நண்பர்களே….
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் ஐந்தாவது அதிகாரமாகிய “பொருளியல்” அதிகாரத்தின் கடைசி நூற்பாவில் (234) சில சொற்களை எடுத்துப் பேசுகின்றார். அந்தச் சொற்களில் கற்பு என்பதும் ஒன்று.
இந்தச் சொல்லை தொல்காப்பியர் எத்தகைய பொருளில் கையாண்டார் என்பது நமக்குத் தெரியவில்லை. தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.
இளம்பூரணர் கூறுகின்ற விளக்கத்தை இன்றைய மொழியில் சொன்னால் கற்பு என்பது பெண்கள் மற்றவர்களைப் பார்க்கும் போது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு உணர்ச்சி, இதனை வெளிப்படையாகக் காட்ட முடியாது என்பதாகக் கூறலாம்.
படிக்க :
♦ அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !
♦ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !
இதே சொல்லுக்கு அடுத்து 300 ஆண்டுகள் கழித்து உரை எழுத வந்த நச்சினார்கினியர் “கற்பாவது : தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்.” என்று பொருள் எழுதுகிறார்.
இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளதாக இருக்கிறது. இந்தச் சூத்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் CHASTITY என்று கூறி இன்றைய நிலையில் உள்ள பொருளைச் சுட்டுகின்றார்.
உண்மையில் கற்பு என்பதற்கு தொல்காப்பியர் என்ற பொருள் எது…? இளம்பூரணர் கூறும் பொருள் தொல்காப்பியர் கருத்தை சரியாக விளக்குவதாகக் கொள்ளலாம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.