“தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதை கண்காணிக்க வேண்டும்; அவ்வாறு கண்டறியும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்; பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான குறிப்பிட்ட வண்ணக் கயிறுகளையோ, வளையங்களையோ, மாணவர்கள் அணிந்துவரக் கூடாது; குறிப்பாக, சாதிய அடையாளத்தோடு நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு வருவதை அனுமதிக்கக்கூடாது” என கடந்த ஜூலை 31-ம் தேதியன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்.

இதற்கு முன்னதாக, 2018 பேட்ச் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகப் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்ட போது, பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதையும் வகுப்பறைகளில், மதிய உணவு இடைவேளையில், விளையாட்டில் இந்த பாகுபாடு கடைபிடிக்கப்படுவதையும் கண்டறிந்த இவர்கள் இதனை தவிர்க்க வழிவகை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருக்கிறது.

இந்நிலையில், ”கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் எச்.ராஜா. செய்தியாளர்கள் சந்திப்பிலும் பொங்கினார் அவர்.

படிக்க:
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
♦  2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

எச்.ராஜாவின் டிவிட்டர் பதிவுக்கே அடிபணிந்த அடிமை எடப்பாடி அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ”இந்த சுற்றறிக்கை எனது கவனத்துக்கு வராமலேயே அனுப்பபட்டிருக்கிறது. பள்ளிகளில் பழைய நிலையே தொடரும்” என சுற்றறிக்கை அனுப்பி பதினைந்து நாள் கழிந்த நிலையில் ஆக-15 அன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அரசாங்கத்திலோ, இந்த அரசு இயந்திரத்திலோ எந்த ஒரு அதிகாரத்திலும் இல்லாத ஒரு நபர் மிரட்டுவதற்கு ஒரு அரசாங்கமே பணிந்து தாம் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுகிறது என்றால் இங்கு நடப்பது என்ன சட்டத்தின் ஆட்சியா ? இல்லை சங்கிகளின் ஆட்சியா?

பள்ளி மாணவர்களிடையே சாதிய பாகுபாடு கடைபிடிக்கப்படுவதும்; குறிப்பாக மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வண்ணக் கயிறுகள் அணிந்து வருவதும் இதுவரை தமிழகம் அறிந்திராத அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றுமில்லை.

h raja tweetகாப்புக் கயிறுகளோ, மந்திரித்துக் கட்டப்படும் கயிறுகளோ மஞ்சள், கருப்பு, சிகப்பு, பச்சை என்று தனித்தனி கயிறுகளாகத்தான் கட்டியிருப்பார்கள். எடப்பாடி, ஓ.பி.எஸ். தொடங்கி, பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள், சினிமா பிரபலங்கள் சிலரின் கைகளிலும் இத்தகையக் கயிறுகளைக் காண முடியும். ஆனால், பள்ளி மாணவர்கள் அப்பட்டமாக சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் இரண்டு வண்ணக் கயிறுகளைச் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

தேவர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பும் மஞ்சளும்; நாடார் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பும் நீலமும்; தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பச்சையும் சிவப்பும் மற்றும் நீலம்; வன்னியர் என்றால் மஞ்சள் கயிறு என்று ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு சாதிய அடையாளம் உண்டு.

இந்த சாதியக் கயிறுகளைத்தான், மத நம்பிக்கை தொடர்பான விசயம் என்றும் இதில் அரசு தலையிட உரிமையில்லை என்றும் கயிறு திரிக்கிறார் எச்.ராஜா.

”மாணவர்கள் கயிறு கட்டிவருவதால் என்ன பிரச்சினை வந்துவிட்டது? சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? கலவரம் நடந்துவிட்டதா?” என நியூஸ்18 தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுப்பேசிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த சசிரேகா என்பவர் கேள்வியெழுப்புகிறார். ஏதோ, தேவையில்லாமல் இவ்விசயத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்பதுதான் இத்தரப்பின் வாதமாக இருக்கிறது.

