சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகின் மிகப் பெரிய சிலையை அமைத்துள்ளது மோடி அரசு. பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள இந்த சிலை திறப்பு விவகாரத்தின் பின்னணியில் பட்டேல் சாதியினர் மற்றும் சூத்திரர்களின் நிலையை அலசுகிறார் அரசியல் கோட்பாட்டாளரும் எழுத்தாளருமான காஞ்சா அய்லய்யா. ‘தி வயரில்’ வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் இங்கே…
*****
பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்திருக்கும் அதே நேரத்தில் பட்டேல், ஜாட், குஜ்ஜார், மராத்தா போன்ற வட இந்திய மேல்தட்டு சூத்திரர்கள் அரசின் இடஒதுக்கீட்டைப் பெற தங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் தங்களைச் சேர்க்குமாறு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது நிகழ்ந்தால் இந்திய சூத்திரர்கள் ஒற்றை சமூக அரசியல் வட்டத்துக்குள் இணைவார்கள். இது நாட்டின் சமூக உறவை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் இந்து மதத்திலும் இந்திய சமூக அரசியல் அமைப்பிலும் பட்டேல் மற்றும் சூத்திரர்களின் நிலை என்னவாக இருக்கிறது என மதிப்பிடுவது அவசியமாகும்.
பட்டேல் குறித்த மதிப்பீட்டை, சுதந்திர போராட்ட காலத்தில் அவருடன் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பீடுவது சிறப்பாக இருக்கும். பட்டேல், காந்தி, நேரு ஆகியோரின் கதைகள் இந்தியாவில் சூத்திரர்கள், பனியாக்கள், பார்ப்பனர்களின் நிலைக்கு உதாரணமானவை.
பட்டேல், குஜராத்தைச் சேர்ந்த ஒரு சூத்திரர். காந்தி அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பனியா. நேரு, காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பார்ப்பனர், ஒருங்கிணைந்த காஷ்மீராக இருந்த அந்தப் பகுதி இப்போது உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. அதுபோல, இந்து மதத்தில் அவர்களுடைய நிலை குறிப்பிடத்தக்க வேறுபாடு கொண்டது.
படிக்க :
♦ படேல் சிலை – மோடியின் நார்சிசமும், பாசிசமும் !
♦ பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘ உலகின் மிகப் பெரிய சிலை
பட்டேலின் பூர்வீகம் வேத காலத்தில் அடிமை என அறியப்பட்டிருந்தது. காந்தியின் பூர்வீகம் வணிகம் தொடர்புடையது. நேரு, சமய போதகர் வழி வந்தவர். காந்திக்கும் நேருவுக்கும் புனித நூல் எனப்படும் பூணூல் அணியும் உரிமை இருந்தது. பட்டேலுக்கு அந்த உரிமை இல்லை. சூத்திரர்கள் இந்துக்கள் என அறியப்பட்டாலும் அவர்களுக்கு பூணூல் அணியும் உரிமை இந்த நாள் வரை இல்லை.
பட்டேலின் மூதாதையருக்கு கல்வி கற்க உரிமை இல்லை; வேத கடவுள்களை வணங்கவோ அல்லது இந்து மதத்தின் புனித நூல்களை வாசிக்கவோ அவர்களால் முடியாது. காந்தி மற்றும் நேருவின் மூதாதையர் வேத காலத்தின் தொடக்கத்திலிருந்தே இந்த உரிமைகளைப் பெற்றிருந்தார்கள். அவர்களால் சமஸ்கிருதத்தை கற்க முடிந்தது, காலத்துக்கேற்ப வேறு மொழிகளையும் அவர்கள் கற்றார்கள்.
பட்டேலின் மூதாதையர் நிலத்தை உழுபவர்களாகவும், கால்நடை மேய்ப்பவர்களாகவும் அறுவடை செய்கிறவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள், வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். மன்னராட்சி காலத்திலும் மொகலாய ஆட்சியிலும் காலனி ஆட்சி காலத்திலும் நாட்டையும் கிராமத்தையும் காப்பாற்றுவது சூத்திரர்களின் பணியாக இருந்துள்ளது. தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டபோதும் பாதுகாத்தல், உற்பத்தி போன்றவை தலித்துகளுக்கு பணியாக தரப்பட்டது.
