ஏன்ணே! குரங்கு என்ன சாதி?

அடச்சேய்! வாயில வச்ச டீ வயித்துக்கு போறதுக்கு முன்னாடி குமட்டிகிட்டு வர்ற மாதிரி கேக்குற பாரு கேள்வி!  கொரங்கு என்ன சாதி? செரங்கு என்ன சாதின்னு…

ஏன்ணே.. நான் கேட்டதுக்கே உனக்கு கொமட்டுதே, தெனம் இதையே அரசியலா கெளப்பிகிட்டு கெடக்கானுவ வடக்க! 

எந்த ஊரு? யாரு பண்ரானுவ?

அதான்ணே! அந்த மொட்ட போட்ட சாமியாரு.. 

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

டேய்… யாருக்கு மொட்ட போட்ட சாமியாரு?

அட என்னாண்ணே! அவுருக்கு மொட்ட போட்டவருதான், அதான்ணே அந்த உ.பி. யோகி.. 


என்னமோ காபி டீ, ங்குற மாதிரி சொல்ற! அப்புடி வெளக்கமா சொல்லு, மொட்டையா சொன்னா யாருக்கு புரியும்.

பேப்பர ஒரு எழுத்து வுடாம படிக்குற ஒங்களுக்கே இவ்வளவு தடுமாறுதுன்னா, எட்டிப் பாக்குற எங்களுக்கு எப்புடி இருக்கும்?

அது ஒரு ஊராடா, மாட்டு மூத்திரம் மருந்துங்குறான், மாட்டுக்கறி தின்னா கொல்லுங்குறான்.. கொரங்குப் பசங்க, கொழந்தைங்களுக்கு ஆசுபத்திரில காத்து சிலிண்டர் இல்லாம பல புள்ளைங்க கொல கொலயா செத்துச்சு, அதுக்கு ஒரு நாதி இல்ல! கொரங்கு என்ன சாதின்னு ஆராய்ச்சி பண்ணுரானுவ..
ச்சேய் நாடா இது!

இவ்ளோ லேசா சொல்லிட்டிங்க… அது வெறும் கொரங்கு இல்லண்ணே!

வேற என்ன? இன்சியல் போட்ட கொரங்கா?

அட! அனுமாருண்ணே, ராமாயணத்துல சீதைக்கிட்ட போயி கணயாழி வாங்கிட்டு வந்துச்சில்ல.. அது!

என்னடா… ராமாயணம்…  சீதை… நம்ப ராம நாராயணன் படத்துல சிறிபிரியாகிட்ட போயி லெட்டரே வாங்கிட்டு வந்துச்சு.. அதுக்கு இப்ப என்னாங்குற?

என்னமோ வெத்தலைல சுண்ணாம்பு மாதிரி நீங்க பாட்டும் லேசா மென்னுட்டீங்க.. அது சாமி கொரங்குன்ணே, அனுமாரு இந்த சாதி, அந்த சாதின்னு விடிஞ்சா..  அங்க ராமாயணமா இருக்கு!

ஏன்டா, மொதல்ல கொரங்க சாமின்னாய்ங்க.. இப்ப சாதிங்குறாய்ங்களா?

தெரிஞ்சுகிட்டே கேக்குறிங்க பாருங்க… அதான்ணே மொதோ கொரங்கு, ச்சீ..  வாய் கொழறுது பாருங்க,  மொதல்ல யோகி அனுமாரு வனவாசி பழங்குடி, தலித்துன்னு பத்த வைக்க, இன்னோரு எம்.பி. ராமனக்கு சேவை செஞ்ச தலித்து, மனுவாடி மக்களுக்கு அடிமைன்னு மேக்கொண்டு கொளுத்திவிட,  ஒரு ஜெயின் சாமியாரு அனுமாரு எங்க சாதின்னாரு,  அப்பொறம் பா.ஜ.க.  உ.பி. ஆளு நவாப்பு அனுமார சாதியவுட்டே நெம்பி, பேர பாத்தா ரகுமான், சுலைமான் மாதிரி  அனுமான் இருக்கறதால முசுலீம்னு மதத்தையே மாத்திட்டாரு,  இந்து ஆளுங்க விடுவாய்ங்களா?  இப்ப ஒருத்தரு இல்ல இல்ல,  அனுமாரு கொணத்தப் பாத்தா ‘ஜாட்’  சாதிய சேர்ந்தவரு மாதிரி இருக்கறதால..  அவுரு ‘ஜாட்’ன்னு வால நீட்டி வுட்டுருக்காரு…