இவர்களின் வாதப்படி, விதிவிலக்காகவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலவும் நடைமுறை என ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?

Sengottaiyan
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

”மாணவர்களிடையே சாதிய பாகுபாடு கடைபிடிக்கும் போக்கு அங்கன்வாடி அளவிலேயே ஆரம்பித்துவிடுகிறது” என்கிறார் எவிடன்ஸ் கதிர். மதுரை மாவட்டங்களில் அங்கன்வாடிகளில் மாணவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்படுவதாகவும்; அங்கன்வாடியில் வழங்கப்படும் தட்டுக்களை பயன்படுத்த மறுத்து ஆதிக்கசாதியினர் வீட்டு பிள்ளைகளுக்கு கிண்ணம் கொடுத்து அனுப்புவதையும்; திருநெல்வேலியில் அங்கன்வாடி ஒன்றில் இரட்டைக்குடம் வைக்கப்பட்டிருந்ததும், ஆதிக்கச்சாதியினருக்கான குடத்தில் தாழ்த்தப்பட்டசாதியைச் சேர்ந்த சிறுவன் தண்ணீர் எடுத்துக் குடித்ததற்காக அங்கன்வாடி ஊழியர்களால் தாக்கப்பட்டதையும் இவ்விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதையும் ஆதாரங்களோடு குறிப்பிடுகிறார். மேலும், தென்மாவட்டங்களில் சாதிரீதியாக மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்பாக ஆண்டுக்கு சராசரியாக 60 வழக்குகள் பதிவாகிறது என்கிறார், அவர்.

படிக்க:
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
♦ “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

இதுபோன்று தென் மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் சாதிரீதியாக மோதிக்கொள்ளும் போக்கு தொடர்பாக, கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணையம் இப்பிரச்சினையை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்ததோடு, இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸும் அனுப்பியிருந்தது.

அப்போதைய, நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து, ”சாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகளை கட்டி வரும் மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன் பின்னரும் கயிறு கட்டிவந்தாலோ, சாதிவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டாலோ பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவரை நீக்கவும்” அறிவுரை வழங்கியிருந்தார்.

தாக்கப்பட்ட மாணவன் மாரிமுத்து

சமீபத்தில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேநிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் நட்புரீதியில் பேசியதற்காக 11-ம் வகுப்பு மாணவன் மாரிமுத்துவை அவரது செவித்திறன் பாதிக்கும் அளவிற்குத் தாக்கியிருக்கிறார்கள் அவருடன் பயிலும் சக ‘உயர்’சாதி மாணவர்கள்.

விழுப்புரம் சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பா.ம.க. கொடி நிறத்தில் வளையம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வண்ணத்தில் வளையம் அணிந்து வந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஊடகங்களில் வெளியான செய்திகள். ஊடக வெளிச்சத்துக்கு வராமல், போலீசு நிலையங்களில் வழக்காகக்கூடப் பதிவாகாமல் புதைக்கப்பட்ட சம்பவங்கள் பல உண்டு.

இரத்து செய்யப்பட்ட அரசாணையின் நகல்

மாணவர்களிடையே நிலவும் இத்தகைய சாதிய பாகுபாட்டை களையும் முயற்சிக்கு பதிலாக சாதிவெறிபிடித்த ஆசிரியர்கள் சிலரும் சாதிய பாகுபாட்டோடுதான் மாணவர்களை நடத்துகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. பொதுவில் பள்ளிச் சூழலே சாதியின்பால் பாழ்பட்டிருக்கிறது என்பதாகத்தான் இதனை பார்க்க முடியும்.

பொள்ளாச்சி அருகேயுள்ள பள்ளியொன்றில் சாதிவெறிபிடித்த ஆசிரியர் ஒருவர், உயர்சாதி மாணவர்களை பிளஸ் என்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களை மைனஸ் என்றும் அழைத்தது பிரச்சினையாகியிருக்கிறது.

