கலையரசன்
  இது ஒரு ஜெர்மன் கதை:

♦ அரசியல் படுகொலைகள்.
♦ இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளை களையெடுத்தல்.
♦ ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்.
♦ ஏக பிரதிநிதி உரிமை கோரல்.
♦ தேசியவாத கொள்கை உடன்பாடு கொண்ட பிற இயக்கங்கள் மீதான தடை.
♦ ஏக பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாத மாற்று இயக்கத்தவர் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை.

இவை இருபதுகளில், முப்பதுகளில் ஜெர்மன் வரலாற்றில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள் அல்லது சம்பவங்கள். ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இன்றைய உலக நடப்புகளை நினைவுபடுத்துகின்றன. இந்தத் தகவல்கள் வெளியுலகில் அதிகமாக அறியப்படவில்லை.

முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி தனது ஜென்ம விரோதியான பிரான்சிடம் தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், நட்பு நாடுகளுடன் சேர்ந்து சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு ஜெர்மனியை அழைத்தது. பிரான்சில் வெர்சேய் எனும் இடத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சென்ற ஜெர்மன் அரசுப் பிரதிநிதிகள், புகையிரதம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் போகும் வழியில் இருந்த பிரெஞ்சுக் கிராமங்களில் ஜெர்மன் படைகள் நடத்திய பேரழிவுகளை பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சமாதான ஒப்பந்தம் கூட வெற்றி பெற்ற நாடுகளின் உத்தரவுகளுக்கு அடிபணிவதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு சில: ஜெர்மனி பில்லியன் டாலர் கணக்கான பணத்தை வெற்றி பெற்ற நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். ஜெர்மனி தனக்கென இராணுவம், விமானப்படை எதுவும் வைத்திருக்க முடியாது. அல்சாஸ், லொரேன் ஆகிய மாகாணங்களை பிரான்ஸிற்கு கொடுக்க வேண்டும். அதைவிட ஜெர்மனிக்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தந்த நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்படும். ஜெர்மனிக்கு சொந்தமான ஆப்பிரிக்க காலனிகளை பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மேற்படி சமாதான ஒப்பந்தம் அந்நியருக்கு தேசத்தை அடமானம் வைக்கும்செயல் என்பது தெரிந்த போதிலும், ஜெர்மன் அரசுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தால் மீண்டும் போர் மூண்டு ஜெர்மனி முழுவதும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் இருந்தது. அதற்கு மாறாக, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், தேசத்தை மறுசீரமைப்பதற்கு சிறிது கால அவகாசம் கிடைக்கும். இதனால் ஜெர்மன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

தற்போது ஜெர்மன் அரசுக்கு புதிய நெருக்கடிகள் உருவாகின. அதுவரை காலமும் அரசுக்கு விசுவாசமாக போரிட்டு வந்த தேசியவாத இராணுவ அதிகாரிகள் இதை மிகப் பெரிய துரோகமாகப் பார்த்தனர். “அந்நியருக்கு நாட்டை அடகு வைத்த ஜெர்மன் இனத் துரோகிகள்” மீதான வெறுப்புணர்வு அன்று சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவி இருந்தது. இத்தகைய பின்னணியில், தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி இருந்தன. முதல் கட்டமாக, “இனத் துரோகிகளை களையெடுப்பது” அந்த தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக இருந்தது.

நாஜிகளின் SA இயக்கம் மட்டுமல்லாது, Stahlhelm, Jungdo என்று பல தீவிர தேசியவாத இயக்கங்கள் இரகசியமாக இயங்கி வந்தன. அவற்றின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றிருந்தனர். பல இடங்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பவாரியா மாநிலத்தின் பொலிஸ் மா அதிபர், வலதுசாரி தீவிரவாதக் குழுக்களை ஆதரித்த படியால், அங்கிருந்துதான் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன.

Freikorps எனும் கூலிப்படை.

