privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !

வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !

-

ங்கதேசத்தின் ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபடும் ஆலைகள் தற்போது தொழிலாளர்களின் போராட்டக் களமாக மாறியிருக்கின்றன.

ரேஷ்மா
17 நாட்களுக்கு பிறகு இடிந்து விழுந்த ராணா பிளாசாவிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி ரேஷ்மா.

சென்ற மாதம் வங்கதேசம் தாக்காவின் சாவர் புறநகர் பகுதியில், ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்து 1,127 தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து இறந்தனர். தங்கள் சக தொழிலாளர்களின் உயிரற்ற உடல்கள் நூற்றுக்கணக்கில் தோண்டியெடுக்கப்பட்டது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

உழைப்பையும் உயிரையும் சுரண்டும் தொழிற்சாலைகளிடமிருந்து தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக, கொலைகார ராணா பிளாசா கட்டிட முதலாளிக்கு மரணதண்டனை வழங்கவும், தமது அரசியல் உரிமைகளுக்காகவும் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கமாக இணைந்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

தாக்காவின் அஷுலியா என்ற தொழில்துறை பகுதியில் உள்ள 300-க்கும் அதிகமான ஆலைகள், 3 வாரகாலமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலை தொடர்ந்தால் மேற்கத்திய வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை ரத்து செய்வது அல்லது வேறு இடங்களுக்கு உற்பத்தியை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும் என்று உணர்ந்த அரசாங்கம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக பரிந்துரைகள் வழங்க குழு ஒன்றை நியமிக்க போவதாக அறிவித்தது. அந்தக் குழுவின் அறிக்கை வரும் வரை தொழிலாளர்கள் போராடாமல் காத்திருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் அமைப்பதை தடை செய்யும் தொழிலாளர் சட்டங்களில் பெயரளவுக்கு சில மாற்றங்களை செய்து தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை வழங்குவதாக தொழிலாளர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கிறது.

இன்னொரு பக்கம், இந்த கொடூரமான விபத்தைத் தொடர்ந்து இத்தனை காலமாக மூடி மறைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின் அவலநிலை சர்வதேச ஊடகங்களில் வெளிவரத் துவங்கியதைத் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு பதில் சொல்லும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க அவர்களது நலன் விரும்பிகளான தன்னார்வ குழுக்கள் உடனடியாக உதவ முன்வந்தன. சுவிட்சர்லாந்தை சேர்ந்த யு.என்.ஐ. உள்ளிட்ட சர்வதேச தன்னார்வ குழுக்கள், ஆடை விற்பனையில் கோலாச்சும் பன்னாட்டு நிறுவங்களான கேரஃபோர், பெனட்டன், மார்க்ஸ & ஸ்பென்சர், கால்வின் கிளைன் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி “தீப்பிடித்தல் மற்றும் கட்டிட பாதுகாப்பு”க்கான மாதிரி ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர்.

பங்களாதேஷ் தொழிலாளர்கள்
ஊதிய உயர்வு கோரி போராடும் தொழிலாளர்கள்.

ஒரு தொழிற்சாலையின் மொத்த உற்பத்தியில் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தின் உற்பத்தி சதவீதத்தை பொறுத்து தொழிற்சாலைகளை மூன்று வகைகளாக பிரித்து பன்னாட்டு நிறுவனங்களின் பொறுப்பை வரையறுக்கிறது இந்த ஒப்பந்தம். 30% வரை உற்பத்தி இருந்தால் பாதுகாப்பு ஆய்வுகள், தீவிபத்து பாதுகாப்பு ஒத்திகைகள், மாற்று நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். 65% வரை உற்பத்தி இருந்தால், ஆய்வுகள் மாற்று நடவடிக்கைகள் வழங்கப்பட வேண்டும். 10% மட்டும் உற்பத்தி இருந்தால ஆய்வுகளுக்கு மட்டும் வழிகாட்டல் வழங்கினால் போதும். விபத்துக்குப் பின் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், உற்பத்தி முடக்கத்தால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள், பாதுகாப்பற்ற தொழிற்சாலைக்கு வேலை செய்ய மறுக்க தொழிலாளர்களுக்கு உரிமை இவற்றை வலியுறுத்துகிறது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்காத தொழிற்சாலைகளுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை என்று மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதாவது, பன்னாட்டு முதலாளிகள் மனமுவந்து, தமது வங்க தேச தரகு முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்து வங்க தேச தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவ வேண்டும். கொலையாளியின் கையிலேயே கொலைகள் நடப்பதை தடுப்பதற்கான பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்.

