பெங்களூருவைச் சேர்ந்ததொரு உணவக நிறுவனம், ஒரு புதிய உணவுச் சேவையை சுதந்திர தினத்தன்று தொடங்கவிருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறது. அதன் பெயர் ”சுத்தமான பிராமண மதிய உணவுச் சேவை” (A Pure Brahmin Lunch Box Service)

கடந்த 07-08-2018 அன்று வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான முனைவர் கார்த்திக் நவாயனா இந்த விளம்பரம் அடங்கிய பேனரின் புகைப்படத்தை டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

சுத்தமான பிராமண உணவு வகைகளை, பெங்களூரு ஜே.பி. நகர், பி.டி.எம். லே-அவுட், புட்டெனஹள்ளி, பிலேகாஹள்ளி ஆகிய பகுதிகள் உள்ளிட்ட பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து விரைவாக ’டோர்-டெலிவரி’ செய்வதாக அந்த விளம்பர பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுத்தமான சைவ உணவு ரூ.40, ரூ.45, ரூ.60 ஆகிய விலைகளில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பிராமண உணவு சேவை வழங்குவதற்கு இந்நிறுவனம் மட்டுமே வழங்கவில்லை. இதுவே முதல் நிறுவனமும் அல்ல. இதற்கு முன்னரும் இத்தகைய ’சேவை’ நிறுவனங்கள் நிறைய உண்டு.

சென்னையைச் சேர்ந்த “அக்‌ஷயா எஸ் வீட்டு உணவு வழங்கல் சேவைகள்” நிறுவனமும் பிராமண உணவுகளை வழங்குவதில் ஏற்கெனவே மிகப் பிரபலமானது. இது போன்ற’ பிராமண உணவு சேவைகளை வெளிநாடுகளிலும் வழங்கி வருகின்றனர் பலர். அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரைப் பகுதியில் ’மைலாப்பூர் எக்ஸ்பிரஸ்’ என்ற உணவு நிறுவனம் சுத்தமான தமிழ் பிராமண (Tam-Brahm) உணவுச் சேவையை வழங்கி வருகிறது.

இத்தகைய பிராமண உணவு சேவைகள் உணவு வழங்கல் செயலிகளான ஸ்விக்கி, சொமாட்டோ ஆகியவற்றிலும் இருக்கின்றன. பெங்களூரு இந்திராநகரில் உணவு வழங்கல் சேவையில் உள்ள ’பிராமண வீட்டு உணவு’ நிறுவனம் ஒரு உதாரணம்.

பெங்களூரில் மட்டுமே பல சிறு உணவகங்களும் உணவு வழங்கல் நிறுவனங்களும் வீட்டுத் தயாரிப்பு உணவு வழங்கல் சேவைகளை வழங்கி வருகின்றன. சுத்தமான ஜெயின் உணவு சேவைகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஜெயின் உணவு, ஹலால் உணவு என இருக்கும்போது பிராமண உணவு இருப்பதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள், இந்த விளம்பரத்தை சாதிவெறியைக் கக்குவதாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

சுத்தமான பிராமண சமையல் என்று இந்த விளம்பரத்தில் எதைக் குறிப்பிடுகிறார்கள்? வெறும் சைவ உணவையா அல்லது பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவையா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

’சாதியரீதியான உணவுக்கு’ எதிராக பல்வேறு தலித் செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இத்தகைய ’தனிச்சிறப்பான உணவு’ என்பதுதான் பொதுவான உணவுத் தெரிவிலிருந்து தலித் மக்களை விலக்கி வைப்பதற்கான பாரம்பரிய வழிமுறை என்று கூறுகின்றனர். ’தாழ்த்தப்பட்ட மக்கள்’ உணவு வகைகள் இந்திய சமையல் கலாச்சாரத்திலிருந்து திட்டமிட்டவகையில் விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் உணவைப் பொருத்தவரையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. சந்திரபான் பிரசாத் என்ற தொழில்முனைவர் ஒருவர், தலித் உணவுகளுக்காக தனியாக இணையதளம் (Dalitfoods.com) திறந்தார். தலித் உணவு வகைகளை விற்பனை செய்வதற்கான ஒரு இணையதளமாக அது செயல்பட்டு வருகிறது. (அந்த இணையதளம் செயல்படவில்லை) ”Stir Fry Simmer” ஆவணப்படத்தைப் போன்று  உணவு தொடர்பான சில ஆவணப்படங்கள் உணவுக்குப் பின்னர் மறைந்திருக்கும் அரசியலை வெளிக் கொண்டு வர முயற்சித்திருக்கின்றன.