படிக்க:
♦ காவி குரங்குகளுக்கு தெரியுமா டார்வினின் அருமை ?
♦ அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்

நரி செத்தாலும் கண்ணு கோழி மேலேங்குற கதையா.. அவைங்க பேச்ச பத்தியா… ராமன் மேல் சாதி, அனுமாரு கீழ் சாதி, மேல் சாதிக்கு பய பத்தியா வேல செய்யறதுதான் அனுமாரு வேல, அது வனவாசி, தலித்துன்னு ராம ராஜியத்த ஜாடையா காட்டுரான் பாரு.  ஒரு வேள வெவரம் புரிஞ்சிதான், அனுமாரு, ஜெயினு, ஜாட்டுன்னு உள் குத்தான்னு புரியல! எப்புடி இருந்தாலும் கொரங்கோட குரூப் போட்டா எடுக்க அலையுறாய்ங்க பாரு, தமிழ்நாட்டுக்குள் உ.பி. க்கும் கொரங்கு வித்தியாசன்டா சாமி!

ஏன்ணே! காரணத்தோடதான் சொல்றாய்ங்களோ? மூஞ்ச வச்சி, நெறத்த வச்சி, வால வச்சி, கொணத்த வச்சி சொல்றத பாத்தா..  எங்க தெருவுல ஒரு வெறி நாய்க்கு ராஜான்னு பேரு வச்சிருக்கானுவ! ஒரு வேல குலம், கோத்திரம் தெரிஞ்சுதான் வச்சிருப்பானுவளோ!

ஏன்டா! விக்கிற வெல வாசில்ல.. நான் எண்ணெ தேச்சி குளிச்சி ஒரு மாசமாவுது, லைப்பாயி சோப்ப நாலா ஒடச்சி சோப்புக்கு உடம்ப தேச்சிக்கிறேன் இதுக்கு ஒரு வழிய காணோம்,  நம்பள கொரங்கு என்ன சாதி, கொசு என்ன சாதின்னு திருப்பி வுடுறான் பத்தியா?

மூஞ்சிரு, மாடு, கொரங்குன்னு இவுனுக எப்பதான்ணே மனுசன் பக்கம் வருவானுக! கொசுவுன்னு சொன்னோனதான் ஞாபகம் வருது. சத்தம் போடாம வேலய பாத்து, ஆள சாய்க்கிறதா  பத்தா கொசு ‘அவா’ சாதியா இருக்குமோ!  எப்ப பாத்தாலும் மந்திரம் சொல்ற மாதிரி காதுகிட்ட ங்கொய்ன்னு கத்தறத பாத்தா சந்தேகமே இல்லன்ணே!

ஏன்டா, ஆது ஒரு வேலயாடா? மனுசனா மாறுனாதான் சாதியில கோத்துவுட்டு தொங்க வுடுவாய்ங்கண்னு… அது மாறாம மரத்துல கொரங்காவே தொங்குது, அதையும் கொண்டாந்து சந்தியில் இழுத்து வுடுறானுவ பாரு!

ஏன்ணே, இந்த எலி, பூனை கூட வெறப்பா மீச வச்சிருக்கு, ஒருவேள அது அந்த வீரமான சாதியா இருக்குமோ கந்துவட்டி, மீட்டர் வட்டடின்னு விட்டு வட்டி வரலன்ணா கொரங்கு மாதிரி குடும்பத்தையே பிரிச்சி மேய்றாய்களே,  அவுனுக கொரங்கு சாதியா இருப்பானுங்களோ…  ஏன்ணே, இப்ப எனக்கு ஒரே கொழப்பம்…  குரங்குலேந்து மனுசன் வந்தான்னுதான் கேள்வி பட்டுருக்கேன்,…  இப்ப கத வேற மாதிரி போவுதே.. இப்ப சந்தேகமே சாதிலேந்து குரங்கு வந்துச்சா…   இல்ல குரங்குலேந்து சாதி வந்துச்சா… கொரங்க பாத்தா அவ்வளவு கேவலமா தெரியலயண்ணே…  ஏன்ணே… உட்டா உ.பி. க்கோ ஒடிருவிங்க போல… அண்ணே… சொல்லிட்டு  போங்கன்ணே…  இவுனுக என்ன கொரங்குண்ணே…!