இந்த கண்துடைப்பு, ஏமாற்று ஒப்பந்தத்தில் கூட வட அமெரிக்காவை சேர்ந்த மேசிஸ், சியர்ஸ் எசன்ஷியல்ஸ், ஜேசி பென்னி, த நார்த் பேஸ், டார்கெட், கோல்ஸ், காடோ ஃபேஷன்ஸ், ஓஸ் கோஷ், நார்ட்ஸ்ட்ரோம், அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ், த சில்ட்ரன்ஸ் பிளேஸ், ஃபுட் லாக்கர் ஆகியவை உள்ளிட்ட 14 ராண்டுகள் கையெழுத்திட மறுத்து விட்டனர். வங்கதேசத்தில் 279 ஆலைகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வால்மார்ட் தானே பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்தப் போவதாக சொல்லியிருக்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டால், எதிர்காலத்தில் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும் என்று கேப் என்ற பிராண்டு சொல்லி விட்டது.

தெரு நாடகம்.
2012-ல் நடந்த தஸ்றீன் தொழிற்சாலை தீவிபத்துக்கு நிவாரணம் கோரி நடத்தப்படும் தெரு நாடகம்.

தொழிலாளர்களுக்கு உயிர் வாழ போதுமான கூலி கொடுக்காமல் கொடூரமாக சுரண்டியும், பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய வைத்து கொலை செய்தும் கொள்ளை இலாபம் ஈட்டும் இந்நிறுவனங்கள் தமது செயல்களின் விளைவுகளுக்கு எந்த பொறுப்பையும் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. தமது ‘சுதந்திர’ வர்த்தகத்துக்கு முட்டுக்கட்டை போடும் எந்த தொந்தரவையும் சகிக்க முடியாமல் இன்னும் ‘சுதந்திரம்’ நிலவும் ஆப்பிரிக்காவின் பின்தங்கிய நாடுகளில் தமது உற்பத்தியை மாற்றி கொள்ளையை தொடரும் வேலையை ஆரம்பித்திருக்கின்றன. வால் டிஸ்னி நிறுவனம் வங்கதேசத்தில் தனது ஆடை உற்பத்தியை நிறுத்தி விட்டு ஏப்ரல் 2014 முதல் ஈக்வேடார், வெனிசுலா, பெலாருஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நகர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. ஹென்னஸ் & மவுரிட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் கார்ல் ஜோஹன் பேர்ச்சொன் உற்பத்தியை மத்திய மற்றும் தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கு மாற்ற திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டு பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களுடன் பிணைத்துக் கொண்ட வங்க தேச ஆளும் வர்க்கமோ தனது நலன்களை பாதுகாத்துக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை செய்கிறது. ஒட்டச் சுரண்டப்படும் சொந்த நாட்டு மக்களை மேலும் வதைக்க அது தயங்கவே இல்லை.

2008, 2009 ஆண்டுகளில் ஊதிய உயர்வு கேட்டு நடந்த நூற்றுக்கும் அதிகமான போராட்டங்ளை போலீசை ஏவி ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை அடித்து நொறுக்கியது, 6 பேரை சுட்டுக்கொன்றது. 2010-ம் ஆண்டு கொலைமிரட்டலுக்கு ஆளாக்கப்பட்ட தொழிற்சங்க அமைப்பாளர் அமினுல் இஸ்லாம், போலீஸாரால் சித்தரவதை செய்யப்பட்டார். 2012-ல் ‘மர்மான முறையில்’ கொல்லப்பட்டார். அரசாங்கம், கொலையாளியை இன்று வரை வெளியே தேடிக்கொண்டு இருக்கின்றது.

சாவர் விபத்திற்கு பின் தொழிலாளர் நலனில் அக்கறை உள்ளது போல் ஊளையிட்ட வங்கதேச அரசின் சாயம் சீக்கிரமே வெளுத்துவிட்டது, வழக்கம் போலவே தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க போலீஸை ஏவி, பல தொழிலாளிகளை படு காயப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் தொழிற்சங்க உரிமை, தொழிலாளர் நலக்குழு போன்ற பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ள வங்கதேச தொழிலாளர்கள் அவற்றை ஏற்கத் தயாராகவும் இல்லை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதாகவும் இல்லை.

இன்று வங்கதேசத்தில் கிளர்ந்து எரியும் இந்த போராட்டத் தீ உலகெங்கும் பற்றிப் பரவ வேண்டும். ஏழை நாடுகளில் சுரண்டப்படுகின்ற தொழிலாளர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு போராட வேண்டும். உலகமயமாக்கத்தின் மூலம் உலகெங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டை உருவாக்கியுள்ள நச்சுச் சூழலை தொழிலாளிகளின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம்தான் முறியடிக்க முடியும்.

– ஜென்னி

மேலும் படிக்க

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க