காந்தி மற்றும் நேருவின் மூதாதையர் எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்யவில்லை. வேளாண்மையும் உடல் உழைப்பும் கேவலமாக கருதப்பட்டன, அவை சூத்திரர்களுக்கானவை என ஒதுக்கப்பட்டன. பனியாக்களும் பார்ப்பனர்களும் போர்வீரர்களாக இருந்தமைக்கு ஒரு சில உதாரணங்கள் உள்ளன. அவர்களுடைய சைவ உணவு பழக்கமும் வன்முறை கூடாது என்கிற கருதுகோளும் அவர்கள் ராணுவத்தில் சேர்வதை தடுத்தன. ஆனால், அவர்கள் சூத்திரர்களை சார்ந்து இருந்தார்கள், சூத்திரர்களும் அவர்களுக்கு எப்போதும் பணி செய்தார்கள்.
பட்டேலும் அதே மனநிலையில் இருந்தே காந்திக்கும் நேருவுக்கும் பணி செய்தார். இந்த பாரம்பரியத்தின் காரணமாகத்தான் சுதந்திர போராட்டத்தின் ‘இரும்பு மனிதர்’-ஆக பட்டேல் ஆனார். காந்தி ‘மகாத்மா’ ஆனார்; நேரு ‘பண்டிட்’ ஆனார். பட்டேலின் பட்டப் பெயர், இழிபடுத்தலை குறிக்கிறது. சூத்திரர்கள் அறிவிலும் ஆன்மிகத்திலும் தாழ்வானவர்கள் என்கிற பொருளில் இந்தப் பட்டப்பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் பிரிட்டீஷார் வரும்வரை பட்டேலின் மூதாதையருக்கு கல்வி கற்கும் உரிமை வழங்கப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் அவர்களைப் பற்றி எழுதியதில்லை; பிறரும் அவர்களைப் பற்றி எழுதியதில்லை. பட்டேலும் அவருடைய மூத்த சகோதரர் வித்தல்பாயும்தான் முதன்முதலில் பள்ளிக்குச் சென்றவர்கள். சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது என்கிற பாரம்பரியம் 18-ஆம் நூற்றாண்டில்தான் இங்கே உடைக்கப்பட்டது. அதனால்தான் பட்டேலின் பெற்றோரால் அவருடைய உண்மையான பிறந்த தேதியை எழுதி வைக்க முடியவில்லை. அவருடைய பிறந்த தேதியான அக்டோபர் 31-ம் தேதி பள்ளியில் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. பார்ப்பன அடக்குமுறைக்குள்ளான பட்டேலின் மூதாதையர்களின் காரணமாகத்தான் மோடி இந்த தேதியில் பட்டேலின் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.
பட்டேலின் பிறப்பு நேர்ந்த காலத்தில் பார்ப்பனர்களும் பனியாக்களும் ஆங்கிலத்தில் மேம்பட்ட கல்வியறிவை பெற்றிருந்தனர். காந்தி மற்றும் நேருவின் பிறந்த நாட்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன; அவர்களுடைய குடும்ப வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தானாக உயர்ந்த மனிதர்கள் அல்ல, அவர்கள் அந்தஸ்து மற்றும் சலுகையும் மூலம் அதைப் பெற்றார்கள்.
பட்டேல் தன்னை உருவாக்கிக்கொண்ட ‘கடினமான’ மனிதர். முரட்டுத்தனமான அரசியல் பலத்திலிருந்து அவர் உருவானார். அறிவிஜீவித்தனத்தின் மென்மையான ஆற்றலாக அவர் உருவாகும் ஆடம்பரத்தை அவர் ஒருபோதும் கைகொள்ளவில்லை. அவர், அவருடைய மூதாதையர் என்ன செய்தார்களோ அதையே அவரும் செய்தார். இந்துத்துவத்தின் பார்ப்பன அமைப்பு அவருடைய மூதாதையருக்கு என்ன இடம் கொடுத்திருந்ததோ அதை பட்டேல் உடைக்கவில்லை. எந்த அமைப்பு தன்னை ஒடுக்கியதோ அதை அவர் பாதுகாத்தார். சூத்திரர்களுக்கு பட்டேல் விட்டுச் சென்ற துரதிருஷ்டமான மரபு இது.
இன்று பார்ப்பனர்களும் பனியாக்களும் இந்திய அரசியல், அரசாங்கம், பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறவர்களாகவும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சூத்திரர்களின் மீது அடக்குமுறை செலுத்தும் இந்துத்துவ அமைப்பின் வழியாக அதிகார அமைப்புகளில் அவர்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய மதம்தான் என்றாலும் சூத்திரர்களுக்கு போதகருக்குள்ள உரிமையோ மந்திரங்கள் ஓதவோ உரிமை இல்லை.
