privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்வரலாறுஅல் - கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !

அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !

உலகின் பழமையான பல்கலைக் கழகத்தை உருவாக்கியது ஒரு முசுலீம் பெண்மணி என்பது சங்கிகளுக்கும், மண்ணடி மார்க்கபந்துகளுக்கு மட்டுமல்ல இந்திய பொதுப் புத்திக்கும் கூட அதிர்ச்சியளிக்கலாம்.

-

லகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் எதுவென்று கேள்விக்கு நமது பொதுபுத்தி உடனடியாக “நாலந்தா, தக்‌ஷசீலம்” என பதிலளிக்கும். ஆனால், கின்னஸ் உலக சாதனைப் பட்டியல் “அல்-கராவ்யின்” (Al-Quaraouiyine) என்கிறது.

சங்கி மூளைகளுக்கு இது கொஞ்சம் கசப்பான தகவல் தான் – ஏனெனில், கின்னஸ் உலக சாதனைப் பட்டியல் குறிப்பிடும் “அல்-கராவ்யின்” அமைந்திருப்பது மொராக்கோ எனும் இசுலாமிய தேசத்தில்.

”அல்-கராவ்யின்” (Al-Quaraouiyine) பல்கலைக் கழகம்.

இதில் சங்கிகளின் சங்கடத்திற்கு ஒப்பாக நமது ‘மண்ணடி’ மார்க்கபந்துக்களுக்கும் ஒரு சங்கடம் இருக்கிறது; அதாவது, இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் ஒரு இசுலாமிய பெண்மணி.

ஒரு செல்வந்த வணிகரின் மகளாக கி.பி 800-ம் ஆண்டு துனீசியாவில் ஃபாத்திமா அல் பிஹ்ரி பிறந்த போது வகாபி, சலாஃபி, தியோபந்தி போன்ற அடிப்படைவாத இசுலாமிய பிரிவுகள் தோன்றியிருக்கவில்லை. அன்றைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான், அல்குவைதா போன்ற இயக்கங்களும் இருக்கவில்லை. ஃபாத்திமாவையும் அவரது சகோதரி மரியத்தையும் நன்றாக படிக்க வைத்துள்ளார் அவர்களின் தந்தை.

ஒன்பதாம் நூற்றாண்டில் மொராக்கோ நாட்டின் ஃபெஸ் (FEZ) நகரம் ஒரு முக்கியமான வணிக மையமாக வளர்ந்து வந்த சமயம். ஃபாத்திமாவின் தந்தை தனது குடும்பத்தோடு ஃபெஸ் நகருக்கு குடிபெயர்ந்து செல்கிறார். அந்நகரில் தனது வியாபார திறமையின் மூலம் பெரும் செல்வம் ஈட்டுகிறார் ஃபாத்திமாவின் தந்தை.

அவரது இறப்பிற்குப் பின் வாரிசுதாரரான ஃபாத்திமாவுக்கும் அவரது சகோதரி மரியத்துக்கும் பெரும் சொத்துக்கள் வந்து சேர்கின்றன. தங்களுக்குக் கிடைத்த பெரும் செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் செலவழிக்க சகோதரிகள் முடிவு செய்கின்றனர்.

தனது 59 -வது வயதில், கி.பி 859 -வது ஆண்டு அல்-கராவ்யின் பல்கலைக்கழகத்தைத் துவங்குகிறார் ஃபாத்திமா. சுமார் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட கட்டிடம் ஒன்றில் துவங்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்தில் விவாத அரங்கு, வகுப்பறைகள் மற்றும் வழிபாட்டறைகளோடு அந்தக்காலத்திலேயே மிகப் பெரிய நூலகம் ஒன்றையும் அமைத்தார் ஃபாத்திமா. மதக் கல்வியோடு அரபு மொழி இலக்கணம், கணிதம், இசை, மருத்துவம் மற்றும் வானவியல் தொடர்பான கல்விப் பிரிவுகள் அந்தப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டன.

துவங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பெரும் புகழ்பெற்ற இப்பல்கலைக்கழகத்திற்கு அந்தக் காலத்தில் வாழ்ந்த முக்கியமான அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் வருகை புரிந்துள்ளனர். தனது எண்பதாவது வயதில் இறக்கும் வரை ஃபாத்திமாவும் வகுப்புகளிலும் விவாதங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அல்-கராவ்யின் பல்கலைக்கழகமே வரலாற்றில் முதன் முறையாக துவங்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். அதற்கும் முன் பண்டைய கிரேக்கம் மற்றும் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட நாலந்தா, தக்‌ஷசீலம் போன்றவற்றை விட இப்பல்கலையே ஒரு பல்கலை எனும் வடிவத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

அல்-கராவ்யின் துவங்கப்பட்ட பின்னரே ஐரோப்பாவுக்கு நவீன பல்கலைக்கழக வடிவம் அறிமுகமானது. அதைத் தொடர்ந்து அல்-கராவ்யினை முன்மாதிரியாக கொண்டு இத்தாலியின் பொலோக்னா (Bologna 1088) இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் (1096) உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

