உ.பி: காவி கும்பலின் முஸ்லீம் வெறுப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

“பிருந்தாவனத்தில், கடவுளுக்கான சில நுணுக்கமான கிரீடங்கள் மற்றும் வளையல்கள் முஸ்லிம்களால் செய்யப்படுகின்றன. பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பிருந்தாவனத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்”

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் கோவில் பணிகளில் ஈடுபடும் முஸ்லீம் மக்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற காவி கும்பலின் மதவெறுப்பு கோரிக்கையை உத்தரப்பிரதேசத்தின் பாங்கே பிஹாரி (Banke Bihari) கோவில் பூசாரி நிராகரித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். புதிதாக திருமணமாகி கணவனை இழந்த மனைவி, அப்பாவை இழந்த மகள் என்று அவர்களுடைய துயரங்கள் வரிகளாலும், வார்த்தைகளாலும் விவரிக்க முடியாதவை. இத்தாக்குதலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாசிச கும்பல் முஸ்லீம் மக்கள்தான் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணம் என்று முஸ்லீம் மக்களுக்கு எதிரான மதவெறி பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியது.

குறிப்பாக, காஷ்மீர் மக்களின் வீடுகளை முன்னறிவிப்பின்றி குண்டுகள் மூலம் இடித்தது; ஊடகங்கள் மூலம் முஸ்லீம் மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களில் பாசிச கும்பல் தீவிரமாக ஈடுபட்டது. ஆனால் பயங்கரவாத தாக்குதலிலிருந்து முஸ்லீம் மக்கள்தான் தங்களைக் காப்பாற்றினார்கள் என்கிற சுற்றுலா வந்த மக்களின் காணொளிகள் வெளியாகி காவி கும்பலின் மதவெறிக்குச் சம்மட்டி அடி கொடுத்தது.

உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி என்கிற இந்து கோவில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணருக்கு அணிவிக்​கும் உடைகள் மற்றும் ஆபரணங்களைப் பல ஆண்​டு​களாக முஸ்​லிம்​கள் தயாரித்து வருகின்றனர்.

அக்கோவில் நிர்வாகத்திடம் ”இந்து கடைக்காரர்கள் மற்றும் பக்தர்கள் சிறுபான்மை சமூகத்தினரிடம் வர்த்தகம் செய்யக் கூடாது. முஸ்லீம் கடை உரிமையாளர்கள் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயர்களை வெளியே எழுத வேண்டும். கோவிலுக்குச் சேவை செய்யும் முஸ்லீம்களைப் புறக்கணிக்க வேண்டும்” என்கிற காவி கும்பலின் மதவெறுப்பு கோரிக்கையைக் கோவில் தலைமை பூசாரி மறுத்துள்ளார்.


படிக்க: பஹல்காம் தாக்குதல்: தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்


இதுகுறித்து கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று பாங்கே பிஹாரி கோவில் தலைமை பூசாரியும் கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஞானேந்​திர கிஷோர் கோஸ்​வாமி (Gyanendra Kishore Goswami) கூறுகையில் “இது நடைமுறைக்குச் சாத்தியமில்லை. முஸ்லிம்கள், குறிப்பாக கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் இங்கு ஆழமான பங்களிப்புகளைச் செலுத்தி வருகின்றனர். அவர்கள் பல தசாப்தங்களாக பாங்கே பிஹாரியின் (கிருஷ்ணனின்) ஆடைகளை நெசவு செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களில் பலர் பாங்கே பிஹாரி மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர். கோவிலுக்கும் வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “பிருந்தாவனத்தில், கடவுளுக்கான சில நுணுக்கமான கிரீடங்கள் மற்றும் வளையல்கள் அவர்களால் (முஸ்லிம்களால்) செய்யப்படுகின்றன. பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் அரசாங்கத்துடன் முழுமையாகத் துணை நிற்கிறோம். ஆனால் பிருந்தாவனத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று இந்து முஸ்லீம் மக்களின் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவிலுக்கு வெகு தொலைவில், ‘ஸ்டார் முகுத்’ என்ற பெயரில் கடை நடத்தி வரும் ஜாவேத் அலி, கூறுகையில் “அவர்கள் (காவி குண்டர்கள்) என் கடைக்கு வந்து, உரிமையாளரின் பெயரை அடையாளப் பலகையில் வைக்கச் சொன்னார்கள். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கடையை நடத்தி வருகிறேன். என் தந்தை இங்கு தையல்காரராகப் பணியாற்றுகிறார். ஒரு வாடிக்கையாளர் பொருட்களை வாங்கும் போதெல்லாம், நான் வழக்கமாக எனது பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் கொண்ட ரசீதை அவர்களுக்குக் கொடுப்பேன்.”

“நாங்கள் மறைக்க எதுவும் இல்லை. பாங்கே பிஹாரியின் ஆசீர்வாதத்துடன், இந்த இடம் எப்போதும் அமைதியாக இருந்து வந்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

அலியின் கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் நிகில் அகர்வால், தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை என்றும், பெரும்பாலும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கின்றனர் என்றும் காவி கும்பலின் மதவெறி பிரச்சாரத்திற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் யோகி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் மசூதிகள் மீதும், முஸ்லீம் மக்கள் மீதும் காவி கும்பலின் தாக்குதல்கள் அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், காவி கும்பல்களின் மதவெறுப்பு பிரச்சாரங்களுக்கு உழைக்கும் மக்களின் பெரும் பிரிவினர் பலியாகாமல் மத நல்லிணக்கத்துடன் இருக்கின்றனர். காவி கும்பலின் முஸ்லீம் வெறுப்பு கோரிக்கையை பாங்கே பிஹாரி கோவில் தலைமை பூசாரி நிராகரித்திருப்பது இந்து முஸ்லீம் மக்களுக்கு இடையே உள்ள மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க