மூடப்பட்ட அதிகார அமைப்புகளிலில் தங்களுக்கு குறைந்தபட்ச இடம் வேண்டும் என கேட்டு பட்டேல்கள், ஜாட்கள், குஜ்ஜார்கள், மராத்தாக்கள் மற்றுமுள்ளோர் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவைக் கோரி அவர்கள் நிற்கிறார்கள், அந்தக் கட்சியும் பட்டேலுக்கு போலியான ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்புக்கு முன் ரத யாத்திரை சென்ற அத்வானி, பட்டேலை ‘அபினவா-புதுமையானவர்’ என வர்ணித்தார். ஆனால், பாஜக ஆட்சியின்போது சூத்திரர்கள் மேலும் ஒடுக்குதலுக்கு உள்ளானார்கள். பனியா மற்றும் பார்ப்பன சக்திகளின் மேலாதிக்கம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் வெளிப்படையாகவே இன்றும் உள்ளது.
பார்ப்பனர்களின் தலைமையின் கீழ் இயங்கும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம், பட்டேலை போற்றுகிறது. காரணம், வர்ண அடிப்படையை அவர் ஒருபோதும் கேள்வி கேட்காதவராக இருந்தார் என்பதே. அவர் சூத்திரர்களுக்கு மதகுருக்களான உரிமையை கோரவில்லை. அவர் தானும் பூணுல் அணிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்கவில்லை. அனைத்து மட்டங்களிலும் பனியாக்களும் பார்ப்பனர்களும் பெற்றிருக்கும் உரிமைகள் சூத்திரர்களுக்கும் வேண்டும் என அவர் கேட்கவில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் பார்ப்பனரா(நேரு)கத்தான் இருக்க வேண்டும் என காந்தி முடிவு செய்தபோது, பட்டேல் அதை கீழ்பணிந்து ஏற்றுக்கொண்டு தான் வகித்த காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, நேருவிடம் பதவியை ஒப்படைத்தார்.
காந்தியும் நேருவும் தங்களுடை வரலாற்றை எழுதினார்கள், கவனத்துடன் கூடிய சூயசரிதையை விட்டுச் சென்றார்கள். ஆனால், பட்டேல் அதை செய்யவில்லை. அவருடைய வரலாறும் அவருடைய குடும்பத்தின் வரலாறும் எழுதத் தகுதியானவை அல்ல என அவர் நினைத்திருக்கக்கூடும். பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களின் குறிப்பின்படி, பட்டேல் கடிதங்களை தானே கைப்பட எழுதினார், கடிதங்களை ஒருபோதும் அவர் சேமித்து வைக்கவில்லை. அதுபோல அவருக்கு வந்த கடிதங்களையும் சேமித்து வைக்கவில்லை.
இன்று, காந்தியும் நேருவும் நன்கு அறியப்பட்ட சிந்தனையாளர்களாக அறியப்படுகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன. பட்டேல், ‘இரும்பு மனிதர்’ என அழைக்கப்படுகிறார், அவர் தன்னுடைய வாழ்க்கை, தனக்குள்ள கருத்துக்கள், தன் குடும்பம், தன் சாதி குறித்து எந்த நூலையும் எழுதவில்லை. அவரைப் பற்றி பிறர் எழுதிய நூல்களின் வாயிலாகத்தான் அவரை அறிகிறோம். அவர்களும்கூட சூத்திரர்களாகவே இருக்கிறார்கள். இப்போது பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் பட்டேலை எத்தகைய வரலாற்றில் எழுதி அடைக்கலாம் என்பது எளிதாகிவிட்டது.
பட்டேலின் சுயத்தை அழித்துக்கொள்ளும் தன்மை சூத்திரர்களின் வழமையான குணாம்சம். அவர்களுக்கு வளமையான வாழ்மொழி வரலாறு – கதை கூறும் பாரம்பரியம் இருந்தாலும், பார்ப்பனியம் ஒடுக்குமுறையின் காரணமாக அவர்கள் எழுதும் கலாச்சாரத்தை மேம்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில், சுதந்திர போராட்டக்காலத்தைச் சேர்ந்த எந்தவொரு சூத்திர தலைவரும் சுயசரிதையை எழுதவில்லை.
படிக்க :
♦ பட்டேல்கள் போராட்டம் – இட ஒதுக்கீட்டின் பெயரில் பார்ப்பனியம் !