தருமபுரி பள்ளியொன்றில், ”பறபசங்களுக்கெல்லாம் படிப்பு வராது. டி.சி.-ய வாங்கிட்டு கிளம்பு”ன்னு சொல்லி தாழ்த்தப்பட்ட மாணவர் ஒருவரை சக மாணவர்கள் முன்பு அடித்து அவமானப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் ஒருவர். இதனால் மனமுடைந்த அம்மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூரில் தனியார் பள்ளியொன்றில் 12-ம் வகுப்பு மாணவரை சாதிரீதியாக ஆசிரியரே இழிவுபடுத்தியதால்; மாணவர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த பிப்-12, 2019 அன்று கடலூர் மாவட்டம் காரைக்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் சாதிய பாகுபாட்டோடு ஆசிரியர்கள் தங்களை இழிவாக நடத்துவதாகக் கூறி போலீசிடமும் முதன்மை கல்வி அலுவலரிடமும் முறையிட்டிருக்கின்றனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிவன்மத்திற்கு பலியான ரோஹித் வெமூலாவும், மருத்துவ மாணவி பாயலும் சந்திக்க நேர்ந்த கொடுமைகளை இந்த சம்பவங்கள் நினைவுபடுத்தவில்லையா?

கடந்த நவம்பர்-20, 2018 அன்று திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி சங்கர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதை மறந்திருக்க மாட்டீர்கள். கோனார் சாதியைச் சேர்ந்த இசக்கி சங்கரும், அகமுடையர் சாதியைச் சேர்ந்த சத்தியபாமாவும் காதலர்கள். இசக்கி சங்கர் வங்கி ஊழியர் என்பதாலும் இருவரும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இரு குடும்பத்தினரும் கலந்துபேசி சம்பந்தம் வரை பேசியிருக்கின்றனர்.

சாதி பெருசுகளே சமாதானம் ஆனபின்னரும், ”அக்காவை கீழ்சாதிகாரனுக்கு கட்டிவைக்கிறியே” என ஊரார் இழிவாகப் பேசியதாகவும் சாதியின் கௌரவத்தை காக்கவே கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறான் பத்தாம் வகுப்பு மாணவனான அய்யப்பன். சக பள்ளி மாணவர்கள் 5 பேரோடு சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்கிறான். இப்பொழுது சொல்லுங்கள்… இதுவேறு அதுவேறு என்று ஒதுங்கி சென்றுவிட முடியுமா?

இதே தென்மாவட்டங்களில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, சாதியப் பிரச்சினைகளின் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பகுதியில் உள்ள கிணற்றில் விசத்தைக் கலந்தனர் ஆதிக்க சாதிக் கிரிமினல்கள்.

அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் விழுந்த போதும், முகத்தில் தெரிக்கும் இரத்தத்தை துடைத்தெறிந்துவிட்டு கடந்து செல்வதைத்தான் “சமூகத்தின் இயல்பு” என்கிறார்கள். ”கயிறுகளால் என்ன பிரச்சினை? கலவரமா வந்துவிட்டது, சட்டம் ஒழுங்கா சீர்கெட்டது?” எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்களே அதுபோல, தீண்டாமையினால் என்ன பிரச்சினை, அறுவா எடுத்து வெட்டிகொள்ளட்டும் என்று அதுவரையில் காத்திருப்பார்களா?

பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருந்த சரியான உத்தரவு அறிக்கையை சாதிவெறிக்கு துணை போகும் எடப்பாடி அரசு ரத்து செய்திருக்கிறது, அதுவும் இந்துமதவெறியை வாயில் கக்கும் எச்.ராஜாவின் வேண்டுகோளின் பெயரில்.

தமிழகத்தை ஆளும் அடிமைக் கும்பல், தமிழகத்தின் நிலையை 70 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் சென்றுள்ளது. இச்சூழலை அப்படியே கடந்து செல்ல முடியுமா ? தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறிதான் இந்துமதவெறியின் அடித்தளம் என்பதால் நாம் இரண்டு வெறியர்களையும் வேரறுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

– இளங்கதிர்

22 மறுமொழிகள்

  1. A student should study in a school without any discriminations like rich or poor, this caste or that caste, this religion or that religion etc. That is the reason Kamarajar brought uniforms to school students. The TN school directorate circular is 100 percent right circular which will not poison the young minds. But unfortunately the circular was withdrawn because of pressure from H.Raja a castiest fellow and it is shame that a elected government is bowing down to a individual who was totally rejected by people of TN in the recent election.

  2. வன்கொடுமை தடுப்பு சட்டம் எத்தனை முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுத உங்களால் முடியுமா தயவுசெய்து எப்போதும் ஆதிக்க சக்தியின் அரை மட்டும் குறை சொல்லாதீர்கள்

  3. நீங்கள் சொல்வது சரிதான்… இந்த. உத்தரவை ரத்து செய்ததற்காகவே மரியாதைக்குரிய செங்கோட்டையன் மீதும் மானமிகு எடப்பாடி அரசு மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். வாங்க வழக்கு பதிய சொல்லி கேட்டு வரலாம்.

  4. கல்விக்கூடங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். அரசியல் போராட்டம் அது இது என்று போனால் கடைசியில் இந்த மாதிரி சாதி கயிறு கட்டும் வேலையில் தான் வந்து முடியும். மாநில அரசு பள்ளிகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் தான் இம்மாதிரியான நிலைமை. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கே நேரம் சரியாக இருக்கும். அங்கே மதிப்பெண்களை தேடி ஓடுவதைத் தவிர வேறு எதையும் யோசிப்பதில்லை. மருத்துவ மற்றும் பொறியியல்ள கல்லூரிகளிலும் இந்த மாதிரியான நிலவரம் தான். ஏனெனில் அங்கெல்லாம் கல்வி சார்ந்த சுமை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. ஒழுங்காக படிக்கவில்லை, முதலிலிருந்தே உஷாராக இல்லை என்றால் பெயில் ஆகி விடுவோம் என்கிற பயம் மாணவர்களுக்கு இருக்கிறது. ஆகையால் மாணவர்களும் ஆசிரியர்களும் சாதி உணர்வு, மத உணர்வு இருந்தாலும் கயிறு கட்டிக்கொண்டு அடிதடி போடக்கூடிய அளவிற்கு இறங்குவதில்லை. மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் சாதி சார்ந்த ஒடுக்குமுறை இருந்தாலும் இந்த மாதிரி மாணவர்கள் தறுதலைகள் ஆக சுற்ற முடியாது. தமிழ்நாட்டில் கல்வி திட்டம் என்பது குப்பையாக இருப்பதால் அரசுப் பள்ளிகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் சட்டக் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் அரசியல் போராட்டம், ரூட் தலை விவகாரம், பஸ் தினம் கொண்டாட்டம் என்றெல்லாம் அடாவடித்தனம் செய்யமுடிகிறது. ஆசிரியர்களும் கொழுத்த சம்பளம் வாங்கினாலும் கற்பித்தல் பணியை சைடு பிசினஸ் ஆக வைத்துள்ளார்கள். அதனால் இதெல்லாம் நடக்கத் தான் செய்யும். இந்த வினவு தளம் எதிர்பார்க்கிற மாதிரியான அரசியல் போராட்டங்களில் மட்டுமே மாணவர்கள் பங்கெடுக்க வேண்டும் என்பது நடக்காதது. கல்விக்கூடங்களில் கல்வி சார்ந்த செயல்பாடுகளை தவிர வேறு எதற்கும் இடம் கிடையாது என சட்டம் வந்தால் தான் ஒட்டுமொத்தமாக இதெல்லாம் ஒழியும். சமச்சீர் கல்வி மாதிரியான குப்பைகளை கொண்டு வந்து வைத்ததால்தான் கடைசி நேரத்தில் எதையாவது படித்து எப்படியாவது பாஸ் வாங்கி விடலாம் என்னும் திமிரில் மாணவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்.

