டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

“காஷ்மீர் அரசியல் மூடி போட்ட, ஒரு எரிமலை. அவர்கள் ஒமரையும் முஃப்தியையும் சிறைபடுத்திவிட்டனர். இப்போது அந்த மூடியை திறந்து விட்டிருக்கிறார்கள்”

4

புதுடெல்லி எந்த திசையில் நகர்ந்தது என்பதைப் பொறுத்து, காஷ்மீர் முகங்களில் இரண்டு விதமான வெளிப்பாடுகள் இருந்தன… கோபம் அல்லது நம்பிக்கை. ஆனால், புதுடெல்லி 370-வது பிரிவை புதைத்து, ஜம்மு – காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததால், அந்த முகங்களில் தோல்வியை பிரதிபலித்தன.

“இனி எங்களுடைய கருத்தை கேட்பதில் என்ன முகாந்திரம் உள்ளது? அனைத்தும் முடிந்துவிட்டது” என்கிறார் ஸ்ரீநகரின் லால் சோக் அருகே வசிக்கும் மின்னணு பொறியாளரான 45 வயது சாயித் கான்.

காஷ்மீரின் தலைநகர் வெறுச்சோடியுள்ள நிலையில், கானின் பலருடைய வார்த்தைகளை பிரதிபலிக்கிறார். ஒரு பழ வியாபாரியும், வெறிச்சோடிய வீதிகளில் தன் மகனை அழைத்துச் செல்லும் ஒரு தந்தையும் ராம்பாக் முள்கம்பி தடுப்பரண் அருகே காவல் காத்த ஒரு போலீசும் இதை பிரபலிக்கிறார்கள்.

Kashmir Valley
வெறிச்சோடி காணப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் லால் சோக் நகரம். (படம் ; நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்)

ஞாயிற்றுக்கிழமை முதல் தகவல் தொடர்புகள், இணைய தொடர்புகள் ரத்து செய்யப்பட்டன. தடை உத்தரவுகள் பள்ளத்தாக்கு முழுவதும் அமலாக்கப்பட்ட நிலையில், அதிகப்படியான துருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு நகரமே அக்கிரமிக்கப்பட்டுள்ளது போல் காட்சியளித்தது.

சந்தைகள் மற்றும் கடைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் தடுப்பரண்கள் ஏற்படுத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவசர மருத்துவ சேவை தவிர, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !

“2016-ம் ஆண்டின் கொந்தளிப்புக்குப் பிறகு, பல விசயங்கள் கடந்த ஆண்டுகளில் முன்னேற்றம் இருந்தது. பிரிவினைவாதிகள் சிறையில் இருந்தார்கள். வேலை நிறுத்தங்கள் இல்லை, கல் வீச்சுகள் இல்லை, பள்ளிகள் இயங்கின. கடைகள் திறந்திருந்தன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அனைவரும் மகிழ்ந்தனர். இப்போது ஒரே அடியாக, தன்வசம் இருந்த அனைத்து காஷ்மீரிகளையும் விரோதமாக்கிவிட்டனர். இந்த முடிவிலிருந்து நாங்கள் எப்போது மீள்வோம் எனத் தெரியவில்லை” என்கிறார் கான்.

“அவர்கள் அதிகாரத்தை குடித்து தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் மக்களை பார்க்க முடியவில்லை. இதன் விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ளப்போவதில்லை, நாங்கள் எதிர்கொள்ளப்போகிறோம்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத கானின் நண்பர் ஒருவர்.

தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இம்தியாஸ் அன்வானி கோபத்துடனும் வருத்ததுடனும் பேசினார். “காஷ்மீர் அரசியல் மூடி போட்ட, ஒரு எரிமலை. அவர்கள் ஒமரையும் முஃப்தியையும் சிறைபடுத்திவிட்டனர். கல் வீச்சுகளிலிருந்து விலகியிருக்கும் எங்களுடைய எம்.எல்.ஏ. இன்ஜினியர் ரஷீத்தையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்போது அந்த மூடியை திறந்து விட்டிருக்கிறார்கள்” என்கிறார் அவர்.

Kashmir Valleyஜம்மு காஷ்மீர் போலீசுக்கும்கூட கவலை இருக்கிறது. “நான் ஒரு அரசு ஊழியர். நான் அரசு சொல்வதை கேட்பேன். ஆனால், என் மகனிடம் என்ன விளக்கத்தைச் சொல்வேன்? நான் எப்படி அவனிடம் இந்திய அரசு என்ன நினைக்கிறது என்பதையும் அவன் கல் வீசுபவர்களுடன் சேரக்கூடாது என்பதையும் எப்படி சொல்வது என தெரியவில்லை” என்கிறார் அந்த காவலர்.

