கம்பன் சைவசமயத்தின் மீது மேற்கொண்ட கருத்தியல் குண்டுவெடிப்புகள் ! | வி.இ.குகநாதன்

‘இராமாயணங்கள் எத்தனை வகை?’ என்ற ஒரு கேள்விக்கான விடை காண்பதே மிகப் பெரும் புதிரான பணியாகும். பலரும் வால்மீகி எழுதிய இராமாயணத்தை கம்பர் தமிழில் மொழிபெயர்த்தார் என்றே கருதியிருப்பார்கள். அது தவறு. உண்மையில் நாட்டுப்புறக் கதைகளாக வாய்மொழி மூலமாகவே பல வகையான இராமாயணக் கதைகள் கடத்தப்பட்டு வரப்பட்டு, பல்லாண்டுகளின் பின்னரே அவை எழுத்துருப் பெற்றன. இந்த வகையில் மொத்த இராமாயணக்கதைகள் நூற்றுக்கணக்கானவையா அல்லது ஆயிரக்கணக்கானவையா என்பதே ஆய்விற்குரிய பகுதியாகும்.

இது தொடர்பாக ராமானுஜன் (A. K. Ramanujan) என்பவர் எழுதிய ‘Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation’  என்ற கட்டுரை பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலேயே இடம்பெற்றுப் பின்னர் இந்துத்துவா அமைப்பினரின் அழுத்தங்களால் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பல்வகைப்பட்ட இராமாயணங்களில் ராமனையும், சீதையினையும் உடன்பிறந்தவர்களாகக் காட்டும் ஒரு கதை; சீதையே இல்லாத ஒரு கதை எனப் பல்வேறுபட்ட வகையான கதை வடிவங்கள் உண்டு. இவை எல்லாவற்றிடையேயும் வால்மீகி எழுதிய இராமாயணமும், கம்பர் எழுதிய கம்ப இராமாயணமுமே மக்களிடம் பெரிதும் பரவலடைந்தவையாகும்.

ஏற்கனவே நாட்டுப்புறக் கதைகளாகவிருந்த இராமாயணத்தை வால்மீகி மற்றும் கம்பர் ஆகியோர் தாம் வாழ்ந்த காலப்பகுதிகளிற்கேற்ப தாம் சார்ந்திருந்த மதங்களிற்குச் சார்பாக இன்னொரு மதத்தின் மீதான தாக்குதலாகவே கதையினை வடிவமைத்திருந்தார்கள். இதில் கம்பரின் நோக்கத்தினைப் பார்ப்பதற்கு முன்னால் காலத்தால் முந்தியவரான வால்மீகியின் நோக்கத்தினைப் பார்ப்போம்.

வால்மீகி ராமாயணத்தின் பவுத்தத்தின் மீதான போர் :

வால்மீகி ராமாயணம் என்பது பவுத்த எதிர்ப்பினையும், பார்ப்பனியத் தாங்கலையுமே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதனை விளங்கிக்கொள்வதற்கு புத்தரின் காலத்திற்குச் சென்றுவரவேண்டும். பார்ப்பனியர் குளிரான இடங்களிலிருந்து வந்தமையால் நெருப்பினைக் (அக்கினி) கடவுளாகவும் வேள்வியினை (யாகம்) முதன்மையான சடங்காகவும் கொண்டிருந்தனர். இந்த வேள்விகளின் போது பெருமளவு மாடுகளையும், பிற மிருகங்களையும் வெட்டி வேள்வியில் பலியாக்கி வந்தனர் (இதற்கான சான்றுகளை வேதங்களிலேயே காணலாம்).