  5. என்ன சொல்ல வருகறீர்கள் பெரியசாமி… மாணவர்கள் சாதிக்கயிறு கட்டுவதற்கும் சமச்சீர் கல்விக்கும் என்ன சம்பந்தம்? ஒழுங்காக பள்ளிக்கு வராத, வந்தாலும் பாடம் நடத்தாத ஆசிரியர் களை தட்டிக்கேட்பதை யார் தடுத்தார்கள்? தனியார் பள்ளியின் தரம் அரசு பள்ளியின் தரமின்மை பற்றியா விவாதம்? பள்ளி மாணவர்களிடையே சாதிவெறி நஞ்சு ஊட்டப்பட்டிருப்பதும் பள்ளி சூழல் மாற்றப்பட்டிருப்பதும்தானே இங்கே விவாத பொருள். அதைப்பற்றி பேசுமைய்யா…

  6. இங்கிலீஷ்காரன் மாதிரியான அறிவாளிகள் என்ன காரணம் என்று தெரிந்தும் தெரியாதது மாதிரி உண்மையைச் சொல்பவர்களை வசை பாடுவார்கள் அது ஒன்றுதான் அவர்களுக்குத் தெரியும்

  7. தங்களுக்கு தமிழே தகராறு போலவே? நான் உங்களிடம் விளக்கம்தானே அய்யா கேட்டேன்… கேட்ட கேள்விக்கு பதிலைக் கூறாமல் வசை பாடினேன் என்று திசை திருப்புகிறீரே…

  8. சீருடை என்பதை திரு.காமராஜர் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியதே மாணவர்களிடையே உயரந்தவன் ..தாழ்ந்தவன் ..வசதியுள்ளவன் ..இல்லாதவன் என்கிற ” பிரிவினை ” ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் … இலவச சீருடை காெடுத்தால் மட்டும் பாேதுமா …கயிறு விவகாரத்தில் ஒரு சர்மாவுக்கு அடிபணிவது அடிமைத்தனத்தின் உச்சம் …கர்மவீரருக்கு இருந்த அந்த பாெது பரந்த அறிவு தற்பாேதைய லும்பன்களுக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது …சாதி ..மத உணர்வை தூண்டி அதில் அரசியல் செய்கின்ற மா.மூக்களுக்கு என்ன கூறினாலும் புத்தியில் ஏறாது …?

  9. சமச்சீர் கல்வி குப்பை யாயிருப்பதால், கல்வி அமைச்சர் குப்பை கொட்டுபவர்.
    ஏபிவிபி சனநாயக அமைப்பாகப் பட்டதால், எல்லாரும் சேரோனும்.
    சிபிஎஸ்சியே சிறந்த பாடமாயிருப்பதால ஸ்டூடண்ஸ் யாரும் டியூஷன் போக வேணாங்கறத பேரண்ஸ் புரிஞ்சுக்கோணும்.
    கயிறு கட்றது மத உரிமை யானதால, தாலிக்கயிரும் பாசக்கயிரே, மாஞ்சாக்கயிரும், தூக்குக்கயிரும் நல்லதே.
    இனி ஒரே இந்தியாவானதால
    ஒரே சாதி, ஒரே கல்வி தாங்க. வாத்தியாருக்கும் ஒரே சம்பளந்தாங்க.
    கயிறு திரிக்க கானா ரங்கனவுட்டு ரிப்போர்ட் குடுத்தோம் உடனே ஊதிப் பெருசாக்கிட்டா….

  10. //நான் உங்களிடம் விளக்கம்தானே அய்யா கேட்டேன்… கேட்ட கேள்விக்கு பதிலைக் கூறாமல் வசை பாடினேன் என்று திசை திருப்புகிறீரே…//

    //சிபிஎஸ்சியே சிறந்த பாடமாயிருப்பதால ஸ்டூடண்ஸ் யாரும் டியூஷன் போக வேணாங்கறத பேரண்ஸ் புரிஞ்சுக்கோணும்.//

    பெரியசாமி எங்கிருந்தாலும் வரவும். பதிலுக்கு காத்திருக்கோம்.

