திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் கிராமம் மகாதேவ பட்டினம். அந்த காலத்திலேயே மன்னர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக சிதிலமடைந்த மிகப்பெரிய கோட்டை ஒன்றும் உள்ளது. இதனை குக்கிராமம் என்றோ, நகரம் என்றோ சொல்ல முடியாது. ஆனால் கஜா புயலால் மொத்த ஊரும் அலங்கோலமாகி இருக்கிறது. ஊரில் உள்ள மொத்த மரங்களும் நாசம். அவரவர்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த மரங்களை சீர்படுத்திக் கொண்டிருந்தனர். சில இடங்களில் ஜெனரேட்டர் வைத்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவற்றை எல்லாம் கடந்து செல்கையில் தோப்பில் இளம் தென்னை மரங்கள் சாய்ந்திருந்ததை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தார்கள் தொழிலாளர்கள். அவர்களுக்கு உதவியாக நில உரிமையாளரான விவசாயி புருஷோத்தமன் கூடமாட ஒத்தாசை செய்து கொண்டிருந்தார்.  கூட்டத்தில் இருந்து விலகி வந்த புருஷோத்தமன் விரக்தியாக பேசினார்.

“ஒரு ஏக்கர் 33 குழியில தென்னை போட்டிருக்கேன்.  20×20 இடைவெளி விட்டு 130 கண்ணு நட்டிருக்கேன்.  இப்பதான் முதல் முறையா தென்னை போட்டேன்.  ஒரு கண்ணோட விலை 120 ரூபாய். தனியார் பண்ணையில இருந்து வாங்கிட்டு வந்தேன். குறைந்த நாள்ல அதிக வருமானம் தரக்கூடியதுன்னு சொன்னாங்க. அதனால வாங்கிட்டு வந்தேன். மொத்தம் 15,600 ரூபா. கண்ணு வச்சி இரண்டரை வருஷம் ஆகுது.

நட்டதில இருந்து இதுவரைக்கும் 4 தடவை உரம் போட்டிருக்கேன். ஒவ்வொரு முறையும் உரத்துக்கு மட்டும் ரூ.5000 செலவாச்சி. டி.ஏ.பி இரண்டு மூட்டை. பொட்டாஷ் 2 மூட்டை, யூரியா 1 மூட்டை, குருணை மருந்து 500 ரூபாய். ஆக மொத்தம் ஐந்தாயிரம். அதே மாதிரி மருந்து போடும் ஆட்கள் கூலி மூனு பேருக்கு 1,500 ரூபாய். இதுபோக மாசம் மூனுதடவை தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதுக்கான கூலி கணக்கில் இல்லை. நானே பாய்ச்சிக்கிறேன்.  மழை சமயத்துல தண்ணி வக்க வேண்டியதில்ல.

அதே மாதிரி இரண்டு தடவ குருத்துப் பூச்சி தாக்குனதால அதுக்கு ஒவ்வொரு முறையும் இரண்டாயிரம் செலவாகி இருக்கு. இது வரைக்கும் இதுக்காக நான் பண்ண செலவு இதுதான். இப்பதான் முதல் குருத்து வருது. காய் காய்க்கிற நேரம். இன்னும் ஒரு வருமானமும் பாக்கல. அதுக்குள்ளே எதிர்பாராத செலவு வந்துடுச்சி.  எல்லா கண்ணுக்கும் வேர் அறுந்துடுச்சி. திரும்ப முளைக்குமான்னு தெரியல. இருந்தாலும் முயற்சி பண்ணி பாக்குறேன்” என்கிறார் சோகமாக.

இப்ப பத்து ஆள் வேலை செய்யிறாங்க. இதை சரி செய்ய இரண்டு நாட்கள் ஆகும். இவங்களோட கூலி மட்டும் 10,000. ஆளுக்கு ஐநூறு. இன்னும் எவ்ளோ செலவு பன்னுறதுன்னுதான் தெரியல. உயிரைத்தவிர மத்த உடமை, வீடு எல்லாம் நாசமாயிடுச்சி.

படிக்க:
சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

சிங்கப்பூர் போயிட்டு வேலை பார்த்து சம்பாதிச்ச பணம் எல்லாம் இங்க வந்து அழிக்க வேண்டியதா இருக்கு. 2008-ல சிங்கப்பூர் போனேன். காலையில 8 மணியில இருந்து சாயந்திரம் 5 வரைக்கும் வேலை. ஒரு நாளைக்கு 30 வெள்ளி சம்பளம். ஓ.டி. பார்த்தா ஐம்பது வெள்ளி கிடைக்கும்னு பார்த்து சம்பாதிச்சேன்.

கொஞ்சநஞ்ச கஷ்டமில்ல. மார்பிள்ஸ் கம்பனி. அங்கயும், இங்கயும் சுமைய தூக்கிட்டு அலஞ்சி திரிஞ்சி சம்பாதிச்ச பணம். இங்க தெண்டமா போவுது! அரசாங்கம் இது வரைக்கும் எந்த நிவாரணமும் அறிவிக்கல. அப்படியே அறிவிச்சாலும் இதை எல்லாம் கணக்குல எடுத்துக்குவாங்களான்னும் தெரியல!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க