“இது எதிர்பாராதது. இதுபோன்ற சூழலை நாங்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை. டிவி-யைப் பார்த்துதான் விசயத்தை தெரிந்துகொண்டோம். அவர்கள் அளித்திருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் மூத்த போலீசு அதிகாரி ஒருவர்.

கடந்த ஓரிரு நாட்களாக கல்லெறி சம்பவங்கள் எதுவும் காஷ்மீரில் பெரிதாக இல்லை. மக்களின் பதட்டம் விமான போக்குவரத்தில் பிரதிபலித்தது. டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு வந்த விமானங்கள் 30 பயணிகளோடு வெறிச்சோடியிருந்தன. ஆனால், ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு வந்த விமானங்கள் நிரம்பி வழிந்தன.

காஷ்மீர் திரும்பிக்கொண்டிருந்த பயணிகள் பலரிடம் கவலை அப்பட்டமாகத் தெரிந்தது.

“என்னுடைய மூத்த மகன் அமெரிக்காவிலும் இளைய மகன் மலேசியாவிலும் உள்ளனர். இரண்டு மாதங்கள் மலேசியாவில் இருந்துவிட்டு நேற்றுதான் டெல்லிக்கு வந்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய மூத்த மகன் அமெரிக்காவுக்கு வரும்படி அழைக்கிறார். ஸ்ரீநகரில் உள்ள என் மகளுடன் கடந்த இரண்டு நாட்களாகப் பேச முடியவில்லை. நான் அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கிறேன். எந்த காஷ்மீரியுடனும் பேச முடியாத நிலையில், எப்படி வீட்டுக்குச் செல்வோம் எனத் தெரியவில்லை. ஸ்ரீநகருக்குச் சென்றபிறகே அங்குள்ள நிலைமை தெரியவரும்” என்கிறார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர்.

Kashmir Valley
காஷ்மீர் சட்டப்பேரவை வளாகத்தில் இந்தியாவின் மூவர்ணக் கொடியுடன் சேர்த்து ஏற்றப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீரின் கொடி. இனி இந்த இரண்டும் கூட சேர்ந்து பறக்கப்போவது கிடையாது. ( படம் : நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்)

ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் எம்.டெக் படிக்கும் மாணவர் ஒருவர், “நான் புல்வாமாவில் வசிக்கிறேன். என்னுடைய பெற்றோருக்கு இந்தத் தகவல் தெரியுமா எனத் தெரியவில்லை. தெரிந்தால் என்ன செய்யவார்களோ? எனக்கு கவலையாக உள்ளது. ஸ்ரீநகரில் வாகனம் கிடைக்கவில்லை என்றால், புல்வாமாவுக்கு நடந்தேதான் போக வேண்டும்” என்கிறார்.

எதிர்காலம் குறித்து கவலை கொள்ளும் இவர், “படிப்பை முடித்துவிட்டு, காஷ்மீர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்ற நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது 370 பிரிவு போய்விட்டது, என்னுடைய வாய்ப்பும் போய்விட்டது. காஷ்மீரில் இப்போது பணியே இல்லை. அவர்கள் எங்களுடைய இதயங்களை வெல்ல நினைத்தார்கள். அவர்களுக்கு காஷ்மீர் வேண்டும்; காஷ்மீரிகள் வேண்டாம் என்பதைத்தான் இது காட்டுகிறது.”

படிக்க:
இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !
♦ காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் ! புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2016

ஸ்ரீநகரில் தொழில்முனைவோராக உள்ள ஒருவர் கடந்த 12 நாட்களாக டெல்லியிலும் கொல்கத்தாவில் பணி நிமித்தமாக இருந்தவர், தன்னுடைய குடும்பத்தைக் காண சென்றுகொண்டிருக்கிறார். “ஒரேயடியாக அவர்கள் அனைத்தையும் முடித்துவிட்டார்கள். காஷ்மீர் இந்தியாவின் கையிலிருந்து போய்விட்டது. அவர்களின் ஆதரவாளர்களாக இருந்த ஒமரையும், முஃப்தியையும் முழுவதுமாக புறக்கணித்துவிட்டார்கள். காஷ்மீரிகளுடனான பாலத்தை உடைத்துவிட்டார்கள்” என்கிறார் அவர்.


கட்டுரை : தீப்திமான் திவாரி
தமிழாக்கம் : அனிதா
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்