ந்த நூல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை உடையது. அக்காலத்தில் எழுந்த எந்தவொரு அறநூலை விடவும் முற்போக்கானதாக, ஆழம்கொண்டதாக அமைகிறது.

இன்றுள்ள எம் நவீன வாழ்வுக்கும் பொருந்திப்போகும் அறக்கருத்துக்களை தன்னகத்தே கொண்டது. உலகம் முழுவதுமுள்ள அறிஞர்களால் போற்றப்படுவது. எமது சூழலில் எல்லா நூல்களுக்கும் தலை நூலாக ஏற்புப் பெற்றது.

எம் அனைவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு நூலாக அது கருதப்படுகிறது. அதன் பாடல்கள் திருமண மந்திரங்களாகப் பயன்படுகின்றன. அந்நூலின் வரிகளை அழகுற எழுதி சட்டகமிட்டு சுவர்களில் மாட்டுகிறார்கள்; கல்லில் பொறிக்கிறார்கள்; வாகனங்களில் ஒட்டுகிறார்கள்.

ஆனால், அந்நூலின் பாடல்களைப் பாடிக்கொண்டோ, அந்நூலை ஆதராம் காட்டியோ எவரும் பள்ளிவாசல்களை உடைப்பதில்லை; அந்நூலின் கருத்துக்களைச் சொல்லி இளைஞர்களை மூளைச்சலவை செய்து குண்டைக்கட்டிக்கொண்டு வெடித்துச் சாகவைக்க எவராலும் முடியவில்லை; அந்நூலின் பெண்ணடிமைக் கருத்துக்களை எடுத்துக்காட்டி பெண்களை அடக்கியொடுக்க எவராலும் முடிவதில்லை; அந்நூலின் அறத்தினைப் பரப்புவதாய்ச்சொல்லி நியாயம் தேடிக்கொண்டு எந்த இராணுவமும் நாடுகளைப்பிடித்து பேரரசை உருவாக்கவில்லை; அந்நூலில் வாக்களிக்கப்பட்ட நிலத்தை மீட்கவென கொலை வெறியாட்டத்தை எவரும் நிகழ்த்தவில்லை; அந்நூலின் பெயரால் சிறுவர்கள் முடிமழிக்கப்பட்டு இயற்கைக்கு மாறாக துறவுக்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை.

அதற்கு என்ன காரணம்?

அந்நூலின் காலப்பொருத்தம் பற்றி பட்டிமன்றங்கள் நிகழ்கின்றன. அந்நூலின் பெண்ணடிமைக் கருத்துக்களை பெண்ணியவாதிகள் எந்த அச்சமுமின்றி நார் நாராய் கிழிக்கிறார்கள். அந்நூலின் நல்லவற்றை ஏற்றுப் போற்றி அல்லவற்றை தயக்கமின்றி நீக்கி அனைவரும் கொண்டாடுகிறார்கள்.

அதன் குறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்கி, அதற்கு மாற்று விளக்கம் கொடுத்து சப்பைக்கட்டுக் கட்டவேண்டிய இழிநிலை பொதுவாக ஏற்படுவதில்லை.

வரலாற்று – மொழியியல் ஆய்வுகளை, திறனாய்வுகளை செய்வதற்கு, மக்கள் உணர்வுகளைத் தூண்டாத வெறும் ஆய்வுப்பொருளாக அறிஞர்களால் அதனைப் பயன்படுத்த முடிகிறது.

படிக்க :
♦ தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் பாகம் – 2 | பொ. வேல்சாமி

எப்படி?

அந்நூல் மக்களைப் பண்படுத்த உதவுகிறது. அந்நூலை வன்முறையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்த முடியவில்லை.

அது சமூகத்தின் அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை.

ஏன்?

ஏனெனில், அதனை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கடவுள் ஓதிக்கொடுத்தார் எனும் பொய் அதனைச்சுற்றிக் கட்டமைக்கப்படவில்லை. விமர்சனங்களுக்கோ மாற்றங்களுக்கோ அப்பாற்பட்ட புனிதப் பிரதியாக அதனை எவரும் எவருக்கும் அறிமுகப்படுத்துவதில்லை.

மனிதரால் ஆக்கப்பட்டவை ஆபத்தற்றவை. ஏனெனில் அவை கேள்விகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்புக்கும் மறுப்புக்கும் இடம்கொடுப்பவை.

கடவுளின் பெயரால் ஆக்கப்பட்டவை ஆபத்தானவை. அவை அணுவாயுதங்களை விடவும் ஆபத்தானவை.

நன்றி : முகநூலில் – Muralitharan Mayuran Mauran