அரக்கியாக உருவகப்படுத்தப்படும் தாரகை …

இத்தகைய நிலையில் வேளாண்மையில் பயன்படுத்தப் போதிய மாடுகள் இன்மையால் புத்தர் வேள்வியினை எதிர்த்தார். ஒரு முறை சொர்க்கத்திற்குச் செல்ல என்று கூறி பார்ப்பனர்களால் யாகம் ஒன்று நடத்தப்பட்டு மிருகங்கள் வெட்டப்பட்டு அதில் பலியிடப்பட்டன. அந்த யாகம் நடைபெறுமிடத்திற்குச் சென்ற புத்தர், “ஏன் இவ்வாறு மிருகங்களை நெருப்பில் பலியிடுகிறீர்கள்?” எனக்கேட்டார். அப்போது பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடப்படும் மிருகங்கள் எல்லாம் நேரே சொர்க்கம் செல்வதால் கவலைப்படவேண்டாம் எனக்கூற, புத்தர் “இவ்வாறு மிருகங்களைப் பலியிட்டுப் பின்னர் சொர்க்கம் போவதற்குப் பதில் நீங்களே நேரில் நெருப்பில் குதித்து நேரடியாகச் சொர்க்கம் செல்லலாமே!” என்றார். பார்ப்பனர்களிடம் பதிலில்லை, அந்த யாகம் பாதியிலேயே குழம்பிற்று.

இவ்வாறு புத்தருக்குப் பின்னரும் பவுத்தர்களிற்கும் பார்ப்பனர்களிற்கும் யாகங்கள் தொடர்பான மோதல்கள் இடம்பெற்றுவந்தன. இக் காலப்பகுதியிலேயே வால்மீகி ராமாயணம் எழுதப்படப்பட்டது.

இப்போது வால்மீகி இராமாயணத்திற்கு வந்தால், ராமன் மேற்கொண்ட முதற்போர் தாடகை என்ற அரக்கப் பெண்ணிற்கு எதிராகவேயிருந்தது. அதாவது வேள்வியினைக் (யாகம்) குழப்ப வந்த தாடகையினை எதிர்த்து விசுவாமித்திரரின் அழைப்பின் பெயரில் ராமன் எதிர்த்துப் புரிந்த போரே ராமனின் முதற்போர். இதிலிருந்தே அரக்கர்களுடனான பகை ராமனிற்குத் தொடங்குகின்றது.

படிக்க:
அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

இங்கு யாகத்தைக் குழப்பும் அரக்கர்களாக புத்தரும், அவரது கொள்கையினைப் பின்வற்றுவோருமே உருவகப்படுத்தப்படுகின்றார்கள். இங்கு ராமாயணத்தில் வேள்விக்குக் கொடுக்கப்படும் சிறப்பினையும், அதனை எதிர்த்தோரை கொடிய அரக்கர்களாகவும் உருவகப்படுத்துவதனைப் பார்த்தால் வால்மீகியின் நோக்கம் புலனாகும். இதனைப் படிக்கும் சிலருக்கு ‘நாம் இறைச்சி சாப்பிட்டுவிட்டுக் கோயிலிற்கே போவதில்லை, ராமபிரான் எவ்வாறு மிருகங்களைப் பலியிடும் யாகத்திற்கு உதவுவார்’ என்ற ஐயம் ஏற்படும்.

ராமாயணத்தில் ராமர் இறைச்சி உண்பவர் மட்டுமல்லாமல் மதுவும் உண்பார் (சான்று : உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8).  வால்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க ருத்திர காண்டத்திற்கு வரவேண்டும்.

ராமர் அரசனாக முடி சூட்டப்பட்ட பின்பும் அரசாட்சியில் ஈடுபடவில்லை. பரதனும், அமைச்சர்களுமே ஆட்சியினைப் பார்த்துக்கொண்டனர். வால்மீகி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். ‘நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான்.’ (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).

இவ்வாறு ஆட்சியில் பங்கெடுக்காத ராமன் முதன்முதலில் ஆட்சியில் செய்யும் செயலே சம்பூகன் தலைவெட்டல் ஆகும். அதாவது சூத்திரர்கள் தவம் செய்யவோ அல்லது ஞானம் (கல்வி) பெறவோ கூடாது என்ற பார்ப்பன சனாதன தர்மத்திற்கு முரணாக, சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்வதாக பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட, அவன் மரத்தில் தொங்கியபடி தலைகீழாகத் தவம் செய்த சூத்திரனான சம்பூகனின் தலையினை வெட்டி வீழ்த்துகின்றான். (உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள்).

