செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அக்லி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார் மற்றும் ஆஷா. இவர்களது மகள் கயல்விழி அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்துள்ளார். அதனுடன் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து மருத்துவராக வேண்டும் என்கிற கனவோடு மே 4 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்காகப் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (04.05.2025) அதிகாலை ஆஷா மகளை எழுப்புவதற்காக அவருடைய அறையின் கதவை திறந்த போது மகள் சேலையில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்குவதைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார். பின்னர் மேல்மருவத்தூர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நீட் தேர்வால் 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று சத்யா என்கிற மாணவி நீட் தேர்விற்குப் பலியானார். கடந்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 5 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க: நீட் தேர்வு தூக்குக் கயிற்றுக்கு மற்றொரு மாணவி பலி
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த 17 வயது மாணவி நீட் தோல்வி பயத்தால் 3 ஆம் தேதி அன்று இரவு தன்னுடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராஜஸ்தானின் கோட்டாவில் இந்தாண்டு மட்டும் 14 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு பலியாகியுள்ளனர்.
நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதைவிட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமானாலும் பாசிச மோடி கும்பல் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து வருகிறது.
ஏனென்றால், நீட் முறைகேடுகளுக்கும் பயிற்சி மையங்கள் மூலம் கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கும் உதவுவது இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்தான்.
பாசிச கும்பல் 2017 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வை (National Entrance Entrance Exam – NEET) கட்டாயமாக்கியது. இதன் மூலம் ஏழை குழந்தைகளின் மருத்துவ கனவைச் சிதைத்து பணக்காரர்கள் மட்டும் தான் படிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கி வருகிறது. இதனால், அனிதா முதல் கயல்விழி வரை நூற்றுக்கணக்கான மாணவ மனைவிகள் நீட் என்னும் தூக்குக் கயிற்றிற்குப் பலி கொடுக்கப்பட்டுள்ளனர்.
படிக்க: முத்துலட்சுமி: நீட் எனும் தூக்குக்கயிறுக்கு பலியாகிய மற்றொரு மாணவி
2021 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருந்தது திமுக அரசு. ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது, கையெழுத்து இயக்கம் நடத்துவது போன்ற சட்டப்போராட்டங்களை மட்டும் நடத்தி மானவர்களை ஏமாற்றி வந்தது. தற்போது நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறி மாணவர்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.
எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசிடம் கோரிக்கை மட்டும் வைப்பதில் எந்தப் பலனும் இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைக்கின்ற மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே நீட் தேர்வையும், அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram