உலகை தனது கொடையின் கீழ் கொண்டுவருவேன், என கொக்கரித்த பாசிச ஹிட்லரின் கனவை சுக்குநூறாக்கி, ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவர் தோழர் ஸ்டாலின். ஹிட்லரிடம் இருந்து ரசியாவை மட்டுமல்லாது உலகையே காப்பாற்றிய ரசிய மக்களின் தலைவர் தோழர் ஸ்டாலின்.
ஆனால் அவரையும் ரசியப் பாட்டாளிகளின் தியாகத்தையும் வரலாற்றில் இருந்து மறைக்கப் பார்க்கிறது முதலாளிவர்க்கம். “வெட்ட வெட்ட துளிர்க்கும் மருதாம்பாய்” நிற்கிறது அவரின் புகழ்.
ஸ்டாலின் அவர்களின் நினைவு நாளான மார்ச் 5 அன்று தோழர் கலையரசன் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட சில படங்கள் இதோ உங்களுக்காக…
***
ஸ்டாலின் மரணமடைந்த நேரம் கொரியாவில் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கொரிய மக்கள் தாங்கள் செல்லுமிடமெல்லாம் தோழர் ஸ்டாலினின் படத்தைக் கொண்டு சென்று அவரை நினைவுகூர்ந்தனர்.
***
மறைக்கப் பட்ட வரலாறு. 1947, சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையை போக்குவதற்கு உதவி கோரப் பட்ட நேரம், தோழர் ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏற்கெனவே வேறு பகுதிக்கு தானியங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தமது நாட்டுக் கப்பலை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். அப்போது குறுக்கிட்ட ஒரு ரசிய அதிகாரி, “இன்னும் ஆவணங்கள் கையெழுத்தாகவில்லை” எனத் தெரிவிக்க, அதற்கு தோழர் ஸ்டாலின் அளித்த பதில், “ஆவணங்கள் காத்திருக்கலாம். ஆனால் பசி காத்திருக்காது”.
(இந்த உரையாடலை, ரசியாவிற்கான இந்தியத் தூதுவர் P.ரத்தினம் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பத்திரிகையாளர் குழுவில் தெரிவித்தார்)
***
தோழர் ஸ்டாலினின் மரணச் சடங்கில் அலைகடலென திரண்டு வந்த மக்கள் வெள்ளம்.
***
ஸ்டாலின் சோவியத் அதிபராக ஆட்சி செய்த காலத்தில், தனது குடும்பச் செலவுக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டு கடன் வாங்கி இருக்கிறார் !
அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் இருந்து :
ஸ்டாலினின் மனைவி நாடியா, அடிக்கடி குடும்பத்தை பராமரிக்க பணமில்லாமல் கஷ்டப் பட்டுள்ளார். ஒரு முறை ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
– “இப்போது கையில் எந்தக் காசும் இல்லை. 50 ரூபிளாவது அனுப்பி வையுங்கள்.”
அதற்கு ஸ்டாலினின் பதில்:
– “நான் மறந்தே விட்டேன். இன்றைக்கு புறப்படும் சக ஊழியரிடம் 120 ரூபிள் கொடுத்தனுப்புகிறேன்.”
சில தினங்களுக்குப் பின்னர் (3-1-1928), அரச பதிப்பக (GIZ) நிர்வாகி கலாட்டாவோவுக்கு, ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார்.
– “எனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகின்றது. 200 ரூபிள் கடனாகத் தர முடியுமா?”
(நன்றி: Stalin: The Court of the Red Tsar)
ஊழல் கறை படியாத ஸ்டாலின், இறக்கும் போது வைத்திருந்த சொத்துகள்:
ஒரு சோடி காலணிகள்
இரண்டு இராணுவ உடைகள்.
வங்கிக் கணக்கில் 900 ரூபிள்கள்
பாட்டாளி வர்க்க அதிகாரம் ஒருபோதும் ஊழல்கறை படாது.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.” – குறள் 72
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.