மத்தியகாலத்தில் புகழ்பெற்று விளங்கிய அல்-கராவ்யின், தற்போதும் சுமார் 2000 -க்கும் அதிகமான மாணவர்களோடு இயங்கி வருகின்றது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் 800 -க்கும் அதிகமான ஊழியர்கள் இன்றும் பணிபுரிந்து வருகின்றனர். வரலாற்றில் முதலில் துவங்கப்பட்டது மற்றும் நீண்ட காலமாக தொடர்ச்சியாக இயங்கி வருவது உள்ளிட்ட சாதனைகளுக்காக அல்-கராவ்யின் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

*****

சுலாமியர்கள் என்றாலே படிப்பறிவற்ற மூடர்கள் என்றும், இசுலாமியர்கள் என்றாலே பெண்களை தலைமுதல் கால் வரை முக்காடிட்டு வீட்டினுள் பூட்டி வைப்பவர்கள் என்றும் இந்து பொதுபுத்திக்கு அறிமுகமாகியிருக்கும் தகவல்களை அநாயசியமாக உடைக்கிறது இந்த செய்தி.

முன்னொரு காலத்தில் கணிதம், வானவியல், உலோகவியல், மருத்துவம் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளில் மத்திய கிழக்கைச் சேர்ந்த இசுலாமிய அறிஞர்கள் நிபுணத்துவம் பெற்று விளங்கியுள்ளனர். சொல்லப் போனால், இசுலாமிய உலகத்தில் இருந்தே மேற்குலகிற்கு நவீன அறிவியல் அறிமுகமாகியுள்ளது.

இசுலாமிய மதம் தோன்றிய காலத்தில் அது மக்களின் அறிவியல் கல்வி அறிவுக்கும் – குறிப்பாக பெண் கல்விக்கும் தடையாக நிற்கவில்லை என்பதற்கு அல்-கராவ்யின் பல்கலைக்கழகமே சாட்சி. எனினும், மத்திய காலத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய சமூகத்தில் நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் அதை சாத்தியப்படுத்திய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் வேகமெடுத்தன.

இதே சமயத்தில் இசுலாமிய மதம் மத்திய கிழக்கின் நிலபிரபுத்துவ எதேச்சாதிகாரத்தின் கைவாளாகச் சுருங்கி மக்களை ஒடுக்கும் கருவியாகி நின்றது. ஐரோப்பிய சமூகத்தில் கிறித்துவ திருச்சபைகள் வகித்த அதே பாத்திரத்தை மத்திய கிழக்கில் இசுலாம் மேற்கொண்டிருந்தது. எனினும், ஐரோப்பிய சமூகத்தில் திருச்சபைகளின் அதிகாரத்தை மாபெரும் முதலாளித்துவ புரட்சிகள் கேள்விக்கு உள்ளாக்கியதைப் போல் மத்திய கிழக்கில் நடக்கவில்லை.

இதன் விளைவாக ஏகாதிபத்திய நாடுகள் உருவாகி எழுந்த போது அவை எண்ணை வளம் மிக்க இசுலாமிய நாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைக்க ஏற்கனவே வெற்றிகரமாக பரிட்சித்துப் பார்க்கப்பட்ட மதம் என்கிற கருவியை பயன்படுத்திக் கொண்டன.

இந்த பின்னணியில் தான் 19-ம் நூற்றாண்டில் வகாபியம், சலாஃபி வகைப்பட்ட கடுங்கோட்பாட்டு வாதங்கள் உருவாகின. அவை தொடர்ந்து மக்கள் அறியாமையில் மூழ்கிக் கிடப்பதை உறுதி செய்து ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஈடுபட்டன. அந்த ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் தான் இன்று வரை தாலிபான், அல்குவைதா, ஐ.எஸ்.ஐ.எஸ், போகோ ஹராம் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அல்-கராவ்யின் பல்கலைக்கழகம் குறித்த செய்தி இரண்டு விசயங்களை உணர்த்துகின்றது:

ஒன்று, இசுலாமியர்களோ, கிறிஸ்தவர்களோ, இந்துக்களோ தம்மளவில் பிற்போக்காகவே இருக்க வேண்டும் என்பதற்காக நேர்ந்து விடப்பட்டவர்கள் அல்ல.

இரண்டு, நவீன சிந்தனைகள் வளர வேண்டுமாயின் யாராக இருந்தாலும் அறிவுச் செயல்பாடுகளுக்குக் குறுக்கே நிற்கும் மதத்தை எட்டி உதைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டியதைத் தவிற வேறு வழியில்லை.

கவனக் குறிப்பு: இன்றைய முதலாளித்துவ கால கட்டத்தில் உள்ள பல்கலை எனும் வடிவம் கல்வித்துறையில் முன்னேறிய நவீன நிறுவனமாகும். ஆகவே அல்-கராவ்யின் பல்கலையை இன்றைய நவீன பல்கலையோடு ஒப்பிட்டுப் பார்க்க கூடாது; முடியாது. அதே நேரம் பல்கலை எனும் பின்னாளில் நிறைவேறிய ஒரு முன்னேற்றத்தின் சுவடுகளை இப்பல்கலையில் நாம் காணலாம். கின்னஸ் நிறுவனம் போக நவீன கல்வித்துறை இப்பல்கலை குறித்து என்ன கருதுகிறது என்பதை நாங்கள் சோதிக்கவில்லை!

மேலும் :