ல்வேறு மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் மீது ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ.

மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்காடி வரும் இவர்களை பழிவாங்கும் விதமாக சிபிஐ-யை ஏவி மோடி அரசு பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர்.

மனித உரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி வருகிறது ‘வழக்கறிஞர் கூட்டமைப்பு’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். இதன் அறங்காவலர்களாக வழக்கறிஞர் ஆன்ந்த் குரோவரும் இந்திரா ஜெய்சிங்கும் இருக்கிறார்கள்.

மோடி தனது முதல் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு நிதிகளைப் பெற்று, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்நாட்டில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக்கூறி 10 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது. குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகளை நடத்திய தீஸ்தா செதல்வாட்டின் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இதில் அடங்கும்.

அதுபோல வழக்கறிஞர் கூட்டமைப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக இருந்த சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கை நடத்தியது. இத்தகைய பின்னணியில் 2016-ம் ஆண்டு வழக்கறிஞர் கூட்டமைப்பின் மீது வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றதில் முறைகேடு செய்ததாகக்கூறி ஃபெரா பிரிவின் கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, அந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த் குரோவர், அறங்காவலர் இந்திரா ஜெய்சிங் மற்றும் பெயர் தெரியாத கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் குரோவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஐ முடிவு தங்களுக்கு அதிர்ச்சி தருவதாகவும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் எந்த உண்மையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

படிக்க:
யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !
♦ இஷ்ரத் ஜஹான்: நீதிபதி ஜெயந்த் படேல் – வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வைப் பழி வாங்கும் மோடி அரசு !

“வழக்கறிஞர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வழக்காடிக்கொண்டிருக்கும் வழக்குகளில் அவர்களை வாயடைக்க வைக்கும் முயற்சியே இந்த வழக்கு. 2016-ம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வழக்கறிஞர் கூட்டமைப்பு சட்டப்படி இதை எதிர்கொள்ளும்” என குரோவரின் அறிக்கை கூறுகிறது.

“ஃபெரா நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட காலத்தில் வழக்கறிஞர் கூட்டமைப்பு ஆளும் பாஜக அரசின் முக்கிய புள்ளிகள் பலருக்கு எதிரான, குறிப்பாக அமித் ஷாவுக்கு எதிரான சொரபுதீன் வழக்கில் வாதாடியது” என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை முன்நின்று நடத்தி வருகிறார்.

முதல் ஆட்சி காலத்தில் முடிக்காமல் விட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை சிபிஐ, நீதிமன்றம், விசாரணை அமைப்புகளை ஏவி முடிக்க நினைக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளிலேயே அனைத்து அரசியல் சாசன நிறுவனங்களையும் தனது பிடிக்குள் கொண்டுவந்துவிட்ட மோடி அரசு, எதிர்ப்புக் குரல்களை நசுக்க இந்நிறுவனங்களை இனி கூச்சநாச்சமின்றி பயன்படுத்தும்.


கலைமதி
நன்றி : தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க