முதலாம் உலகப்போரின் முடிவில் ரஷ்யா மாதிரி, ஜெர்மனியிலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடித்தது. ஆனால், ஜெர்மன் அரசு Freikorps எனும் கூலிப்படையை அனுப்பி புரட்சியை நசுக்கியது. அதன் பிறகு, கம்யூனிஸ்டுகள் நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தபடியால் அரசுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அதற்கு பதிலாக, தீவிர வலதுசாரி – தேசியவாதிகள் மத்தியில் இருந்து அரசுக்கு அச்சுறுத்தல் வந்தது.

ஒரு காலத்தில் அரசின் கூலிப்படையாக செயற்பட்ட Freikorps படையினர், திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போயினர். அதன் விளைவாக, Freikorps தடைசெய்யப்பட்ட படியால், OC என்றொரு இரகசிய இயக்கம் உருவாக்கப்பட்டது. சுருக்கமாக OC என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் பெயர் “அமைப்புக் குழு”. தேசப்பற்று, வெர்சேய் ஒப்பந்த எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு, இனவுணர்வு போன்றவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த OC இயக்கம், அரசியல் படுகொலைகள் மூலம் தனது இலக்கை அடைய எண்ணியது.

அவர்கள் ஜெர்மன் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், துரோகிகளை களையெடுப்பது அவசியம் என்று கருதினார்கள். பண்டைய ஜெர்மன் சொல்லான பெமே (Feme) என்ற சொல்லின் மூலம் தமது செயல்களை நியாயப்படுத்தினார்கள். பண்டைய ஜெர்மன் சமுதாயத்தில் காணப்பட்ட பெமே நீதிமன்றம், நம்மூர் பஞ்சாயத்து போன்றது. அங்கு வரும் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப்படும். அவை சிலநேரம் கொடூரமான தண்டனைகளாகவும் இருக்கலாம். அது மாதிரி, “துரோகிகளுக்கு மரணதண்டனை” என்பதுதான் OC அமைப்பினரின் கோஷமாக இருந்தது.

1921 – 1922 ஆகிய இரண்டு வருடங்களுக்குள், ஜெர்மனியில் 350-க்கும் மேற்பட்ட “எதிரிகள்” அல்லது “துரோகிகள்” OC இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று பலர் OC வன்முறைக்கு பலியானார்கள். அவர்களில் சிலர் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கம்யூனிசப் புரட்சியில் பங்கெடுத்த USPD தலைவர்கள் இருவர் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். USPD என்பது, அன்று ஆளும் கட்சியாக இருந்த சமூக ஜனநாயகவாத SPD இலிருந்து பிரிந்த மார்க்சியவாத குழுவினர் ஆவர்.

மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர்.

அதைவிட சில வலதுசாரி அரசியல்வாதிகளும், வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியானார்கள்! அவர்களில் ஒருவர் மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர் (Mathias Erzberger). கத்தோலிக்க மதப்பற்றாளர். (வலதுசாரி) மத்திய கட்சியின் தலைவர். அவர் போருக்கு எதிராக குரல் கொடுத்த படியாலும், சமாதான தீர்வுத் திட்டத்தை ஆதரித்தபடியாலும், தீவிர ஜெர்மன் தேசியவாதிகளால் ஒரு துரோகியாகக் கருதப்பட்டார். அவர் தனது நண்பருடன், மலைப் பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த இரண்டு கொலையாளிகளும் வேறு பெயரில் போலி பாஸ்போர்ட் செய்து ஹங்கேரிக்கு சென்று பதுங்கி இருந்தனர்.

இருப்பினும், OC வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியான இன்னொரு வலதுசாரி அரசியல்வாதியின் படுகொலை அதுவரை காலமும் நடந்து கொண்டிருந்த அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரபல தொழிலதிபராகவும் அமைச்சராகவும் இருந்த வால்டர் ராதேனவ் (Walther Rathenau) வெர்சேய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமைக்காக தீர்த்துக் கட்டப்பட்ட “துரோகிகளில்” முக்கியமானவர். அத்துடன் அவர் ஒரு பணக்கார யூதராகவும் இருந்த படியால் மேலதிக வெறுப்புக்கு ஆளாகி இருந்தார்.

ராதேனவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பெரும் பணம் சம்பாதித்து இருந்தாலும், அவரது அரசியல் இடதுசாரித்தன்மை கொண்டதாக இருந்தது. தானும் ஒரு முதலாளி என்ற மமதை இன்றி, நலன்புரி அரசை உருவாக்கி அடித்தட்டு மக்களையும் முன்னேற்றும் வகையில் செல்வத்தை பங்கிட விரும்பியவர். இதற்காக பணக்காரர்கள் மீது அதிகளவு வரி விதிக்கும் திட்டத்தையும் முன்மொழிந்தார். ஐரோப்பிய சந்தைகளை ஒன்று சேர்க்கும் பொருளாதார ஒன்றியம் பற்றிய சிந்தனை கூட அவரிடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. அத்தகையதொரு அரசியல்வாதி அன்றைய ஜெர்மன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததில் வியப்பில்லை.

ஒரு நாள், பெர்லின் நகரில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள தெருவொன்றில், காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் ராதேனவ் சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டப் பகலில் இன்னொரு காரில் இருந்தபடியே பிஸ்டலால் சுட்டுக் கொன்ற கொலையாளிகள், சம்பவத்தை கண்டு அங்கு கூடிய மக்கள் வெள்ளத்திற்குள் கலந்து தப்பிச் சென்று விட்டனர். ராதேனவ் கொலை செய்யப்பட செய்தி நாடு முழுவதும் எதிரொலித்தது. பெர்லின் நகர மத்தியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜெர்மன் மக்களின் எதிர்ப்புணர்வு தங்களுக்கு எதிராக திரும்பி இருப்பதை கண்டுகொண்ட கொலையாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பியோட முயற்சித்தார்கள். அது நிறைவேறாத படியால், தீவிர வலதுசாரி நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் கோரினார்கள். ஆனால், யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இலட்சக்கணக்கான பணம் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனால் ஊருக்குள் செல்லப் பயந்து காடுகளுக்குள் சுற்றித் திரிந்தார்கள்.

பெமே நீதிமன்றம்.

இறுதியில் ராதேனவ் கொலையாளிகள் ஹல்லே நகருக்கு அருகில் இருந்த பாழடைந்த கோட்டை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தனர். அந்த இடத்தில் வெளிச்சத்தை கண்ட ஊர் மக்கள் போலீசிற்கு அறிவித்து விட்டனர். அதையடுத்து பெரும் போலீஸ் படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. தாம் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கொலையாளிகள் துப்பாக்கியுடன் வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் அரசியல் கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து போலீசாருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். ஒருவன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானான். மற்றவன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான்.

இந்தச் சம்பவம் நடந்து பதினொரு வருடங்களுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். நாஜிகள் அந்த இரண்டு கொலையாளிகளையும் “தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள்” என்று கௌரவித்தனர். அவர்கள் கொல்லப்பட்ட கோட்டையில், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவுகூரும் வைபவம் நடைபெற்றது. ஹிட்லரின் அரசில் அமைச்சராக இருந்த ஹிம்லர், “மாவீரர்களின்” சமாதியில் மலர் வளையம் வைத்து விட்டு உரையாற்றினார். “தாயகத்திற்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களின் தியாகம் வீண்போகவில்லை என்றும், தற்போதைய ஜெர்மன் தேசிய இராணுவத்தினர் அவர்களது ஆன்மாவை கொண்டிருப்பதாகவும்” புகழாரம் சூட்டினார்.

முப்பதுகளின் தொடக்கத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது. முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் கூட எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத ஜெர்மன் பணக்கார வர்க்கத்தினர், நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரது செல்வம் ஒரே நாளில் மறைந்து ஏழைகள் ஆனார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜெர்மனியில் பல்வேறு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போராடின.

ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளின் இடதுசாரி சிவப்பு முன்னணிப் படையினர் மீண்டும் தெருக்களில் நடமாடினார்கள். ஹிட்லரின் கீழ் இயங்கிய SA, மற்றும் பல வலதுசாரி ஆயுதக் குழுக்கள், ஒரு பக்கம் சிவப்பு முன்னணிக்கு எதிராகவும், மறுபக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். இந்தத் தருணத்தில் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்ற நாஜிக் கட்சியை அரசமைக்க வருமாறு ஜெர்மன் ஜனாதிபதி அழைத்தார்.