  11. எட்டாம் வகுப்பு வரை பரிட்சையே கிடையாது. ஏழை மக்களை காப்பாத்தறானுங்கலாம்!. எட்டாம் வகுப்பில் தான் அ ஆ இ ஈ என்று எழுத்துக்கூட்டி வாசிக்க சொல்லித் தருவது. இதுதான் உங்க சமச்சீர் கல்வி பாடத்திட்டம். இந்த சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்த பாழும் வள்ளுவத்தின் பேரன் பேத்திகளும் அதை ஆதரித்த ராமதாசின் பேத்திகளும் ஏன் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தார்கள்? ஏன் படிக்கிறார்கள்? கொண்டு வந்தவர்களுக்கே அது குப்பை என தெரிந்திருக்கிறது. எனக்கும் தெரிகிறது. உமக்கு ஏன் தெரியவில்லை? எந்த பாட திட்டமாக இருந்தாலும் குறை திறன் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. அதனால் அவர்களுக்கு டியூசன் தேவைப்படுகிறது. மேலும் நான் சமச்சீர் கல்வி என்னும் குப்பைக்கு சிபிஎஸ்சி மேல் என்று சொன்னேனே தவிர சிபிஎஸ்சி 100% உத்தமமான கல்வித் திட்டம் என எங்கும் சொல்லவில்லை. மண்டையில் களிமண் கூட இல்லாமல் வெறும் காழ்ப்புணர்ச்சியை மட்டும் கொண்டிருப்பவர்களுக்கு எது சொன்னாலும் புரியாது. இந்த சமச்சீர் கல்வி என்னும் குப்பையால் பாதிக்கப்பட்டது நடுத்தர வர்க்கத்தினர் தான். பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

  12. பெரியஸ்வாமிக்கு ஸமஸீர் கல்வின்னாலே ஒரே ‘காண்டு’தான். வெளிநாட்டுல போயி படிச்சு அவங்களுக்கு சேவை செய்யிற ஒருசிலருக்காகவும், மத்திய அரசு பணிக்கான தேர்வு எழுதுற சிலபலருக்காகவும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் படித்து பயனடையிர சமச்சீர் கல்வியை மோசம்னு ரொம்ப நாளா கூவிக்கிட்டு இருக்காரு. பாவம் ஏதோ பரீட்சையில பெயில் ஆகியிருப்பாரு போலிருக்கு. இட ஒதுக்கீட்டுல தன்னைவிட குறைவான மார்க் எடுத்து கல்லூரியிலோ பணியிலோ சேர்ந்தவங்கலப் பார்த்து வயிறு எரியிற உயர் சாதிக்காரனின் ஊளை போன்றது இவர் பேச்சு..!
    ஆனால் இந்த கழுதையை படிச்சுட்டுதான் தமிழன் உலகம் முழுவதும் கோலோச்சுறான்..!

  13. “ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் படித்து பயனடையிர சமச்சீர் கல்வியை மோசம்னு ரொம்ப நாளா கூவிக்கிட்டு இருக்காரு. பாவம் ”

    அந்தப் பயன் அடைகிற லட்சணம் தான் சந்தி சிரிக்கிறதே. இன்னமும் வெட்கமா இல்லையா? ஒட்டுமொத்த தமிழ்நாடே பலன் அடையுதாம். அப்படின்னா இந்த குப்பையை கொண்டு வந்தவரின் குடும்பம் ஏன் அதன் மூலம் பலன் அடையலை. அவங்க எதற்கு சிபிஎஸ்சியில போய் படிக்க வேண்டும்?

    “இந்த கழுதையை படிச்சுட்டுதான் தமிழன் உலகம் முழுவதும் கோலோச்சுறான்..!”

    இந்தக் கழுதையை படிச்சிட்டு தான் தமிழன் அரபுநாட்டில் ஒட்டகம் மேய்க்கிறான் கோலாலம்பூரில் கக்கூஸ் கழுவுற வேலை செய்யறான் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட போய் சாகிறான் கேரளாவுக்கு கூலி வேலை செய்ய போறான். தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இருக்கக்கூடிய மத்திய அரசு நிறுவனங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் கூட வேலை வாய்ப்புக்கும் உயர் கல்விக்கும் போட்டி போட யோக்கிதை இல்லாமல் புலம்பிக் கொண்டு திரிகிறான்.

