நினைத்தாலே
இயக்கும்!
பெரியார் சிந்தனை.
நினைத்தாலே
முடிக்கும்
பெரியார் செயல்.
நினைத்தாலே
பூக்கும்
பெரியார் கேள்விகள்.
நினைத்தாலே
இணைக்கும்
பெரியார் பதில்கள்.
நினைத்தாலே
வலிக்கும்
பெரியார் பாடுகள்.
நினைத்தாலே
சிலிர்க்கும்
பெரியார் தேடல்கள்.
நினைத்தாலே
அணைக்கும்
பெரியார் வார்த்தைகள்.
நினைத்தாலே
கட்டுடைக்கும்
பெரியார் கருத்துகள்.
நினைத்தாலே
அச்சம் அறும்
பெரியார் பேச்சு.
நினைத்தாலே
நமதாகும்
பெரியார் மூச்சு.
நினைத்தாலே
மதம் உடையும்
பெரியார் பாதை.
நினைத்தாலே
சாதி கூசும்
பெரியார் பார்வை.
நினைத்தாலே
காதல் வரும்
பெரியார் அறிவு.
நினைத்தாலே
உறவாகும்
பெரியார் தெளிவு.
நினைத்தாலே
பனிக்கும்
பெரியார் அன்பு.
நினைத்தாலே
பிறக்கும்
பெரியார் தெம்பு.
நினைத்தாலே
பலர்க்கும்
பெரியார் சுயமரியாதை.
நினைத்தாலே
வெளுக்கும்
பெரியார் தர்க்கம்.
நினைத்தாலே
சுரக்கும்
பெரியார் மனிதநேயம்.
நினைத்தாலே
துளிர்க்கும்
பெரியார் உணர்வு நயம்.
நினைத்தாலே
அழைக்கும்
பெரியார் களம்.
நினைத்தாலே
தொடரும்……
இது
பெரியார் நிலம்!
கவிஞர் துரை. சண்முகம்