இவ்வாறு வால்மீகி ராமாயணமானது பார்ப்பனிய நலன்களிற்காகப் பவுத்தத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போராகவே உருவகப்படுத்தப்படுகின்றது. வால்மீகி காலத்தில் பவுத்தமே பார்ப்பனியத்தின் எதிரியாகக் காணப்பட்டமையால் வால்மீகி ராமாயணம் பவுத்தத்தின் மீது போரினைத் தொடுத்தது, ஆனால் கம்பனின் காலத்தில் அத் தேவையில்லை. எனவே கம்ப ராமாயணம் யார் மீது போர் தொடுத்தது என இனிப் பார்ப்போம்.

தமிழர்களிடையே இராமாயணக் கதை :

கம்ப இராமாயணத்திற்கு முன்னரே தமிழர்களிடையேயும் ராமர் கதை பரவியிருந்தது. சங்க இலக்கியங்கள் (அகநானூறு 70, புறநானூறு 378), சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை) என்பனவற்றிலேயே வேறுபட்ட ராமர் கதைகள் சிறு செய்திகளாக இடம்பெற்றுள்ளன. ‘இராவணன் மேலது நீறு, எண்ணத் தகுவது நீறு’  என திருஞானசம்பந்தரே தேவாரத்தில் இராவணனைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். இவ்வாறு தமிழகம் ராமர் கதைகள் பற்றி அறிந்திருந்த சூழ்நிலையிலேயே கம்பர் தனது இராமயணத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் (CE 12th cent) எழுதுகின்றார்.

கம்பரின் காலத்தில் பவுத்தம் இந்தியாவை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டு, சமணம் கழுவேற்றப்பட்டு விட்டது. எனவே அவற்றினை எதிர்க்கவேண்டிய தேவை கம்பரிற்கு இல்லை. நாயன்மார்களின் செயற்பாட்டினாலும், அக் காலச் சோழ அரசர்களின் தாங்கலாலும் சைவமானது பெரும் சமயமாக உருவெடுத்திருந்தது. கம்பரோ வைணவர் என்பதுடன் அக்காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்குமிடையே பூசல்கள் காணப்பட்ட காலம்.

எனவேதான் கம்பர் சைவத்தின் மீதான பனிப்போராகக் கம்ப ராமாயணத்தை எழுதியிருந்தார். இங்கு பனிப்போர் (Cold war) என்ற சொல் கவனிக்கத்தக்கது (பனிப்போர் என்பது தானே நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் செய்வது. எ.கா- அமெரிக்கா-சோவியத் பனிப்போர்).

வால்மீகி போன்று வெளிப்படையாகவல்லாமல் கம்பர் இவ்வாறு மறைமுகமாகப் போர் புரிவதற்குச் சோழர்களின் சைவத்தின் மீதான பற்று, பார்ப்பனிய நலன் இரு புறங்களிலும் (சைவம்-வைணவம்) இருந்தமை, சைவர்களையும் கவர்ந்து தமது கடவுளை ஏற்கச்செய்தல் ஆகியவை காரணங்களாக அமைந்திருக்கக்கூடும். இது பனிப்போர் என்பதால் மிக நுணுக்கமாகப் பார்த்தாலே கம்பரின் நோக்கத்தினை விளங்கிக்கொள்ள முடியும். சைவ-வைணவ முரண் என்பது யார் முதன்மையான கடவுள், எந்தக் கடவுள் ஆற்றல் கூடியவர், எந்தப் பெயரினை (நாமத்தை) உச்சரித்தல் என்பன தொடர்பான மோதல்களே என்பதனை மனதிற்கொண்டு பாருங்கள்.

கம்பர் சைவத்தின் மீது தொடுத்த கருத்தியல் போர் :

கம்பர்  பெருமளவிற்கு உவமைகளைக் கையாண்டே சைவத்தின் மீதான தாக்குதலை மேற்கொண்டிருந்தார். பல்வேறு கட்டங்களாகவே இத் தாக்குதல் இடம்பெற்றிருந்ததுடன், இத்தகைய தாக்குதல்கள் வால்மீகி இராமாயணத்திலோ அல்லது நாட்டுப்புற ராமர் கதைகளிலோ இல்லாதவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பர் முதற் கட்டமாக சிவ (சைவ) பக்தர்களாகவும், ராம பக்தர்களாகவும் உருவகப்படுத்தப் படுபவர்களைக் கொண்டு தனது பனிப்போரினைத் தொடங்குகின்றார். சிவ பக்தர்கள் (வாலி முதற்கொண்டு ராவணனும், அவரது அரக்கர் கூட்டமே சிவ பக்தர்கள்) மற்றையோரின் மனைவியினைக் களவாடுபவர்களாகவும், போரில் தோற்பவர்களாகவுமே காண்பிக்கப்படுகின்றனர்.