    நான் மலையாள கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளியில் படித்தவன். ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சி முடித்தவன். உன் மாதிரியான சில்லறைகளுடன் வாதாடுவது என் தகுதிக்கு குறைவானது.

  14. தமிழ்நாட்டில் குழந்தைகளை சமச்சீர் கல்வி இருக்கும் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் சேர்ப்பதை விட ஒரு பாழுங் கிணற்றில் தள்ளி விட்டு விடலாம். இந்தக் கல்வி முறையில் intellectual orientation என்பதே கிடையாது. நான் சில காலம் சென்னையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளுக்காக பயிற்சி தரும் மாநில அரசு நிறுவனத்தில் படித்தேன். அங்கு வந்து வகுப்பெடுத்த பேராசிரியர்கள் அனைவரும் சென்னையில் இருக்கும் பிரபல கல்லூரிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாற்போல் சொன்னது என்னவெனில் சப்ஜெக்ட்டை தெரிந்து கொள்ள வேண்டுமானால் சப்ஜெக்ட்டில் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை படியுங்கள் என்பதாகும். அவை மிகச் சிறந்த புத்தகங்கள் என ஒரே மாதிரியாக அறிவுறுத்தினார்கள். கடந்த 60 ஆண்டு கால தமிழக வரலாற்றில் தமிழக பாடநூல் வாரியமானது புரிந்து படிக்கும் படியான முழுமைத் தன்மை வாய்ந்த பாடப்புத்தகத்தை எந்த சப்ஜெக்டுக்கும் எந்தக் காலத்திலும் உருவாக்கியது கிடையாது. மக்களை இளிச்சவாயர்கள் ஆக்கி குளிர்காய கூடிய கூட்டம் தான் இந்த சமச்சீர் கல்வி மாதிரியான குப்பைகளுக்கு கும்மி அடிக்கும்.

    • பெரியசாமி சார்,
      சாதிக்கயிறு சரியா தப்பாங்கிற பிரச்சனையை அம்போன்னு விட்டுட்டு, உங்களோட intellectual orientation மூலமா, சமச்சீர்கல்விக்குள்ளாற புகுந்து, அதற்கு ஆதரவான கருத்துள்ளவுங்களையெல்லாம் சில்லறைன்னு வசவும் பாடிட்டு, மெயின் சப்ஜெக்டையே கடத்தி விட்டுட்டேங்களே? இதுதான் தமிழ்நாட்டோட இண்ட்டலெக்சுவல்களோட லட்சணமோ?.

      நான் சிபிஎஸ்சி-ல் படிக்கலை. அந்த சிபிஎஸ்சி புத்தகங்களை வாசிச்ச என்னோட அனுபவத்துல, அந்தப் புத்தகங்களுக்குள் இதுவரை எந்த புதுமையும் நீங்க முழக்குகிற அளவுக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை. பத்தாவது வரை எல்லாபாடபுத்தகங்களும் அந்தந்த மாநில புத்தக ஆக்கக் குழுக்களின் மற்றும், என்சிஇஆர்டி புத்தகங்கள் தேசிய குழுக்களின் பக்கசார்புடன் வடிவமைக்கப்பட்டவையே.

      என்னைப்போன்றவர்களை குப்பைன்னு நீங்க அனுமானிக்கும் கும்மியடிக்கிற கூட்டத்துல சேர்த்துக்கங்க. பரவாயில்லை. ஆனால் சமச்சீர்கல்வியை ஆதரிக்கிறவர்கள் எல்லோரையும் மக்களை இளிச்சவாயர்கள் ஆக்கி குளிர்காய கூடிய கூட்டம் என்று நினைத்துவிடவேண்டாம். உங்களைப்போன்ற இண்ட்டலெக்சுவல்கள்தான் மாற்றுக்கருத்து கொண்டிருப்போரை முட்டாள்கள், இளிச்சவாயர்கள், சில்லறைகள் என்று நினைத்துக்குக்கொண்டும், வசைபாடிக்கொண்டும் இருப்பார்கள்.