♦ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்
இந்து மதம், வரலாற்று ரீதியாக சூத்திரர்களை செயல்படுகிறவர்களாக பார்த்தார்களே தவிர, சிந்தனையாளர்களாக பார்க்கவில்லை. பட்டேலின் வாழ்க்கை பார்ப்பனர்களின் அதிகார வரம்புக்குள் செயல்பட்டது. காந்தி, நேருவின் வழித்தோன்றல்களைப் போல பட்டேலின் வாரிசுகள் எழுத்தாளர்களாகவோ அரசியல்வாதிகளாகவோ வரவில்லை. அவருடை இரும்பு மனிதத் தன்மை அவருடனே முடிந்துவிட்டது. அது அப்படி இருக்கத்தான் விரும்பப்பட்டது.
பட்டேல் ஹிந்து மகாசபையுடன் நெருக்கமாக இருந்தவர் என பட்டேல் குறித்து ஆர்.எஸ்.எஸ். பேசியது. சமூக, ஆன்மீக சீர்திருத்தம் கட்டாயமாக வேண்டும் என ஒரு சூத்திரராக அவர் கருதவில்லை. எனவே, அவர் அவர்களுடைய ஆளாக மாறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ். இவரை சூவீகரித்துக்கொள்ள பார்த்தாலும் ஒருபோதும் அந்த அமைப்பின் தலைவராக ஒரு சூத்திரரை வரவிட்டதில்லை என்பதே இதில் உள்ள முரண்பாடு. ஒரே ஒரு சத்திரியர், ராஜேந்திர சிங்- என்பவரைத் தவிர அத்தனை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பார்ப்பனர்கள்தாம்.
தன்னுடைய தத்துவத்தை, தன் குடும்பம் மற்றும் தன் சமூகத்தின் மீதான கருத்தை, தங்களுடைய இனத்தின் பணி மற்றும் ஆன்மீக கலாச்சாரம் பற்றிய தகவலை பட்டேல் எழுதியிருப்பாரேயானால், அது ஒட்டுமொத்த சூத்திர சாதியினரையும் தேசிய தத்துவார்த்த மற்றும் அரசியல் வகைமைக்குள் சேர்த்திருக்கும். காந்தியும் நேருவும் பனியாக்களுக்காகவும் பார்ப்பனர்களுக்காகவும் பணியாற்றினார்கள், தங்களுடைய சமூகங்களுக்கு ஏற்கனவே உள்ள பாரம்பரியத்தைத்தான் கொண்டுசேர்த்தார்கள். முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்கவில்லை.
பட்டேல், சூத்திரர்களுக்கு செய்யத் தவறியதை, வேறொரு மனிதர் தலித்துகளுக்காக செய்தார். அரசியல் சிந்தனை, தத்துவம், எழுத்து மற்றும் சொல்லாட்சி குறித்து தனக்குத்தானே கற்பித்துக்கொண்ட பி.ஆர். அம்பேத்கர், சமூக ஆன்மீக சீர்திருத்தத்தை இயக்கமாக முன்னெடுத்தார். பட்டேலைப் போல் அல்லாமல், இந்துத்துவம் தன் சாதியினருக்குக் கொடுத்த சமத்துவமற்ற படிநிலையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதோடு, இந்துத்துவத்தின் ஆன்மீக மற்றும் சமூக அடக்குமுறையின் அடித்தளம் குறித்து கேள்வி எழுப்பினார்.

பட்டேல், சட்டம் படித்தவர். ஆனால், அவர் தத்துவார்த்த கேள்வி குறித்து ஆர்வம் காட்டவில்லை. அதுஇல்லாமல், சமூகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இடம் குறித்து புரிந்துகொள்ள அவர் முயலவில்லை. பிரிட்டனில் மாணவராக இருந்த பட்டேல், இன மற்றும் சாதிய அடக்குமுறைகள் ஒத்த தன்மையுடையவை என அறியவில்லை. ஒப்பிடும்போது அமெரிக்காவில் படித்த அம்பேத்கர், கருப்பின மக்களின் போராட்டங்களின் வாயிலாக முக்கியமான பாடத்தைப் படித்தார். அம்பேத்கர் சாதியத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொண்டார்; ஆனால், பட்டேல் பிரிட்டீஷாருக்கு எதிரான மனநிலையிலிருந்து மேற்கொண்டு நகரவில்லை.