மறுபுறத்தில் வால்மீகி ராமாயணத்தின்படி வாலி இறந்தபின் சுக்கீரிவன் வாலியின் மனைவியான தாரையினைத் தனது மனைவியாக்கிய செய்தியினை கம்பன் மாற்றி ராம பக்தனான சுக்கீரிவனின் நற்பெயரினைப் பேணுகின்றான். இன்னொரு ராம பக்தனான அனுமானின் ஆற்றலினைக் கூறும்போது சிவனாலும் செய்ய முடியாத செயலினைச் செய்தவனாகக் காட்டப்படுகின்றான்.

`முத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம்
முற்றி,
வித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த
தன்மை,
அத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்;
ஆழியான்மாட்டு
இத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக்
கொண்டாம்.

(சான்று- கம்ப ராமாயணப் பாடல் 6019)

பொருள் – அனுமன் மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய சிவபிரானுக்கும் செய்து முடிப்பதற்கு அருமையான காரியத்தை நிறைவேற்றி….

இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது என்கின்றார்.

அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி
ஆர்த்தார்;
இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது
என்பார்;
குத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக்
கை கொண்டான்,
ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான்.

(க.ரா 7939 வது பாடல்)

பொருள் – (அங்கதனுடைய) அந்த (வீரத்) தொழிலைக்  கண்ட தேவர்கள், கை கொட்டிப்   பேரொலி   செய்தார்கள்; இந்த  வீரத் தொழிலை; இவனுக்கு அல்லால் சிவபிரானுக்கும்; இயலாது என்பார்….

கம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை (சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது. அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே. இவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான்.

பழிப்புஅறு மேனி யாள்பால்
சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால
வெதும்பினான், ஈசன் வேலும்,
குழப்பு அரிது ஆய மார்பை,
மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக்
கிடந்தவாள் அரக்கன் கேட்டான்.

(க.ரா 8275 வது பாடல்)

இன்னொரு இடத்தில் சிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவே கம்பர் கூற வைக்கின்றார்.

இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று
என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும்
கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை
நோற்ககிற்பார்?’

(7294 வது பாடல்)

பொருள் – இந்திரனுடைய  வச்சிராயுதமும்; சிவபிரானின் கைகளில் உள்ள மூன்று       இலை வடிவத்தைக் கொண்ட மந்திர ஆற்றல் பொருந்திய முத்தலைச் சூலமும் திருமாலின் வளைந்த சக்கரப் படையின் வருகையையும் பல போர்களில் கண்டுள்ளேன்; அப்படைகளுக்கும் இராமனுடைய அம்புக்கும் வேற்றுமை மிகுதி. இந்திரன்  படை, ஈசன் கை மந்திர அயில், மாயோன் வளை ஆகியவற்றை எளிமையாகப் பொறுத்த யான் தவவேடம் பூண்ட இராமன் அம்புக்குப் பொறுக்க மாட்டாது நொந்தனன். யானல்லாத மற்றையோர்  யார் அவ்வம்பின் ஆற்றலை எதிர்த்துத் தாங்க வல்லார்.

மேற்குறித்த பாடலில் சிவனின் சூலத்துடன், மாயோனின் சக்கரத்தையும் விட ராமனின் அம்பு வலிமையானது எனக் கூறுவதனைக் காணலாம். இவ்வாறு சில இடங்களில் ராமரின் ஆற்றலினை திருமாலின் ஆற்றலை விடக் கூடுதலாகக் காட்டுவது, திருமாலின் அவதாரமே ராமன் என்ற செய்திக்கு முரணானது (சிலவேளைகளில் தனது பாத்திரப் படைப்பான ராமனை மற்றைய எல்லாக் கடவுள்களையும் விட உயர்வாகக்காட்டுவதற்காகவோ! என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது).

