தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டத்தில் அக்ஷய பாத்ரா என்ற அமைப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அந்த அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் திவ்யா சத்யராஜ் குங்குமச் சிமிழ் கல்வி – வேலை வாய்ப்பு இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் இதைத் தெரிவித்திருக்கிறார்.
இந்த அமைப்பு, வரும் 2019 ஜூனிலிருந்து தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப் போவதாக திவ்யா அந்தப் பேட்டியில் தெரிவிக்கிறார்.
தமிழக அரசு உண்மையிலேயே இதற்கு அனுமதி அளித்திருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தப் பேட்டியில் உள்ள தகவல்களின் அடிப்படையில்தான் இந்தப் பதிவு.
அக்ஷய பாத்ரா என்ற அமைப்பு இஸ்கான் எனப்படும் இன்டர்நேஷனல் கிருஷ்ணா கான்சியஸ்நஸ் என்ற இந்து cult-ன் துணை அமைப்பு. இந்த அமைப்பு ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் இந்தப் பணியைச் செய்துவருகிறது. ஆனால் அங்கு அக்ஷய பாத்ராவால் வழங்கப்படும் உணவு மோசமானதாக இருப்பதாக கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
படிக்க:
♦ ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !
♦ சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !
இந்தியாவில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, ஒதிஷா போன்ற பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்தான் மதிய உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் முட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அக்ஷய பாத்ரா அமைப்பு உணவில் பூண்டு, வெங்காயம் இல்லாமல் உணவை பரிந்துரை செய்யும் ஒரு அமைப்பு. சத்துணவு வழங்க இந்த அமைப்பை அனுமதிக்கலாமா?
திவ்யா சத்யராஜ் தமிழக சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு செய்திருப்பதாகவும் கூறுகிறார். அந்த ஆய்வு முடிவு என்னவென்று தெரியவில்லை. பூண்டு, வெங்காயம் இல்லாமல் குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதுதான் அந்த ஆய்வு முடிவா?
தவிர, அந்தக் கட்டுரையில் போகிறபோக்கில் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அதாவது, 12 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அகஷ்ய பாத்ராதான் உலகின் மிகப் பெரிய சத்துணவுத் திட்டம் என்கிறது கட்டுரை. அப்படியல்ல. 1982 ஜூலை 1 -ஆம் தேதி இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதே, சுமார் 56 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கியது தமிழக அரசு.
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான உணவை அரசுதான் தரவேண்டும்.
நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…