– நன்றி: நியூஸ் 18 ஆங்கில இணையதளத்தில் வந்த  செய்தியின் தமிழாக்கம்.
Bengaluru Service Offering ‘Pure Brahmin Meals’ Home Delivered Sparks Outrage

உணவு மட்டுமல்ல, தங்கும் வீடு முதல், ஒய்வுக் காலத்தில் தங்குவதற்காக சிறப்பு வசதி செய்யப்பட்ட வீடுகள், முதியோர் இல்லங்கள் பிராமணர்களுக்காகவே என பிரத்யேகமாக தனிச் சந்தையைப் பிடித்திருக்கின்றன. தனி பங்களாக்களை கட்டி ’வில்லாக்களாக’ விற்பனை செய்யும் பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அக்ரஹாரங்களாக பல்வேறு சமுதாய  குடியிருப்புகளை (Community Homes) கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

***

த்துணவு சமையலர் பாப்பாள் அம்மாளின்  சமையலில் பல்லி இருந்ததாக சதி செய்த சாதி வெறியர்கள், தற்போது மாணவர்கள், ஆசிரியர்கள், சாதிவெறி பிடித்த மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக்திலேயே போராட்டம் செய்திருக்கின்றனர். எப்படியும் பாப்பாள் அம்மாளின் சமையைலை அவர்கள் ஏற்கப் போவதில்லை! அவரை எப்படி பணிநீக்கமோ இல்லை இடமாற்றமோ செய்யப் போகிறோம் என்பதே அவர்கள் முன் உள்ள கேள்வி! ஒரு அருந்ததியப் பெண் சமையலை எப்படி ஆதிக்கசாதி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாப்பிடலாம் என்பதிலிருந்து தெரிவது என்ன? என்ன உணவு என்பதை விட யார் சமையல் செய்கிறார்கள் என்பதே அவர்களது ஆதிக்க சாதிப் புனிதத்தின் தூய்மையாம்.

“கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் அத்தியாத்திலிருந்து சில வரிகள்:

குடியிருப்பு, தொழிலில் மட்டுமல்ல; உண்பது, உடுத்துவது, கேளிக்கை, சுடுகாடு என மொத்த வாழ்க்கையிலும் பார்ப்பனியத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகிறது. நீர் கலந்து தயாரிக்கப்படும் ‘கச்சா’ உணவு தீட்டு. நெய் அல்லது சுத்தமான எண்ணெயில் தயாரிக்கப்படும் ‘பக்கா’ உணவு சுத்தமானது. கச்சா உணவை தன் சாதியினரிடமும், பக்கா உணவை தனக்கு கீழ் உள்ள சாதியிலும் பெற்றுக் கொள்ளலாம். வட இந்திய ’உயர்’ சாதியினரிடம் இந்த ‘உணவுத் தீண்டாமை’ இன்றும் நிலவுகிறது.

பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது. சமீபகாலம் வரை உணவு விடுதிகளில் இருந்த ‘பிராமணாள் கபே, சைவாள் கபே’ போன்ற பெயர்கள் யாத்திரை வரும் பார்ப்பனர்களின் புனிதத்தைக் காப்பாற்றத்தான் ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பன இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அதிதி பூசை’ (விருந்தினர்களை உபசரித்தல்) பார்ப்பன ‘மேல்’சாதியினரை மட்டும் குறித்தது. சேவைச்சாதியினர் சமைத்து மிகுந்துபோன உணவை தானமாகப் பெறுவார்கள். பூசை – புனஸ்காரங்களுக்கு வரும் ஐயர் பச்சரிசியை மட்டும் தானமாகப் பெறுவார்.

வட இந்தியாவின் பார்ப்பன – ‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கமலபதி திரிபாதி என்ற உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அதற்கோர் உதாரணம். அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம், எம்.சி.ஏ. புத்திரனுக்கு இதே உட்பிரிவில் வெல்  – எஜுகேட்டட் பெண் தேவை’ என்றுதான் மணவிளம்பரம் கொடுப்பான். ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா வாடகைக்கு உள்ளது. பிராமின்ஸ் மற்றும் சைவாள் தொடர்பு கொள்க’ – இவ்விளம்பரம் சென்னையில் அடிக்கடி வெளிவரும்.

ஆகவே இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கூட “சாதிப்புனிதம் மற்றும் தூய்மை” எனும் இழிவான சாதிவெறியை  இங்கேயும்,கடல் கடந்தும் இவர்கள் எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்று! மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்கள்,தலித்துகள் கொல்லப்படுவதும், சுத்தமான பிராமண உணவு கிடைக்கும் என்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!

பிராமணர்களுக்கான வீடுகள்:
Brahmins Villas in Coimbatore | Satkrut Homes Ltd

Shankara Agraharam Retirement Homes

  • வினவு செய்திப் பிரிவு