      தமிழ்நாட்டுல கொஞ்சம் கூடுதலா படிச்ச எல்லாருமே ஏதோவொருவகையில பார்ப்பன சிந்தனையை உள்வாங்கிவிடுவார்களோ?

    • இந்த கல்வி முறையில் படித்த எத்தனையோ பேர் IAS தேர்ச்சி பெற்று பணி செய்தும், செய்து கொண்டும் இருக்கிறார்கள். IAS தேர்ச்சி பெற வக்கில்லாத பெரியஸ்வாமி சிஸ்டம் சரியில்லைன்னு சொல்ல வந்துட்டாரு..!

      • நான் கோச்சிங் போவதிலிருந்து சில காரணங்களால் இடையில் நின்று விட்டேன். எனினும் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வில் இரண்டுமுறை தேறினேன். உன்மாதிரியான ஆட்களோடு விவாதம் செய்வது எனக்கு தான் அவமானம் என இப்போது தெரிந்துகொண்டேன்.

        • ஏதாவது தரம் வாய்ந்த கல்வி திட்டத்துல படிச்சிருப்பாரு..!
          அதனாலதான் நெட் தேர்வுல ரெண்டு முறை பாஸ் ஆயிருக்காரு பெரியஸ்வாமி..!

  15. சாதிக்கயிறு தான் இங்கே விவாத பொருள். இதுக்கும் சமச்சீர் கல்விக்கும் இன்னா சம்பந்தம். தலைப்பையொட்டி விவாதிங்கன்னு சொன்னா சமச்சீர்…குப்பை னு வாந்தி யெடுக்கிறீரே… கடைசி வரை சாதிக்கயிறு பத்தி பேசாமலே சாதிக்கறீரே…

  16. தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு ம் சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கும் மறைமுக சதி நடந்து வருகிறது. மாவட்டங்களின் எண்ணிக்கை திட்டமிட்டு அதிகரிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் மும்பை பெங்களூரு ஆகியவற்றோடு சென்னையும் யூனியன் பிரதேசமாக மாற்றப்படலாம். கர்நாடகம் போன்ற மற்ற தென்னிந்திய திராவிட மாநிலங்களோடு தமிழகமும் இரண்டாக பிரிக்கப்படலாம். நாங்கள் தமிழகத்தை மட்டும் பிரிக்கவில்லை. சென்னைக்கு மட்டும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களையும் பிரிக்கிறோம். மற்ற நகரங்களையும் யூனியன் பிரதேசமாக ஆக்கினோம் என தனது சதிக்கு மத்திய அரசு வக்காலத்து வாங்க கூடிய அளவுக்கு இந்த சதி நியாயப் படுத்தப் பட்ட முறையில் நுணுக்கமாக நடத்தப்படும். முதலிலேயே இதை தடுப்பது தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்

  17. // ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சி முடித்தவன். உன் மாதிரியான சில்லறைகளுடன் வாதாடுவது என் தகுதிக்கு குறைவானது. //
    மகா ஜனங்களே நீங்களே பாருங்கோ… இந்த கட்டுரையோட சப்ஜெக்ட் ல நின்னு பேசியிருக்காரா இந்த பெரியசாமி. சாதிக்கயிறு னு வார்த்தை யைக்கூட சொல்லல… உங்களோட தகுதி என்னன்னு புரிஞ்சிகிட்டோம் பெரியசாமி… நீங்கெல்லாம் ஐ.ஏ.எஸ். ஆகி மக்கள் பிரச்சினை யை புரிஞ்சிகிட்டு நல்லாவே சேவை செய்வீங்க… ஸ்ப்பாஆ மிடியலலல…

Leave a Reply to S.Periyasamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க