நீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி !

”நீட் தேர்வை எதிர்கொள்ள தகுதியை தமிழகமாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.” என நீட்டி முழக்கினர் அதன் ஆதரவாளர்கள். உண்மையில் நீட் தேர்வு முறையின் தகுதி என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, இப்புதிய தேர்வு முறை ”தகுதி மற்றும் திறமை” கொண்ட மாணவர்களுக்கு வரப்பிரசாதம் என்று அதன் ஆதரவாளர்களாலும், மத்திய அரசாலும் சொல்லப்பட்டது.

நீட் தேர்வுகளை எதிர்த்தவர்களோ இது கிராமப்புற ஏழை மாணவர்களை மருத்துவக் கல்வியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நவீன தீண்டாமை என்றனர். எனினும், கல்வி விசயத்தை சாதி உள்ளிட்ட பிரிவினைகளின் அடிப்படையில் பார்ப்பது அபச்சாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர் பார்த்தசாரதிகள்.

அவர்களே சொல்லிக் கொண்ட தகுதி / திறமைகளின் யோக்கியதை என்னவென்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரை தகர்த்தெரிகிறது.

நீட் தேர்வு முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் (2016 -க்கு முன்) மருத்துவ நுழைவுக்கான கட் ஆப் பொதுப்பிரிவுக்கு 50% மதிப்பெண்களும், ரிசர்வ் பிரிவுக்கு 40% மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுகளுக்குப் பின் சதமான (Percentile) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரது நீட் மதிப்பெண்களின் சதமானம் 40 என்றால், தேர்வை எழுதிய மொத்த மாணவர்களில் இந்தக் குறிப்பிட்ட மாணவர் தனக்குக் கீழ் உள்ள 40 சதவீதம் பேரை விட அதிக மதிப்பெண் எடுத்துள்ளார் என்று பொருள்.

இதன்படி, நீட் தேர்வின் ஒட்டுமொத்த (Aggregate) மதிப்பெண்ணில் பொதுப்பிரிவினருக்கு 50 சதமானம் என்றும், ரிசர்வ் பிரிவினருக்கு 40 சதமானம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் தேர்வாகி மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவர்களின் மதிப்பெண்களை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை சோதித்த போது பல மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட சதமானத்திற்கு மேல் இருந்தாலும், உயிரியல், வேதியியல் போன்ற உட்பிரிவுகளில் 5 சதவீதம் அல்லது 20 சதவீத மதிப்பெண்களே பெற்றிருந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

அடுத்து, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக் கல்லூரி இடங்கள் 60,000. கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 10.0 லட்சம் மாணவர்களில் 6.1 லட்சம் மாணவர்கள் சதமான முறையின் படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதாவது, தெரிவான மாணவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண் இலக்கை எட்ட வேண்டியதில்லை; மாறாக தேர்வை எழுதிய மொத்த மாணவர்களில் 50 சதவீதம் பேரை (பொதுப்பிரிவுக்கு) விட அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலே போதுமானது.

இதன் பொருள் என்ன? ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி இருக்கைக்கும் சராசரியாக 10 மாணவர்கள் (நீட் தேர்வில் தேர்வானவர்கள்) போட்டியிடுகின்றனர். இதன் விளைவாக பல தனியார் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வில் வெறும் 20 சதவீதம் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட நுழைந்துள்ளனர். இவர்கள் எடுத்த 20 சதவீத (percentage) மதிப்பெண்ணானது, சதமான (percentile)  அடிப்படையில் பார்க்கும் போது தேர்வெழுதிய மொத்த மாணவர்களில் 50 சதவீதம் பேரை விட அதிக மதிப்பெண்ணாக இருக்கும்.

உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 100 மாணவர்களில் 30 பேர் 25 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. அதே போல் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் 21 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். முந்தைய மருத்துவ நுழைவுத் தேர்வு முறையின் படி (கட் ஆப் முறை) பார்த்தால் இந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியின் வாசலைக் கூட மிதித்திருக்க முடியாது.

இவ்வாறு குறைந்த மதிப்பெண்களை வைத்துக் கொண்டு யாரால் மருத்துவப் படிப்பைப் பெற முடியும்? ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கைக்கு சில கோடிகளை வாரிக் கொட்டத் தயாராக இருக்கும் பணக்கார வீட்டுக் குலக்கொழுந்துகளால் மட்டுமே இவ்வாறு நுழைய முடியும். நீட் தேர்வை “தகுதியின்” அடையாளம் என்று நீட்டி முழக்கினர். உண்மையில் பணக்காரர்களோடு  தகுதி வாய்ந்த ஏழைகளை வெல்லவே முடியாத ஒரு போட்டியில் மோதவிட்டு அவமானப்படுத்துவதற்குப் பெயர் தான் நீட் தேர்வு முறை.
சூத்திரனுக்கு கல்வி மறுத்தது மனுவின் நீதி – மோடியின் புதிய மனுநீதியோ காசுள்ளவனுக்கே கல்வி என்கிறது.

வினவு செய்திப் பிரிவு