நண்பர்களே….
புறநானூறு 166 ம் பாடல், வேள்வி செய்யக்கூடிய பார்ப்பனருக்குரிய தவிர்க்க முடியாத தகுதிகளில் ஒன்றாக பல மனைவிமார்களுடன் வாழ வேண்டும் என்று கூறுகிறது. இந்நூலின் பதிப்பாசிரியரான உ.வே.சாமிநாத அய்யர் எழுதியுள்ள ஆய்வுக்குறிப்பில் வேள்வியைச் செய்ய கூடிய பார்ப்பனர் குறைந்தபட்சம் மூன்று பெண்களையாவது திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். தமிழக வரலாற்றில் மிகப் பழங்காலத்திலிருந்து இன்றுவரை எல்லா வகையான சாதியினரும் இந்தக் கொள்கையை தவறாது பின்பற்றி வந்துள்ளனர். இக்கொள்கைக்கு மட்டும் எவரும் சாதிவேறுபாட்டைக் கணக்கில் கொள்வதில்லை. 18,19 ம் நூற்றாண்டுகளில் அரசர்கள் 200, 300 மனைவிகளை வைத்திருந்த அரிய பதிவுகளுடன் அரசர்களுக்கு கீழிருந்த அதிகாரிகள் தகுதிக்கேற்ற மனைவிகளை கொண்டிருந்த தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன. தமிழர்களின் நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றில் இந்த விசயத்தை மட்டும் என்றுமே இவர்கள் கைவிடவில்லை என்பதை தொல்காப்பியம் தொடங்கி இன்றைய அரசியல்வாதிகள் வரை இந்த தமிழ் மரபை நடைமுறைபடுத்தி வருவதை நாம் கண்குளிர காண்கிறோம்.
குறிப்பு:
1840 – 50 களில் ஆங்கிலேயர்கள் தஞ்சை மாவட்டத்தின் நிர்வாகத்தை நேரடியாக எடுத்துக் கொண்டனர். அதனால் அரசர்களின் நூற்றுக்கணக்கான மனைவிமார்களுக்கு உதவி பணம் வழங்குவதற்கு ஒரு தனி தாசில்தாரை நியமித்தனர். இந்தக் காலகட்டத்தில் பணியில் இருந்த தாசில்தாரின் பெயர் நடராஜபிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
- பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
- கோவில் நிலம் சாதி
- பொய்யும் வழுவும்