊக்கத் தொகை விபரங்கள்
  • ஆராய்ச்சிப் பணி முடிந்த பிறகு மருந்து இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்கப்படுமா?
இந்திய மருத்துவமனை ஒன்றில்
இந்திய மருத்துவமனை ஒன்றில்

மருத்துவர்களை கடவுளாக கருதும் இந்தியாவில் நோயாளிகள் மருத்துவர் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை காட்டுவதையும், மருத்துவர் சொல்லும் எந்த ஆவணத்திலும் கையொப்பமிட தயாராக இருப்பதையும், மருத்துவர் சொல்வதை எல்லாம் செய்வதையும் பார்க்கலாம். மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்கும் பெரும்பான்மை நோயாளிகள் அவர்களது மருத்துவர்கள் சொன்னதால் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். என்ன ஏது என்ற விபரங்களை நோயாளிகள் கேட்டு தெரிந்து கொள்வது அரிதாகவே நடக்கிறது.

மருந்து நிறுவனம் தருவதாகச் சொல்லும் புகழும் பணமும் பல மருத்துவர்களை கவர்கின்றன. அவை நோயாளிகளை வரைமுறையற்று ஆராய்ச்சிகளில் சேர்த்துக் கொள்வதிலும் சேர்ப்பதிலும், முழு விபரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறாமல் சேர்ப்பதிலும் கொண்டு விடுகின்றன.

ஆராய்ச்சியில் கலந்து கொண்டவருக்கு ஏதாவது மோசமான விளைவுகள் ஏற்பட்டால் மருந்து நிறுவனங்கள், ‘அவை தமது மருந்தினால்தான் ஏற்பட்டது’ என்பதற்கான ஆதாரத்தை கேட்பது வாடிக்கை. அப்படி நிரூபித்தால்தான் சிகிச்சை அளிப்பதற்கான செலவை ஏற்றுக் கொள்வோம் என்றும் சொல்கிறார்கள். நோயாளிக்கு ஏற்பட்ட சிக்கல் ஆராய்ச்சி மருந்து மற்ற மருந்துகளுடன் சேர்வதாலோ அதனுடன் நேரடியாக இணைக்க முடியாத இன்னும் பல காரணங்களாலோ ஏற்பட்டிருக்கலாம் எனும் போது தமது பொறுப்பைத் தட்டிக் கழித்து செலவைக் குறைப்பதுதான் மருந்து நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது.

மருந்தக ஆராய்ச்சிகளில் பல விதமான சமரசங்களும் சுரண்டல்களும் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆராய்ச்சி நடத்தச் சொல்லும் மருந்து நிறுவனத்துக்கும் ஆராய்ச்சியை நடத்தும் மருத்துவருக்கும் இடையே, மருந்து நிறுவனத்துக்கும் நோயாளிக்கும் இடையே, மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே, மருந்து நிறுவனத்துக்கும் ஒழுங்கு முறை அமைப்புக்கும், ஒழுங்கு முறை அமைப்புக்கும் மருத்துவருக்கும் இடையே என்று ஒவ்வொரு மட்டத்திலும் பணமும், நோயாளியின் நலனுக்குப் புறம்பான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன.

இலவச மருந்துகள், இலவச சிகிச்சை அல்லது பணம் கொடுப்பதன் மூலம் பலரை கவர்ந்து விடலாம். குறிப்பாக வசதி குறைந்த, படிப்பறிவற்ற ஏழை மக்களை முழு விபரங்களையும் பரிசீலிக்காமலேயே மருந்தக ஆராய்ச்சிகளில் சேர்ந்து கொள்ள தூண்டுவதும் ஆராய்ச்சி விதிமுறைகளிலிருந்து விலகல்கள், மீறல்கள், மாறுதல்கள் இவற்றை ஒழுங்கு முறை அமைப்பு கண்டு கொள்ளாமல் விடுவதும் பரவலாக நடக்கிறது.

தொலை தூரத்திலிருந்து வரும் நோயாளிகள் மருந்தக ஆராய்ச்சிகளில் சேர்க்கப்பட்ட பிறகு, ஆராய்ச்சி மருந்து இலவசமாக கொடுக்கப்பட்டாலும், சோதனைகளுக்கான கட்டணங்களும் போக்குவரத்து செலவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் பரிசோதனையில் கலந்து கொள்ளா விட்டால் செலவாவதை விட அதிகமாகவே செலவழிக்க நேரிடுகிறது. மலிவான, நிரூபிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற சோதனைகளையும், சிகிச்சைகளையும் தவிர்த்திருக்கலாம். ஆராய்ச்சி தேவைக்காக வாரா வாரம் அல்லது மாதா மாதம் மருத்துவமனைக்கு வருவதற்கு பதிலாக ஆண்டுக்கு ஓரிரு முறை வந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக நமது நாட்டை மாற்றி, அவர்களது லாப வெறிக்கு நமது மக்களை பலியாக கொடுப்பதுதான் ஆளும் வர்க்கத்தின் தனியார் மய, தாராள மய, உலக மயமாக்கல் கொள்கைகளின் நோக்கம். அது சீரும் சிறப்புமாக நிறைவேறி வருகிறது என்பதைத்தான் மருந்தக ஆராய்ச்சி பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க
2,644 died during clinical trial of drugs in 7 years – Govt to SC