ஹிட்லர் தேர்தல் ஜனநாயகப் பாதையில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தார். அதே நேரம் நாஜிக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் நிலவின. நீண்ட காலமாக தனித்து இயங்கி வந்த பல்வேறு வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் நாஜிக் கட்சியுடன் பொது உடன்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஒரே கட்சியாக கலந்து விடவில்லை. குறிப்பாக, பழைய Freikorps உறுப்பினர்கள் ஹிட்லரின் தலைமையை ஏற்க மறுத்தனர்.

அதுவரை காலமும் ஜெர்மனியில் இருந்து வந்த ஜனநாயக அமைப்புகள், தேர்தல்கள் எல்லாவற்றையும் நாஜிகள் தடைசெய்து விட்டனர். ஜனாதிபதி, பிரதமர் முறைமை ஒழிக்கப் பட்டு, ஹிட்லர் தேசியத் தலைவர் (Führer) ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டார். நாஜிகள் மட்டுமே ஜெர்மன் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், ஹிட்லர் மட்டுமே ஜெர்மனியரின் தேசியத் தலைவர் என்பதையும், ஏனைய தேசியவாத அமைப்புகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன.

“நீளமான கத்திகளின் இரவு” (Nacht der langen Messer, 30 June – 2 July 1934) என்று அழைக்கப்படும் நாட்களில் ஹிட்லரின் தலைமைத்துவத்திற்கு சவாலாக விளங்கிய மாற்று இயக்கத்தினர் களையெடுக்கப்பட்டனர். அவர்கள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. மாற்று இயக்கத் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள், ஹிட்லரின் கையாட்களால் வீடு வீடாக தேடிச் சென்று தீர்த்துக் கட்டப்பட்டனர். குறைந்தது நூறு பேராவது அன்று நடந்த களையெடுப்பில் கொல்லப் பட்டனர்.

ஜெர்மன் தேசியவாதம் ஹிட்லருடன் தொடங்கவில்லை. ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன. தேசாபிமானம், இனவுணர்வு போன்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை கொண்டிருந்தன. தேர்தல் அரசியலில் மட்டுமல்லாது, ஆயுத வன்முறைகளிலும் ஈடுபட்டன. அரசியல் படுகொலைகளை புரிந்தன.

நாஜிகள் அல்லாத ஏனைய வலதுசாரி – தேசியவாத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆயுதப் போராட்டம் தனிநபர் பயங்கரவாதம் என்ற அளவில்தான் இருந்தது. அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஜெர்மன் தேசியத்தின் பேரில் போராடிய பல நூறு இளைஞர்களின் தியாகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் ஹிட்லர் மட்டும்தான். SA, OC போன்ற வலதுசாரி தீவிரவாதக் குழுக்களின் போராட்டங்களின் விளைவாகத்தான் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்.

படிக்க:
சிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் !
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை தமது மீட்பராகக் கண்ட பல்வேறு வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள், ஹிட்லரின் நாஜிக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆர்வம் காட்டின. அவற்றிற்கு இடையில் ஐக்கிய முன்னணி கூட ஏற்பட்டிருந்தது. ஆனால், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து ஜெர்மன் மக்களுக்கும் தானே தேசியத் தலைவர், தனது நாஜி கட்சியே ஏக பிரதிநிதிகள் என்றும் அறிவித்துக் கொண்டார். அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை துரோகிகளாக்கி தீர்த்துக் கட்டினார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்து விட்ட ஜெர்மன் மக்கள், ஹிட்லரை தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

இது ஒரு ஜெர்மன் கதை.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

1 மறுமொழி

  1. சுருக்கமாக சொன்னால் இந்தியாவை மோடியின் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இப்படிதான் கட்டியாமைக்க துடிக்கிறார்

Leave a Reply to அ.சிம்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க