பிரிட்டீஷாரிடமிருந்து பனியாக்களிடமும் பார்ப்பனர்களிடமும் கைமாற்றப்படுவதல்ல சுதந்திரம்; சாதியத்தை ஒழித்த சுதந்திரம் என்கிற அம்பேத்கரின் பார்வையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பட்டேல் தன்னுடைய குருவாக காந்தியை ஏற்றுக்கொண்டார்; ஒருபோதும் தன்னைப் பற்றி அவர் சிந்தித்ததில்லை. காந்தியம் சொன்ன நிலப்பிரபுத்துவ ஜனநாயமான கிராம ராஜ்ஜியம் மற்றும் ராம ராஜ்ஜியம் – என்பதைக் கடந்து அவர் சிந்திக்கவில்லை. ஒருவேளை கிராம ராஜ்ஜியத்தில் சூத்திரர்கள் ஆட்சியாளர்களாக வரக்கூடும் என நினைத்திருக்கலாம். ஆனால், அவர் ஏமாற்றப்பட்டார். அவர் காந்தியின் மறுபக்கத்தை பார்க்கவில்லை. கிராம பொருளாதாரத்துக்கு திரும்ப வேண்டும் என சொல்லிக்கொண்டே பனியா தொழிலதிபர்களான பிர்லாக்கள், கோயங்காக்களிடம் அவர் நெருக்கமாக இருந்தார். பனியா தொழிலதிபர்களுக்காகத்தான் காந்தியின் உண்மையான ஆற்றல் வேலை செய்தது. இன்று நாட்டில் அவர்கள் பெற்றிருக்கும் அதிகாரம், காந்தி விட்டுச்சென்ற மரபின் ஒரு பகுதி.
பட்டேலின் அக்கறையின்மை சூத்திரர்களின் இக்கட்டான நிலைமை பிரதிபலிக்கிறது. இப்போதும் சம உரிமை மறுக்கப்பட்டு சாதிய படிநிலையில் நடுவில் எங்கோ ஒரு இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். கீழே இருந்த தலித்துகள், தங்களை ஒடுக்கும் ஆதிக்க சாதிகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். குறைந்த காலமே நீடிக்கும், குறைந்தபட்ச சலுகைகளை சூத்திரர்கள் விட்டுத்தர தயாராக இல்லை. பார்ப்பனர்களும் பனியாக்களும் தங்களுக்கு மேல் இருக்கிறார்களே என்கிற கோபம் அவர்களிடம் இல்லை. பதிலாக, தலித்துகள்தான் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள் என பனியாக்களும் பார்ப்பனர்களும் தங்களுக்கு வலியுறுத்தி வருவதை அவர்கள் ஏற்கிறார்கள்; தலித்துகளை எதிரிகளாக பார்க்கிறார்கள். இந்து மதத்தில் தங்களுக்குள்ள சமநிலையற்ற தன்மை குறித்தும் அதன் சமூக அரசியல் விளைவுகள் குறித்தும் அவர்கள் உணரவே இல்லை.
பட்டேலிடம் அறிவுசார் உற்பத்தி இல்லாத காரணத்தால் அவருடைய வரலாற்றுக்கும் அதிகாரத்துக்கும் குறுகிய வழியை ஏற்பட்டுவிட்டது. சூத்திரர்களின் வரலாறு மற்றும் அதிகாரம் குறுகிய நிலையில் உள்ளதைப் போன்றே இதுவும் அமைந்துவிட்டது. அவருக்கென்று சமூக பொருளாதார கோட்பாடு இல்லை. பிரதிநிதித்துவ கோட்பாடு எதுவும் இல்லாமல் அவர் சூத்திரர்களின் பிரநிதியாக இருந்தார். இப்போதும் கூட சூத்திரர்கள், கருத்தியல் வெற்றிடத்துடனே இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய சிலை பட்டேலுக்கு அமைத்தபோதும் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட முடியாது.
ஒரு பனியாவான மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவரான தன்னுடைய குரு பார்ப்பனர் மோகன் பகவத்திடமிருந்து கட்டளைகளைப் பெற்று, சூத்திரர் பட்டேலின் சிலையை திறக்கிறார். இப்போதுகூட பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-சும் சூத்திரர்களின் முக்கியமான பங்களிப்பை ஒதுக்கிவிட்டார்கள். பிரம்மாண்டமான சிலையை அளித்ததைக் கடந்து பார்ப்பன – பனியாக்களின் ஆட்சி இந்த நாட்டுக்கும் சூத்திரர்களுக்கும் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழாக்கம்:

நன்றி : தி வயர்