இன்னொரு இடத்தில் கம்பர் ‘சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது’ என்று வேறு பாடுகின்றார்.

இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
வெருவரத் திசைகள் பேர வெங்கனல் பொங்க மென்மேல்
செருமலே கின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன்
வரிசிலே இற்ற காக மற்றவன் முனிந்து மன்னோ`

(1291 வது பாடல்)

மேற்குறித்தவாறு, கம்பர் சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனினை நேரடி மோதலிலேயே தோற்க வைக்கின்றார்.

மூன்றாவது கட்டமாகக் கவிக் கூற்று உவமைகள், ஒப்பீடுகள் என்பவற்றினூடாக கம்பர் தனது சைவத்தின் மீதான போரினைத் தொடர்கின்றார்.  கம்ப ராமாயணத்தில் சிவன் குறித்து கூறப்பட்டுள்ள 395 இடங்களில் 168 இடங்கள் கவிக் கூற்றாக வருவதாகப் பெருமையாகக் கூறுகின்றார் ‘சிவம் பெருக்கும் சீலர்’ ராய.சொ என்பவர். அது உண்மைதான், ஆனால் அவற்றில் பெரும்பாலானவைகளில் அரக்கர்களின் ஆற்றலே சிவனிற்கு ஒப்பிடப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு.

  • திரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் (2987 வது பாடல் )
  • அயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது (3585 வது பாடல் )
  • இந்திரசித்தனின் தோற்றமானது சிவன், முருகன், விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் (4974 வது பாடல் )
  • சிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல்(8123 வது பாடல் )
  • ராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் (10006 வது பாடல் )

இதை விடப் பல இடங்களில் சிவன் ‘அழிப்புக் கடவுள்’ என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் பாடுகின்றார்.

நீலநிற நிருதர், யாண்டும் நெற்பொழி வேள்வி நீக்க,
பால்வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகுஎலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான்.

(5942 வது பாடல் )

கம்பர் காலத்தில், சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காக முழு உலகையும் உண்பவராக மேலுள்ள பாடலில் காட்டுகின்றார். இதிலிருந்து கம்பரின் நோக்கத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இறுதிக் கட்டத்தில் சிவனின் எட்டுத் தோள்களும் ராமனின் ஒரு விரலிற்கு ஈடு ஆகாது (7295 – “பேய்இரும் கணங்க ளோடு…” ) என்கின்றார் கம்பர்.

சிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (9837- “சிவனோ? அல்லன் நான்முகன்..”) ராவணன் வதைபடலத்தில் (134) கம்பர் பாடுகின்றார்.

எல்லாவற்றிலும் உச்சமாக சிவன், பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (6232- “முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்….” ) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை (பெயர்) யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தின் அடிமடியிலேயே கைவைக்கின்றார்.

இவ்வாறு கம்பன் பல்வேறு கட்டங்களாக சைவத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கம்ப ராமாயாணத்தை அணுகி நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம். சில இடங்களில் கம்பர் சிவனைப் பெருமையாகவும் குறிப்பிடுகின்றார் என்பதனை மறுக்கவில்லை. அதெல்லாம் மேற்கூறியனவற்றுடன் மட்டுமல்லாமல், விரிவஞ்சி நான் குறிப்பிடாத இன்னமும் பல கம்பரின் கூற்றுக்களுடன் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பர் சைவத்தின் மீது மேற்கொண்ட பனிப்போர் தெளிவாகப் புரியும்.

கம்பரின் சைவத்தின் மீதான எதிர்ப்புணர்வினை கவிக்கோ ஒரு கவியரங்கில் அனுமான் வேடத்தில் பாடிய ஒரு கவிதை தெளிவாக விளக்கும் (கீழுள்ளது கம்பராமாயணப் பாடலன்று).

தென்னிலங்கை வேந்தன்
திருநீற்றுப் பக்தன் என்றே
பொன்னிலங்கைதனை
பொடியாக்கித் தந்துவிட்டேன்’

–  கவிக்கோ

வி.இ.  குகநாதன்